கொஞ்சு முகப் பிஞ்சுப் பெண்ணே

அந்நியனோ
அடிக்கடி வீடுவரும்
அங்கிளோ

தொடுதல்
காமத் தொடர்தலுக்கானத்
தூண்டில்கள்

தொடும் விரல்களின்
வேர்களில்
தீவிர காமத் தாகம்
தகித்துக்கொண்டிருக்கலாம்

சொல்லித்
தருவதில்லையா
உன் அம்மா

உன்
ஐந்தே வயதுக் காலழகு
அம்மாவுக்கு அற்பம்தான்
அலைபாயும்
கண்களில் பட்டாலோ
அபாயமல்லவா

பாவம்தான்
நீ
என் கண்கள்
கழன்று விழுகின்றன
உன்முன்
துயரத் துளிகளாய்

என்செய்வது
அறம் அவிழ்ந்த பாவிகளின்
பூமியாகிப் போனதே
நம் மாண்புமிகு மண்

முகம்விரித்து முறுவலித்து
சாக்லெட் தரும் உள்ளம்
அன்பு உள்ளமாகத்தான்
இருக்க வேண்டும்
ஆனால்
எக்ஸ்ரே எடுத்தால்
கபடம் மறைத்த வாய்ப்பல்லவா
அதிகரித்துக்கிடக்கிறது

யார் தொடலாம்
எவர் தந்தால் பெறலாம்
யாரழைத்தால் செல்லலாம்
என்று சொல்லித் தரும்
தாயே
ஏமாந்து நிற்கிறாளே

பாழும் உலகமம்மா இது
மிருகங்கள்
கட்டவிழ்ந்துத் திரிகின்ற
பாதகக் காலமம்மா

ஊரோர ஐயனாரின்
கொடுவாள் எடுத்து
நான்
வீட்டுக்குள் விளையாடும்
உன் பிஞ்சுப் பருவத்தைக்
கொய்கிறேன்
உன் சிறுமி ஆசைகளைத்
துண்டிக்கிறேன்
உன் அடிப்படைச் சுதந்திரத்தைக்
கொல்கிறேன்

தறிகெட்டத் தறுதலைகளுக்குத்
தண்டனையாய்
அக் கருந் தலைகளை
அந்நொடியே வெட்டிவீசும்
கட்டுமானமும்
கட்டளையும்
களையெடுப்பும்
இல்லையே இங்கே
நான் வேறென்ன செய்ய?

அன்புடன் புகாரி

No comments: