ஆசை கொண்ட
எந்த உரையாடல் துவக்கமும்
வாக்குவாதச் சம்மட்டியால்
காயப்படாமல்
நிறைவு பெற்றதாய்
ஞாபகமே இல்லை

எடுத்துச் சென்ற
அப்பழுக்கற்ற
எந்த அன்பும் பாசமும்
அடிபட்ட புறாக்களைப் போல்
காலொடிந்து
அலகொடிந்து
சிறகொடிந்து
திரும்பும் வாடிக்கையேயன்றி
வேறெதுவும் இருந்ததே இல்லை

இன்று உறுதியாய்
புரியவைத்தே தீரவேண்டும்
விடிவுபெற்றே ஆகவேண்டும் என்ற
அரும்பெரும் முயற்சிகளெல்லாம்
குழப்பங்களின் மீது
கொடுங் குழப்பங்களைக்
கொப்பளிக்காமல் இருந்ததே இல்லை

இருப்பதோ
ஒரே ஒரு வாழ்க்கை
இதிலும்
ஏன் தட்ட வேண்டும்
இந்தக் கதவையே என்று
உட்கிளி கெஞ்சிக் கெஞ்சிக்
கேட்டழாத நாளே இல்லை

இருந்தும்
உறவுச் சங்கிலிகளில்
சின்னச் சின்ன வண்ண விழிகளின்
பெரிய பெரிய கண்ணீர்த் துளிகள்
கொட்டிக் கொட்டி
இறுக்கும் இறுக்கத்தை
அவிழ்த்து முடிப்பதற்கும்
அவிழாதவற்றை
உடைத்தெறிவதற்கும்
நாள் குறித்தால்
பாழும் மனம்
கேட்கவா செய்கிறது

இதோ
வந்துவிடப் போகிறது
மரணம்
பிறகென்ன விட்டுத் தள்ளு
என்று
சொல்லிச் சொல்லியேவல்லவா
எதிராய் நிற்கிறது

அன்புடன் புகாரி
20170404

No comments: