எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.





இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்
ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று
பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்
இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு
மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்
முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்
உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்

அன்புடன் புகாரி


#அன்புடன்_இதயம்

5 comments:

சமுத்ரா said...

nice..யார் எழுதியது?

KALAM SHAICK ABDUL KADER said...

புதுகவிதையில் ஓர் அந்தாதி என்றாலும் புது முயற்சிக்குப் பாராட்டுக்கள்

அன்புடன் மலிக்கா said...

ஆசான்
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

RaaKu saamy said...

புகாரி அண்ணா,



நீங்கள் எழுதிய அனைத்தும் அருமை.

ஆனால் நீங்கள் உங்களை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறீர்கள் என நினைக்குறேன்.



தங்கள் பதிவு பலரையும் சென்றடையவேண்டும் என் வேண்டுகிறேன்



நல்ல தம்பி

Unknown said...

நன்றி நல்லதம்பி!

நல்ல தம்பி என்று பெயர் அண்ணா என்று அன்போடு அழைக்கிறீர்கள். அக்கறையான மடல் இடுகிறீர்கள். என் கவிதைகளை உங்களைப் போன்றோர் அறிந்தாலே போதும் என்று தோன்றுகிறது நல்லதம்பி.


நன்றி மலிக்கா!
வலைச்சரத் தோட்டத்தில் என் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கும் தொடர்ந்து என் கவிதைகளின்பால் நேசம் கொண்டுள்ளமைக்கும் நன்றி.

நன்றி கலாம்காதிர்!

சவுதியில் சந்தித்த அதிரை நண்பர். உங்கள் பாராட்டு மகிழ்வினைத் தருகிறது.

நன்றி சமுத்ரா!

நான் எழுதியதுதான் இந்தக் கவிதை. என் இரண்டாவது கவிதை நூலில் 2003ம் ஆண்டு வெளியானது. நான் பத்திர்கைகளுக்குக் கவிதைகளை அனுப்புவதில்லை. இப்படியே இணையத்தில் வெளியிடுவதும், அப்படியே நூலாய் இடுவதுமாய் இருக்கிறேன்

அன்புடன் புகாரி