21 உயிர்ப்பு


முட்டைக்குள்
கண்மூடிக்கிடக்கும்
குஞ்சு

விதைக்குள்
இலையொட்டிவாழும்
தளிர்

நூலுக்குள்
சிறகு மடித்துறங்கும்
பம்பரம்

மொட்டுக்குள்
இதழ்பூட்டித் துயிலும்
மலர்

காகிதத்தில் எழுத்துப்பெறாமல்
மூச்சுவிடும்
கவிதை

கிழக்கில் வெளிச்சம்மடித்து
மல்லாந்திருக்கும்
சூரியன்

முழுமையற்ற இவையாவும்
வாழ்வெளியில்
அடுத்த கட்டம் தொடாமல்
அடையாளமற்றவைதான்

என்றாலும்...

ஆயுள் முழுவதும்
நினைத்து நினைத்து மீண்டும் புக
இதயத்தைத் துடிக்க வைக்கும்
அற்புத நிலைகள்தாம்
ஐயமே இல்லை

ஆயினும்
முயற்சியும்
முளைவிடும் வலியும்
அதில்வரும் வெற்றியும்தான்
உயிர்ப்பு உயிர்ப்பு உயிர்ப்பு

No comments: