09 ஹதீதுகளின் கதை

ஹதீதுகள் தொகுக்கப்பட்ட வரலாற்றை நாம் வாசித்தல் மிக மிக அவசியமானது.

ஹதீதுகள் என்பன முகம்மது நபி அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட குர்-ஆனின் விளக்கங்கள் மற்றும் முகம்மது நபி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்.

குர்-ஆன் பெருமானாரின் காலத்தில் மனப்பாடமாகவும் எழுத்துக்களாகவும் பாதுகாக்கப்பட்டு அவரின் மறைவைத் தொடர்ந்த இரண்டு ஆண்டுகளில் ஏடுகளாகக் தொகுக்கப்பட்டு பதினாறு ஆண்டுகளுக்குள் முழுமையான நூலாக ஆக்கப்பட்டுவிட்டது.

அப்படியான எந்த உடனடி முயற்சிகளும் ஹதீதுகளுக்கு எடுக்கப்படவில்லை. அன்றைய நாளில் அத்தனை ஹதீதுகள் இருக்கவும் இல்லை.

ஹதீதுகள் என்பன முகம்மது நபியின் மறைவுக்குப்பின் இருநூறு வருடங்கள் கழித்து, வெளிநாடுகளிலிருந்து வந்த வேற்று மொழிக்காரர்களால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாகும்.

குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு சொல்லையும் மாற்றவோ மறைக்கவோ இல்லாமல் முகம்மது நபி அவர்களால் கூறப்பட்டு பல நூறு தோழர்களால் ஓர் சொல்லும் மாறாமல் பாதுகாக்கப்பட்டது.

ஹதீதுகள் அப்படியாய் பாதுகாக்கப்படவில்லை.

ஹதீதுகள் என்பன செவி வழியேயும் சில குறிப்புகள் வழியேயும் சுமார் எட்டு தலைமுறை கால மக்களால் எடுத்து வரப்பட்டவைகளின் தொகுப்பு ஆகும்.

இஸ்லாம் தொடங்கிய காலம் தொட்டே இஸ்லாத்திற்கான எதிர்ப்பு என்பது எல்லை கடந்ததாக இருந்தது.

நபி பெருமானார் வாழ்ந்த காலத்திலேயே முசைலமா என்பவன் தானும் ஓர் இறைத்தூதர் என்று அறிவித்து குர்-ஆன் வசனங்களைப் போலவே சில பல வசனங்களையும் உருவாக்கிக்கொண்டிருந்தான்.

அவன்போன்று பலரும் அந்நாளிலேயே தாங்களும் இறைத்தூதர்கள் என்று கூறிக்கொண்டும், நபித்தோழர்கள் என்று பொய்யாகக் கூறிக்கொண்டும் குர்-ஆன் வசனங்களோடு தங்களின் வசனங்களைக் கலந்து இஸ்லாத்தைச் சிதைக்க முற்பட்டனர்.

பொய்யன் முசைலமாவை அழிக்க நடந்த போரில் குர்-ஆனை மனப்பாடமாக வைத்திருந்த எழுபத்தைந்துக்கும் அதிகமான நபிப்தோழர்கள் உயிரிழந்தார்கள்.

இந்த நிலையை உணர்ந்து, எஞ்சிய நபித்தோழர்களிடம் உள்ள குர்-ஆன் வசனங்களைத் திரட்டி முழு தொகுப்பாக முதல் கலிபா அபூபக்கரால் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நபி இறந்த இரண்டே ஆண்டுகளுக்குள் பாதுகாக்கப்பட்டுவிட்டது

இது போன்ற எந்தப் பாதுகாப்பும் ஹதீகளுக்குத் தரப்படவில்லை.

முகம்மது நபி மறைந்த சில ஆண்டுகளுக்குப்பின் நபித்தோழர்கள் பலரும் பல நாடுகளுக்கும் பயணம் செய்து குர்-ஆன் வசனங்களை ஓதிக்காட்டி இஸ்லாத்தைப் பரப்பியபோது சொற்களில் சிதைவுகள் வரக்கூடாது என்று கலீபா உதுமான் வசனங்களில் குறியீடுகளை இட்டு குர்-ஆனை முழுமையாகப் பாதுகாத்துவிட்டார்.

இது போன்ற எந்தப் பாதுகாப்பும் ஹதீதுகளுக்குத் தரப்படவில்லை.

ஆனால், இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள், குர்-ஆனில் ஏதும் கலப்படம் செய்ய வழியே இல்லை என்பதை உணர்ந்து, ஹதீதுகள் வழியே தங்களின் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர்.

இதையும் ஓர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முகம்மது நபி இறந்த இருநூறு வருடங்கள் கழித்து அதாவது சுமார் எட்டு தலைமுறைகள் கழித்து வெளிநாட்டவர்களைக் கொண்டு ஹதீதுகள் தொகுக்கப்பட்டன.

அப்படி தொகுக்கப்பட்ட ஹதீதுகளுள் பொய்யான ஹதீதுகளே நிரம்பி வழிந்தன.

அந்த ஹதீதுகளைச் சுத்தம் செய்து அசலானவற்றை எடுப்பதற்கு அன்றைய நாள் முஸ்லிம்கள் பெரிதும் முயன்றார்கள்.

அவர்களுக்கு இயன்றவரை மனிதர்களின் எல்லைக்கு உட்பட்டு பிழையான ஹதீதுகளை வடிகட்டி நீக்கினார்கள்.

தொகுக்கப்பட்ட ஹதீதுகளுள், கழிக்கப்பட்டவையே 99.99 சதவிகிதம் என்றால் ஹதீதுகளின் நிலைபற்றி தனியே ஏதும் கூறத் தேவையில்லை

உதாரணமாக இமாம் புகாரி உஷ்பெஸ்கிஸ்தானின் புகாரா என்ற ஊரிலிருந்து வந்து அரபுமொழி பயின்று மூன்று லட்சத்துக்கும் மேல் ஹதீதுகளைத் தொகுத்தார். அவற்றுள் நாலாயிரம் ஹதீதுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதாவது 0.01 சதவிகிதமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது இமாம் புகாரி தொகுத்த நூறு ஹதீதுகளில் 99 ஹதீதுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் கிழித்து எறியப்பட்டன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீதுகளும் மொத்தக் குழுவினராலும் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல.


No comments: