என்ன விலை தந்து இந்த இருட்டை
எனக்கே தெரியாமல் நான்
இங்கே அழைத்து வந்தேனோ

இதய இழைகளால் நெய்த
தலையணை தருகிறேன் நான்
படுத்துறங்கும் சுகமில்லை உனக்கு

ஏங்கி நிற்கும் உன் இதயக் கூட்டுக்குள்
நான் எங்கோ சிதைவுற்று
முகமின்றித் திரிகிறேன்

வெற்றுச் சதைப் பிண்டமாய்
வீழ்ந்து கிடக்கிறேன்
இனி நானுன் அடுப்புக்கேனும்
ஆவேனோ அறியேன்

யார் யாரோ அணிவிக்கும்
போலிக் கண்ணாடிகளைக்
கழற்றியெறிந்துவிட்டு என் உள்ளே பார்
உனக்கான உயிரின் நடுக்கம் தெரியும்

அடிமனதில் நேசிப்பே நிறைந்திருந்தும்
அலையோரங்களில் துயரங்களல்லவா
நுரை உமிழ்கின்றன

உன் கனவு மெய்ப்பட நானும்
என் கனவு மெய்ப்பட நீயும்
ரத்தம் கொட்டவும்
தயாராய்த்தான் எழுந்தோம்

பறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகளாய்
நம்மைப் படுக்கவைத்துச்
சிரிக்கிறதே பொல்லாத சூழ்ச்சி

உடைந்து ஒட்டவைக்கப்பட்ட
என் கைகளை
தளர்ந்த கால்களோடு குவித்து
நிரந்தர மடி ஏந்துகிறேன்
புதைந்து கொள்ளும் சுகம்
என்றுதான் வருமோ உனக்கு

No comments: