இருட்டு பேசுகிறது - என்னை விடாது போலிருக்கிறது

அப்துல் ரகுமான்: சூரிய குடும்பமும் நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளன. அப்படி இருக்கையில் இந்த சூரிய, நட்சத்திர குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்? இந்த கேள்விக்கு பதில் உங்கள் பதிலுரையில் இல்லை. விஞ்ஞானம் வளரவில்லை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது

அன்புடன் புகாரி: இதுவரை நம் பிரபஞ்சம் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. அது இன்னமும் மூடுமந்திரமாகத்தான் இருக்கிறது. வெளிச்சம் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை நோக்கித்தான் மனிதன் பயணப்படுகிறான். இதுவரை அதுதான் அவனுக்கு இயலுமானதாக இருக்கிறது. நாளையும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றுக்கும் கருவிகளையும் அளவுகோல்களையும் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறான் மனிதன்.

ஒரு காலத்தில் எக்ஸ்-ரே என்ற ஒன்று இல்லை என்று அறிவீர்கள். அப்போது ஒருவனிடம் உன் எலும்பை எல்லாம் அப்படியே நான் பார்க்கப் போகிறேன் என்று ஒருவன் சொன்னால். அதற்கு அவன் என்ன பதில் சொல்லி இருப்பான்? என்ன, என்னை அறுத்து சதையை எல்லாம் கழித்துவிட்டு என் எலும்பைக் காணப்போகிறாயா, என்னைக் கொலை செய்யப் போகிறாயா என்றிருப்பான். ஏனெனில் வெளிச்சம் இருந்தால்தான், கண்பார்வை செல்லும் இடத்தில்தான் எதையும் காணமுடியும் என்ற அறியாமையின் பதில்தானே அது?

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்பதும் உண்மை. விஞ்ஞானம் வளரவில்லை என்பதும் உண்மை. எனெனில் அது அறிவு. அறிவுக்கு எல்லையே கிடையாது. இதுவரை நாம் விஞ்ஞானத்தில் எட்டி இருக்கும் தூரம் மகத்தானதுதான் என்றாலும், அத்தோடு அது நின்றுவிடப் போவதில்லை. நம் சந்ததியர் இன்னும் விளக்கமாகவும் விபரமாகவும் காணுவார்கள். ஆனால் அவர்களோடும் அது நின்றுவிடப்போவதில்லை. தொடரும் தொடரும் தொடரும் எப்போதும்.

வெறுமனே ஒரு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்த மிகப்பெரிய எண் எது? நீங்கள் அறிந்த மிகச் சிறிய எண் எது? யோசித்துப் பார்த்தீர்களா?

இதைத்தான் நான் என் ஆகாயம் என்ற கவிதையில் இப்படி எழுதி இருந்தேன்:

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதையை விளக்கத்துடன்
அறிமுகம் செய்தமைக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்