Showing posts with label * * 18 அன்புடன் இஸ்லாம். Show all posts
Showing posts with label * * 18 அன்புடன் இஸ்லாம். Show all posts

ஒரே ஊரில் ஒருநாள்தான் பெருநாள்

பிரிந்துகிடப்பது தலையெழுத்தல்ல சைத்தான் எழுதும் தப்பெழுத்து

ஒன்று சேர்வது உன் விருப்பம் அல்ல இறைவனின் திருவிருப்பம்

ஒருவரின் சரி அடுத்தவரின் பிழை. அது முடிவே இல்லாதது. எந்த விவாதத்தாலும் தீர்வு காணமுடியாதது.

பிரிவதைத் தடுக்க எனக்கு ஒரு பரிந்துரை தோன்றுகிறது. அது பிரிந்துபோவதைக் காலப்போக்கில் தடுத்து *ஓர் ஊரில் ஒரு நாள் பெருநாள்* என்று ஆக்கும் என்று நான் நம்புகின்றேன்.

எனக்குமுன் தெரிகின்ற தேவைகள் இவைதாம்:

1. தாய்க்கு ஒரு நாள் பெருநாள் குட்டிக்கு இன்னொரு நாள் பெருநாள். என்பது சரியல்ல அண்ணனுக்கு ஒருநாள் பெருநாள் தம்பிக்கு மற்றொருநாள் பெருநாள் என்று ஒரே ஊரிலேயே இருப்பது பிழை. இதில் ஒரே ஊரில் அண்ணன் நோன்பிருக்க தம்பி பிரியாணி தின்பதில் உறவுப் பிரச்சினையே இருக்கிறது.

2. இறைத்தூரர் வாழ்ந்த காலங்களில் இரு பெருநாள் ஒரே ஊரில் இருந்ததே இல்லை என்றுதான் நான் அறிகிறேன்

3. ஓர் ஊரில் ஒருநாள் பெருநாள் என்ற நிலையை இமாம்கள் சரியான காரணம் கூறித் தடுத்தாலும் சரி, பிழையான காரணம் கூறித் தடுத்தாலும் சரி, இந்த ஜனநாயகக் காலத்தில் மக்கள் ஒருங்கிணைந்தால் ஓர் ஊரில் ஒருநாள் பெருநாள் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

எப்படி?

1. நான் பிறையைப் பார்த்துவிட்டேன் என்று எந்த இமாமும் பொய் சொல்வாரா? நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை. அதை ஏற்பதில் நமக்கு என்ன சிரமம்?
2. ஆகவே முதல் நோன்பை யார் முதலில் தொடங்குகிறார்களோ, அதையே பின்பற்றி நோன்பு நோற்பது.
2. அதேபோல பெருநாள் தொழுகையை யார் முதலில் நடத்துகிறார்களோ, அதையே பின்பற்றி பெருநாள் தொழுகைக்குச் செல்வது, உறவுகளோடும் நண்பர்களோடும் மகிழ்வது
3. இருபத்தி ஒன்பது நோன்பு என்றாலும் நமக்கு உடன்பாடு. முப்பது நோன்பு என்றாலும் நமக்கு உடன்பாடுதான். அது இயற்கையின் விதி. மனிதனின் ஏமாற்றுவேலை அல்ல.

இதன் வாயிலாக பெருநாளை ஒரு நாள் தள்ளி வைப்பவர்கள் மெல்ல மெல்ல மாறுவார்கள்.

முதல் நாள் பெருநாள் என்பது சரியோ தவறோ, ஒரே ஊரில் வாழும் எல்லா உறவுகளும் ஒரே நாளில் பெருநாள் தொழுது உறவுகளோடு மகிழ்வாய் இருப்பர்.

இறைவனிடம் முதல் நாள் என்று அறிவித்த இமாமும், அடுத்தநாள் என்று அறிவித்த இமாமும் பதில் சொல்லிக்கொள்வார்கள்.

உறவுகளை பலப்படுத்திக்கொள்ள பல வழிகளிலும் பரிந்துரைக்கும் இஸ்லாத்தின் உயர்வான நோக்கத்தினை ஏற்றுச் செல்வதால், எளிய மக்களின் இந்த முடிவு, இறைவனுக்கு நாம் சொல்லக்கூடிய நல்ல பதிலாய் அமையும் என்று நான் நம்புகின்றேன்.

அன்புடன் புகாரி

தலாக் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே: ஒருநாள் அமர்ந்து முழுமையாய் எழுதுவேன்

தலாக் என்றால் ‘விடுவித்தல்’ என்பது பொருளாகும்.

தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம்.

மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.

ஒரு சந்தர்ப்பம் என்பது, சுமார் 4 மாத காலம்

குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும்.

ஆனால் இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது.

அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இரண்டுமுறை நான்கு நான்கு மாதங்கள் பிரிந்திருப்பதால் இருவரும் மனம் மாறி ஒன்று சேர்ந்துவிடலாம்.

பிரிந்திருக்கும் காலத்தில் இருவரையும் ஒன்று சேர்க்கும்பொருட்டு உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கலந்துரையாடுவார்கள் அறிவுரைகள் வழங்குவார்கள்.

இதை எல்லாம் கடந்து இருவரும் திருமண முறிவுக்கே தயாராகிவிட்டால், அது நடந்துவிட்டால், பிள்ளைகள் எல்லாம் கணவனின் பொறுப்புதானே தவிர மனைவியின் பொறுப்பில்லை.

அதோடு மகர் என்று கொடுக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அவளின் வாழ்வாதாரத்திற்காகக் கணவன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

பின் அந்தப் பெண் மூன்றாவது தலாக்கின் சுமார் 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் சொல்கிறது

இதில் பெண்ணுக்கு ஏதும் தீங்குள்ளதா? அல்லது ஆணுக்குத்தான் தீங்குள்ளதா?
TNTJ மற்றும் 'அஹ்லு குர்ஆன்' ஆட்கள் உங்களைக் கூப்பிடுகின்றார்கள். - Adirai Ahmad
*
யார் அவர்கள்?
அவர்கள் ஏன் உங்களிடம் கூவி என்னை அழைக்கிறார்கள் 
அவர்களிடம் சொல்லுங்கள், நான் எந்தக் குறுகிய வட்டத்தினுள்ளும் சிக்க மாட்டேன்.
குறுகிய வட்டத்தினுள் சிக்கி இருப்பவர்களுக்கு மட்டுமே நான் வினோதமானவன்.
குறுகிய வட்டத்தினர் குமைவதற்கெல்லாம் நான் மசிந்துவிடமாட்டேன் என்றும் சொல்லுங்கள்.
லட்சம் குறுகிய வட்டங்கள் இருப்பினும், அத்தனைக் குறுகிய வட்டத்தையும் உள்ளடக்கிய பெருவட்டம் நான்.
இறைவனே என் எல்லை
அவனைக் காட்டித் தந்த நபி பெருமானாரே என் வழிகாட்டி
இதை உரத்துச் சொல்லுங்கள்!
அன்புடன் புகாரி
அன்பின் இக்பால் ஹசன்,

>>>வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் நபிமொழி என்பது வஹியின் மற்றொரு வடிவம்.<<<

பார்த்தீர்களா நான் முன்பே சொன்னேன். குர்-ஆனுக்கு இணைவைப்பதும் இறைவனுக்கு இணைவைப்பதும் ஒன்றுதான் என்று. இப்போது நீங்களே குர்-ஆனுக்கு இணைவைக்கிறீர்கள். இது மகா பிழையல்லவா?

>>> "அவர் தன் இஷ்டப்படி எதையும் கூறுவதில்லை.
இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை." - 53 : 3,4<<<<

இதை எப்படிப் புரிந்துகொண்டீர்கள்? பிழையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்.

அன்று குர்-ஆன் வசனங்கள் இறங்கியபோது அரபு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நீ உன் சொந்தச் சரக்கில் கூறும் கட்டுக்கதை. இதை இறைவனின் வாக்கு என்று பிதற்றாதே என்று கடுமையாகச் சாடினார்கள். அப்போது வந்த வசனம் இது.

இதன் படி நபிபெருமானார் குர்-ஆன் வசனம் என்று சொல்வது அவரின் இஷ்டப்படி கூறுவதில்லை. அது அவருக்கு வஹி மூலமே அறிவிக்கப்பட்டது.

>>>"உங்கள் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
எதை விட்டு தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்." - 59 : 7<<<<

இதையும் நீங்கள் பிழையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நபி பெருமானார் முன் மாதிரியாக வாழ்ந்தார் என்பது ஐயமின்றி உண்மை. ஆனால் அவர் குர்-ஆனைத்தான் பின் தொடர்ந்தார். குர்-ஆன் வழிதான் நடந்தார். தனக்கு ஒன்று மக்களுக்கு ஒன்று இரண்டு வழிகளை அவர் கடைபிடிக்கவில்லை. அதைத்தான் இந்த வசனம் சொல்கிறது.

அதுமட்டுமல்ல, நீங்கள் குர்-ஆனை அப்படியே பின்பற்றி நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் நபிவழி நடக்கிறீர்கள் என்றுதான் பொருள். ஏனெனில் நபிபெருமானார் குர்-ஆனைப் பின்பற்றி நடந்தார். குர்-ஆன் வசனம் வர வர அதன்படியே அச்சுபிசகாமல் நடந்தார். நீங்களும் குர்-ஆன் வழி நடந்தால் அப்படியே நபிவழி நடக்கிறீர்கள் என்று பொருள்.

>>>>இறைத்தூதர் நமக்கு கொடுத்ததையும் தடுத்ததையும் நபிமொழிகளின் மூலமாகத்தான் விளங்க முடியும். <<<<

குர்-ஆன் மூலமாகத்தான் விளங்கமுடியும். குர்-ஆன் உங்களுக்குப் புரியாத பட்சத்தில் நபி பெருமானாரின் விளக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அது குர்-ஆனுக்கு மாற்றாக இருக்காது. இருக்கவும் கூடாது.

என்ன ஒரு சங்கடம் என்றால் நபி பெருமானார் வாழ்ந்த காலத்தில் அவர் சொன்னதெல்லாம் மிகச் சரியாக இருந்தன. அவரின் மறைவுக்குப் பின் அவர் இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்று ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றையும் கூறத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் பல லட்சம் ஹதீதுகள். அவற்றுள் சில தவிர பல லட்சம் பதர்கள்.

சில ஹதீதுகளை மறுப்பது  நபி பெருமானாரை மறுப்பதல்ல, நபி பெருமானார் சொன்னார் செய்தார் என்று சொல்லும் சிலரின் பிழையான கூற்றை மறுப்பது.

>>>அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று.<<<

மிகவும் சரி. ஏனெனில் குர்-ஆனின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்க்கையாக்கிக்கொண்டார் நபி பெருமானார். அதைத்தான் நீங்களும் செய்யவேண்டும். செய்தால் நீங்கள் நபி பெருமானாரைப் பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். இறைவனை வணங்குகிறீர்கள் என்று பொருள். வணங்குவது என்பது ஏற்பது என்றும் பொருள்படும்

அன்புடன் புகாரி

பாஸ்கர், கனடா
இது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திருப்பித. தந்தது. எருமேலி சென்றவுடன், வாவர் பள்ளிவாசலில் வாவரை வணங்கி அங்கிருந்த சாஸ்தா ஆலயத்திற்கு ஆடிக்கொண்டே செல்வது இன்றும் இருக்கும் நடைமுறை. என் நினைவுகள் சரியாக இருந்தால் அந்த பள்ளிவாசலில் திருநீறு கூடத்தருவார்கள். சிறுவயதில் சென்றது. வாவர் பற்றிப் பாடும் ஒரு ஐயப்பன் பாடல் கூட உள்ளது.
பாஸ்கர்,
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஓர் உண்மையை நான் இங்கே சொல்லியாக வேண்டும். அப்போதுதான் புரிதல் வலுப்படும்.
வாவர் என்பது ஒரு பெரியவரின் பெயர். சூஃபி முஸ்லிம்கள் இவரை அவுலியா என்று அழைப்பார்கள். இவர் போல நாகூர் முத்துப்பேட்டை ஹாஜிஅலி என்று ஏராளமான இடங்களில் இதுபோன்ற பெரியவர்களின் அவுலியாக்களின் சமாதிகள் உண்டு.
பள்ளிவாசல் என்பதும் தர்கா என்பதும் ஒன்றல்ல.
பள்ளிவாசல் என்றால் அதனுள் ஒன்றுமே இருக்காது. ஒரு சுத்தமான இடம். இறைவனைத் தொழுவதற்காக. இங்கும் அங்குமாக சில குர்-ஆன் பிரதிகள் மட்டுமே இருக்கும். வேறொன்றையும் காணமுடியாது. ஆகவேதான் சுத்தமான எந்த இடமும் பள்ளிவாசல் ஆகிவிடும். பயணம் செல்லும்போது பாலைவனம் பள்ளிவாசலைப் போல ஆகிவிடும். வீட்டில் ஓர் சுத்தமான அறை பள்ளிவாசலைப்போல ஆகிவிடும். பள்ளிவாசல் என்பதே எல்லோரும் சகோதரத்துடன் இணைந்து வந்து தொழுவதற்காகத்தான். மற்றபடி இருக்கும் இடத்திலிருந்தே தொழுது கொள்ளலாம்.
தர்கா என்றால் அதனுள் ஒரு சமாதி இருக்கும். அதனைச் சுற்றி சில நேரம் சிலர் அமர்ந்திருப்பார்கள். அந்த சமாதியில் அடங்கி இருக்கும் பெரியவருக்கு சொர்க்க பதவிகளை, நிறைவான மறுமை வாழ்வைத் தந்தருள் இறைவா என்று சமாதியைத் தரிசிக்க வரும் முஸ்லிம்கள் வேண்டிக் கொள்வார்கள்.
இது இறந்துபோன எல்லோருக்குமே செய்யக் கூடிய ஒன்றுதான் என்றாலும், சமூக சேவைகள் செய்து உயர் காரியங்கள் செய்து உயிர் நீத்த பெரியவர்களுக்கு தர்கா கட்டி இப்படி இறைவனிடம் வேண்டிக்கொள்வது ஒரு வழக்கம்.
அங்கே அடங்கி இருப்பவருக்கு நமக்கு அருளும் சக்தி கிடையாது. இறைவனுக்கே அந்த சக்தி உண்டு.
அன்புடன் புகாரி
20171211

 மேலும் நிச்சயமாக
 நாம் மனிதனைப் படைத்தோம்,
 அவன் மனம்
 அவனிடம் என்ன பேசுகிறது
 என்பதையும் நாம் அறிவோம்;

 அன்றியும், 
 பிடரி நரம்பை விட
 நாம் அவனுக்கு
 சமீபமாகவே இருக்கின்றோம்.

 குர்-ஆன் 50:16.

ஒருவனின் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதை எனக்குத் தெரியும் என்கிறான் இறைவன்.

அதாவது ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களின் இதயம் பேசுவதை இறைவன் ஒருவனாக மட்டுமே இருந்துகொண்டு கேட்பான் என்கிறான்.

எப்படி?

உருவம் இருந்தாலா அல்லது அருவமான உயர் சக்தியாய் இருந்தாலா?

இதில் எது சாத்தியமாகக் கூடும்?

இறைவன் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறான். ஒருவருக்கு மேல் ஒருவர் அறிவில் உயர்ந்தவர்களாய் வந்துகொண்டே இருப்பார்கள் என்று உறுதி செய்கிறான்.

ஆனால் சிந்திக்கவே சிந்திக்காதே என்று சில மதவாதிகள் மனிதனிடம் சொல்கிறார்கள்.

இறைவனின் தேவையும் சில மதவாதிகளின் தேவையும் அல்லது அறிவின்மையும் இதில் தெளிவாகவே புரிகிறதல்லவா?

அடுத்தது...

பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம் என்று ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களையும் பார்த்து இறைவன் சொல்கிறான்.

சரிதானே?

உருவம் இருந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இருப்பவனால் இது இயலுமா அல்லது அருவமாய் உயர் சக்தி கொண்டு எங்கும் வியாபித்திருக்கும் ஒருவனால் இது இயலுமா?

உங்கள் சிந்தனையின் எல்லைதான் உங்களின் பதில்

ஆகவே நீங்கள் தரப்போகும் பதில் எனக்கு உங்கள் சிந்தனையின் எல்லையை மட்டுமே காட்டித் தரும். வேறு எந்த மாற்றமும் நமக்குள் ஆகப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது.

நன்றி நண்பர்களே

அன்புடன் புகாரி

என்னிடம் ஒரு நான்கு கேள்விகள் இருக்கின்றன. அதற்கு சரியான விளக்கம் உங்களிடமிருந்து வேண்டும்:
1. ”நான் உன்னை நினைத்து உருகிக் கரைகிறேன்.” உடம்பு உருகிக் கரையுமா? கரைந்தபின் எப்படி உயிரோடு இருக்க முடியும்?
2. ”உன்னைக் காணாமல் நான் செத்தே போயிட்டேன்” செத்துப் போனவன் எப்படி இப்போது பேசுகிறான். என்றால் அவன் பிசாசா?
3. ”கமலைக் கண்டதும் எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல” காலாவது ஓடும். கை எப்படி ஓடும். என்றால் இவன் ஆடா மாடா? கைகள் இல்லாமல் இவனுக்கு இருப்பவை அத்தனையும் கால்களா?
4. ”என் தந்தை இறந்த சொல் கேட்டு தூள் தூளாய் வெடித்துச் சிதறினேன்” ஓர் உடம்பு இப்படித் தூள் தூளாய் வெடித்துச் சித்றுமா? அப்படிச் சிதறியது ரத்தமும் சதையுமாய் வீதியில் கொட்டிக் கிடக்கிறதா? அதன்பின் அவன் உயிரோடு இருந்து நம்மிடம் பேசுகிறானா?
கவிதையைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. பலரது கேள்விகள் என்னைத் திடுக்கிட வைக்கின்றன. நான் அதிர்ந்து வாயடைத்துப் போகிறேன். அவர்களுக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்லமுடியும் என்று திணறினேன். பிறகுதான் இப்படி எளிய முறையில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம் என்று இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன். எல்லோரும் பதில் சொல்லலாம். இது எப்படிச் செல்லப் போகிறது என்று காண உண்மையிலேயே ஆவல்.
இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா என்பது ஆதாரக் கேள்வி. நான் உருவம் இல்லை என்கிறேன். இருக்கிறது என்று சொல்பவர்கள் வேதத்தின் இலக்கிய நடையைப் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த வழியில் புரியவைக்க முடியுமா என்பதே என் வேர் முயற்சி.
உதாரணம்:
மிக்க வல்லமையும்
கண்ணியமும் உடைய
உம் இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.
(குர்-ஆன் : 55:27)
இக் குர்-ஆன் வசனத்தில் இறைவனின் முகமே என்று வருகிறதே. அதனால் இறைவனுக்கு முகம் உண்டு, இறைவனுக்கு உருவம் உண்டு என்கிறார்கள் சிலர். அவர்களுக்குக் கவிதை வாசிப்பைக் கற்றுத் தருவதே இந்த இடுகையின் உண்மையான நோக்கம்.
அன்புடன் புகாரி
20171130
இறைவனுக்கு
இணைவைத்தால்
நான்
இஸ்லாமியனில்லை

மாற்றுக்
கருத்துண்டா?

இறைவனின் சொல்லான
குர்-ஆனுக்கு
இணைவைத்தால்
நான்
நல்ல இஸ்லாமியனா?

என் கேள்விக்குப்
பதிலுண்டா?

அன்புடன் புகாரி

201708 கதிர் வீசிடும் காலை

நண்பர் ஹனிபா அழைத்தார். நண்பரே என் மகன் இஸ்லாமிய மரபு மாத விழாவில் ஒரு பாடல் பாடுகிறான். அதற்கான மெட்டினை அனுப்புகிறேன் தமிழில் பாட்டெழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டார். கனடா வந்த நாளிலிருந்தே நண்பர் ஹனிபாவை நான் அறிவேன்.

எப்போது பாடல் வேண்டும் என்றேன். இன்னும் பத்து நிமிடத்தில் என்றார் ;-)

நானோ சிறகுப்பந்தாட சென்றுகொண்டிருக்கிறேன். எப்படி? ஆனாலும் வேண்டுகோளை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கார் ஓட்டிச் செல்லும்போதே சில வரிகளை எழுதி முடித்தேன். அப்படி உருவான ஒரு பாடல் தான் இது.

இதை இசையமைப்பாளர் நண்பர் ஹாஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் ஒரு புதுத்தனி மெட்டுப் போட்டு அனுப்பி விட்டு. இன்னும் சில வரிகள் எழுதினால் முழுப்பாடலாய் ஆக்கிவிடலாம் என்று பெருந் தூண்டில் போட்டார்.

நண்பர் ஹனிபா கேட்டது நான்கு வரிகள். இப்போது இது எப்படி வளரப் போகிறதோ தெரியவில்லை. எளிமையான இசைக்கு ஏற்ற என் பாடல் வரிகள் இதோ:

கதிர் வீசிடும் காலை
       உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
        உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
        நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
        நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
        தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
        நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்

அன்புடன் புகாரி
































தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

பெற்ற பிள்ளையையே
தியாகம் செய்ய முற்படுகிறார் பக்தர்
மகனும் தலைசாய்க்கிறான்
கூர் வாளோ வெட்ட மறுக்கிறது
சாத்தானும் தடுக்கிறான்
பலியிடத்தான் வேண்டுமெனில்
அதற்கு ஓர் ஆடு போதுமென்று
இறைக்கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது கருணை நிறைகிறது
நரபலி மறுத்து மனிதத்தைக் காத்தத்
திருநாள்தான் ஹஜ் பெருநாள்
தனக்குள் இருக்கும்
தீயவற்றைப் பலியிடுதலே
இறைக்கான பலியென்றானது

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

அளவற்ற அருளாளனின்
என்றும் - நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில்
நாளும் - குறைவற்று வாழ்பவனின்

நிறைவான அருள்நாளிது
நெஞ்சம் - நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை
ஏந்திக் - கொண்டாடும் திருநாளிது

மண்ணாளும் செல்வந்தரும்
பசியில் - மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே
தொழுது - உயர்கின்ற நன்நாளிது

இல்லாதார் நிலையறிந்து
நெஞ்சில் - ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க
வறுமை - அழிந்தொழியும் திருநாளிது

சொந்தங்கள் அள்ளியணைத்து
நட்பின் - பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால்
உறவைச் - செப்பனிடும் சுகநாளிது

உள்ளத்தின் மாசுடைத்தும்
தளரும் - உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும்
வலிய - நோன்பில்வரும் பெருநாளிது

நபிகொண்ட பண்பெடுத்து
அந்த - நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ
நம்மைச் - சேர்த்திழுக்கும் பிறைநாளிது

சமத்துவமே ஏந்திநின்று
என்றும் - சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி
எவர்க்கும் - அன்புசிந்தும் பொன்னாளிது

அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

ஈத் முபாரக்

அன்புடன் புகாரி


கடும் வெயில் காலத்தில், தலை முதல் கால் வரை ஒருவரை கருப்புத் துணி கொண்டு மூடச்சொல்வது அந்த மனிதர் மீதான அடக்குமுறை தான். இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் இசுலாமிய பெண்கள் தான். அதை அவர்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது எது? மதமா இல்லை மதவெறி பிடித்த மனிதர்களா? எதுவாகினும் அப்பெண்கள் அதை அனுபவிக்கக் காரணம் இசுலாமிய வீட்டில் பெண்ணாகப் பிறந்தது தான் - சுபாசினி சிவா
நீங்கள் ஒரு மதத்தை அதில் பெண்கள் உடுத்தும் உடை கொண்டுமட்டும்தான் பார்க்கிறீர்களா?
நான் கனடாவில் வாழ்கிறேன். கோடையும் வந்துவிட்டது. டவுண்டவுன் - நகர மத்திக்குச் சென்றால், எதிர் இருக்கைப் பெண்ணின் ஆடை, ஆடையே இல்லாததாய் இருக்கிறது. உங்களுக்கு விரிவாகச் சொல்லத் தேவை இருக்காது என்று நம்புகின்றேன்.
இன்னொரு பக்கம் ஒரு நாட்டின் கலாச்சார உடை காரணமாக கறுப்புக்குள் கண்கள் மட்டுமே தெரியும்படி பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இஸ்லாம் மதம் படி கண்ணியமான உடை உடுத்த வேண்டுமே தவிர இதெல்லாம் அவசியமானதல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதன் மத நூலான குர்-ஆனை வாசித்தறிய வேண்டும்.
ஏசுநாதரின் அம்மா எப்படி உடை உடுத்தி இருந்தார்கள் என்று அறிவீர்களா? ஏசுநாதரின் அம்மா மட்டுமல்ல அப்போது அங்கு வாழ்ந்த எல்லோருமே என்ன உடை உடுத்தினார்கள் என்று தெரியுமா?
நம் தமிழ்ப்பாட்டன் ஒரு கைக்குட்டையைக் கோவணமாய்க் கட்டித் திரிந்தான். தமிழ்ப்பாட்டியோ 16 முழச் சேலையைச் சுற்றிச் சுற்றிக் கட்டிக்கொண்டு நின்றாள்.
அந்தச் சேலையை வெட்டினால் ஒரு 100 பாட்டனாவது ஆடைகட்டிக் கடைவீதிக்கு வந்துவிடுவான்.
தமிழ்ப்பாட்டன் தமிழ்ப்பாட்டிகளை அடிமைகளாய் வைத்திருந்தான் என்றா சொல்வோம்?
அறிவு, அன்பு, பண்பு, நட்பு, நாகரிகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வளரட்டும். பிறகு பாருங்கள் அடக்குமுறை என்ற சொல்லே காணாமல் போகும்.
நேசிப்பு ஒன்றையே
வேர்களாகக் கொண்டு
உருவான
பசுமைத் தாவர உலகம்
ஒன்று உண்டு

அதன் பெயர்
இஸ்லாம்

வெறுப்புக் காய்கள்
அத்தாவரங்களில்
காய்க்காது

திணிக்கப்படும் வெறுப்புகளும்
அன்புக் கனிகளாகப்
பழுத்து
அந்நிய மடிகளில்
சகோதரமாய்
விழும்

-அன்புடன் புகாரி
இறைவன்
நாயகத்தின் வழியாக
தன் புகழை உலகறிய
நிலைநாட்டிக்கொண்டான்

அறவழிப் பாதையே
மறுக்கமுடியாத இறுதிப்பாதை
மாற்றமில்லாத உறுதிப்பாதை
என்று அறுதியிட்டுச் சொன்னான்

தீயன வென்றெடுக்கும்
வல்லமை வழிகளை
வரைபடமாக்கித் தந்தான்

உலக அமைதிக்கு
உத்திரவாதம் தந்தான்

நம்பிகை இழைகளைச்
சிறகுகளாய் வளர்த்தெடுத்து
வலிமைகூட்டி வானம் கடந்தும்
நிம்மதியில் பறக்கச் செய்தான்

அளவில்லா அன்பு தந்தான்
அரும்பெரும் அமைதி தந்தான்
ஒப்பிலாப் பண்பு தந்தான்
ஒன்றுபடும் பணிவு தந்தான்

கரையில்லா ஆற்றல் தந்தான்
குறைமனத் தேற்றல் தந்தான்
வைரமாய் யாக்கை தந்தான்
வளம்நிறை வாழ்க்கை தந்தான்

எல்லாப் புகழும்
இறைவனுக்கே என்று
நன்றிப் பெருக்கெடுத்தக்
குழை நெஞ்சம்
கூறும் சொற்களின்
எழுத்துக்களாகவும்
அவனே இருக்கின்றான்

-அன்புடன் புகாரி

நோன்புக் கஞ்சி அது மாண்புக் கஞ்சி

பிச்சைக்காரரின்
நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே
பணக்காரரின்
வெள்ளிப் பாத்திரத்தையும் நிறைக்கும்
அமுதமாகிறது

அது எது?


உடல்நலமில்லா முதியவரின்
நடுங்கும் கரங்களின்முன்
வைக்கப்படுவதே
ஆரோக்கியமான இளைஞனின்
துடிப்பான விரல்கள்
தாவியெடுக்கும்
அருசுவையாகிறது

அது எது?


உண்டு முடித்ததும்
மீந்துப் போனதென்று
பின்னிரவில் நீரூற்றப்படும் பழையதே
புனிதப் பசியின் உச்சத்துக்கு
புத்தம் புதிதாகச் சமைக்கப்படுகிறது

அது எது?


பிரியாணிகளும்
கோழி வறுவல்களும்
வகைவகையாய்ப்
பறிமாறப்பட்டிருக்கும்போதே
அனைத்தையும் மறுதலித்து
ஆவலோடு அள்ளிக்குடிக்கும்
கிடைத்தற்கரிய அற்புதமாகிறது

அது எது?


ஓய்வெடுத்துத் தளர்ந்து
மயங்கிக் கிடக்கும்
நாக்கின் நரம்புகளுக்குப்
புத்துணர்ச்சி மந்திரம்
அதுவன்றி வேறொன்றில்லை

அது எது?


எரியடுப்பு வயிற்றை
ஈரமாய் அணைத்து
இதமாய் வருடும் பாசம்மிக்கது
இன்னொன்றில்லை

அது எது?


ஏழை வீட்டில்
செலவே இல்லாமல்
செய்யப்படும் அந்த ஒன்றே
கோடி கொட்டிச் சமைத்தாலும்
கிட்டாத
செல்வச் செழிப்புமிக்க
இன்சுவையாகிறது

அது எது?


தரைதொட்டுத் தரைதொட்டு
நிமிரும் நெற்றிகளின்
செல்கள் ஒவ்வொன்றுக்கும்
அது
சொல்லவொண்ணாத
ஊட்டச்சத்தை அள்ளித்தரும்
சூட்சுமமாகிறது

அது எது?


அதை அருந்தும்
முன்பு கேட்கும் துவாக்கள்
உனக்கானவை
பின்பு கேட்கும் துவாக்களோ
உலகுக்கானவை

அது எது?


அதுவும்
ரமதானின்
ஒரு
கருணைக் கொடைதான்

அதுதான்
நோன்புக் கஞ்சி
நெஞ்சுநிறை
மாண்புக் கஞ்சி


முளைவிடும் விதையின்
புத்தம்புது வேரினைப்போல
பாலையில் திரியும்
உடல்வற்றிய பூனையைப்போல
கரையில் எறியப்பட்ட
சின்னஞ்சிறு மீனினைப்போல
உச்சிச் சூரியன் முகம்துடைத்த
வரண்ட காற்றினைப்போல

தண்ணீரைத் தேடும்
தாக நாக்குகள்
மௌனமாய் அடங்கித்
துயிலவும் செய்கின்றன
இறைவனின் பெயரை
இதய உதடுகளில்
ஈரமாய் நனைத்துக்கொண்டு

பின்
திறப்புநேர அழைப்பில்
புலன்களெல்லாம் ஒன்றுகூடி
நாவடியில் நெருப்பாய் நின்று
நீராடி நிறைகின்றன
நோன்பு நாட்களில்
பாரதியும் இஸ்லாமும் - Nov 29, 2016 by மாலன்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’ பாரதியார்?” என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.
“சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை”
“அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?”
“சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்”
“சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்”
“நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்” என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார். கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்” என்றார்.
“பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்.”
“நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?”
நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:
நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள் ”
பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார். “இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?” என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.
“சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ‘பரமாத்மாவான அல்லாஹீத்த ஆலா அருள் புரிவாராக’ என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்? ”
“இது என்ன புதுக் கதை?”
“இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள். அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது.”
“படியுமேன். கேட்போம்”
“நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்”
“மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?”
” ‘மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்’ என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?”
“நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்”
நான் படித்துக் காட்டினேன்: “… எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும் கலந்தால் பொது இன்பம் ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம் முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.”
“அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?”
“படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:
“பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், “இனி என்ன செய்வது?” என்று தயங்கினான். அப்போது நபி, “அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. “என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்”
“கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?”
பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில் 1905 ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.
அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார் “.
“அவருக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?”
“அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் ‘தாடி ஐயர்’ (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை ‘. ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து ‘என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் . ஆனால் அதற்குப் பின்னும் 1918 ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார் “.
“இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?”
“இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை. கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ? ‘வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்’ என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார் “.
“ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?”
“அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது:” நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும் “என்று ஓரிடத்தில் எழுதுகிறார்”.
வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.
“ஓ! அப்படியா! அப்ப நான் வர்ரேன். உங்க ‘பாய்’ பாரதியாரிடமும் சொல்லுங்க! என்றார் நண்பர் கிண்டலாக.
நான் புன்னகைத்தேன்.