ஏப்ரல் 8, 2018 கனடா ஸ்டெர்லைட் போராட்ட நாளில்...

காப்பரைத் தின்று
தமிழினத்தின் மீது கேன்சரைக் கக்கும்
வேதாந்தா பணப்பிசாசே

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரங்கள்
சிதைத்தழிய ஆட்டிப்படைக்கும்
அணில் அகர்வாலே

தமிழினத்தின் மீது
தொடர்த் துயரங்களை
வாரி வாரி இறைக்கும்
கொடுங்கோல் மத்திய அரசே

அடடாவோ
இது என்ன கொடுமை

சுந்தரத் தமிழினத்தின்மீது
சீறிப்பாயும்
ஸ்டெர்லைட் கருநாகமே

ரத்தினகிரி உன்னை மொத்தி அனுப்பும்
தமிழ்நாடு மட்டும் ஆரத்தி எடுத்து அணைக்குமா

குஜராத் உன்னைக் குதறியனுப்பும்
தமிழ்நாடு மட்டும் கும்பிடுபோட்டு வரவேற்குமா

கோவா உந்தன் மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும் தத்தெடுத்து உச்சிமுகருமா

தமிழினத்தின் மீது
தரங்கெட்ட அரசியல் மிருகங்கள்
தரிகிடதித்தோம் போடுகின்றன

குரங்குகள் எல்லாம் தாவிக் குதித்து
நட்டநடுவீட்டிலேயே ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில் சிறுநீர் கழிக்கின்றன
படுக்கையறையில் மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில் நாற்றுநடும் தினவு
எப்படி வந்தது உங்களுக்கு?

எங்கள் பொறுமையைக் கண்டு
அடடா கோழைகள் தமிழர்கள் என்று
தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்களா

நீறுபூத்த நெருப்பு
எங்கள் மறத்தமிழர் மார்பு

அது சிறுமைகண்டு பொங்கும்போதும்
விம்மித் துடித்து எழும்போதும்
தடுத்து நிறுத்த இந்தத் தரணியில்
எந்த ஒரு சக்திக்கும் எள்ளளவு திராணியும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

உங்கள் கொட்டங்கள் அனைத்தையும்
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
எங்கள் தமிழ் மண்ணையும்
எங்கள் தமிழர்தம் வளமிகு வாழ்வையும்

***பாரதிதாசனைத் துணைக்கழைக்கிறேன்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்

தமிழ் வாழ்க தமிழினம் வளர்க
துரோகங்கள் ஒழிக துயரங்கள் ஒழிக

No comments: