குற்றால அருவிலியிலே குளிப்பதுபோல் இருக்குமா?

குற்றாலம் என்றாலே குதூகலம் தான். எத்தனை முறை சென்றாலும் அலுப்பதே இல்லை. தமிழ் நாட்டின் சொர்க்கம் அது.

குற்றாலம் என்றால் என்னென்ன நினைவுக்கு வரும்?

கொட்டும் நீர் இத்தனை குளிராய் இருந்தும் நடு இரவிலும் சென்று குளிக்கும் ஆர்வம் எப்படி வருகிறது? இந்தக் குரங்குகளுக்கும் அருவிக்கும் என்ன பந்தம்? எங்கெல்லாம் அருவிகள் உண்டோ அங்கெல்லாம் ஏராளமான குரங்குகளைக் காணலாம். கையில் இருப்பதை வந்து தட்டிப் பறித்துப் போகும் தைரியத்தை வளர்த்துக்கொண்டவை நம்மூர் குரங்குகள்.

அலுவலகம், வீட்டுத் தொல்லை எல்லாம் விட்டு ஹாயாக சில நாட்கள் இப்படி ஓர் நிம்மதியைத் தரும் குற்றாலத்தை எப்படித்தான் பாராட்டுவது? நயாகராவின் முன் நின்றால் சிலிர்ப்புதான், ஆனால் தலையில் கெட்டிமேளம் கொட்டக் குளிக்கும் சுகம் கிடைக்குமா? குற்றாலம் வாருங்கள். நம்ம ஊரு நயாகராவே என்று நான் வடித்த குற்றாலக் கவிதை எப்போதும் என் நினைவுக்கு வருகிறது இங்கே வந்தால். அதற்கு குமுதம் எனக்குப் பரிசும் கொடுத்தது கூடுதல் மகிழ்ச்சி.

குற்றாலத்தில் குளியலை முடித்துவிட்டு வந்தால் அப்படி ஒரு பசி. அந்தப் பசியைத் தீர்த்துவைக்க ருசி மிகுந்த உணவுக்கும் பஞ்சமில்லை. சாலையோரத்தில் வண்டிகளில் வந்து விற்கப்படும் இட்லி தோசை முட்டை வகைகள் அனைத்திற்கும் ருசி அதிகம் விலை குறைவு. ஏங்கிக் கையேந்தும் முதியவர்களுக்கு கொஞ்சம் வாங்கிக்கொடுத்து உண்ணும் போது மனதின் மகிழ்ச்சி வான உச்சியில்.

ஒரு நாளைக்கு ஒரு நேரம் குளிக்கலாம் அது நம் வீட்டுக் குளியல் அறை. நாளெல்லாம் அலுக்காமல் சலிக்காமல் குளிக்கலாம் என்றால் அது குற்றாலம்தான். இப்போதெல்லாம் வெயில் கொடுமை அதிகமாகிவிட்டது தமிழ்நாட்டில். ஆகையினாலேயே குற்றாலம் மேலும் சொர்க்கம் ஆகிவிட்டது.

முன்பு போல இல்லை, பெண்கள் நிம்மதியாகக் குளிக்க வசதிகள் அதிகரிக்கப் பட்டிருக்கின்றன. எப்போதுமே காவல்துறையினரின் பாதுகாப்பும் இருக்கிறது.  தங்கும் இடம் தேடுவது இன்னொரு அலாதி அலைச்சல். கூட்டம் அதிகரித்த நாட்களில், எது கிடைத்தலும் சரி என்று மிக எளிமையாகத் தங்குவது குற்றாலத்தில்தான் என்றே சொல்லலாம்

இந்த நீர் தலையில் நாளெல்லாம் பட்டாலும் தடுமல் பிடிப்பதில்லை காய்ச்சல் வருவதில்லை. இருக்கும் காய்ச்சலும் காணாமல் போகும் அதிசயம் நிகழும். மூலிகைக் குளியல் உடலுக்கு ஆரோக்கியம், மனதிற்கு ஆரோக்கியம், மனநலமற்றவர்களும் இங்கே குணமாகிறார்கள் என்கிறார்கள்.

சொந்தங்கள் எல்லோரையும் அள்ளிக்கொண்டு, ஒரு வாரம் குற்றாலத்தில் ஒதுங்கினால் சொந்த உறவுகள் நிச்சயம் பலப்படும். எல்லோரும் சிரித்த முகத்துடன் சண்டையே இல்லாமல் நாட்கள் கழியும். நாட்டுக்கோழி வறுவல் வறுக்க வறுக்கத் தீர்ந்துபோகும்.

ஒருவர் குளிக்க வந்தார். ரொம்பவே கூச்சசுபாவம் போலும். சட்டை வேட்டி எல்லாம் இட்டுக்கொண்டே குளிக்கவந்தார், சட்டென தலையை அருவியில் நிறுத்தி முதலில் குளிரிலிருந்து விடுபட்டார். பின்னர் சட்டையை மெல்லக் கழட்டினார், பின் வேட்டையையும் அவிழ்த்தார். டவுசர் பாண்டியாய் ஆனார். அவர் ஆனந்தத்தை அருவி நீர் தலையில் கொட்டிப் பாராட்டியது.

மனைவி குழந்தைகளை பெண்கள் பக்கம் அனுப்பிவிட்டு, இந்தப் பக்கம் நின்று குளிக்கும்போது இடையிடையே ஓடிவந்து மனைவி பிள்ளைகளைக் கையாட்டி சந்தோசங்களைப் பகிர்ந்துகொண்டு, இன்னும் குளிக்கலாம் என்ற முடிவை சைகைகளால் காட்டிவிட்டு மீண்டும் வந்து குளிப்பது அலாதி சுகம்தான்.

அட இப்படியே எழுதிக்கொண்டே போகலாம், குற்றால அனுபவங்கள் தீராது. குற்றாலும் ஒரு கொடை. வேறெங்கும் கிடைக்காத அற்புத ராஜகொடை.

குமுதத்தில் வந்த என் குற்றாலம் கவிதை கீழே:

குபுக் குபுக் குற்றாலம்

நம்ம ஊரு நயாகராவே

பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா

கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன் சிலீர்ச் சந்தங்களா

யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா

அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா

அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண
என் காதலியின் ஊடலிலா

– அன்புடன் புகாரி, கனடா

No comments: