கடவுளின் மடிகள்

அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட
எது அழிந்து எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும் சுயநினைவைச் சூறையாட
விழுந்துகிடக்கிறது கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள் கடவுளின் மடிகள்
இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான் இப்போதெல்லாம்

மனிதநேயம் நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு
பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
விசப்பல் அச்சுகளோடு மட்டும்
குப்பைத் தொட்டிகளில்

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு
நல்லதோர் எச்சரிக்கை

நீதானே நாளைய கிழம்
இன்றே சுதாரித்துக் கொள்
உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சில்லறையை
எவரும் தொடாத இடத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப்
பசியையாவது போக்கும்

8 comments:

N Suresh said...

இளைஞனை காலம் கடந்து சிந்திக்கத்தீண்டும் நல்ல கவிதை!

முதுமையில் சில்லறை தேவையென்பதை
சில்லறை வயதுகளில் அறியாத இளமை காலத்திற்க்கு நல்ல யோசனை இந்த கவிதை வரிகள்!

நிலைக்காத இளமை முதுமை நோக்கி என்ற எச்சரிப்போடு நல்ல உபதேசம் தரும் அருமையன கவிதை இது

வாழ்த்துக்கள்
என் சுரேஷ்

Unknown said...

நன்றி சுரேஷ்

கருணை செல்லாக்காசாகும் இடங்களில் சில்லறைக்காசுதானே ஜீவனைக் காக்கிறது என்றுதான்...

அன்புடன் புகாரி

சாந்தி said...

சத்தியம்... வயோதிகரை அரசு தத்து எடுத்துக்கணும்... இறுதி நாட்கள் அருமையான முறையில் முடிவடைய அரசே உதவணும்...

செல்வன் said...

நல்ல கவிதை

எந்த வயதனாலும் சொந்தகாலில் நிற்க கற்றுக்கொண்டால் இந்த பிரச்சனை இல்லையே?

Unknown said...

ஆம் செல்வன். முதியவருக்கு ஊன்றுகோல் என்று ஒரு மூன்றாம் கால் தேவைப்படும்
அதுபோலவே தான் தனக்கே தனக்கென்று சேமித்த சொத்து மூன்றாம் காலாய் வேண்டும் என்பதே கருத்து. அதுவும் சொந்தக்கால்தானே?

துரை said...

சேமிப்புக்கான தேவையை புதிய மொழியில்
புரியும் வழியில் சொல்லியிருக்கிறீர்கள்

நன்றி ஆசான் !

விஷ்ணு said...

நல்ல கவிதை அன்பின் புகாரி ..

மனிதநேயம்
நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு..

உண்மை .....உண்மை ...


நன்றிகளுடன்
விஷ்ணு ...

சீனா said...

அன்பின் புகாரி


அருமை அருமை

முதுமையில் வறுமை கொடுமை - அதனைத் தவிர்க்க இளமையிலேயே ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். உண்மை உண்மை.

கவிதை - கிழம் குப்பைத்தொட்டியில் ....
குப்பைத்தொட்டிகள் கடவுளின் மடிகள் - உண்மை
இன்று மலர்ந்த தளிர்கள் - நாளை உதிரப் போகிற சருகுகள் - இரண்டுமே குப்பைத் தொட்டியில் - காலத்தின் கோலம்.

என்ன வழி - தளிர்கள் ஒன்றும் செய்ய இயலாது - அவர்கள் பாவம்
சருகுகள் முதுமையில் வாடாமல் இருக்கு பசுமைக் காலத்திலேயே கவனத்துடன் இருக்க வேண்டும். நல்ல சிந்தனை

நன்று நன்று நண்ப புகாரி - நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா