Showing posts with label * 02 அன்புடன் இதயம். Show all posts
Showing posts with label * 02 அன்புடன் இதயம். Show all posts

கல்யாணமாம் கல்யாணம்


தமிழ்முஸ்லிம் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? நண்பராய் இருந்து நடப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா?

*

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
      அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
      முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார் 
      நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
      பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
      அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
      பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
      இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
      ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
      மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
      மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
      அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
      புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
      வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
      இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
      மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
      குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
      சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
      செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
      வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
      உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
      கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
      பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
      சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
      மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
     எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
     நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
     சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
      ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
      முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
      தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
      சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
      வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
      முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
      சிரிப்பாளே பெண்ணின்தாய்

26 தமிழ் இணையம் 2002

அது ஒரு காலம். நான் தமிழ் உலகம் என்னும் யாகூ மின்னுரையாடல் குழுமத்தில் இருக்கிறேன். பெரும்பாலும் கவிதைகளேயே இட்டுக்கொண்டிருப்பேன். என்னைத் தன் ஆஸ்தான கவி என்று அறிவிக்கும் அளவிற்கு என் கவிதைகள் அங்கே ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன.

அப்போதுதன் தமிழிணையம் 2002ன் மாநாடு கலிபோர்னியாவில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதன் முக்கியத் தலைவராக மணி மு மணிவண்ணன் இருந்தார். அவருடைய அறிமுகமும் எனக்கு அப்போதே இருந்தது.

தமிழ் உலகத்தின் மட்டுறுத்துனர்களுள் ஒருவரான அமெரிக்கா ஆல்பர்ட் என்னைத் தொடர்பு கொண்டு, கவிஞரே தமிழிணையம் மாநாட்டின் நூல் ஒன்று வெளியிடுவார்கள். நீங்கள் ஒரு கவிதை எழுதினால் என்ன என்றார். என் தமிழ்ப் பற்றையும் கவிப்பற்றையும் அவர் நன்கறிவார்.

எனக்கு ஓரளவே தமிழிணையம் பற்றித் தெரியும் என்பதால் முதலில் தயங்கினேன் பின் ஒவ்வொரு பத்தியாக எழுதத் தொடங்கினேன். ஒரு நான்கு பத்திகளை எழுதிக் கொடுத்தேன்.  ஆனால் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவின் ஆசையோ அதைவிட அதிகமாக இருந்தது.

கவிஞரே மிக நன்றாக வந்திருக்கிறது இன்னும் சில பத்திகள் எழுதுங்களேன் என்று ஊக்கப்படுத்தினார். நான் பெரும்பாலும் அந்த வகையில் கவிதைகள் எழுதுவது கிடையாது. உள்ளத்தின் உள்ளே எதுவோ கிடந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் இறங்கித் தொலை என்று காகிதங்களில் அந்த குடைச்சலை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்வேன்.

ஆனால் இந்தக் கவிதையை எழுத வெளியிலிருந்து குடைச்சல் ;-) ஆனால் பாராட்டுக்குரிய குடைச்சல் அதற்காக என்றென்னும் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவுக்கு என் நன்றிப்பெருக்கு. அவர் இல்லாவிட்டால் இக்கவிதை இல்லை.

இப்படியும் என்னால் கவிதை செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கவிதையே முதல் சாட்சி. ஆகையால்தான் வாழ்த்துக்கவிதைகள் எழுதத் தயங்குவேன். அது இயற்கையாய் வெளிவராமல் மல்லுக்கட்டி கொண்டு வரவேண்டியது இருக்கும் என்பதால்.

ஆனால் இந்தக் கவிதையைச் செயற்கையே நிரம்பியது என்றும் சொல்ல முடியாது. எனக்கிருந்த தமிழ்மோகம் இயற்கையானது. அது தரும் உணர்வுகள் இயல்பானது. ஆகையால் தமிழிணையம் என்ற வெளித் தூண்டலை தமிழ் என்ற உள்தூண்டலோடு பிணைத்து இக்கவிதையை எழுதி முடித்தேன்.

அந்த மாநாட்டின் விழா மலரிலும் வந்தது பலரின் பாராட்டையும் பெற்றது.  விழாவிற்கும் சென்றிருக்கலாமே என்ற கவலையும் வந்தது.

அந்தக் கவிதையை அத்தோடு விட்டுவிடாமல் என் இரண்டாவது கவிதைத் தொகுப்பான அன்புடன் இதயம் என்ற நூலிலும் ஏற்றிக்கொண்டேன்.

இதோ அந்தக் கவிதை....

*

சிலிக்கான் பள்ளத்தாக்கும்
சிலிர்க்கும் சிகரம்தொட்டு
மொழித்தேன் கூடுகட்டி
தழைக்கும் தமிழே வாழ்க

பழித்தோன் பணிந்தே போனான்
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க

ஐந்தாம் கணித்தமிழ் இணையம்
அறிவுப் பிழம்பாய் உதயம்
பைந்தமிழ் மின்தமிழ் பாடுது
புதுப்புது நுட்கலை தேடுது

கந்தகத் தமிழினம் கூடுது
காரியச் செந்தழல் மூளுது
சிந்தனை செயற்திறன் ஆகுது
செந்தமிழ் கணிமுடி சூடுது

தொன்னூற்றேழிலே சிங்கை
துவக்கி வைத்தது இதனை
தொன்னூற்றொன்பதில் சென்னை
தொடர்ந்த ஆண்டிலும் சிங்கை

பின்னர் மலேசிய மண்ணில்
பிறந்தது நான்காம் கூட்டம்
இன்னும் இனியும் வளர்க
இணையம் தமிழாய் நிறைக

தொட்டுத் துவக்கியத் தலைவர்
தொடரும் உறுப்பினர்; நண்பர்
எட்டுத் திசைகள் எங்கிலும்
எழுதும் ஆய்வுக் கரங்கள்

கொட்டிப் பொருள்தரும் வள்ளல்
கூடம் நிறைத்திடும் ஆன்றோர்
ஒட்டு மொத்தமாய் வாழ்க
இணையத் தமிழினைப் போல

வலைக்குள் மொழிகளோ நூறு
வனப்பாய் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு

அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்


உலகத் தமிழ்தான் உயருது
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்

கலையும் தமிழரின் பண்பும்
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது

ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

தோழுரம் கொண்ட மைந்தரால்
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்

பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

அன்புடன் புகாரி


’அன்புடன் இதயம்’ நூலிலிருந்து....
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.





இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்
ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று
பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்
இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு
மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்
முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்
உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்

அன்புடன் புகாரி


#அன்புடன்_இதயம்

வேங்கூவர் - கனடா


என் குரலில் கேட்க

அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட
அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர்.
2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் அங்கு சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன்.
ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல்
விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.


வசந்தத்தில்
வசந்தம் கேட்டுத்
தவமிருக்கும் உலகில்
வருடமெல்லாம் வசந்தம் காணும்
வேங்கூவர் ஓர் அதிசயம்

எங்கும் இங்கே
புல்லும் மரமும் பூத்துப்
பூரண சுயாட்சி நடத்தும்
பொற்பருவத் தாண்டவங்கள்

பேரெழிற் பொற்சிலையாய்
சுற்றிக்கட்டிய
நீர்ப்பட்டுச் சேலைக்குள்
நிமிர்ந்து நாணி நிற்கும்
நிலமகள் இந்த வேங்கூவர்

இயற்கையின்
எழில்வண்ணப் பளபளப்பு
காணும் கண்களிலெல்லாம்
மின்னல்கள் கொளுத்தி
மின்னல்கள் கொளுத்தி
மிடுக்கோடு விளையாடுகிறது

ஆசையின் உந்துதலில்
நடப்பதைக் கைவிட்டு
ஓர்
அங்கப்பிரதட்சணம் செய்தால்

இந்த
அழகு வீதி அழுக்காகும்
நம் தேகமோ தூய்மையாகும்
அப்படியோரு சுத்தம்



அடிக்கடி கொட்டும்
அந்த அமுத மழையும்
விடுப்பெடுத்துவிட்டால்

வானமே கூரையாக
பூமியே கம்பளமாக
ஓர் ஐந்து நட்சத்திர
விடுதியாகிப்போகும்
இந்த வேங்கூவர்

பாருங்களேன்
இந்தச் சூரியனை

இங்கு வந்ததும்
நானும் ஒரு நிலவுதான்
என்று
மஞ்சள் பூசிய
மணப்பெண்ணைப் போல
அழகு காட்டிச் சிரிக்கிறது

மயிலிறகு ஒத்தடம் போல்
நம் மேனியில் பதிக்கிறது
தன் முத்து முத்தங்களை

இங்கே
இரத்த அழுத்தக்காரனுக்கும்
வியர்வை என்பது
விளங்காத புதிர்தான் என்றால்
தாராளமாக நீங்கள் நம்பலாம்



காலங்காலமாய்ப் பாடுபட்டு
சொர்க்கத்தைக் கட்டி
கிரகப் பிரவேசம் நடத்த
நாள் குறித்துக்
காத்திருந்தபோது

யாரோ எவரோ குறும்புக்காரர்
அதைத் திருட்டுத்தனமாய்க்
கட்டியிழுத்துக்கொண்டு வந்து
இங்கே
இறக்கிவைத்துவிட்டார்கள் போலும்




சொல்ல மறந்துவிட்டேனே
நம் தமிழ்ப் பெண்கள் இங்கே
வாசல் தெளித்துக் கோலம்போடும்
வழியறியாமல்
செல்லமாய்ச் சிணுங்குவர்

ஏனெனில்

வாசலும் தெளித்து.
வண்ண வண்ணப் பூக்களால்
கோலமும் போட்டு
தினம் தினம்
வாஞ்சையாய் வந்து நிற்பாள்
வேங்கூவர் வசந்த தேவதை



அட
இத்தனை அழகு
எப்படி இங்கே
கொட்டிக்கிடக்கிறது என்று
இங்கும் அங்கும் நான்
உற்று உற்றுப் பார்த்தேன்

சொட்டுச் சொட்டாய் அமுத அழகு
எங்கிருந்தோ
வடிந்த வண்ணமாய்த்தான்
இருக்கிறது

வடிவது சொர்க்கத்திலிருந்தா
என்று எனக்குத் தெரியாது
ஆனால்
வடியும் இந்த இடம்
நிச்சயமாக
ஓர் அற்புதச் சொர்க்கம் என்று மட்டும்
நான் எங்கும் எவரிடத்தும்
சத்தியம் செய்வேன்

அழிவில் வாழ்வா


கலவரம்
அது இங்கே தினம் வரும்

அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா
திடீர்த் துவேசம் உன்னைத்
துண்டாடித் துண்டாடி
வெறியின் பசிக்குத் தீனியாக்கிவிட்டதா

முதலில் என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்

இது ஓரிரு நிமிடங்களில்
காய்ந்துபோகும் ஈர ஒத்தடம்தான்
இதனால் உன் உயிருக்குள்
கொதி கொதித்துக் குமுறும் நெருப்பு ஊற்றுகள்
நிச்சயமாய் நிற்கப்போவதில்லைதான்

ஆகையினாலேயே
நிரந்தர நிவாரணத்தின் விடியல் கீற்றாய்
இந்தக் கவிதை உருவாக வேண்டும்
என்ற உயிர்த் தவிப்போடு
என் வார்த்தைகளை உருக்கி உருக்கி
உன்முன் வார்க்கிறேன்

நீயோ -
இன்றைய வெறிச் சூறாவளியில்
வெற்றிகண்ட இனத்தின்
துவம்ச வதைகளால் குதறப்பட்ட
தளிர்க்கொடியாய் இருக்கலாம்

அல்லது -
தோல்விகண்ட இனம் துவைத்துக் கிழித்து
துயரக் கொடியில் தொங்கவிட்ட
நைந்த ஆடையாய் இருக்கலாம்

நீ யாராய் இருந்தாலும்
என் கரிசனம் மட்டும்
உனக்கு ஒன்றுதான் சகோதரா

இன்று நான்
உனக்குச் சொல்லும் சேதியை
உன் மூளையின் மத்தியில்
ஓர் சுடராக ஏற்றிப்பார்

இங்கே
கண்ணீரை முந்திக்கொண்டோடும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

தன்மானமென்பது கடைப்பொருளல்ல
அது உன் உயிர்ப் பொருள்தான்
உன்னத உணர்வுகளின் கருப்பொருள்தான்

கருகிக் குவிந்து கிடக்கும்
கணக்கற்ற சடலங்கள்
உன் சுற்றமும் நட்புமல்லவா
நொறுங்கி நீராகிக் கிடப்பது
உன் உடலும் உள்ளமுமல்லவா

ஆயினும்
என் அன்புச் சகோதரா
உன்னிடம் எனக்கொரு கேள்வியுண்டு

உன் நிதான நிமிடங்களின்
நிழல்மடி அமர்ந்து
எனக்கொரு பதிலைச் சொல்

வெற்றி என்பது என்ன சகோதரா

முட்டாள் கரமெடுத்து
மூர்க்க அரிவாள் வீச்சில்
மூடத் தலைகளை
முடிவற்று வெட்டிச் சாய்ப்பதா

இல்லை சகோதரா
இல்லை

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா

இன்று தப்பலாம் உன் தலை
அது என்றும் தப்புமா சகோதரா

இன்றும் கூட
உன் தலைக்குப் பதிலாய்
இங்கே உருண்டோடிய உன்
இனத்தின் தலைகள்தாம் எத்தனை எத்தனை

வாழ்வில்
அழிவு வரும்தான்
ஆனால் -
அழிவில் வாழ்வு வருமா

சரித்திரம் பார் சகோதரா
வந்தபின் ஒத்தடம் அறிவீனமல்லவா
வருமுன் வேரறுப்பதே வெற்றியல்லவா

ஒருமுறை
அந்த இரத்தக் காட்டேறி
நம்மை நசுக்கி அரைத்து
நகைப்புக் காட்டி நகர்ந்துபோய்விட்டது
மீண்டும் அதையே வரவேற்று நீ
சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா

