கவிதை கிடைத்துவிட்டது


ஒரேயொரு கவிதையேனும்
எழுதிவிடவேண்டுமென்று
ஒரு கதாசிரியனுக்கு
உயிருறங்காத தாகம்

பிடித்தச் சிறுகதையொன்றை
பிடித்துக் கட்டுகிறான்
கொம்பில்

வாக்கியம் வாக்கியமாய்
உரித்தெடுக்கிறான்
நடுப்புள்ளிவிட்டு
நழுவிய குற்றவாளிகளென்று

வார்த்தை வார்த்தையாய்க்
கத்தரிக்கிறான்
அனாவசியத் தொந்தியென்ற
அவசியத் தீர்மானத்தோடு

எழுத்து எழுத்தாய்க்
கிள்ளியெறிகிறான்
சொல்லிலும் வேண்டுமே
சுருக்கமென்று

வாசித்து வாசித்துத்
துள்ளித்துள்ளி குதிக்கிறான்
கவிதை வந்துவிட்டதென்று

நெடிதாய்க்
காய்ந்துகிடந்த சுடுகாடு
நொடிப்பொழுதில் ஈரமாகிறது

No comments: