நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.

கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.

சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!


நிகழ்ச்சி இரண்டு:

அதே சவுதி அரேபியா. அதே அலுவலகம். இப்போது ஒரு ஹைதராபாத் அப்துல் கதீர்.

அப்துல் கதீர் புதிதாக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான். அவன் இந்தியனா பாகிஸ்தானியா அல்லது பங்களாதேசியா என்று தெரிந்துகொள்ள நீ எந்த நாடு என்று கேட்டோம்.

”ஹைதராபாத்” என்றான்.

”ஓ இந்தியாவா” என்று கேட்டோம்.

”இல்லை. ஹைதராபாத்” என்றான்.

”ஹைதராபாத் இந்தியாவில்தானே இருக்கிறது? உன் நாடு எது என்று கேட்டால் இந்தியா என்றுதானே சொல்லவேண்டும். உன் ஊர் எது என்று கேட்டால்தானே ஹைதராபாத் என்று சொல்லவேண்டும்” என்று கேட்டோம்.

”இல்லை. என் நாடு ஹைதராபாத்” என்றான்.

அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிப் போய்விட்டோம்.

(நிஜாம் ஹைதராபத்தை தனி நாடாகக் கேட்டார். ஹைதராபாத் இந்தையாவுடன் இணைந்ததை அப்துல் கதீர் இன்றுவரை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. இனியும் ஏற்க மாட்டான்)


நிகழ்ச்சி மூன்று:

அதே அப்துல் கதீர். அதே நிறுவனம். அதே சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

அதன்படி நாங்கள் தொழுகை அழைப்புக்கு முன் உணவு உண்டு நோன்பு வைத்துவிட்டோம். மணி மூன்றரை ஆகிவிட்டது.

மணி நான்கு ஆகியும் அப்துல் கதீர் உணவு உண்டுகொண்டு இருந்தான்.

”கதீர், என்னாச்சு இன்று உடல் நலம் சரி இல்லையா?”

“இல்லையே, நன்றாக இருக்கிறேன்”

“நோன்பு வைக்க வில்லையா?”

”வைக்கிறேனே”

”இன்று நோன்பு மூன்று மணிக்கே வைக்க வேண்டும்? தொழுகை அழைப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது”

“நான் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்பேன்”

”ஏன்?”

”ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்போம்”

“கதீர், அங்கே சூரிய உதயம் தாமதமாக வரும். அதனால் தொழுகை அழைப்பு தாமதமாக வரும். ஆகவே நோன்பை நாலரை மணிக்கு வைக்கலாம். ஆனால் இங்கே சூரிய உதயம் முன்பே வந்துவிடுகிறது எனவே மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டும். அப்படித்தானே குரானில் சொல்லி இருக்கிறது?”

”நான் சவுதிக்காரன் அல்ல. நான் ஹைதராபாத். ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு”

அப்துல் கதீர் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிவிட்டோம்.

இதில் உபரி சிரிப்பு என்னவென்றால், நோன்பு திறப்பதை மட்டும் ஹைதராபாத் நேரத்தில் திறக்க மாட்டான். சவுதி படி முன்கூட்டியே பள்ளிவாசலில் தரும் இலவச உணவை உட்கொண்டு திறந்துவிடுவான்.

4 comments:

mohamedali jinnah said...

மிகவும் சுவையுடன் படிக்க மகிழ்வாக நிகழ்வு சிறப்பாக உள்ளது.தொடர்ந்து நிகழ்வுகளை தாருங்கள் .
குழம்பியது நன்மைதான்
அவர் உங்கள் வாழ்வில் மிகவும் நன்மை செய்து உங்களை கனடாவுக்கு ஓடவைத்துவிட்டார்.

அமுதா கிருஷ்ணா said...

அருமையாக குழம்பி இருக்கிறீர்கள்.

Jaleela Kamal said...

முன்றுவித்த்யாசமான நிகழ்வு

ஆனால், உருது முஸ்லீம் சில பேர், ஸ்கூல் என்று தான் சொல்வார்கள்>

Yaathoramani.blogspot.com said...

மூன்று நிகழ்வுகளும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது
செந்தில் வாழைப்பழ ஜோக்கில்இதுதாங்க அது என சொல்வதுபோல
உங்கள் நண்பரின் பேச்சு இருந்ததும்
அதை நீங்கள் சொல்லியுள்ள விதமும் அருமை
வெகு நேரம் ரசித்துச் சிரித்தேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்