என்னருமைச் சகோதரா
இனி நீ செய்யச் சிந்திக்கவேண்டிய
காரியமென்ன தெரியுமா

மூட வெறியர்களின் மூர்க்க வேட்டுகள்
முற்றும் துளைக்காத கேடயமாய்
உன்னை நீ உருவாக்கு

கையரிவாள்களை
கண்தொடா குழிக்குள் கடாசிவிட்டு
உன் மனோ பலத்துடன் மீண்டு வா

எது கேடயம் என்று நீ கேட்டுத் தவிப்பது
எனக்குத் கேட்கிறது சகோதரா

கேள்

பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு

இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா உனக்கு வேண்டும்

எந்த நாய் நரியும் உன்
அழுக்கையும் தொடத் துணியாத
உயர் நிலையை உன் உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு

வெட்டிக் கொண்டு சாவதை
வீர மரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே

ஒப்புகிறேன்
வீடு புகுந்து நம் பெண்களின்
முந்தானை இழுக்கும் மூர்க்கக் கரங்களை
முழுதாய்க் கொய்வது முறையான செயல்தான்
சகோதரா

அதில் மரணம்
உன் மண்ணின் பெருமைக்கும்
தன்மான உணர்வுக்கும்
மனிதகுல இனத்திற்கும்
மகத்தான தொண்டுதான்

ஆனால்
நடந்து முடிந்த களத்தில்
வீரம் கொள்வதென்பது
இனி வரும் சந்ததிப் பெண்களின்
முந்தானையையும் இழுக்கக் கொடுக்க
இன்றே கையப்பமிடும் சாசனமல்லவா

'வெட்டு' என்பது
என்றும் விட்டுப் போகும் விசயமா
வெட்டாமையே பேரறிவல்லவா

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை

வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை உணர்த்தும் இயற்கையை
உற்றுப்பார் சகோதரா

வெறியரின் தலைகளை வெட்டிச் சாய்ப்பது
உனக்கு வெற்றியா தோல்வியா

தொடரும் அழிவுகள் என்பது
எக்காலத்தும் எவர்க்கும்
தோல்விதானே சகோதரா

அன்று
அணுகுண்டால் அழிந்தது ஜப்பான்
இன்றோ அது தன் உழைப்பின் வெற்றியோடும்
பொருள்வளப் பெருக்கோடும்
அறிவுச் சுடர் ஏற்றி உள்ளத் திண்மை பூட்டி
உலகை வென்றே உலா வருகிறதே
அந்தப் பேரெழில் கண்டாயா

அதுவன்றோ வெற்றி
அதுவன்றோ வீரம்
அதுவன்றோ வாழ்வு

மீண்டும் ஓர்
அணுகுண்டுப் போரென்று
அடிபட்ட ஜப்பானும் தாழ்ந்து போனால்
புல்லும் பூண்டும் கூட எங்கும் மிஞ்சுமோ

என் அன்புச் சகோதரா
இரத்தப் பாளமான உன் நெற்றியை
அறிவென்னும் நெருப்புக் கோடுகள்
அழுத்தமாய்ப் பதிய
சுருக்கிச் சுருக்கிச் சிந்தித்துப் பார்

இன்றின் அவலம் மற
மூட வெறிக்கு முக்கியத்துவம் தராதே

நாளையேனும்
நல்வாழ்வு என்னும் நெடிய சுகம் தேடி
உன் நெஞ்சோடு போராடு
நல்ல விடையோடு எழு

வாழ்க்கை ஒருமுறைதான்
அதை மூடருடன் முட்டிக்கொண்டு
முடித்துக்கொள்ளல் அறிவீனம்

காயங்களைச் செப்பனிட்டு
உன் கேடயங்களைத் தேடு

அந்த அறிவு வெளிச்சம்
உனக்குள் பட்டுத் தெறிக்க
சின்னதாய் ஒரு தீ மொட்டையேனும்
பூக்கவைத்தால் மட்டுமே

இது ஒரு கவிதை
சகோதரா

அ. முன்னுரை - அன்புடன் இதயம்


உயிர் முத்தங்கள்

தமிழால்
அமைந்த
கணினி
மேடைக்கும்
அதில்
தமிழெடுத்து
ஆடும்
இணைய
தேவதைக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல்

இணையம்!

தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ்

வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும்

தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம்

ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள்

சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம்

இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல்

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று

வறுமை கிழித்துப்போட்ட குடும்பத்தின் கடைசி ஆடையையேனும் தைத்தெடுத்து விடலாம் என்ற பதட்ட உணர்வுகளோடு மண்ணைப் பிரிந்த தமிழர்கள், தமிழோடு சேர்ந்திருக்கிறார்கள்

தாய்நாட்டில் எவர்க்கும் தமிழ்ப்பற்றே இல்லை என்றுரைக்கும் கண்ணற்ற ஓட்டமல்ல இது. போற்றிப் புகழும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று எல்லோருமே இன்னமும் அங்கேதான் அமோகமாய் விளைகிறார்கள். இருப்பினும், நாளுக்கு நாள் அமீபாக்களாய்ப் பெருகும் ஒரு கூட்டம் திசைமாறிப் பயணப்பட்டு, தமிழை நெருப்பில் புதைத்துச் சிரிக்கிறதே.

இவர்களின் மத்தியில், உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா?

இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கிவிட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து.

புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள்.

உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள்.

வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி உதைத்து விளையாடுகிறது இன்று.

நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடிநடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும்.

தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்ப்டும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன.

இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று.

தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்க்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம்.

உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல்.

தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி
தீர்ந்தே போவதோ?

விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின்
நெற்றியில் தமிழே!

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!

அன்புடன் புகாரி

416-500-0972
anbudanBuhari@gmail.com

அணிந்துரை - இலந்தை - அன்புடன் இதயம்


பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும்
-கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

கவிதை என்பது ஒரு பாதிப்பு.

கவிதை எழுதுமுன்னும் எழுதும் போதும் கவிஞனைப் பாதிக்கிறது எழுதப்பட்ட பின்பு அதைப் படிப்பவனைப் பாதிக்கிறது. படிப்பவனை எந்த அளவு பாதிக்கிறதோ அந்த அளவு அது சாதிக்கிறது அப்படிச் சாதிக்கிற முப்பது கவிதைகளின் தொகுதிதான் இது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு கவிதை ஒளிநாட்டிக்கொண்டிருக்கும் கவிஞர் புகாரியின் மொழிநாட்டம் இந்தத் தொகுதியின் முதற்கவிதையாக முகிழ்க்கிறது.

பார்ப்பவற்றைப் படமாக்குவது விழி, எண்ணத்தை ஒலியாக்குவது மொழி, கவிஞனுக்கு மொழிதான் விழி, அதுதான் அகத்தைக் காட்டும் வழி.

பிள்ளையை, தாய் தந்தைக்குக் காட்டுகிறாள், தந்தை ஊருக்குக் காட்டுகிறார், மொழி உலகுக்குக் காட்டுகிறது, அதன் இனிய ஓசையில் யாவர்க்கும் மயக்கம். அது சந்தத்தில் வசந்தத்தைக் காட்டுகிறது, வசந்தத்தில் சந்தத்தைக் கூட்டுகிறது. பாருங்களேன் இந்தக் கவிஞர் எப்படிப் பாடுகிறார் என்று!

கவிதையில் தொனிக்கின்ற
ஞானம்-தமிழ்
ஞானத்தில் உயிர்க்கின்ற
கவிதை


சொல்மடக்கு எத்தனை மிடுக்கு!

கண்களை மூடிக்கொண்டு கவிஞன் கவிதை பாடுவதில்லை. அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் அவனைப் பாதிக்கின்றன. சாக்கடை கூட அவனது கவிதையில் பூக்கடையாகிவிடுகிறது. கவிஞர் புகாரியின் "அழிவில் வாழ்வா" என்ற கவிதை மிகவும் அவசியமானது. மிகச் சிறந்த சமுதாய உணர்வோடும் தார்மீகப் பொறுப்போடும் எழுதப்பட்ட ஒன்று.

இந்தக் கவிதை அருமையான மனோதத்துவக் கவிதை. பழிக்குப் பழி என்று நெஞ்சில் வன்மம் கொண்டிருக்கும் ஒருவனிடம் போய் ' நீ செய்வது' தவறு என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டினால் கத்தியைப் பிடித்தவன் வாளெடுப்பான்.

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா

முதலில்...
என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்


என்று முதலில் பரிவோடு சொல்லும் போது, கத்தியைக் கையில் வைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்க்கிறான். அந்தப் பரிவு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கிறது. அடுத்து,

கண்ணீரை முந்திக்கொண்டோ டும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

வீடு புகுந்து...
நம் பெண்களின் முந்தானை இழுக்கும்
மூர்க்கக் கரங்களை முழுதாய்க் கொய்வது
முறையான செயல்தான் சகோதரா


என்று அவனது செயலை நியாயப்படுத்திச் சொல்கிறபோது நெருக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மேலும் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராகிறான்.

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா


என்கிறபோது சிந்திக்கத் தொடங்குகிறான். வெறும் பிரச்சினைகளையே சொல்லித் தீர்வைச் சொல்லாமல் விடுப்பதுதான் இன்றையப் போக்கு. ஆனால் நம் கவிஞன் அப்படி விடவில்லை.

கேள் !
பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு
இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு
அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா
உனக்கு வேண்டும்


இப்பொழுது அங்கே ஒரு மனமாற்றம் நிகழ வாய்ப்புண்டு. இந்தக் கவிதை ஆழமான கவிதை, அவசியமான கவிதை.

நான் அலாஸ்கா வீதிகளில் பனியின் கொள்ளைஅழகைக் கண்டிருக்கிறேன். கனடாவில் உள்ள வேங்கூவர் மிக அழகிய தூய்மையான நகரம் . அந்த நகரத்தின் தூய்மையைப் பற்றிக் கவிஞர் புகாரி சொல்லியிருப்பதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாதென்பதே என்கருத்து.

பெண்கள் தான் ஊதாரிகள் என்பது பொதுவான கருத்து. இல்லை, இல்லை ஆண்கள் தான் ஊதாரிகள் என்று அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார் புகாரி

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள் பெண்
ஆக,
ஊதாரிதானே ஆண் -
கவலையை விடுங்கள்


ஒரு திருமணக்காட்சி மிக அற்புதமாகப் படம் பிடிக்கப்படுகிறது. திருமணமேடையின் அலங்காரம் எப்படித் தெரியுமா?

வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவ்஢ட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு


இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் ' பஞ்ச பூதக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் முதல் நான்கு வரிகள் 'ஆலாபனை' போலக் கவிதையின் விகசிப்புக்குக் கட்டியம் கூறிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கவேண்டும். 'என்தெய்வம் தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக் கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றை உயர்ந்தது என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது.

கவிஞர் புகாரியின் கவிதைகளில் பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும் இழைந்திருக்கக் காணுகிறேன்.

தன்னுளே கவிதை யென்னும்
தவத்தினை நிகழ்த்து கின்ற
அன்பராம் புகாரி இங்கே
அளித்துள இனிய நூலாம்
'அன்புடன் இதயம்' தாய்க்கோர்
அணிகலன், போற்று கின்றேன்
உன்னதம் காண உங்கள்
உள்ளத்தைக் கண்ணில் சேர்ப்பீர்

அனிந்துரை - கவிநாயகர் - அன்புடன் இதயம்


அன்புக் கவிதைகள்
-கவிநாயகர் வி. கந்தவனம்

கவிஞனுக்குப் படிப்பறிவு மட்டுமன்றி பட்டறிவும் வேண்டும்; பருகும் கண்கள் மட்டுமன்றி உருகும் உள்ளமும் வேண்டும்; உருகும் உள்ளம் மட்டுமன்றி உணர்வை வடித்தெடுக்கும் வல்லமையும் வேண்டும்; வடித்ததை இடையிலே எவரின் உதவியும் இல்லாமலேயே வாசகர் தரிசிக்கும் வகையிற் பிடித்து வைக்கவல்ல விவேகமும் வேண்டும்.

இந்த விவேகத்தை நான் கவிஞர் புகாரி அவர்களிடம் காண்கின்றேன். கவித்துவத்தைக் காட்டக் கடினமான வார்த்தைகளைக் கட்டித் தழுவாது, எளிமையான சொற்களை எடுத்து, அவற்றுக்குள் கனதி ஏற்றுகின்ற கலைஞனாக புகாரி விளங்குகின்றார்.

இதனை, கனடாவில் கடந்த ஆண்டு நடந்த 'வெளிச்ச அழைப்புகள்' என்னும் அவரது முதற் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவிற் கலந்து கொண்டு பேசும்பொழுது குறிப்பிட்டிருந்தேன்.

அத்தொகுதி கனடாவில் அதிகம் விரும்பப்பட்டதிலிருந்தே அவர் ஒரு 'வாசகர் கவிஞன்' என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இணைய வாசகர்களும் அவருக்கு நாளாந்தம் பெருகிய வண்ணம் இருக்கின்றனர்.

முதற்கவிதைத் தொகுதியின் வெற்றி, ஒரு வருடத்துக்குள்ளாகவே மற்றுமொரு கவிதைத் தொகுதிக்கு வழிவகுத்திருப்பது, அவரது பிரகாசமான எதிர்காலத்தின் நிகழ்காலமாகும்.

'அன்புடன் இதயம்' தமிழோடு தொடங்குகிறது. 'தமிழ்' என்ற சொல்லின் பொருள்களிலே அன்பு என்பதும் ஒன்று.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே


என்ற திருமூலர் மந்திரத்தில் தமிழ், அன்பு என்ற பொருளில் வந்திருப்பதைப் பார்க்கிறோம். கவிஞரும்

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்


என்று பாடும் பொழுது அன்பின் முதிர்ச்சியாகிய கருணையைத் தமிழ்மீது ஏற்றியிருப்பதைப் பார்க்கிறோம்.

அத்தகைய கருணை மொழியைக் கற்க மறுப்பதோடு பேசுவதும் மதிப்புக் குறைவு என்று நினைக்கும் சில தமிழருக்கு 'தமிழை மறப்பதோ தமிழா' என்ற பாடலில் உணர்ச்சி ஊசி ஏற்றுகின்றார் கவிஞர்.

அன்பு உணர்ச்சியே தொகுதி முழுவதும் பொன்பூச்சொரிகின்றது. 'கைகள் ஏந்தி', 'கண்களின் அருவியை நிறுத்து' போன்ற பரிவுக் கவிதைகளிலும் 'நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை' என்று பொங்கியெழும் இடங்களிலும், கொலம்பியா விண்கல விபத்துக்குறித்து கவலைப்படுகையிலும் புகலிடத்துக்கு நன்றி கூறுகையிலும் அன்பின் பலவிதமான பரிமாணங்களைத் தரிசிக்கின்றோம்.

பல சமகால நிகழ்வுகள் பக்குவமான கவிதைகளாகியுள்ளன. வான்கூவர் பயணம், பன்னிரண்டாம் குடியரசுத் தலைவா, தமிழ் இணையம் 2002, திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள் நல்ல உதாரணங்கள்; காலத்தின் கண்ணாடிகள்.

பஞ்சபூதங்கள் பற்றிய கவிதைகள் உலகத்து உயர்ந்த கவிதைகளோடு வைத்துப் போற்றப்பட வேண்டியவை.

'தோழியரே தோழியரே' என்னும் கவிதை உத்தி பாரதியாரின் 'மங்கியதோர் நிலவினிலே...' என்ற பாடலின் உத்திமுறையைப் போன்று மிகவே உயர்ந்தது.

'கல்யாணமாம் கல்யாணம்' நல்ல பதிவு. அன்று கண்ணகியை வைத்துக்கொண்டு தமிழர் திருமண முறையை இலக்கியமாக்கினார் இளங்கோ . இன்று பொதுவான திருமண வழக்குக்குப் பேச்சுத் தமிழிற் பூச்சூடியிருக்கின்றார் புகாரி.

கவிஞரின் சொல்வளம் சொல்லுந்தரமன்று. தமிழுக்கு ஓசைத் தமிழ் என்று ஒரு பெயர். அந்த ஓசைத் தமிழோடு அவர் கொஞ்சி விளையாடி எம்மையும் குதூகலிக்கச் செய்கின்றார். இதற்கு

கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா - தோழா
கவலைக்குள் சாகாதேடா

விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா - தோழா
செவியோடு செந்தேனடா


எனத் தொடங்கும் 'கண்களின் அருவியை நிறுத்து' என்ற கவிதை நல்ல உதாரணம்.

ஓசையோடு ஆங்காங்கே பாசத்தோடு தலைகாட்டும் அங்கதச் சுவையையும் பல கவிதைகளில் வாசகர்கள் அனுபவிக்கலாம். ஓசை செவிக்கு இன்பம். அங்கதம் சிந்தனைக்கு இன்பம். 'கைகள் ஏந்தி', 'ஒரு வாரிசு உருவாகிறது', 'என் குடும்பம்' ஆகிய கவிதைகளிலும் இன்னும் பலவற்றிலும் பொருளை அங்கதத்தால் அள்ளித் தருகின்றார்.

கோலெடுத்துக் கொடுத்துவிடு
சாதிச் சண்டைக்கு
கொடுத்தவனைத் தெரியவேணாம்
மக்கள் கண்ணுக்கு

ஆளுக்குஆள் சாதிவெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க (ஒரு வாரிசு உருவாகிறது)


இவ்விதம் பல பொருள்களைப் பல சுவைகளில் வழங்கும் இத்தொகுதிக் கவிதைகள் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் வாசகருக்கு நேரடியாகவே எடுத்து செல்லும் சக்திவாய்ந்த வெண்புறாக்களாகவும் சிறகடிக்கின்றன.

நிறைவுக் கவிதையே நூலின் தலைப்பும். இன்று உலகத்திலே மிகவும் தட்டுப்பாடாக இருப்பது அன்புதான். அது அருகிவிட்டதாலேதான் திரும்பும் திசைகள் எல்லாம் சண்டைகளும் சச்சரவுகளும் - சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால்... அழுக்காறும் அவாவும் வெகுளியும் செய்யும் அட்டூழியங்களுக்குப் பாடை கட்டி, அமைதியைக் கொலுவில் ஏற்ற அன்புக்கு அழைப்பு விடுகிறது கவிஞரின் இதயம்:

சுக்கல் சுக்கலாய்
மனம்
நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய
அன்பே நீயென்
உடன் வருவாயா


இப்படி விடியல் கீற்றுகளாய் தனது கவிதைகள் விளங்க வேண்டும் என்னும் உயர்த்துடிப்போடு வார்த்தைகளை உருக்கி உருக்கி வார்க்கின்றார் கவிஞர்.

அன்போடு உறவாடும் தமிழோடு தொடங்கி, அன்புக்கு ஆதாரமான இதயத்தோடு இவ்வரிய தொகுதி நிறைவு பெறுகின்றது.

இத்தொகுதி புகாரி அவர்களை 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது. வாசகர்களையும் அன்பர்களாக்குகின்றது.

வாழ்க அன்புக் கவிஞர்!

புகலிடம்

கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு இடையே நாலரை மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு.

வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம் இதற்குத்தான் சொந்தம். ஆனால் சுமார் 31 மில்லியன் ஜனத்தொகையே கொண்ட இந்த நாட்டில், ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் என்று பல்வேறு திசைகளிலிருந்தும் வந்து குடியேறியவர்களே 97க்கும் மேற்பட்ட சதவிகித மக்கள்.

தொழில், திறமை, தகுதி போன்ற அடிப்படையில் தேர்வு செய்து, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்நாட்டின் மீது ஆர்வம் கொண்ட மக்களை, தன் குடிமக்களாய் ஏற்றுக்கொள்ளும் இந்நாடு அபயக் குரலோடு ஓடிவரும் பெரும்பாலான அகதிகளையும் தகுதிபாராமல் அன்போடு அள்ளியணைத்துக் கொள்ளும் கருணைத்தாயாய் விளங்குகிறது.

இதன் புண்ணியத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இங்கே அடைக்கலம் புகுந்து தங்களின் வாழ்வை மேம்படுத்தி சிறப்பாக வாழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தன் நன்றி பொங்கப் பாடுவதாய் அமைந்ததுதான் இக்கவிதை

*

கண்ணில் விளக்கெரிப்பாள்
என்றும் கருத்தில் எனைக்கொள்வாள்
எண்ணும் பொழுதிலெல்லாம்
என்றன் இதயம் குளிர்விப்பாள்

பொன்னும் மணியுமிங்கே
பெற்ற தாய்தமக் கிணையாமோ
நன்றியும் சொல்வதுண்டோ
நித்தம் நேர்வரும் தெய்வமன்றோ

முன்னம் தாய்தந்தை
அவர்முன் மூதாதையர் பலரும்
அன்னைத் திருமண்ணே
உன்னில் ஆடிக் களித்திருந்தார்

உன்னை உண்டுதானே
உயரில் உரங்கள் சேர்த்திருந்தார்
வென்றுன் மடிசாய்வேன்
விடுத்து நன்றியா நானுரைப்பேன்

இன்னல் பிளந்தெடுக்க
சுற்றும் இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க
முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை

உன்னில் அணைத்தவளே
உயிரின் ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே
கருணை அன்பில் புதைத்தவளே

எண்ணம் மதித்தவளே
என்னை எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய்
எனக்குள் எல்லாம் ஈந்தவளே

மண்ணே புகலிடமே
என்றன் மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே
நன்றி ஊற்றே உயிர்தனிலே

என் குடும்பம்

சில்லறையை அள்ளி
தொப்பைக்குள் போட்டுக்கொண்டு
கள்ளச்சாராயச் சந்தைக்குச்
சலாம் அடிக்கும் காவல்காரர்

என் மச்சான்

எதைக் கொடுத்தாலும்
குடிப்பேனென்று குடித்துவிட்டு
நாக்குத்தள்ளி செத்துப்போன
குடிகாரன்

என் அண்ணன்

பட்டம் வாங்கிவிட்டேன்
வங்கியில் மட்டும்தான்
வேலை பார்ப்பேனென்று
தெருத் தெருவாய்த் திரியும்
வேலையில்லாப் பட்டதாரி

என் தம்பி

மாவட்ட ஆட்சித்தலைவன் தொட்டு
அடிமட்ட சேவகன் வரை
கை நீட்டிப் பை நிரப்பும்
அரசு நிர்வாகிகள்

என் சகலைப்பாடிகள்

ஊரை அரித்து உலையில் போட்டு
கைத்தட்டல் வாங்கும்
அரசியல்வாதி

என் மாமா

ஓர் எவர்சில்வர் குடத்திற்காக
எவனுக்கும் ஓட்டுப் போடும்
இந்நாட்டு அரசி

என் அம்மா

உள்ளூரில் வேலையில்லை
என்று திசைமாறிப் பறந்து
அத்தோடு தொலைந்துபோன
அமெரிக்கப் பிரஜை

என் அக்கா

சுதந்திரம்
வாங்கித்தந்தத் தியாகி
என்ற பெருமையோடு
சாய்வு நாற்காளியில்
சலனமற்றுக் கிடப்பது

என் தாத்தா

வார்த்தைகள் உயர்த்தி
விடியல் திறக்கும் வலிய பேனாவால்
தொலைந்துபோன காதலிக்காக
புலம்பல் கவிதைகள்
வடிக்கும் அற்புதக் கவிஞன்

நான்

திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்

பிப்ரவரி 01, 2003: பதினாறு தினங்கள் விண்ணில் பறந்த கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியதில் இந்தியப் பெண்மணி கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.


ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்

மண்ணிலிருந்து வானத்தில்
விழுந்துவிட்ட நட்சத்திரங்கள்

திரும்பிய பயணத்தில்
திரும்பாத பட்டங்கள்

சாதனைக்கு மட்டுமின்றி
சாவுக்கும் சேர்த்தே
ஒரே பயணத்தில்
இருமுறை பறந்துவிட்ட
அவசரப் பறவைகள்

விண்ணில் பாய்ந்தபோது
மண்ணில் வாழ்த்தினர்
மண்ணுக்கு வரும்போது
விண்ணுக்கு அழைத்தது யார்

கொலம்பியா விண்கலம்
குழம்பிப் போனதா
கொடுப்பினை என்பதும்
தடுக்கிக் கொண்டதா

நாசாவின் கண்களில்
இன்னுமொரு முள்
சாகசக் களங்களில்
சாவுமோர் பிறப்பு

அரியானாப் பெண்ணின்
ஆகாய வெற்றி
இந்தியத் தலையில்
இன்னுமொரு மகுடம்

மகுடத்தின் கொடிகள்
அரைக்கம்பம் பறக்க
மறைந்தாயே தோழி
முக்காலும் வாழி

சாதனையற்றவன் சாவு
புறமுதுகு காட்டித்தான்
உங்களின் சாவோ
நெஞ்சிலே ஈட்டிதான்

ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்

நெருப்பு


ஊனும் பசியில் உயிரும் பசியில்
நோயும் பசியில் மருந்தும் பசியில்
பசியின் விசைக்கு மூலம் உண்டா
பசியைப் பார்த்த விழிகள் உண்டா

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்

மூட்டி விட்டால் முயற்சி எழும்பும்
பற்றி விட்டால் உணர்ச்சி படரும்
ஓங்கிக் கதறும் கதறல் உள்ளும்
ஒளிந்து கிடக்கும் நெருப்பின் வேகம்

அறிவும் நெருப்பு அன்பும் நெருப்பு
கருணை ஓங்க நெருப்பே பொறுப்பு
கண்ணீர் சிந்தும் தாயின் உள்ளம்
பாசம் என்னும் நெருப்புப் பந்தம்

மோகம் மூளும் மூச்சும் வேகும்
முத்தம் பற்றும் இரத்தம் எரியும்
நெருப்பே பெண்ணுள் கருவாய் ஒட்டும்
நெருப்பே நெஞ்சில் கவிதை கட்டும்

வேரின் நெருப்பு நீரை நாடும்
உயிரின் நெருப்பு சாவைத் தேடும்
ஆக்கும் அழிக்கும் நெருப்பின் கைகள்
இருளை எத்தும் நெருப்பின் கால்கள்

கல்லை எரித்துக் குழம்பாய் வார்க்கும்
கடலை எரித்து மழையைக் கொட்டும்
உள்ளம் எரித்துத் தர்மம் காக்கும்
கள்ளம் எரித்து நீதி நிறுத்தும்

வைரக் கல்லும் நெருப்பின் பிறப்பே
கணினி இணையம் யாவும் நெருப்பே
வெளிகள் எங்கும் உருளும் கோள்கள்
வெடித்த நெருப்பு கொடுத்த துகள்கள்

நிலத்தின் நடுவில் இருப்பது நெருப்பு
அணுவின் நடுவில் வெடிப்பது நெருப்பு
நூறு பில்லியன் விண்மீன் நெருப்பு
நெருப்பின் தயவில் அண்டம் இருப்பு

காற்று


உதடுகள் தொட்டு ஒத்தட முத்தம்
ஓசைகள் இன்றி ஒத்துவதாரு
செவிகள் தொட்டு நித்தமும் கீதம்
சுரங்கள் சேர்த்துப் பாடுவதாரு

நாசிகள் தொட்டு நாளும் வாசம்
நெஞ்சம் கிறங்க நிமிண்டுவ தாரு
உயிரைத் தொட்டு உயிராய் நிறையும்
ஒவ்வோர் சுகமும் காற்றின் அசைவே

காற்றில் அலையும் பூங்கொடி தானே
நாட்டியம் ஆடப் பாடம் எடுத்தது
காற்றில் மிதக்கும் வாசனை தானே
சமையற் கலையைக் கற்றுத் தந்தது

நீரின் மீதினில் காற்றின் கோலம்
ஓவியம் தீட்டும் உள்ளம் ஈன்றது
மணலின் மீதினில் காற்றின் கோலம்
சிலைகள் வடிக்கச் சொல்லித் தந்தது

இலைகள் ஊடே காற்றின் ஜாலம்
இசையைத் தேடும் ஆவல் நெய்தது
கலைகள் யாவும் காற்றின் ஆடல்
இலக்கியம் கூட காற்றின் தேடல்

செவியும் மூக்கும் எப்படித் திறக்கும்
ஓசையும் வாசமும் காற்றால் பிறக்கும்
ஓசைகள் இன்றி மொழிகளும் இல்லை
மொழிகள் இன்றி உலகமும் ஊமை

ஒவ்வோர் ஜீவனும் தசைநார் பின்னி
உன்னதக் கூட்டை உடலுள் கட்டி
ஒவ்வொரு முறையும் ஏங்கித் தவிக்க
ஓடித் திரியும் நாடோடிக் காற்று

இதமாய்த் தழுவும் சுகமாய்க் காற்று
இதயம் வருடும் அன்பாய்க் காற்று
தலையைக் கோதும் கரமாய்க் காற்று
உயிரைப் பேணும் தாயாய்க் காற்று

மனதின் சோகம் பெருமூச் சாகும்
கடலின் சோகம் புயலாய் மாறும்
நிலமும் கூட நீள்மூச் செறியும்
நடுக்கத் தோடு பிளந்தே மூடும்

நீரின் நெருப்பின் சுவாசம் காற்று
நிலத்தின் காதல் தழுவல் காற்று
காற்றே இன்றி உயிர்கள் இல்லை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

ஆகாயம்

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவப் பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்

நீர்



உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டின் போது திசைகள் மாலன் கூறியது:

அடையாரில் ஒரு பெண்கள் கல்லூரி. எம்.ஜி.ஆர்-ஜானகி பெயரில் அமைந்தது. ஒருநாள் என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். அரங்க மேடையில் அய்யா (வா.செ.) குழந்தைசாமி, அருமைத் தங்கை கனிமொழி, அப்புறம் யார் யாரோ பேராசிரியர்கள். அகில இந்தியக் கருத்தரங்கம் என்று அறிவித்திருந்ததால் அனைத்துக் கல்லூரியும் ஆஜராகி இருந்தது.

என்னைப் பேச அழைத்த போது மின்னல் போல் நெஞ்சில் ஒர் எண்ணம். நெடிது தொடரும் சிந்தனை மரபில் சிறிது காட்டலாம் என்று நினைத்தேன்.

நீர் இன்றி அமையாது யாக்கைக்கு என்று சொன்ன சங்ககாலத்து குடபுலவியனாரை எடுத்துச் சொல்லி ஆரம்பித்தேன்.

அடுத்து நான் புகாரியின் இந்த வரிகளைத் தொடுத்துச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது கரங்களின் ஒலியால்:

சமைப்பதுவும்
உண்பதுவும்
உணடதனைச் செரிப்பதுவும்
செரித்ததெல்லாம்
ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும்
தண்ணீர்தான்
கருணை கூடத் தண்ணீரே
ஈரமில்லா
உள்ளத்தை
இதயதமென்று யார் உரைப்பார்?

அந்தக் கரவெலிகள் எனக்கா? புகாரிக்கா?

இருவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த விரலொலிகள் அத்தனையும் எங்கள் தமிழுக்கு. இதை எனக்குச் சொன்னதும் இந்த புகாரிதான்:

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து- தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்!



நீர்

தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா

கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே

சுற்றுகின்ற உலகமிதில்
சூழ்ந்ததெலாம் தண்ணீரே
சூரியனும் விழுங்கிடாமல்
காப்பதுவும் தண்ணீரே

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்

மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்

தண்ணீரால் ஆனதினால்
தண்ணீரைக் கேட்டோமா
தாய்த்தண்ணீர் வேண்டித்தான்
சேய்த்தண்ணீர் தவிக்கிறதா

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்

நிலம்


கவிமாமணி இலந்தை கூறியது:

இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் ' பஞ்ச பூதக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் முதல் நான்கு வரிகள் 'ஆலாபனை' போலக் கவிதையின் விகசிப்புக்குக் கட்டியம் கூறிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கவேண்டும். 'என்தெய்வம் தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக் கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றை உயர்ந்தது என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது.


நிலம்

குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே

எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை

கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே

பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே

காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை

உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்

உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

தைமகளின் தமிழ்ப் புத்தாண்டு

தைமகளே
எழில் தமிழ்மகளே
தாய்மடியில் உன் தாலாட்டே

எத்தனையோ
தமிழ் மாதங்களும்
இன்னமுதத் தேன் அளந்தாலும்

முத்தொளிரும்
தமிழ்ப் புத்தாண்டில்
முரசொலித்தே உன் முகமெடுத்து

முத்தமிழர்
ஏன் முன்வைத்தார்
மொழிவாயே என் தைமகளே

அத்தைமகள்
விழி மார்கழியும்
அழகொளிரும் சுடர் சித்திரையும்

முத்தமிடும்
பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ
இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப்
பண் பாடிவர
தைமகளே நீ ஏனடியோ

கத்தரியாய்த்
துயர் துண்டாடி
அமுதளக்கும் நிலத் தைமகளே

எத்தனையோ
துய்ர் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

தைமகளே
தவப் பொற்கொடியே
ஏருலகம் உன் சொற்படியே

முத்தெடுக்கும்
நீள் மூச்சழகே
முறைதானே நீ தலைமகளே

முத்துரதம்
மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும்
வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

புத்தாண்டின்
புது நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச் சுரம்பாட

தைமகளே
நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்

எழுதக் கூடாத கடிதம்

அன்பே

கோடி கோடியாய்ச்
சொற்களைச் சுரந்து
உன்முன்
கொட்டிக் கொட்டி
நான்
பேசித் தீர்த்திருக்கிறேன்

இருந்தும்
நான் இடைவிடாமல் கையாண்ட
ஒரே ஒரு சொல்மட்டும் என்னால்
மௌனமாகவே
உச்சரிக்கப் பட்டிருக்கிறது

ஆம்
அந்த ஒற்றைச் சொல்லைமட்டும்
உன்முன் ஒலியைத் தீண்டவிடாமல்
என் நாவினுள்ளேயே
நான் பத்திரமாய்ப் பூட்டிவைத்திருக்கிறேன்



எனக்குத் தெரியாததா
மௌனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை எனக்கெனவே
இன்னமும் உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை

எனக்குக் கேட்காததா
நீ உன் அந்தரங்கத்துக்குள்
என்னை இரகசியமாய் முத்தமிடும்
சப்தங்கள்

பல நேரங்களில்
நீ உன் விரல் கொழுந்துகளை
என்முன் நீட்டி நீட்டி
என்னைத் தொட முன் வந்திருக்கிறாய்

உன் பெண்மைக்கே உரிய நாணம்
என் பதில் என்னவாக இருக்குமோ
என்ற அச்சம் எழுப்ப
விருப்பமே இல்லாமல்
பின்வாங்கி இருக்கிறாய்

இருந்தும் என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை

நான்
உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே
தவமிருக்கும் உன்னையே
உயிருக்கு உயிராய்
காதலிக்கும் ஈர நெஞ்சன் தான்

ஒரு நெடிய காட்டுத்தீ
உன் நெஞ்சில் எழுந்துவிட
நான் காரணமாகிவிடுவேனோ
என்ற பீதியினால்தான்
கல்நெஞ்சனாய் இருக்கிறேன்

உனக்குள்
எழுந்துவிடுமோ என்று நான்
ஐயப்படுகின்ற அந்தத் தீ

எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்

ஆனால்
உன் சொந்தக் கூட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்

எனவேதான் என் அன்பே
என் மனதை
ஒலிபெருக்கியில்
அறிவிக்காவிட்டாலும்
உன் செவியோரத்தில்
ஒரு சின்னக்
கிசுகிசுப்பாய் அறிவித்துவிடேன்
என்ற உன் விழிக் கெஞ்சல்களையும்
நான் நிதானமாகவே நிராகரிக்கிறேன்

இருந்தும்
என் காதலை உன்முன்
என் உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர் உற்சவமே நடத்திவிட்டது

சந்தேகமிருந்தால்
நான் அடிக்கடி சென்று
மனம் வடிந்து வருவேனே
அந்த ஏகாந்த மணல்வெளி

அதன்
ஒவ்வோரு
மணல் மொட்டுகளையும்
கேட்டுப் பார்
அவை சொல்லும்

கண்ணே
நான் உன்னைக் காதலிக்கிறேனடி

இதயத்தின் எல்லா அணுக்களாலும்
நான் உன்னை நேசிக்கிறேனடி

உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை அஉச்சரிக்கிறேனடி

என்று நான்
தினந்தினம்
தொண்டை கிழியக் கூவும்
சோகத்தை

நீ கேட்கலாம்
இதுமட்டும் தகுமோ என்று

உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்

இருந்தும் என் அன்பே
நான் எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்

அந்த
மரணமடையாத மனத் துடிப்புகள்
எனக்குள் எப்படியோ
நிரந்தரக் குடியமைத்தபின்

என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய

பிரிகின்றேன் கண்மணி

எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும் ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே விவரிக்கிறது.


பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க

கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்


இனியென்ன ஆறுதலோ
என்னிடமோ வார்த்தையில்லை
அணிச்சப்பூ நீயல்ல
அதைவிடவும் ஓர்படிமேல்

இனிக்கவென்றே வாழ்க்கையென
எனைத்தேடி வந்தவளே
திணித்தேனே உன்நெஞ்சில்
திரள்திரளாய் துயரத்தை


மணிக்கணக்காய் உரையாடி
மடிமீது துயில்கொண்டு
இனிப்பாகத் துடுப்பசைத்து
இதயத்தில் படகுவிட்டோம்

தனிப்பறவைச் சிறகசைத்தால்
தங்கவெளி தான்வருமோ
கனியமுதே உன்னோடு
கண்டேனே சொர்க்கவெளி


துணையல்ல நீயெனக்குத்
துயிலவைக்கும் தாய்மடிதான்
மனைவியென நீ வந்த
மறுகணமே நான் பிறந்தேன்

அணைத்து மெல்லத் தலைகோதி
ஆறுதலாய்ப் பார்ப்பாயே
உனைப்பிரிந்த நொடியேயென்
உயிரெந்தன் வசத்திலில்லை


மனைவியுனைப் பிரிந்துவந்த
மனமெந்தன் மனமில்லை
நினைவெங்கும் நீயிருக்க
நினைப்பேனோ உனைப்பிரிய

எனைவென்ற இல்லாமையை
இல்லாமல் ஒளித்துவிடத்
துணையுன்னைப் பிரிவதற்குத்
தூண்டியது நீயுந்தானே


இணைந்துவிட்ட உயிர்கள்நாம்
இதுநமக்கு உடற்பிரிவே
உனைச்சேர சிறகசைத்து
ஓராண்டு முடிவினிலே

எனைவெல்லும் எல்லாமும்
என்முன்னே மண்டியிட
அணையுடைக்கும் வெள்ளமென
அன்பேயுன் மடிவீழ்வேன்
*பதினோராம் குடியரசுத் தலைவா*


வைர விதையே
*எங்கள் அப்துல் கலாம்*

ஒரு பனித்துளி
தென்னிந்தியப் புழுதிப்
புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை

ஒரு சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம்
சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும்
திறமையோ உன் திறமை

எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும்
எழில் இராமேஸ்வரம்
ஈன்றெடுத்த
தங்கத் தமிழனே

உன்னை
விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின்
உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது

சூழும் சூனியங்களைச்
சுட்டெரித்து நிற்கும்
உன் மனத்திண்மையும்
மூளைத்திடமும் கண்டு
நான்
நகக்கூச்செறிகிறேன்

சாட்டை சொடுக்கச்
சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில்
வீறுகொள்வதெப்படி

குஞ்சுகளைக் காக்க
சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட
ஒரு கணம் சக்திகெட்டு
ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்

நீயோ
இந்தியாவின் முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல்
அரண் அமைக்கும்
வித்தையில்
அதிசயத்தைக் கண்டுவிட்டாய்

ஐயனே
எங்களை ஆள வந்த மெய்யனே

எழுபதைத் தொட்டும்
முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே

வீணையின் நரம்புகளோடு
சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே

எழாமலும் விழாமலும் எந்நேரமும்
பணிக்குள் புதைந்துபட்ட போதும்
இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின் ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே
நல்ல தமிழ்க் கவிஞனே

ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய
அணுசக்தியே

உன்
ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ஆட்டிப் பார்த்துவிட்டன

அதோடு
அரை நூற்றாண்டிலேயே
அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர் ஏவுகணை செய்வாயா

கனலாகவே கருவான
கிராமத்துக் கதிரவனே

நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு பிரகாச உற்சவத்தில்

சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய்
எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே

இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்

ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா

மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே
அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும் அவலம்
இன்னும் நீள்கிறதே
அதை அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா

திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்

உன் திசைகளெல்லாம்
தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்

தேனளக்கும் நம்பிக்கையை
நீ வாரி வாரி வழங்குகின்றாய்

உன் தீவிரமும் நானறிவேன்

நாளை எழுந்துநிற்கும்
இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க்
காட்டுகின்றாய்

கண்களின்
கரைகளிலெல்லாம்
இன்று நான்
கண்ணீரே ஏந்துகின்றேன்

இனியேனும்
ஏற்றங்கள் காண்போமா
இல்லை
ஏமாற்றம் ஒன்றேதான்
கொள்வோமா

உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும்
ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி

அப்படியொரு
தோல்வியைச் சொல்ல
நீ யொன்றும் கோழையல்ல

நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின்
இடுப்பிலேயே போட்டு
இழுத்து வரமாட்டாயா
நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு
நான் நிற்கிறேன்

துரோகக் கிருமிகளாய்
உன்னைச்
சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க
நூறு கோடி நெஞ்சங்களும்
ஒன்றுபட்டே நிற்கின்றோம்

ஒரு கூட்டு வேண்டுதலாய்
இறைமுன் தொழுகின்றோம்

மறவாதே ஐயனே
கொண்ட கொள்கையின்
தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே
எங்களின்
பதினோராம் குடியரசுத் தலைவனே

கவிஞர் புகாரி
(2002ல் எழுதிய கவிதை)

15 அக்டோபர் 1931 – 27 ஜூலை 2015