இருட்டு பேசுகிறது - கேள்விகள் பதில்கள்

அதிரை அஹ்மது: الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை
கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

அன்புடன் புகாரி” மூத்த சகோதரர், கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர் அஹ்மது அவர்களுக்கு. இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான நிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவை அல்ல. தாயாய் நிறைந்திருக்கும் இறைமை என்று கூறலாம்.

அந்த இருட்டு தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. காற்று என்ற வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது.

அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும்.

சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான்.

ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

Dark Enery, Dark Matter - What Is Dark Energy?

http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/

It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

*

முகமது தஸ்தகீர்: அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி! பின் வருபவைகளில் ஜோதி என்பதின் பொருள் நீங்கள் புரிந்து வைத்துள்ளது என்ன? "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான் - குர் ஆன்

அன்புடன் புகாரி: இங்கே ஜோதி என்பது கவி நயத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான நயங்களைத்தான் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வார்கள். இறைவனின் ஜோதி என்பதை ஏதோ எரியும் ஒரு நெருப்பு என்று நினைத்துவிட்டீர்கள். இறைவன் வெறுமனே எரியும் எந்த நெருப்பும் அல்ல. அவனுக்கு உருவமே கிடையாது. நெருப்புக்கு உருவம் உண்டு.

இந்த வார செய்திகளைப் பார்த்தீர்களென்றால், கமல ஹாசன் பேஸ்புக் ஜோதியில் கலந்தார் என்று இருக்கும். கமல் ஹாசனும் கடவுளும் ஒன்றா அல்லது பேஸ்புக்கும் இறைவனும் ஒன்றா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

ஜோதி என்பதற்கான பொருளே இங்கு வேறு. இறைவன் என்கிற இருப்பு, இறைவன் என்கிற ஆளுமை, இறைவன் என்கிற நிஜம் என்று வேண்டுமானால் கூற முயலலாம். அதை சரியாக எடுத்துக்கொள்வதே இங்கே முக்கியம்.

ஒன்றுக்கு உருவகமாகவோ உவமையாகவோ கூறுவதை அதுவாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் மொழி உங்களை நிறையவே ஏமாற்றிவிடும்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றால் காதில் நிஜமாகவே தேன் பாயுமா?

இன்று மனம் உருகித் தொழுதேன் என்றால் மனம் வெண்ணை என்றும் அது அனல் பட்டு உருகுகிறது என்றும் மனதை ஒரு திடப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியுமா?

No comments: