இருட்டு பேசுகிறது - மேலும் சில கேள்விகள்

அதிரை சித்திக்: இருட்டை துரத்த வெளிச்சம் காட்டிய வேகம், வேகமாக சென்று மறைந்தது போன்றிருந்தது. வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே கவியன்பன் கவி சமாதானம் செய்தது போல் இருந்தது. தொடரட்டும் கவி யுத்தம்.

புகாரி: உலகம் தட்டையென்று கூறிய காலத்தில் இல்லை அது உருண்டை என்று சொன்னவனைக் கொன்றுபோட்டுவிட்டார்கள். எதையும் புதிதாய்க் கேட்கும்போது அப்படித்தான் இருக்கும், பிறகு அவர்கள் மனதிலேயே ஆணிவேராய் ஓடத் துவங்கிவிடும்.

இந்தப் பிரபஞ்சம், பேரண்டவெளி(space) முழுவதும் இருட்டுதான். கருவறை தொடங்கி கருந்துளை வரை இருட்டுதான்.

இருட்டு தாய். ஐம்பூதங்களில் ஒன்றுதான் நெருப்பு. நான் ஐம்பூதங்கள் என்பதையே உடைத்தவன். நான்கு பூதங்களே என்று உரத்துச் சொன்னவன். நான்கு பூதங்களும் ஆகாயம் என்ற ஒற்றை பிரமாண்டத்தின் கூறுகள் என்று உறுதி செய்தவன்.

பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மையையும் எழுதி இருக்கிறேன். ஏதேனும் தீனி இருந்தால் மட்டுமே அது வாழும். தீனி தீர்ந்தால் அது இல்லாமல் போய்விடும். மேல் நோக்கிமட்டுமே தாவும், நம்மோடு இருக்க அதற்கு ஆகாது, ஆனால் நம்மைத் தின்று செரிக்க விரும்பும். இருள் அப்படியல்ல. நிலைபெற்றது. தாய் போன்றது. எந்தத் தீங்கும் செய்யாதது.

உங்கள் ஆர்வம் கருதி, மேலும் ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:

ஆகாயம்
===========

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவ பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்


அதிரை அஹ்மது: الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

புகாரி: இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அப்படியே ஏற்கிறேன். இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன், ஏற்கிறேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான இறைநிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவையல்ல தாயாய் நிறைந்த இறைமை. அது தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது. அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும். சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான். ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

Dark Enery, Dark Matter - What Is Dark Energy? http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/
It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

சித்திக்: உள்ளத்தின் வெளிச்சம் = தெளிவு பெற்ற சிந்தை

புகாரி: ஆகவே வெளிச்சம் என்பது வெறுமனே வெளிச்சம் அல்ல. அறிவு, தெளிவு, தீர்க்கம், நேர்வழி மனமாற்றம் என்று பல. இருள் என்பது வெறுமனே இருட்டு அல்ல. மடமை, கயமை, துரோகம், துக்கம் என்று பல. இனி ஒருமுறை என் ”ஆகாயம்” கவிதையை எவரும் வாசித்தால், சரியான பொருளையே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அப்துல் ரகுமான்: இந்த பூமியில் வாழும் நமக்கு வெளிச்சம் என்று ஒன்று இல்லாவிட்டால் இருள் எப்படி வரும்?

புகாரி: உங்களைப் பொருத்தவரை எப்போதும் உலகமும் அண்டமும் பேரண்டமும் வெளிச்சத்திலேயே இருக்கின்றன. இருள்தான் ஓடி வந்து இரவு என்ற பெயரில் வெளிச்சத்தைக் கவ்விக்கொள்கின்றன என்று நினைக்கிறீர்கள். இது பிழையான பார்வை அன்பரே. சூரியன் என்ற எரியும் நெருப்புப் பந்து பூமியின் எந்த இடங்களில் படுகின்றதோ அந்த இடங்களில் மட்டுமே டார்ச் அடித்தாற்போல வெளிச்சம் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, தன்னைத்தானேயும் சுற்றிக்கொள்கின்றது என்று பள்ளிகளில் படித்திருப்பீர்கள். அப்படி பூமி சூரியனைச் சுற்றும்போது பூமியின் எந்தப் பகுதி சூரியனின் பக்கம் இருக்கிறது அங்கே வெளிச்சம் பரவுகிறது. அவ்வளவுதான். ஆகவே பூமியில் இருட்டுதான் எப்போதும் இருக்கிறது. சூரிய ஒளி படும் சமயங்களில் மட்டுமே வெளிச்சம் வருகிறது. அதாவது இருட்டுதான் வெளிச்சத்திற்கு தன்னை விளக்கிக்கொண்டு இடம் தருகிறது. அல்லது இருட்டுதான் வெளிச்சமாக உருமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம்.

வெளிச்சம் என்பது குறைவான இருட்டு. அவ்வளவுதான். முழு இருட்டையும் விரட்டும் வலிமை எதற்கும் இல்லை. ஏனெனில், வீடுகளுக்குள், மரத்தின் கீழ், நம் நிழல்களாக என்று இருட்டு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். இருட்டு என்பது நல்ல விசயம் அது கெட்ட விசயம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்துல் ரகுமான்: சூரிய குடும்பமும் ,நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளதாகும் அப்படி இருக்கையில் இந்த சூரிய ,நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்?<<<<<

புகாரி: ஆமாம் சூரியன் நட்சத்திரங்கள் எல்லாம் ஓளிதான் வெளிச்சம்தான் நெருப்புதான். சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்பதே உண்மை. ஆனால் நீங்கள் இரவில் வானத்தைப் பார்த்தீர்கள் என்றால் என்ன தெரிகிறது? அடர்ந்த கருமைக்குள் இங்கும் அங்குமாக நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவ்வளவுதான். அதாவது இருட்டுக்குள் சில விளக்குகள் எரிகின்றன. அந்த விளக்குகளும் அணையக் கூடியன. கருந்துளைக்குள் இழுத்துக்கொள்ளப்படுபவைகளாகவே இருக்கின்றன என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதால் நான் அதிகம் அதுபற்றிக் கூற விரும்பவில்லை. வானத்தை முழுமையாக அறிந்துகொள்ள மனிதனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அதனால்தான் இப்படி பாடல்கள் எழுதிச் செல்லுகிறான்.

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும் -வைரமுத்து

அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா -மதுக்கூர் கண்ணன்

அப்துல் ரகுமான்: அந்த வெளிச்சங்கள் இல்லாமல் எப்படி நாம் வானத்தை பார்க்க முடியும்?

அன்பரே, உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் தெரியணும். நாம் வானத்தைப் பார்க்கவில்லை. தூரத்தில் நீல நிறமாகத் தெரிவதை, வானம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவுதூரம் வெளிச்சம் பரவுமோ அவ்வளவுதூரம்தான் பரவும். அப்படி அது பரவிமுடியும் எல்லை நீல நிறமாகத் தெரியும். இணையத்தில் அறிவியல் கட்டுரைகள் கோடிக்கணக்கில் உள்ளன. அற்புதமான பொக்கிசங்கள் அவை. வாசிக்கத் தொடங்குகள். மிக மிக சுவாரசியமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

நாம் வெளிச்சத்தின் அடிமைகளாக இருப்பதால்தான் முழு பிரபஞ்சத்தையும் உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாமல் தவிக்கிறோம். எதைப் பார்க்கவும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. நமக்கு இருப்பது அய்ந்து புலன்கள். ஆனால் கண் மட்டுமே வெளிச்சத்தை நம்பி இருக்கிறது. மற்ற நான்கு புலன்களும் வெளிச்சத்தை நம்பி இல்லை. அவை இருட்டில்தான் மிகத் தெளிவாக இருக்கும். ஒரு மலரை முகர்ந்து வாசனை பார்க்கக்கூட நாம் கண்களை மூடிக்கொள்வோம். முழு உணர்வுகளையும் சேர்த்து ஒரு முத்தமிடுவதற்குக்கூட நாம் நம் கண்களை மூடிக்கொள்வோம்.

நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இப்படி அடிப்படையான *இருள்* களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டால், அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரங்கள் தானே *வெளிச்சத்துக்கு* வந்துவிடும்

1 comment:

mohamedali jinnah said...

இருளுக்கு இத்தனை விளக்கமா! இருளிலேயே இத்தனை ஒளிந்திருக்க வெளிச்சத்திலேயே நாம் ஏன் ஒளிந்து வாழ்கின்றோம். இருளை போக்க ஒளி தேவை அதிலுள்ள அழுக்கைப் போக்க விளக்குமாறு தேவை . அறிவின் ஒளி கொடுக்க ஆசிரியர் தேவை அந்த வேலையில் தாங்கள் ஈடுபட்டிருப்பது உயர்வு .அதில் அனைவருக்கும் மகிழ்வு .
ஒன்று உறுதி. பிறப்பது நிச்சயமில்லை ஆனால் இறப்பது நிச்சயம். வயிரின் இருட்டு இடத்தில எத்தனை நிகழ்வுகள்.கருவறைக்குள் உள்ள குழந்தைக்கும் அறிவு வளர பல முயற்சிகளை கொடுத்து வருகின்றதும் உண்மை.இதுவும் இருளில்தான் நிகழ்கின்றது
இறைவன் படைப்பில் எத்தனை வினோதங்கள், அதில் நாம் அறியாதவை கணக்கில் அடங்காதவை. தொடரட்டும் ஆய்வின் விளையாட்டுகள் . முடிவாக வாழ்த்துகள்.