மீட்கப்படுவார் கடவுள்


சுடர்விட்டு
எரிகிறது கொள்ளி
அணையப் போகும்முன்
ஆரவாரமாய் வெகுண்டெழுந்து

இந்த நூற்றாண்டின்
பாதி நடையிலேயே
மிதிபட்டு மரணிக்கும்
அத்தனை மதங்களும்

இதற்கிடையில்
நவீன மதமென்று
எந்த நாசூக்கு நஞ்சையும்
பிஞ்சுகளின் நெஞ்சில்
நட்டுவிடக்கூடாதே
என்ற கவலையையும்

மூளையைச் செப்பனிட
முப்பத்து முக்கோடி பணிகள்
புத்தம் புதிதாய்ப் பூத்திருக்கின்றன
என்ற ஆறுதலும்
பரிசோதனைக்காக மட்டுமே
இனி மலம் நோண்டுவார்கள்
என்ற உறுதியும்
ஊதித் தள்ளுகிறது

மின்சாரம் நசுக்கிய பேய்கள்
சிரிப்புத்தொடரில் மட்டுமே
சிக்கிக்கொண்டதைப்போல
சித்ரவதைபடப்போகும் மதங்களுக்கு
இப்போதே மத்தாப்பு கொளுத்தி
அனுதாபம் கொண்டாடலாம்

மனித இருட்சிறையிலிருந்து
மீட்கப்படுவார் கடவுள்

No comments: