20

எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

7 comments:

vasu balaji said...

ஆஹா ஆஹா. எப்பொழுதும் போல் நெஞ்சைத் தொடும் கவிதை வரிகள், வலிகள்.

புன்னகையரசன் said...

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை


இது உங்கள் எண்ணம் மட்டுமேவா....
அப்படி உங்கள் எண்ணம் மட்டுமென்றால்
உண்டுகொண்டுதான் இருக்கிறேன் என்பது தான் சரியா?
இருவரும் என்றால் கடைசி பத்தி முரண்படுகிறது...


புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்


இதென்ன முரண்பாடு ஆசான்...

Unknown said...

என்ன புன்னகையரசன், விபரம் தெரிந்த நீங்களே இப்படிக் கேட்கலாமா?

முரண்பாடுதான் பெண்ணின் மனது. ஒத்துக்க மாட்டாங்க. ஆனால் அனுபவிப்பாங்க :)

புன்னகையரசன் said...

அப்படி சொல்லுங்க ஆசான்...
கடைசியில் நண்பன்னு ஏன் சொன்னாள்....இந்த பொண்ணுங்களே இப்படி தான் எஜமான்...
அழகான கவிதை....

சத்ரியன் said...

//உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை ..//

புகாரி,

இப்படி இன்னும் எத்தனையோ...தமிழின் எல்லாச் சொல்லும் நீ காதல் கவிதைச் சொல்லவே பிறந்திருக்கிறது.

சிவா said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை ... பழைய நினைவுகள்

mohamedali jinnah said...

உங்கள் கவிதையைப்
பார்த்தேன், படித்தேன், மகிழ்ந்தேன்
ஒரு படி தேனாக இனித்தது!