வாழ்க்கை அகதி

கடல் கண்டுகொள்ளாத
அலை நான்
மேகத்தில்
ஏறிக்கொண்டேன்

மேகம் மறுதலித்த
மழைத்துளி நான்
நிலத்தின்
மடி வீழ்ந்தேன்

நிலம் நிராகரித்த
நீர் நான்
காற்றில்
தொற்றிக்கொண்டேன்

வீசும் காற்றுடன்
அலைந்தேன்
திரிந்தேன்

காட்டு மரம் ஒன்றில்
கருங்கல் பாறை ஒன்றில்
மூங்கில் கிளைகளில்

பேய் உறங்கும்
பழைய மாளிகைச்
சுவற்றில்

கொடிக்கம்பு
நுனியில்

பாய் மரத்தின்
விளிம்பில்

வேப்பமர
இலையில்

குஞ்சுகள் வெளியேறிய
அனாதைக் கூட்டில்

துருவேறிய
கம்பிகளில்

கொம்பில் விழுந்த
பறவையின் எச்சத்தில்

ஒட்டிக்கிடக்கின்றன
என் இரத்தத் திசுக்கள்

6 comments:

சீனா said...

அன்பின் புகாரி

அருமையான சிந்தனை - என்றுமே அகதி தான் - கூடு விட்டுக் கூடு பாய்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும் - திசுக்களை ஆங்காங்கே விட்டு விட்டு உருமாறிக்கொண்டே இருந்து கடைசியில் அழிய வேண்டும்.

நடைமுறை இது தான்

நல்ல கவிதை

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா

பூங்குழலி said...

கருங்கல் பாறை ஒன்றில்
மூங்கில் கிளைகளில்
பேய் உறங்கும்
பழைய மாளிகைச்
சுவற்றில்
கொடிக்கம்பு நுனியில்
பாய் மரத்தின் விளிம்பில்
வேப்பமர இலையில்
குஞ்சுகள் வெளியேறிய
அனாதைக் கூட்டில்
துருவேறிய கம்பிகளில்
கொம்பில் விழுந்த
பறவையின் எச்சத்தில்
ஒட்டிக்கிடக்கின்றன
என் இரத்தத் திசுக்கள்


ரொம்பவே ரசித்தேன் இந்த கவிதையை புகாரி

ஒளியவன் பாஸ்கர் said...

//
குஞ்சுகள் வெளியேறிய
அனாதைக் கூட்டில்
//

அற்புதமான சொல்லாடல்.

நட்சத்திரா said...

அன்பை தேடி அலையும் அகதிகளின் நிலையம் இதுதானே...
அருமையாகயிருக்கு ஆசான்...

ரிஷான் said...

நல்ல கவிதை நண்பர் புகாரி !!

சிவா said...

படிக்கும் போது ஒரு இனம் புரியாத வேதனை ... என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆசான்