அணிந்துரை - இலந்தை - அன்புடன் இதயம்


பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும்
-கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

கவிதை என்பது ஒரு பாதிப்பு.

கவிதை எழுதுமுன்னும் எழுதும் போதும் கவிஞனைப் பாதிக்கிறது எழுதப்பட்ட பின்பு அதைப் படிப்பவனைப் பாதிக்கிறது. படிப்பவனை எந்த அளவு பாதிக்கிறதோ அந்த அளவு அது சாதிக்கிறது அப்படிச் சாதிக்கிற முப்பது கவிதைகளின் தொகுதிதான் இது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு கவிதை ஒளிநாட்டிக்கொண்டிருக்கும் கவிஞர் புகாரியின் மொழிநாட்டம் இந்தத் தொகுதியின் முதற்கவிதையாக முகிழ்க்கிறது.

பார்ப்பவற்றைப் படமாக்குவது விழி, எண்ணத்தை ஒலியாக்குவது மொழி, கவிஞனுக்கு மொழிதான் விழி, அதுதான் அகத்தைக் காட்டும் வழி.

பிள்ளையை, தாய் தந்தைக்குக் காட்டுகிறாள், தந்தை ஊருக்குக் காட்டுகிறார், மொழி உலகுக்குக் காட்டுகிறது, அதன் இனிய ஓசையில் யாவர்க்கும் மயக்கம். அது சந்தத்தில் வசந்தத்தைக் காட்டுகிறது, வசந்தத்தில் சந்தத்தைக் கூட்டுகிறது. பாருங்களேன் இந்தக் கவிஞர் எப்படிப் பாடுகிறார் என்று!

கவிதையில் தொனிக்கின்ற
ஞானம்-தமிழ்
ஞானத்தில் உயிர்க்கின்ற
கவிதை


சொல்மடக்கு எத்தனை மிடுக்கு!

கண்களை மூடிக்கொண்டு கவிஞன் கவிதை பாடுவதில்லை. அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் அவனைப் பாதிக்கின்றன. சாக்கடை கூட அவனது கவிதையில் பூக்கடையாகிவிடுகிறது. கவிஞர் புகாரியின் "அழிவில் வாழ்வா" என்ற கவிதை மிகவும் அவசியமானது. மிகச் சிறந்த சமுதாய உணர்வோடும் தார்மீகப் பொறுப்போடும் எழுதப்பட்ட ஒன்று.

இந்தக் கவிதை அருமையான மனோதத்துவக் கவிதை. பழிக்குப் பழி என்று நெஞ்சில் வன்மம் கொண்டிருக்கும் ஒருவனிடம் போய் ' நீ செய்வது' தவறு என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டினால் கத்தியைப் பிடித்தவன் வாளெடுப்பான்.

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா

முதலில்...
என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்


என்று முதலில் பரிவோடு சொல்லும் போது, கத்தியைக் கையில் வைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்க்கிறான். அந்தப் பரிவு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கிறது. அடுத்து,

கண்ணீரை முந்திக்கொண்டோ டும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

வீடு புகுந்து...
நம் பெண்களின் முந்தானை இழுக்கும்
மூர்க்கக் கரங்களை முழுதாய்க் கொய்வது
முறையான செயல்தான் சகோதரா


என்று அவனது செயலை நியாயப்படுத்திச் சொல்கிறபோது நெருக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மேலும் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராகிறான்.

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா


என்கிறபோது சிந்திக்கத் தொடங்குகிறான். வெறும் பிரச்சினைகளையே சொல்லித் தீர்வைச் சொல்லாமல் விடுப்பதுதான் இன்றையப் போக்கு. ஆனால் நம் கவிஞன் அப்படி விடவில்லை.

கேள் !
பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு
இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு
அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா
உனக்கு வேண்டும்


இப்பொழுது அங்கே ஒரு மனமாற்றம் நிகழ வாய்ப்புண்டு. இந்தக் கவிதை ஆழமான கவிதை, அவசியமான கவிதை.

நான் அலாஸ்கா வீதிகளில் பனியின் கொள்ளைஅழகைக் கண்டிருக்கிறேன். கனடாவில் உள்ள வேங்கூவர் மிக அழகிய தூய்மையான நகரம் . அந்த நகரத்தின் தூய்மையைப் பற்றிக் கவிஞர் புகாரி சொல்லியிருப்பதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாதென்பதே என்கருத்து.

பெண்கள் தான் ஊதாரிகள் என்பது பொதுவான கருத்து. இல்லை, இல்லை ஆண்கள் தான் ஊதாரிகள் என்று அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார் புகாரி

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள் பெண்
ஆக,
ஊதாரிதானே ஆண் -
கவலையை விடுங்கள்


ஒரு திருமணக்காட்சி மிக அற்புதமாகப் படம் பிடிக்கப்படுகிறது. திருமணமேடையின் அலங்காரம் எப்படித் தெரியுமா?

வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவ்஢ட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு


இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் ' பஞ்ச பூதக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் முதல் நான்கு வரிகள் 'ஆலாபனை' போலக் கவிதையின் விகசிப்புக்குக் கட்டியம் கூறிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கவேண்டும். 'என்தெய்வம் தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக் கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றை உயர்ந்தது என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது.

கவிஞர் புகாரியின் கவிதைகளில் பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும் இழைந்திருக்கக் காணுகிறேன்.

தன்னுளே கவிதை யென்னும்
தவத்தினை நிகழ்த்து கின்ற
அன்பராம் புகாரி இங்கே
அளித்துள இனிய நூலாம்
'அன்புடன் இதயம்' தாய்க்கோர்
அணிகலன், போற்று கின்றேன்
உன்னதம் காண உங்கள்
உள்ளத்தைக் கண்ணில் சேர்ப்பீர்

No comments: