26 தமிழ் இணையம் 2002

அது ஒரு காலம். நான் தமிழ் உலகம் என்னும் யாகூ மின்னுரையாடல் குழுமத்தில் இருக்கிறேன். பெரும்பாலும் கவிதைகளேயே இட்டுக்கொண்டிருப்பேன். என்னைத் தன் ஆஸ்தான கவி என்று அறிவிக்கும் அளவிற்கு என் கவிதைகள் அங்கே ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன.

அப்போதுதன் தமிழிணையம் 2002ன் மாநாடு கலிபோர்னியாவில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதன் முக்கியத் தலைவராக மணி மு மணிவண்ணன் இருந்தார். அவருடைய அறிமுகமும் எனக்கு அப்போதே இருந்தது.

தமிழ் உலகத்தின் மட்டுறுத்துனர்களுள் ஒருவரான அமெரிக்கா ஆல்பர்ட் என்னைத் தொடர்பு கொண்டு, கவிஞரே தமிழிணையம் மாநாட்டின் நூல் ஒன்று வெளியிடுவார்கள். நீங்கள் ஒரு கவிதை எழுதினால் என்ன என்றார். என் தமிழ்ப் பற்றையும் கவிப்பற்றையும் அவர் நன்கறிவார்.

எனக்கு ஓரளவே தமிழிணையம் பற்றித் தெரியும் என்பதால் முதலில் தயங்கினேன் பின் ஒவ்வொரு பத்தியாக எழுதத் தொடங்கினேன். ஒரு நான்கு பத்திகளை எழுதிக் கொடுத்தேன்.  ஆனால் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவின் ஆசையோ அதைவிட அதிகமாக இருந்தது.

கவிஞரே மிக நன்றாக வந்திருக்கிறது இன்னும் சில பத்திகள் எழுதுங்களேன் என்று ஊக்கப்படுத்தினார். நான் பெரும்பாலும் அந்த வகையில் கவிதைகள் எழுதுவது கிடையாது. உள்ளத்தின் உள்ளே எதுவோ கிடந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் இறங்கித் தொலை என்று காகிதங்களில் அந்த குடைச்சலை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்வேன்.

ஆனால் இந்தக் கவிதையை எழுத வெளியிலிருந்து குடைச்சல் ;-) ஆனால் பாராட்டுக்குரிய குடைச்சல் அதற்காக என்றென்னும் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவுக்கு என் நன்றிப்பெருக்கு. அவர் இல்லாவிட்டால் இக்கவிதை இல்லை.

இப்படியும் என்னால் கவிதை செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கவிதையே முதல் சாட்சி. ஆகையால்தான் வாழ்த்துக்கவிதைகள் எழுதத் தயங்குவேன். அது இயற்கையாய் வெளிவராமல் மல்லுக்கட்டி கொண்டு வரவேண்டியது இருக்கும் என்பதால்.

ஆனால் இந்தக் கவிதையைச் செயற்கையே நிரம்பியது என்றும் சொல்ல முடியாது. எனக்கிருந்த தமிழ்மோகம் இயற்கையானது. அது தரும் உணர்வுகள் இயல்பானது. ஆகையால் தமிழிணையம் என்ற வெளித் தூண்டலை தமிழ் என்ற உள்தூண்டலோடு பிணைத்து இக்கவிதையை எழுதி முடித்தேன்.

அந்த மாநாட்டின் விழா மலரிலும் வந்தது பலரின் பாராட்டையும் பெற்றது.  விழாவிற்கும் சென்றிருக்கலாமே என்ற கவலையும் வந்தது.

அந்தக் கவிதையை அத்தோடு விட்டுவிடாமல் என் இரண்டாவது கவிதைத் தொகுப்பான அன்புடன் இதயம் என்ற நூலிலும் ஏற்றிக்கொண்டேன்.

இதோ அந்தக் கவிதை....

*

சிலிக்கான் பள்ளத்தாக்கும்
சிலிர்க்கும் சிகரம்தொட்டு
மொழித்தேன் கூடுகட்டி
தழைக்கும் தமிழே வாழ்க

பழித்தோன் பணிந்தே போனான்
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க

ஐந்தாம் கணித்தமிழ் இணையம்
அறிவுப் பிழம்பாய் உதயம்
பைந்தமிழ் மின்தமிழ் பாடுது
புதுப்புது நுட்கலை தேடுது

கந்தகத் தமிழினம் கூடுது
காரியச் செந்தழல் மூளுது
சிந்தனை செயற்திறன் ஆகுது
செந்தமிழ் கணிமுடி சூடுது

தொன்னூற்றேழிலே சிங்கை
துவக்கி வைத்தது இதனை
தொன்னூற்றொன்பதில் சென்னை
தொடர்ந்த ஆண்டிலும் சிங்கை

பின்னர் மலேசிய மண்ணில்
பிறந்தது நான்காம் கூட்டம்
இன்னும் இனியும் வளர்க
இணையம் தமிழாய் நிறைக

தொட்டுத் துவக்கியத் தலைவர்
தொடரும் உறுப்பினர்; நண்பர்
எட்டுத் திசைகள் எங்கிலும்
எழுதும் ஆய்வுக் கரங்கள்

கொட்டிப் பொருள்தரும் வள்ளல்
கூடம் நிறைத்திடும் ஆன்றோர்
ஒட்டு மொத்தமாய் வாழ்க
இணையத் தமிழினைப் போல

வலைக்குள் மொழிகளோ நூறு
வனப்பாய் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு

அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்


உலகத் தமிழ்தான் உயருது
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்

கலையும் தமிழரின் பண்பும்
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது

ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

தோழுரம் கொண்ட மைந்தரால்
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்

பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

அன்புடன் புகாரி


’அன்புடன் இதயம்’ நூலிலிருந்து....

No comments: