எனக்கொன்றும் பிடிக்கவில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின்
இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம்
சொல்பவற்றுள் உப்புமில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

நெஞ்சில் ஏக்கம் ஓங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ

படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும்
ஊற்றுகளும் எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மைதான்
மிளிர்கிறது

குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும்
கோணலாகிச் சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம்
ஐந்தெனக்குக் கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
முடக்கமின்றி
பொய்களற்று வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து
எனக்குள்ளே திணிக்கும்
இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில்
தொட்டதெலாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று
புண்ணாவது பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த
மூளைமரம் வளர்த்துவிட்ட
சிலிர்ப்புசெத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்

3 comments:

thendral said...

உணர்ந்த உண்மை

thendral said...

உணர்ந்த உண்மை

mohamedali jinnah said...

கவிதை நன்று .ஆனால் சபிப்பது இஸ்லாத்தில் கூடாது