வந்தது கொரோனா வராதது புத்தி

இந்து முஸ்லிம் என்று
பார்க்காது

பிராமின் தலித் என்று
நோக்காது

வெள்ளை கறுப்பு
என்று காணாது

ஆரியம் திராவிடம்
என்று ஒதுக்காது

இந்தி தமிழ்
என்று பிரிக்காது

பிஜேபி காங்கிரச்
என்று விடாது

ஆர்எஸ்எஸ் ஐஎஸ்ஐஎஸ்
என்று விலகாது

வரும் வரும்
கொன்றழித்தே தீரும்

ஆம்
கொரோனா
கொடிய வைரஸ்தான்
என்றாலும்
வேற்றுமை பார்க்கும்
விழிகள் அதற்கில்லை

மனிதசக்திகள் ஒன்றுகூடி
மரணத் தூதை தடுக்கா விட்டால்
உண்டு இல்லை என்று
ஆக்கிக்கொண்டேதான் இருக்கும்

அதர்மத்திலும்கூட
தர்மம் என்று
தலை நிமிர்த்திப் பரவுகிறது
வைரஸ்

மதிகெட்ட மனிதனோ
தன் ரத்தத்தில்
இயற்கையாய் ஓடும்
தர்மத்தையும்
கீறிக் கீறி வெளியேற்றுகிறான்

எத்தனை எத்தனை
வேற்றுமைகளை வைத்து
சொற்ப வாழ்வில்
எப்படி எப்படி எல்லாம்
ஆட்டம் போடுகிறான்?

கொரோனாவை விடவுமா
கொடியவன் மனிதன்?

மதவெறி இனவெறி
மொழிவெறி சாதிவெறி
என்று மனிதன் சாதித்ததென்ன
வெட்கப்பட வேண்டாமா?

வேற்றுமை விதைக்கும்
வரட்டு இருமலைக்
கைவிடு மனிதா

கொடுங் காய்ச்சல்
வெறியிலிருந்து
வெளியேறு மனிதா

கெட்ட எண்ணங்களைத்
துடைத்துத் துடைத்து எறிந்து
கை கழுவிக்கொண்டே
இரு மனிதா

காலங்காலமாய்
வரிசைகட்டி வரும்
வைரஸ்களுக்கு
ஒற்றை மருந்து
மனித ஒற்றுமை
என்ற
மகத்துவம்தான்

வாழலாம்
வா மனிதா

No comments: