Showing posts with label * * 27 கண்ணதாசன் பாடல்கள். Show all posts
Showing posts with label * * 27 கண்ணதாசன் பாடல்கள். Show all posts

கண்ணதாசன் பாடல்கள் - இது மாலை நேரத்து மயக்கம்

கண்ணதாசன் ஒரு சுவாரசியமான காதல் பாடல் எழுதினார்.

அதில் காதலி அதீத காதலோடு கதாநாயகனிடம் கொஞ்சுகிறாள். அவனோ விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான்.

எல்லாம் துறந்த துறவும் இன்றே பூத்த பூவும் காதல் கொண்டால் அந்தப் பாடல் எப்படி இருக்கும்?

இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

என்கிறாள் காதலில் கனிந்து மயங்கி சொக்கி நிற்கும் அவள்.

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

என்கிறான் அவன்.

எத்தனை சுவாரசியம் பாருங்கள். இரண்டு முரண்கள் ஒரு புள்ளியில் சந்தித்து உரையாடுவதை எத்தனை எளிமையாகக் கண்ணதாசன் தருகிறார்.

பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன

என்கிறாள் அவள் விடாப்பிடியாக. தன் கற்பனைகளையும் பருவத்தின் குறுகுறுப்புகளையும் தொலைக்க அவளால் துளியும் இயலவில்லை.

உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன

என்கிறான் அவன் விட்டுக்கொடுக்காதவனாக

உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன

என்கிறாள் காதலில் துடிக்கும் கன்னி

இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன

என்கிறான் உறைந்துபோன உணர்வுகளோடு துறவி.

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
தினம் மூடி மூடி ஒடினாலும்
தேடும் வாசல்தானே

அப்படியே அவன் திசையிலேயே அவனை அடித்துப்போடுவதுபோல் அவள் பாடுகிறாள்.

பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே

என்று அவளுக்குச் சரியான பதிலடி கொடுக்கிறான் அவன்.

இல்லறம் கேட்டால் துறவரம்
பேசும்இதயமே மாறி விடு

இறுதியில் கெஞ்சத் தொடங்கிவிடுகிறாள்.

இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு

அவள் மீது இரக்கப்பட்டு அமைதியாக அவன் அவளுக்குப் புத்தி சொல்கிறான்.

இப்படி எதிர் எதிர் கருத்துக்களை மோத வைப்பது எளிமையான காரியமல்ல. அதை இத்தனைச் சிறப்பாய்ச் செய்த கண்ணதாசனின் பாடல்களைக் காதலிக்காமல் எப்படி இருக்க முடியும்?

- கவிஞர் புகாரி

கண்ணதாசன் பாடல்கள் - பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்


கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பல சுவாரசியங்களைப் புகுத்தியவர். தேன் தேன் என்று முடிவதாகவும், பால் பால் என்று முடிவதாகவும், நிலா நிலா என்று முடிவதாகவும் காய் காய் என்று முடிவதாகவும் இன்னும் சில சொற்களில் முடிவதாகவும் தேன் சொட்டும் பாடல்களை எழுதிக் குவித்தவர்.

அவர் காலத்தில் திரை இசை, குத்துப் பாட்டுக்களில் ரத்தம் கொட்டி நிற்காமல் கண்ணதாசனின் இலக்கிய தாகத்திற்கு ஏற்ப மென்மையாய் இருந்தது. அதுவே கண்ணதாசனுக்கு வசதியாய் இருந்தது.

இப்போது தேன் தேன் என்று தேன் குழைத்து எழுதிய கண்ணதாசனின் தேன் பாடல் ஒன்றை நாம் சுவைப்போமா? திரையிசைப்பாடல்களுக்குள் இலக்கியத்தை அள்ளிப் பொழிந்த அந்த இன்பத்தை காலங்கள் மாறினாலும் மாறாத சிலிர்ப்போடு அனுபவிப்போமா?

இந்தப் பாடலை கவிஞர் 1965ல் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கே.வி.மகாதேவன் இசையில் சுசீலாவும் ஸ்ரீனிவாசும் பாடிய அற்புதப் பாடல். படம் வீர அபிமன்யு.

ஓர் அழகான காதல் காட்சி. தலைவனும் தலைவியும் முழுநிலவின் மடியில் விழுந்த வெண்ணைக் கட்டிகளாய் உருகிக் கரைந்து காதல் பொழிகிறார்கள் கண்மயங்கி கவிதை மொழிகிறார்கள். இதுதான் பாடலின் சூழல். இதற்கு கண்ணதாசன் எழுதிய முதல் மூன்று வரிகளைப் பாருங்கள்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்


எத்தனைத் தேன்? முன்றே வரிகளில் ஏழு தேன் அதிலும் மலைத்தேன் என்று ஒரு சிலேடைத் தேன்.

அவன் அழகே உருவான அவளைக் காதலாய்ப் பார்த்தானாம். அவளும் அவனிடம் மயங்கி அப்படியே காதல் பொங்கப் பார்த்தாளாம். அந்தப் பார்வைகள் தந்த உடனடி ஒப்புதலின் காரணமாக அடுத்த நிலைக்குச் சென்றானாம் அவன். அதாவது அவளைக் கண்டு இதழ் அவிழச் சிரித்தானாம். அதுவும் அவளிடம் ஒப்புதல் ஆனதும் அதோடு நிற்காமல் வா வா என் அருகே என்று அவளை அழைத்தானாம்.

காதலென்றால் காலங்கள் தோறும் ஆண்கள் முன்னேறிக்கொண்டேதானே இருப்பார்கள். அவனது அழைப்பை ஏற்று அவளும் அவனிடம் வந்துவிடுகிறாளாம். அடடா இப்படியல்லவா இருக்க வேண்டும் பெண் என்று கற்பனை ஓடுகிறதா? கொஞ்சம் அந்தக் குதிரையைக் கட்டிவையுங்கள். அவள் அவனுக்கு உரிமையானவள். அதன் காரணமாகவே அவள் காயாய் நிற்காமல் கனியாகவே குழைகிறாள்.

அழைத்ததும் வந்தவளைச் சுவைக்கிறானாம் அவன். அடடா இவள் உண்மையிலேயே தேன் என்று முடிவு செய்துவிடுகிறானாம். அவளிடமிருந்து பெற்ற காதல் சாதாரணத் தேன் அல்ல சுவை மிகுந்த மலைத்தேன் என்று கண்டு மலைத்து நிற்கிறானாம். எத்தனை அழகு பாருங்கள் இந்தத் தேன் தேன் வரிகள். மலைத்தேன் என்ற சொல்லுக்கு இரு பொருள். ஒன்று மலைப் பிரதேசத்திலிருந்து எடுத்த தேன் மற்றொன்று அதிசயத்தில் அப்படியே மலைத்துப் போய் நிற்பது.

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்


இனி அவள் சொல்கிறாள். அவனை ஆமோதிப்பதுபோலவே சொல்கிறாள். இந்த ஒத்த மனமும் ஒத்த இசையும் ஆணுக்கும் பெண்ணும் தரும் சுகம் கொஞ்சமா? அவளும் அவனைப் பார்த்தாளாம், பின் சிரித்தாளாம், அவன் அழைக்கும் முன்னரே அவன் பக்கத்தில் செல்லத் துடித்தாளாம். இது எப்படி இருக்கிறது? அவனைப்போலவே அவள் அவனைத் தேன் போல் தித்திப்புடையவன் என்றே நினைத்தாளாம். ஆனால் அவன் காதல் மட்டுமல்ல அவனே ஒரு சுவையான மலைத்தேன் என்று அவள் அப்படியே மலைத்துப் போய்விட்டாளாம்.

கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என
ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன்


மெல்லிய இடையைக் கொண்ட இவள் ஒரு கொடியைப் போன்றவள் அதாவது இவள் ஒரு கொடித்தேன். இனியெல்லாம் இவள் எங்கள் வீட்டுக்குச் சொந்தமானவள். எங்கள் குடியைச் சேர்ந்தவளாகிறாள். இந்தக் கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் ஆகிறாள் என்று எத்தனை அழகாகச் சொல்கிறார் பாருங்கள் கண்ணதாசன். அடடா என்று வியக்க வைக்கிறதல்லவா? இப்போது அவள் அவனை ஆழமாய்ப் பார்க்கிறாள் அதில் அகிலத்தின் காதலெல்லாம் ஒன்று சேர்ந்து நிற்கிறது. அதை எப்படிச் சொல்கிறார் கண்ணதாசன் பாருங்கள். ஒரு படி நிறையத் தேன் குடித்ததுபோல அவள் பார்வையைக் குடித்தேன் என்கிறார். பெண்ணிடம் பல்லாயிரம் அழகுகள் உண்டு. ஆயினும் அவள் பார்வை என்ற அழகுக்குமுன் எல்லாமும் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அந்தப் பார்வைதான் காதலின் மொழி. பருவக் கண்களை அதன்பின் உறங்கவே விடாத அற்புதம்.

துளித்தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்


அவள் அழகை எல்லாம் ஒரு துளியும் சிந்தாமல் அனுபவித்தானாம். அப்படியே அள்ளி எடுத்து அணைத்தானாம் பருவ அழகையெல்லாம் முழுவதும் ரசித்தானாம். வார்த்தைகள் எத்தனை மதுரமாய் வந்து விழுந்திருக்கின்றன பாருங்கள். .

மலர்த்தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்


அழகிய மலரில் தேன் நிறைவதைப்போல இளமை அழகு நிறைய பருவம் எய்தினாளாம் அவள். அதுமட்டுமல்ல அவனுக்காகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தாளாம், உரிய வயது வந்ததும் அவனையே மணந்தாளாம். இதைவிட அற்புத வாழ்வு வேரென்ன இருக்க முடியும்? நட்பும் நட்பைத் தொடர்ந்த காதலும் அந்தக் காதலைத் தொடர்ந்த கல்யாணமும் அமைந்துவிட்டால், வேறென்னதான் வேண்டும் வாழ்வில்?

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்


சரி கல்யாணமும் ஆகிவிட்டது. அடுத்து? தேன் நிலவுதானே? தேன் நிலவில் சுகம் என்பது இருவருக்கும் சமம் அல்லவா? அங்கே சுகம் எடுக்கவும் செய்ய வேண்டும். சுகத்தை அள்ளிக் கொடுக்கவும் செய்யவேண்டும். அவர்கள் அப்படியேதான் செய்தார்கள். அதுமட்டுமா அனுபவிக்கும்போது ஒரு முழுமை வேண்டுமல்லவா? தமிழே நாணும் வண்ணம் எத்தனை அழகாக அதை கண்ணதாசன் எழுதுகிறார் பாருங்கள். இனி அவளிடம் எஞ்சியதாய் ஒரு துளி தேனும் இல்லை என்று ஆகும் அளவுக்கு அந்தக் காதல் லீலைக் கதையை அழகாக சுவையாக சுகமாக முடித்தானாம் :)

கலக்கிட்டியே கண்ணதாசா!

கண்ணதாசன் பாடல்கள் - அத்திக்காய் காய் காய்


அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


என்ற கண்ணதாசனின் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இதை வெறும் சினிமாப்பாட்டு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். சங்ககாலத்துப் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளை எடுத்து கண்ணதாசன் திரையிசையில் கலக்கிய பாடல். இதை சினிமாவில் போடுகிறேன் என்றதற்கு எம் எஸ் வி கண்ணதாசனை விடவில்லை. இதெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று புறந்தள்ளிவிட்டார்.

கண்ணதாசன் கண்களில் கண்ணீர். அடடா கண்ணதாசா இதுக்கெல்லாம் அழலாமா சரி சரி போடலாம் விடு என்று எம் எஸ் வி சம்மதித்திருக்கிறார் இந்தப் பாட்டில் வரும் காய்களை உற்றுக்கவனியுங்கள். அவற்றுள் வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. இது மிகமிக இலக்கியத்தரம் வாய்ந்த சினிமாப் பாடல். அதனால் எனக்கு மிக மிகப் பிடித்தபாடல்.

தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஒரு சுவாரசியமான விசயம் சிலேடை. இரு பொருளைத்தரும் ஒரு சொல் அல்லது வரி அல்லது பாடல்தான் சிலேடை. நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் அந்தப் பா வகைக்குள் ஒளிந்துகிடக்கும். இதற்கு உதாரணமாய் எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த அத்திக்காய் காய் காய்.

அந்த சங்ககாலப்பாடலில் வருவது சில காய்கள்தான். ஆனால் அதைத் தழுவி கண்ணதாசன் எழுதிய திரையிசைப்பாடலில் ஏகப்பட்ட காய்கள். கொத்தவால் சாவடிக்குள் நுழைந்துவிட்டதைப் போல கமகமக்கும்

அத்திக்காய்
ஆலங்காய்
இத்திக்காய்
கன்னிக்காய்
ஆசைக்காய்
பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
என்னுளங்காய்
இரவுக்காய்
உறவுக்காய்
ஏழைக்காய்
நீயும்காய்
நிதமுங்காய்
இவளைக்காய்
உருவங்காய்
பருவங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
கனியக்காய்
விளங்காய்
தூதுவழங்காய்
மிளகாய்
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
சிரிக்காய்
கொற்றவரைக்காய்
தனிமையிலேங்காய்

எத்தனைக் காய்கள் பாருங்கள். இத்தனையையும் கொண்டு கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்தான் அத்திக்காய் காய் காய். இதோ முழுப்பாடலும். பாடலை முதலில் பாடிப்பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு வரியையும் நாம் அலசுவோம்.

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்

தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்

வெண்ணிலவே நீ சிரிக்காயோ
கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே

தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)





பாடல்:அத்திக்காய் காய் காய்
குரல்:டி எம் சௌந்தரராஜன், சுசீலா, P B ஸ்ரீநிவாஸ், ஜமுனா ராணி
வரிகள்:கண்ணதாசன்
வருடம்: 1965

கேட்க - http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4296

இது ஒரு சங்ககாலப் பாடல் என்று முன்பே சொன்னேன். சங்ககாலப் பாடலில் இருந்தது இரண்டுமூன்று காய்கள்தான். ஆனால் கண்ணதாச மரத்தில் காய்த்ததோ முப்பதையும் தாண்டி.

தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே
அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல் இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்....

எப்படி

அத்திக்காய் காய் காய்

ஏ நிலாவே..... நீ காய்கிறாய் நான் தேய்கிறேன். என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்தத் திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். அவனை இந்தக் காதல் நோய் பற்றட்டும். அப்படிப்பற்றினால்தான் அவன் என்னிடம் ஓடிவருவான்.

ஆலங்காய் வெண்ணிலவே

வெறுமனே காய்ந்துவிடாதே. அது அவனுக்குப் போதாது. பொறுப்பில்லாம அங்கேயே இருந்துவிடுவான். நீ காய்க்கும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும்

இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ


என்னிடம் வந்து இந்தத் திக்கில் நின்று காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தாபம் புரியாதா? தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம்
அறியமாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா?

அடடா எத்தனை அருமை பாருங்கள். இந்த இலக்கிய ரசனைதான் என்னை நம் பழந்தமிழ் இலக்கியத்தின்முன் மண்டியிடச் செய்யும். விடவே மாட்டேன் பழைய இலக்கியங்களை.

அத்திக்காய் என்பது அத்திக்காய் அல்ல அது அந்தத் திக்காய்
ஆலங்காய் என்பது ஆலமரக்காயல்ல அது விசம்போல் காய்
இத்திக்காய் என்பது நாம் அறியாத காயல்ல அது இந்தத் திக்காய்

இதோடு மூன்று காய்கள் முடிந்தன.

இனி

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்


4. கன்னிக்காய்
5. ஆசைக்காய்
6. பாவைக்காய்
7. அங்கேகாய்
8. அவரைக்காய்
9 கோவைக்காய்

மேலும் ஆறு காய்கள். அடடா அதற்குள் ஒன்பது காய்களை அடுக்கிவிட்டார் பாருங்கள் கவியரசர் கண்ணதாசன்.

தலைவி பாடுகிறாள். நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு தவியாய்த் தவிக்கும் இந்தக் கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவள் சின்னஞ்சிறு வயதுமுதல் அதாவது ஞாபகம் முளைக்காத அந்த பழைய நாள் முதல் அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதமான காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே.

என் மீது இரக்கப்படு, நான் தகிக்கும் உன் காதல் கதிர்களைத் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன காதல் மறந்து என் மீது இரக்கமற்ற அவனிடம் நீ சென்று காய், அங்கேகாய்.

என் காதலரான அவரைக் காய் (அவரைக்காய்) இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் கோ (கோ என்றால் அரசன். இளங்கோ என்றால், இளைய அரசன்) வைக்காய்

(கோவைக்காய்). அப்போதுதான் அவன் என்னிடம் என் காதல்நாடி என்னைத்தேடி ஆசையாய் வந்து தொலைப்பான்.

9 காய்கள் முடிந்தபின் மேலும் இரண்டு கண்ணதாசக் காய்கள்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


இப்போது தலைவியின் அந்தப்பக்கப் பாட்டுக்கு தலைவன் இந்தப் பக்கம் இருந்துகொண்டு எசப்பாட்டு பாடுகிறான். நிலவே, இவள் சொல்கிறாள் என்று என்மீது காய்ந்துவிடாதே! நான் அவளைவிட கொதிப்பில் இருக்கிறேன். அவள் அப்படித்தான் பழியை என்மீது தூக்கிப் போட்டுவிடுவாள். அவள் உள்ளம் காய். என்மீது கனியாத காய்.

தொழில் நிமித்தமாகவே நான் இங்கே வந்து இப்படித் துடித்துச் சாகிறேன். அவளென்னவோ நான் அவளைப் பிரிவதற்காகவே இப்படிப் புறப்பட்டுவந்துவிட்டதைப் போல் உன்னிடம் முறையிடுகிறாள். நான் அப்படிப்பட்டவன் அல்லன்.

மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)

மாது அவள் உள்ளம் காய்தான் - என் மீது கனிவின்றிச் சாடுகிறது. என்னை நெருப்பாய்ச் சுட்டெரிக்க உன்னைத் தூண்டிவிடுகிறாள். அவள் என் மீது மிகுந்த அன்பு உள்ளவள்தான். ஆனால் அவளது காதல் அவளை உண்டு இல்லை ஒரு கை பார்க்கிறது. அதனால் அவள் உள்ளம் காயாகிவிட்டது. அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா?

என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? அவளுக்கு முன்பே நீதானே என் காதலி. என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே. பாருங்கள் ஆண் இங்கே நிலாவை என்னைக் காயாதே அவளைப் போய் காய் என்று மூட்டிவிடவில்லை. என்னைக்காயாதே நீயும் என் உயிர்தானே என்னை அறிந்தவள் தானே என்று கூறுகிறான். அட எப்படிப்பார்த்தாலும் ஆண்கள் நல்லவர்களப்பா :)

01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்

என்று பதினோரு காய்கள் முடிந்துவிட்டன, இனி அடுத்த இரு வரிகளில் இன்னும் ஏழு காய்கள். அம்மாடியோவ் கண்ணதாசா, அப்படியே அசத்துகிறாயே கவியரசா!


இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய் 

நேரில் நிற்கும் இவளைக்காய்

12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்

இது ஆண்பாடும் வரிகள். பெண்கள் எப்போதுமே தூரமாய் இருக்கும்போது, வா வா என்பார்கள். ஏங்கித் தவிக்கிறேன் என்பார்கள். தூங்காமல் துவள்கிறேன் என்பார்கள்.

அருகே வந்தால் போதும், அது அச்சமோ நாணமோ மடமோ பயிர்ப்போ, அந்த வள்ளுவனுக்குத்தான் வெளிச்சம், ஒரே பிகுதான்.

வெட்டிக்கு ஒரு சண்டை வேறு போடுவாள். ஏன் சண்டை போடுகிறாய் கெண்டை மீனே என்று கேட்டால், வள்ளுவன் வேறு வக்காலத்துக்கு வருவான்.

இது ஊடலடா மடையா. நீ ஊடிக்கூடு அதில்தான் உற்சாக வெள்ளம் கரைபுறண்டோடும் என்று சூடுபோடுவான்.

ஆக, தவிப்பும் துடிப்புமாய் ஆண்களில் நிலை பாவம் பாவம் அந்தோ பரிதாபம்.

கெஞ்சுடா நீ கெஞ்சலேனா மவனே கஞ்சிடா என்று மிதப்பாய் நிற்பாள் அவள். சரி வேண்டாம் போலும் என்று விட்டு விலகித் தொலைத்தால் போதும், பிறகு ஒரு ரகளையே நடக்கும்.

வேறு வழி? கெஞ்சிக் கொஞ்சி பின் கிடைப்பாள் அந்த வஞ்சி ஓர் ஒன்றையணா முத்தத்துக்கு ;-)

இரவுக்காய்... ம்ம்ம் இறைவன் ஏன் இரவைப்படைத்தான்? அட இரவில்லையேல் இன்பமே இல்லை. பலரும் அது உறங்குவதற்குத்தான் என்று நினைத்துக்கொண்டு குறட்டையோடு தயாராக இருப்பார்கள்.

சோத்தப்போடு ஒரு சங்கீதம் மிச்சம் வெச்சிருக்கேன் என்ற மிதப்பு கண்களில் மின்னியலையும்.

இரவு காதலுக்குச் சொந்தம். இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஜிவ்வென்று ஏறும், அந்த இரவுக்காய்.

சரி இரவு வந்தாச்சு. வந்து? உறவில்லேன்னா? தொலைஞ்சுதே சங்கதி. ஆக இரவும் வேண்டும் அதில் அதனோடு உறவும் வேண்டுமே.

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்.

யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. மாடி வீட்டில் இருந்தாலும், தன் தேவைக்காக கையேந்தினால் அவன் ஏழைதான்.

பெண்கள் ஆண்களை ஏழையாக்கிப் பார்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஏங்கும் ஏழையாகிறான் காதலன் தன் காதலியின் முன். இல்லேன்னு யாராச்சும் சொல்லுவீங்களா?

அடியே ஆருயிர்க் கற்றாழை ஆசையாய் ஒரு முத்தம்தா செவ்விதழ் சுழித்து என்று கேட்டுவிட்டால் போதும், உடனே பதில் வரும். "மாட்டேன்" அடடா இந்த ஏழைகள்படும் பாடு இருக்கிறதே :)

இவ்ளோ பாடு படுத்துகிறாளே இவள். நான் தானே தவிச்சிக்கிடக்கிறேன். என்னை ஏன் காய்கிறாய் நிலாவே. இவளைக்காய் என்கிறான் தலைவன். அதுவும் எப்படி?

எலிதான் காயுதுன்னா எலிப்புழுக்கையும் ஏன் சேந்து காய்கிறது என்று எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க. தஞ்சாவூர் கிராமங்களில் சொல்லப்படாத பழமொழிகளே இல்லை என்று சொல்லலாம்.

காதல் படுத்தும் பாட்டில் தலைவன் காய்ந்துதான் கிடக்கிறான். அட நிலா ஏன் காயுது. அது யாரின் வரவுக்காகக் காயுது. சூரியனாய் இருக்குமோ? இருக்கும் இருக்கும்.

நிலாவே உனக்குத் தெரிகிறதா காய்வதென்பது எத்தனை கொடுமை என்று. எனவே நீயும்காய், நிதமும் காய். பவுர்ணமிக்கு மட்டும் விறுவிறுப்பாய்க் காய்ந்தால் போதாது. தினமும் காயவேண்டும். இல்லையெனில் இவள் சரிவரமாட்டாள். இதெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாய் நிலாவிடம் தலைவன் சொல்கிறான். நேரில் நிற்கும் இவளைக்காய் என்று.

அடடா இதற்குள் என்னே ஒரு மந்திரப் பொருள் பாருங்கள். நேரில் தான் நிலாவே இவள் நிற்கிறாள். பாவி படுபாவி. மனுசன் வேதனை புரியுதா இவளுக்கு? பாரு அப்படியே கல்லு மாதிரி நிற்கிறாள்?

பொண்ணுன்னா அனல் பட்ட வெற்றிலையாய்த் துவள வேண்டாம்?

அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே சிலை மாதிரி நிற்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான்

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும்காய் நிதமும்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

பாருங்க, இதெல்லாம் காய் காய் தாங்க. ஆனால் அத்தனையும் உண்ணத் திகட்டாத கனி கனி கனி கண்ணதாசன் கனிகள்ங்க. வாங்க. அடுத்த இருவரிகளுக்கு.

உருவங்காய் ஆனாலும் 
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே 

என்னுயிரும் நீயல்லவோ

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


18. உருவங்காய்
19. பவ்ருவங்காய்

காதலனோ மிகத் தெளிவாக ஏழு காய்களை வீசி, இவளே இரக்கம்ற்றவள் இவளையே காய் நிலாவே. அருகிருந்தும் அப்படியே நிற்கிறாள், நீ காய்ந்தாலே இவள் கழுத்தைக் கட்டிக்கொள்ள ஓடிவருவாள் என்று தன் மனக்குறையைச் சொன்னதும், பெண் மனமல்லவா. அப்படியே இளகுகிறது வளைகிறது தாழ்கிற்து அவனுக்காகப் பாடுகிறது அதுதான் பெண்மை. பெண்மையின் மேன்மையான ரகசியம்.

தருவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள். அவர்கள் அழகில் மட்டும் தாராளம் இல்லை அன்பிலும் தாராளம், அணைப்பிலும் தாராளம், கனிவிலும் தாராளம், காதலிலும் தாராளம். என்ன வித்தியாசம் என்றல் ஆண் எப்போதும் துடித்துக்கொண்டே நிற்பான். பெண் அதற்கென்று ஒரு சூழலில் அமர்க்களமாய் எழுவாள். எழுந்தால் இவன் விழுந்தான், அவ்வளவுதான்.

என்னுடைய உருவம்தான் நான் முரண்டு பண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து ஒட்டிக் கிடக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமே அவளுக்கு. நிலவைப் பார்த்து நிலவிடம் சொல்வதுபோல் சொல்கிறாள்.

உருவங்காய் ஆனாலும் உள்ளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவா

சிலையைப்போல் சலனமற்று நிற்பதாய்த் தோன்றும் பெண்ணின் உள்ளே பல வண்ணத்துப்பூச்சிகள் பலகோடி சிறகடித்துப் பறப்பதை யாரறிவார்? இப்போது அவளால், அவனைக் காய் என்று சொல்லமுடியவில்லை. அவன் தான் கொதித்து நிற்கிறானே. ஏழு காய்களை எடுத்துவீசி இந்தக் கனியின் கனியிதழுக்காகக் காத்திருக்கிறானே.

இருவரும் சேர்ந்து இனி பாடுகிறார்கள்

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


ஒருவழியாய் இருவரும் யார் யார் மடிமீது என்று அறிந்துகொள்ள முடியா வண்ணம், யார் கரம் யாரை வளைத்துக்கொண்டு என்று தெரியாமல், உஜாலாவுக்குத்
தாவுகிறார்கள். அதோடு நின்றார்களா. இல்லை இத்திக்காய் காயாதே. எங்களை விட்டுவிடு. அத்திக்கில் ஊடலில் கிடக்கும் ஏனைய காதலர்களைக் காய் என்று டாடா சொல்லி
அனுப்பிவைக்கிறார்கள்.

அனுப்பி வைத்துவிட்டு....

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்


நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது

வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய்

கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும்.

ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.

அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா?

தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறாள், ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம்

வாழக்காய் என்று. ஒரு தரம் அந்த வாசனையைத் தேநீரில் பருகிவிட்டால் எப்படி விடமுடியாதோ அதே போல அவர்கள் உள்ளமும் ஒருவரை ஒருவர் விடாமல்

வாழவேண்டும் என்று கண்ணதாசன் முடிவுபண்ணிட்டுத்தான் இப்படி எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சரி அவர் அதோடு நிக்கலீங்க, ஒருககால் அதுகூட கைகொடுக்கலேன்னா இந்த ஜாதிக்காயைக் கொண்டுவருகிறார் வாழ்க்கைக்குள். தலைவியின் கவலையே அதுதானே? எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி அமையவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் காதல் விருப்பம்.

ஜாதிக்காயும் வாசம் வீசும் சமாச்சாரம்தான். ஏன் கண்ணதாசன் இப்படி வாசனை வீசும் சமாச்சாரமாகவே கொண்டுவருகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம்

காரணமாகத்தான். முதலிரவு என்றால் மல்லிகை மணம் வேண்டுமல்லவா? திருமணம் என்ற பேச்சு வந்தாலே பூக்கள்தான். அவை தரும் வாசனைதான். அப்படியே

கிளர்ச்சியை ஊட்டி, ஊட்டியையே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜாதிக்காயை கொஞம் அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் என்னாகும் தெரியுமோ மயக்கம்தான் கிறக்கம்தான் போதைதான். அந்த ஜாதிக்காய் வைத்திருக்கும்

பெட்டகத்தைப்போல அதாவது பெட்டியைப்போல அதைத் திறந்தால் அந்த வாசனையில் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைக்க அதனுள் இன்பம் கனியக்காய் என்று நிலாவை காயச்சொல்லிக் கேட்கிறாள். ஏன் இப்போதுமட்டும் காயச் சொல்கிறாள் என்றால் தலைவன் தலைவியின் மடிக்கு வந்துவிட்டான். இனி நிலா காய்வது அவசியமாகிவிடுகிறது. அமாவாசையோ தேய்பிறையோ கூடாது அவளுக்கு. அப்போதுதானே காதல் ஊட்டப்பட்டு அவர்கள் அற்புதமாய் வாழலாம் அல்லவா!

20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்

அப்படியே 23 காய்கள் இதுவரை வந்துவிட்டன. இத்தோடு நிற்கலீங்க. கண்ணதாசன் அவ்வளவு எளிதில் திருப்தி பட்டுவிடுவாரா என்ன? மேலும் அவர் தன் பாட்டுச் சாவடிக்குள் குவித்த காய்களை அடுத்த இடுகையில் காண்போம்.

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


தலைவி சொல்லிவிட்டாள் நிலாவே நாங்கள் ஏலக்காய் வாசனையாய் வாழக்காய் என்றும் ஜாதிக்காய் பெட்டகத்தின் வாசனையாய் எங்கள் வாழ்வில் இன்பம் கனியக்காய் என்றும். நிலாவை இனி காயாதே என்று சொல்லாமல் வந்து எங்களிடம் காய் அதனால் எங்களை வாழவைப்பாய் என்று சொல்லிவிட்டாள். இனி தலைவன் என்ன சொல்வது?

தலைவன் ஒரு ரகசியத்தை ரகசியமாய் சொன்னதைக் கேளாத வான் நிலாவுக்குச் சொல்லுகிறான். நிலாவே, தலைவி சொன்னதெல்லாம் உனக்கு விளங்கியதா இல்லையா? ஒழுங்காய் விழங்கிக்கொள். உனக்கு எப்பவும் சொல்வதைக் கேட்கும் பழக்கம் கிடையாது. எதையாவது குண்டக்க மண்டக்க செய்துகொண்டிருப்பாய். தூதுபோ என்றால் முகில் படுதாக்குள் பதுங்கிவிடுவாய். காயாதே என்றால் உடனே வந்து காயோ காயென்று காய்வாய். காரணம் என் மீதுள்ள ஊடல் என்று நானறிவேன்.

ஆனால் நீ புரிந்துகொள் நிலாவே, நீ தலைவியைக் காய்ந்தால்தான் அவள் என்னைத் தேடுவாள். எனக்கு நீ காயவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நான் எப்போதும் காய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆகவே என்னைக் காய்வதை விட்டுவிட்டு நீ தலைவியையே காய். அப்போதுதான் காதல் கனியும் காமம் சுவைக்கும் வாழ்க்கை வசமாகும். என்ன விளையாடுகிறாயா என்கிறாயா? உண்மையை உனக்குமட்டும் ஒரு கிசுகிசுப்பாய் உன் காதோடு சொல்கிறேன் கேள்.

தலைவியைக் காதலிக்கும்முன் நான் உன்னைத்தானே காதலித்தேன். அதில் மாற்றமில்லை என்றென்றும் நீ என்னுயிர்தான். என் செல்லம்தான். நீ தூரத்து நிலா என்பதால் உன்னை அருகில் கொண்டுவரும் வரமாகத்தான் இந்தப் பக்கத்து நிலா. உன்னைக் கிள்ளி எடுத்து வைத்தச் சின்ன நிலாதான் இவள். இந்தப் பக்கத்து நிலாவோடு நான் சொர்க்கம் காண்பது நீ காய்வதால்தான். அதாவது தலைவியிடம் நான் காணும் சுகமெல்லாம் நீ காய்வதால் அவள் கொள்ளும் காதலால்தான். அதாவது உன் காதலைத்தான். அவளைத் தூண்டிவிட்டு அவளோடு கூடும் போது நான் கொள்கிறேன். நீதானே என் உயிர் என்று நிலாவிடம் தலைவன் கதைவிடுகிறான்.

நிலா அவன் வார்த்தைகளில் மயங்கி ஓ அப்படியா கதை? நீ என்னைத்தான் காதலிக்கிறாயா என்னோடு கொஞ்சிக் குலவுதாகத்தான் நீ அவளுடன் இருக்கிறாயா என்று புரிந்துகொண்டு நாள் தவறாமல் தலைவியைக் காய நிலா அக்கறையாய் வந்துவிடும் என்று நினைப்பு தலைவனுக்கு! லஞ்ச லாவண்யங்களில் உச்சிக்கே போனவர்களாயிற்றே ஆண்கள். ஏமாற்றும் கலையைச் சொல்லித்தரவேண்டுமா? ஊடலை உடைக்க இவர்கள் சொல்லும் பொய் யுகம் தாங்குமா?

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

24.விளங்காய்
25. தூதுவழங்காய்

மேலும் நாலு காய்கள் பற்றி அடுத்த இடுகையில் நாம் காணும்வரை நீங்கள் காயாதிருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள் கண்ணதாசனும் வண்ணநிலாவும்!

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ


இந்த வரிகள்தான் கண்ணதாசனை இந்த சினிமாப்பாட்டு எழுத வைத்த கவர்ச்சி வரிகள். கண்ணதாசன் நொறுக்குத் தீனி தின்ற காகிகத்தில் யாரோ எழுதிய சில வரிகளைப் பார்க்கிறார். அதிலிருந்த காய்கள் இவர் மனதைக் கவிதையாய்க் கனியவைக்கின்றன.

கவிஞனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அவன் எழுதும் கவிதைகள் சில வேறெவரின் கவிதையையோ வாசித்து பிரமித்ததின் பலனாய் உருவாகும். அப்படியான பாதிப்பில் கவிதை எழுதாத கவிஞர்களே இருக்கமுடியாது என்று ஒரு கவிஞனாய் நான் சத்தியம் செய்வேன்.

கவிஞன் என்பவனே நேற்றைய கவிஞனின் தொளேறி நிற்கும் புதிய உயரமானவன்தான். நேற்றைய கவிஞன் இல்லாவிட்டால் இன்றைய கவிஞனின் உயரம் குள்ளமாகவே இருக்கும்.

வெள்ளரிக்காயா
விரும்பும் அவரைக்காயா
உள்ளமிளகாயா
ஒருபேச் சுரைக்காயா

இதுதான் கண்ணதாசனை உலுக்கிய வரிகள். நொறுக்குத்தீனி தின்றவர் அப்படியே அதன் சுவையில் சறுக்கி விழுந்தார். ஏன் இதை வளர்த்தெடுத்து காய்களின் ஊர்வலம் ஆக்கக்கூடாது என்று தன் கற்பனை சிட்டைப் பறக்கவிட்டார். ஒருமுறை வைரமுத்து நான்கு வரிகளாய் இக்கவிதையைச் சொன்ன ஞாபகம். இந்தக் கவிதை முழுவதும் கிடைத்தால் நான் பாக்கியசாலியாவேன். அறிந்தோர் எனக்கு அறிவிக்க அன்புடன் பணிகிறேன்.

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்கிறான் தலைவன் தலைவியைப் பார்த்து. அட என்னங்க தன் காதலியைப் பார்த்து இப்படியா மிளகாய் சுரைக்காய் என்று திட்டுவது? பிறகு காதல் எங்கே மலரும் சண்டை முள்தான் மண்டும் அல்லவா? மிளகாய் என்று அவள் குணத்தையும் சுரைக்காய் என்று அவள் உருவத்தையும் கேலிசெய்வதாகவல்லவா இருக்கிறது இந்த வரி என்று நீங்கள் கவலைப்படவேண்டாம். காதலி அந்தக்காலத்தவள் தமிழ் அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். இந்தச் சிலேடையெல்லாம் அவளுக்கு பிசுகோத்து.

இந்தக்காலப் பெண்போல் ஆங்கில மீடியத்தில் படித்தவளா அவள்? மிகுந்த உணர்ச்சியில் பொங்கித் ததும்பி தன் காதலைச் சொல்லும்போதுகூட ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் சொல்லும் இன்றைய தூய தமிழ்ப் பெண்ணா அவள்? வள்ளுவன் கம்பன் இளங்கோ போன்றோருக்கும் முந்தைய கவிஞர்களும் நக்கீரன் ஒட்டக்கூத்தன் போன்றோருக்கும் முந்தைய விமரிசகர்களும் உருவாக்கிய பழந்தமிழ் மாதாயிற்றே அவள்?

உள்ளமெலாம் மிளகாயோ என்பதை உள்ளம் எல்லாம் இளகாயோ என்று சரியாகவே அவள் புரிந்துகொள்வாள். அதே போல ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்பதை ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்றும் புரிந்துகொள்வாள். தலைவன் அவள் புரிந்துகொள்வாள் என்ற தைரியத்தில்தான் உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொருபேச் சுரைக்காயோ என்று பயமின்றி சொல்கிறான். ஒருக்கால் புரியாமல் அவள் நின்றால் அதன் வழியே ஊடல் வரும் அதன்பின் காதல் வரும் அது சொர்க்கம் தரும் என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்.

அதைத்தொடர்ந்து தலைவன் சொல்கிறான் வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரிக்காயோ? இதுவரை வானத்து வெண்ணிலவையே காய் காய் என்று கதறிக்கொண்டிருந்துவிட்டு. நீதான் என் வெண்ணிலா என்று தலைவியின் தலையில் ‘ஐஸ்’ வைக்கிறான் தலைவன். வெள்ளரிக்காய் பிளந்து பார்த்திருக்கிறீர்களா? வேறு எந்தக்காயைப் பிளந்தாலும் அத்தனை அழகான சிரிப்பை நீங்கள் தரிசிக்கவே முடியாது. வெள்ளரிக்காய் பிளந்ததைப்போல் வெண்ணிலவாகிய நீ சிரிக்கமாட்டாயா என்று காதலன் தலைவியிடம் ஒப்புதல் கேட்கிறான். இபோது வெண்ணிலா தன் அருகிருக்கும் தலைவியாகிவிடுகிறாள். ஆண்கள் வசதிக்கேற்ப வர்ணனைகளை மாற்றிக்கொள்வார்க்ள்தானே?

பொம்பள சிரிச்சாப்போச்சு என்பார்களே என்ன பொருள், அவள் சம்மதம் தந்துவிட்டாள் என்று பொருள். பிறகென்ன இவர் கைவரிசையைக் காட்டிவிடுவாரல்லவா? அதுதான் நோக்கம்.

26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்

இவ்விரு வரிகளில் கண்ணதாசன் என்ற வினோத கவிதை மரம் நான்கு காய்களை உலுக்கிக்கொடுத்துவிட்டது. அத்தோடு நிற்கவில்லை இறுதியாய் மேலும் இரு காய்களைத்தர நாளை வருகிறது என் இடுகையில் வழியே!

கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா


அத்திக்காய் காய் காய் பாட்டின் கடைசி இரு வரிகளுக்கு வந்துவிட்டோம். இந்த இருவரிகளில் கண்ணதாசன் விருந்து வைப்பது இரு காய்களை. அதில் முதலாவது.

கொற்றவரைக்காய். கொத்தவரங்காய் என்று காய்கறிக்கடையில் கூடையில் குவித்துவைத்திருப்பார்களே அதுதான். பச்சைக் கொலுசுகளாய் அவை பளபளக்கும். கொற்றவரைக்காய் என்றால் கண்ணதாசன் முன்வைக்கும் பொருள் என்ன?

கொற்றவன் பெற்ற குலக்கொடியைக்
கல்விகற்க விட்டேனடா அடா
குற்றம் புரிந்தனையா இல்லையா
அதை மட்டும் உரைத்துவிடு


கொற்றவன் என்ற சொல் கேட்டதுமே என் மூளைக்குள் ஓடிவரும் ஞாபகம் இந்த வரிகள்தாம். இது பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன். அம்பிகாபதி அமராவதி காதல் நாடகத்தில் வரும் ஒரு பகுதி. குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதிக்குத் தமிழ் சொல்லித்தர வந்த அம்பிகாபதி அவளைக் காதலிக்கிறான். அதை அறிந்த மன்னனின் விசாரனைக் கூடம் எழுப்பும் கேள்வியே இது.

கொற்றவன் என்றால் அரசன். கொற்றவரைக் காய் என்றால் என் மன்னனைக் காய். பழந்தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவனை தன் அரசன் என்றே காண்பார்கள். என் ராசா என்று செல்லமாய்க் கொஞ்சுவார்களே அது இதன் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தக் காலப்பெண்போல கணவனைக் கடன்காரணாய்க் காண்பதில்லை :)

தலைவி சொல்கிறாள், நிலவே நீ என் தலைவனைக் காய். அவன் காதல் அதனால் பெருகட்டும். எங்கள் வாழ்வு இனிக்கட்டும். என் தலைவன் பொய்யுரைப்பதுபோல் நானொன்றும் காதல் உணர்வுகள் இல்லாமல் இல்லை. எனவே கோதை என்னைக் காயாதே. கோதை என்றால் பெண். இந்தக் கோதை காதல் வாதையில்தான் நாளெல்லாம் இருக்கிறாள். எனவே என் கொற்றவரைத்தான் நீ காயவேண்டும் என்கிறாள்.

தலைவனின் முகம் பொய்க்கோபத்தால் வாடுகிறது. இந்த ஊடலுக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் மனதைத் திருப்பிக்கொள்ளா கள்ளத்தனத்துடன்.

உடனே தலைவி அவன் தோள்களில் விழுகிறாள். இந்தப் பெண்களே ஒரு சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கும் புத்திசாலிகள்தானே? அப்படியே கழுத்தை வளைக்கிறாள். மனமும் விழிகளும் கனிந்துருக வெண்ணிலவைப் பார்க்கிறாள். வெண்ணிலவே நீ எங்கள் இருவரையும் காயாதே என்று செல்லமாகச் சொல்லிச் சிணுங்குகிறாள்.

அத்தோடு அவள் நிற்கவில்லை அவள் காதல் உள்ளம் காதலை அடைந்த பூரிப்பில் இந்தக் காதலுக்குக் காரணமான நிலவைப்பார்த்து பரிதாபப்பட்டு, இப்படி தினம் தினம் தனிமையில் வந்து வானில் காய்கிறாயே பாவம் இப்படி நீ இனி தனிமையில் ஏங்காதே வெண்ணிலவே. உன் காதலன் ஆதவன் மடிசென்று சேரு என்று வெண்ணிலவுக்குப் பரிந்துரைக்கிறாள்.

இத்தோடு பாடல் முடிகிறது ஆனால் அது நம் இதயத்தில் என்றென்றும் தொடர்கிறது. காலத்தால் அழியாத இந்த கண்ணதாசப் பாடலுக்கு முடிவேது? காய் காய் என்று கவிதையாய்க் கனிந்தவன் நம் எல்லோரையும் கனியவைக்கிறான் அவன் மறைந்தபின்னும். கவிஞனுக்கு மறைவு உண்டா? இல்லவே இல்லை. கண்ணதாசன் வாழ்கிறான்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வாழ்கிறான். நம் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் வாழ்கின்றான். காதல் என்ற சொல்லுக்கு கண்ணதாசன் என்று ஓர் அர்த்தம் உண்டென்று அகராதிகளைப் புதுப்பிக்க வேண்டும். இதோ அவன் கொட்டிக்குவித்த முப்பத்தியோரு காய்கள்.

01. அத்திக்காய்
02. ஆலங்காய்
03. இத்திக்காய்
04. கன்னிக்காய்
05. ஆசைக்காய்
06. பாவைக்காய்
07. அங்கேகாய்
08. அவரைக்காய்
09. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
18. உருவங்காய்
19. பருவங்காய்
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
26. மிளகாய்
27. சுரைக்காய்
28. வெள்ளரிக்காய்
29. சிரிக்காய்
30. கொற்றவரைக்காய்
31. தனிமையிலேங்காய்

இனி அவன் புகழ்பாட அவனை ஒட்டிப்பாட நான் எழுதிய மேலும் சில காய்கள் வருகின்றன கீழே:


கவிதைக்காய் சிலேடைக்காய்
கண்ணதாசன் கொய்யாக்காய்
வேலங்காய் விழியிங்காய் 

தேடித் தோற்றேன் வெண்ணிலவே

நெஞ்சுருகாய் நினைத் தேங்காய் 

காலம் தந்த பிரிவுக்காய்
வெஞ்சருகாய் காய்க்காமல் 

வருவேன் நிலவே உன்னருகாய்

கள்ளிக்காய் கனவுக்காய் 

ஆசைகள் நெஞ்சில் சுண்டக்காய்
காதல்காய் வாழ்வல்லவோ 

கத்தரிக்காய் வெண்ணிலவே

கவிஞர் புகாரி



கண்ணதாசன் பாடல்கள் - எந்த ஊர் என்றவனே



கண்ணதாசனின் திரையிசைப்பாடல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. அவர் எழுதிய சிலேடைப் பாடல்கள் பல. அதில் ஒன்றுதான் இந்த எந்த ஊர் என்றவனே என்ற பாடல். தமிழ்நாட்டையே தன் பாடல்களால் உண்டு இல்லை என்று ஆக்கியவர் கண்ணதாசன். இவர் பாடலைக் கேட்டுவிட்டு காதலென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இதுதான் உறவு இதுதான் வாழ்க்கை என்று உறுதி செய்துகொண்டார்கள். நிலையாமையின் தத்துவத்தில் நிலைபெற்றனர்.

இலக்கியத்தை அப்படியே ஒரு சொட்டும் சிந்தாமல் ரசித்துப் பருகி அதை சொற்பத் தமிழறிவே உள்ள சாதாரண தமிழர்களுக்கும் சுவையோடு பரிமாறுவதில் கண்ணதாசனுக்கு நிகர் இன்னொருவர் உண்டு. ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆம் அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் முத்தையா. சிறுகூடல் பட்டியில் பிறந்தவர். அதிகம் பள்ளிப்படிப்பு இல்லாதவர். ஆனால் வாழ்க்கையின் சாரத்தை துளித் துளியாய் அனுபவித்தவர்.

அவரின் பொழுதுபோக்கு மதுவா மாதுவா என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் இரு பக்கப் பேச்சாளர்களும் நிச்சயம் வெல்வர். முத்தையா விட்டு வைக்காதது எதுவுமில்லை. மது மாது மட்டுமல்ல போதைமருந்து பழக்கமும் உண்டு அவருக்கு. சூதாட்டம் அரசியல் கடவுளே இல்லை என்று பகுத்தறிவில் சிலநாள் பின் நெகிழ்ந்த ஆன்மீக மதப்பற்று என்று வாழ்வின் பின்நாள் என்று அனைத்தினுள்ளும் தன்னைக் கரைத்தார். அனுபவிக்க அனுபவிக்க அவர் ஞானியானார். ஞானியாக ஞானியாக தத்துவக் கவிதைகளும் தரமான பாடல்களுமாக எழுதிக் குவித்தார். சித்தரானார்.

அழுவதில் ஆனந்தம் கண்டவர் முத்தையா. நாளெல்லாம் அழுதார். அழுது அழுது இந்த உலகம் மனிதர்களுக்கு ஏன் சொர்க்கமாக மட்டுமே இல்லை என்று கோபம் கொண்டார். தன் வாழ்க்கை மண்ணில் காணும் சொர்க்கத்தை நோக்கியதாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதையெல்லாம் தனக்காகச் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்தார். ஆனால் அவர் யாருக்கும் ஒரு தீங்கும் விளைவித்ததே இல்லை. எல்லோர் மனங்களிலும் அன்போடும் மதிப்போடும் வாழ்ந்தார்.

தன் தவறுகளை தவறுகள் என்று தைரியமாக ஒப்புக்கொண்டு உலகுக்கே சொன்ன ஒரே கவிஞர் முத்தையா மட்டும்தான். வாழ்வின் தத்துவங்களை மிக எளிமையாக எழுதும்போது முத்தையாவைப்போல் மிக மிக உயரத்தில் நின்ற இன்னொரு கவிஞன் கிடையவே கிடையாது. அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல கண்ணதாசனேதான். ஆமாம் கண்ணதாசனின் இயற்பெயர்தான் முத்தையா.

சுமார் எட்டுப் பத்திரிகைகள் நடத்தி தமிழர்களோடு இலக்கியம் பேசியவர். அவர் பிறந்ததென்னவோ இந்துமதம்தான். ஆனால் எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்த நவீன சித்தர் அவர். ஏசு காவியம் பாடினார். இஸ்லாமிய கீதம் இசைத்தார். புத்தனைப் புகழ்ந்தார். அவர் எந்த நல்லதையும் போற்றாமல் விட்டதில்லை.

சாகித்ய அகாதமி அவரைத் தேடிவந்து கௌரவித்ததில் ஏதும் ஆச்சரியம் இருக்கமுடியுமா சொல்லுங்கள். அத்திக்காய் காய் காய், பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன் உனைத்தேன் என நான் நினைத்தேன் என்பதுபோல கண்ணதாசன் எழுதிய இலக்கியத் தரம் மிக்க சிலேடைப் பாடல்கள் அதிகம். அதில் ஊர் ஊர் என்று வர்ணித்தே அவர் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாடலாய்த் தந்தது அற்புதம்.

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!


இதுதான் முழுப்பாடலும் இனி ஒவ்வொரு வரியாகப் பார்ப்போம்.

*

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா


அது ஓர் அழகான கிராமத்தின் மரங்கள் வரவேற்கும் வீதி. நம் கதாநாயகன் இளமை அழகு நிரம்பித் ததும்பி வழியும் ஒரு வாலிபன். துக்கத்தைத் தன் முகத்தில் மேட்டூர் அணை வெள்ளமாய்த் தேக்கிவைத்து மனம்போன போக்கில் வெறுமையின் தாலாட்டுக்கு ஏற்ப மெல்ல நடந்துவருகிறான்.

அவன் யாரென்று அறியாத அந்த ஊர்வாசி ஒருவன் அவனிடம் விசாரிக்கிறான். இன்றைய நகரம் போலல்ல அன்றைய கிராம வாழ்க்கை. ஓர் ஊரில் ஒருவன் புதியதாய் வந்தால் அந்த ஊர் சிறுவர்களுக்கும் தெரிந்துவிடும் இவன் புதியவனென்று. தம்பி நீ எந்த ஊருப்பா என்று சட்டென்று வினவும் வெகுளித்தனமும் கொண்டவர்கள் அவர்கள். சில நேரம் அதில் விவகாரமும் இருக்கும். அது அந்தக் கிராமத்துக்கான பாதுகாப்பு.

அந்தக் கேள்விக்குப் பதிலாக, நம் கதாநாயகன் சொல்கிறான் இப்படி. என்னை எந்த ஊர் என்றவனே, நான் இருந்த ஊரைச் சொல்லவா? நான் இருந்த ஊர் எது? என் தாயின் கருவறை. ஆம் நான் முதன் முதலில் இந்த உலகில் வந்து இருந்த ஊர் என் தாயின் கருவறைதான். அங்கேதான் நான் பத்துமாதங்கள் வளர்ந்தேன் வாழ்ந்தேன். அதற்கு வாடகை நான் தரவில்லை. என்றால் அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரா?

அது என் சொந்தம் சொந்தம் என்றுதான் பிதற்றுகிறேன் என்றாலும் அந்த ஊரில் அதன் பின் வந்து குடியேறியவர்கள் இருக்கிறார்கள். பின் அவர்களுக்கும் அது சொந்தமாகி விடவில்லை. அந்த ஊர் எப்படி சொந்த ஊர் ஆகும்? நான் அங்கே வாடகை தராமல் குடிஇருந்தேன் அவ்வளவுதான். அதுதான் உண்மை. ஆனால் அந்த ஊரை நீயும் அறிவாய். ஏனெனில் நீகூட அந்த ஊரில்தானே பத்துமாதம் தங்கி இருந்தாய் என்கிறான்.

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?

*


உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

அடடா இங்கே கண்ணதாசன் தன் பாடலை அறிவியல் தளத்துக்கு அப்படியே எடுத்துச் செல்கிறார் பாருங்கள். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்கிறான் அந்தப் புதியவன். உடலூரில் வாழ்ந்திருந்தேன் என்றால் என்ன பொருள்? ஆணிடம் விந்தாகவும் பெண்ணிடம் கருமுட்டையாகவும் நான் ஆரம்பத்தில் வாழ்ந்திருந்தேன் என்கிறான்.

அதோடு நின்றானா? உறவூரில் மிதந்திருந்தேன் என்கிறான் அடுத்த வரியில். இங்கேதான் காதல் வந்து தன் விளையாட்டின் முக்கியமான காரியத்தைச் செய்கிறது. ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் தனித்தனியாகத்தான் இருந்தேன், ஆனால் காதல் என்ற உறவினால் நான் மிதக்கத் தொடங்கினேன். அப்படியே மிதந்து மிதந்து கருவூரில் குடி புகுந்தேன் என்கிறான். அதாவது தாயின் கருவறையில் நான் கருவாக உருவாகிவிட்டேன் என்கிறான். ஊர் என்ற சொல்லை வைத்து கண்ணதாசன் ஆடும் இந்த விளையாட்டு

சுவாரசியமானதல்லவா?

சரி உடல் என்ற ஊரிலிருந்து புறப்பட்டு உறவு என்ற ஊரில் மிதந்து கரு என்ற ஊரும் வந்தாகிவிட்டது. இனி அடுத்தது எந்த ஊர்? கருவூரிலிருந்து மண்ணூரில் விழுந்துவிட்டேன் என்கிறான் அந்த வாலிபன். கரு என்பது பத்துமாதம் வளர்ந்து பின் இந்த மண்ணில் அதாவது இந்த உலகில் வந்து குழந்தையாய்ப்

பிறந்துவிடுகிறதல்லவா. அதைத்தான் சொல்கிறான் அவன். எத்தனை இலக்கிய முத்துக்கள் இந்த கண்ணதாசன் சிலேடைப் பாடல்களில்?

ஓ அப்படியா மிகுந்த சுவாரசியமாய் இருக்கிறதே உன் கதை. சபாஷ்! சரி சரி மீதக் கதையையும் சொல். இன்னும் எத்தனை ஊர்களில் சுற்றித் திருந்தாய் என்கிறான் அந்த ஊர்க்காரன் கதை கேட்கும் ஆவலில்.

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்!

வயிற்றுக்குள் வைத்துக் கனவுக்குள் மிதந்தவள் பிள்ளையாய்ப் பெற்றெடுத்ததும் என் தாய் என்னைக் கண்ணுக்குக் கண்ணாக வைத்திருந்தாள் என்பதை எப்படி அழகாகச் சொல்கிறான் அவன். கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் - தன் தாயின் கண்ணுக்குள்ளேயே மணியைப்போல அவன் தவழ்ந்த நாட்களைவிட இனிமையான நாட்கள் வேறேதும் இருக்க முடியுமா?

அந்தத் தாயின் கையணைவில் அவன் வளர்கிறான். கையூரில் வளர்ந்திருந்தேன். மக்களே இது மீளாது மக்களே. இந்த உலக வாழ்வின் உண்மையான இன்பம் இதுதான். ஒரு தாயின் கைகளுக்குள் இருந்து அவளையே உலகமாய்க் கொண்டு வளர்வது. அவள் கீழே இறக்கிவிட்டதும் நம் இன்பங்களெல்லாம் எங்கோ ஓடிவிடுகின்றன. கங்காரு பை இருப்பதால் தன் குட்டியைச் சுமக்கிறது. ஆனால் நம் தமிழ்ப்பெண்கள் கை விட்டுக் கீழே இறக்கிவிடும் மனம் இல்லாமல் பாசத்தோடு கொஞ்சிக் கொஞ்சி சுமக்கிறார்கள்.

பிறகென்ன குழந்தை வளர்ந்து நடக்கத் தொடங்குகிறது. காலூரில் நடந்து வந்தேன் என்கிறான் இதை. அதாவது வெறுமனே காற்றை உதைத்துக்கொண்டிருந்த கால்கள் இப்போது நடக்கும் நிலைக்கு வளர்ந்து விடுகின்றன. அப்படியே நடந்து நடந்து வளர்ந்து வளர்ந்து காளையாக ஆகிவிடுகிறான். அதாவது வாலிபனாக ஆகிவிடுகிறான். அதைத்தான் கவிஞர் காளையூர் வந்துவிட்டேன் என்று இலக்கிய நயத்தோடும் ஊர் என்ற சிலேடையை விடாமலும் சொல்கிறார்.

ம்ம்ம்... சரி அப்புறம்?

*


வேலூரைப் பார்த்து விட்டேன்

விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!


வாலிபன் என்று ஆகிவிட்டால் நீங்கள் வலை விரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யாருக்கான வலை எப்படியான வலை என்பதெல்லாம் வலை விரித்தவர்களுக்கேகூட தெரிவதில்லை. ஊரெல்லாம் பெண்கள். பெண்கள் எல்லோரும் வெறும் கண்களோடு மட்டுமே அலைவதுபோல் தெரியும்.

கால்கள் எங்கே கைகள் எங்கே உடம்புதான் எங்கே என்று தெரியாது அவர்களுக்கு. வள்ளுவன் சொல்லும் உயிர் தின்னும் கண்கள் மட்டும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும். அதில் அகப்படாமல் தப்பிக்கும் வாலிபனுக்கு வாலிபன் என்று பெயரில்லை.

பெண்களைப் பூக்கள் என்பார்கள். ஆண்களைத்தான் வண்டுகள் என்பார்கள். ஆனால் இந்தக் கண்களைப் பார்த்தால் அந்த நியதி சற்றே மாறிப்போகும். கண்கள் இரண்டும் வண்டுகளாய் கனவுகளிலும் ரீங்கரித்துச் சுற்றிச் சுற்றி வரும். அவள் ஒருமுறைதான் பார்த்திருப்பாள் ஆனால் அது ஓராயிரம் முறை பார்த்ததைப்போல வாலிபன் கிறங்கிப்போவான். தூக்கம் கெட்டு பொடி விழுங்கிய ஓணானைப்போல ஆவான்.

பெண்ணின் ஒவ்வொரு கண்ணும் கூர்மையான வேலைப் போல் வந்து தாக்கும். வாலிபனின் சிந்தனையைத் தகர்க்கும். ஆமாம் வாலிபன் என்று ஆகிவிட்டாலே இந்தப் பெண்களிடமிருந்து தப்பிப்பது என்பது ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கிடமிருந்து தப்பிப்பதைவிட கடினமானது.

அவர்கள் வேல் பாய்ச்சும் விழிகளை எதிர்கொண்டே தீரவேண்டும். இப்ப்படியாய் பல வேல் பாய்ச்சும் விழியுடைய பெண்களைக் கண்டபின் ஒரு பெண்ணிடம் மட்டும் மனம் அப்படியே ஒட்டிக்கொண்டுவிடுவது ஆச்சரியம்தான். அதுதான் காதல்.

அந்தக் காதலில் அப்படியே தன்னை மறந்து கலந்துவிடுகிறான் அவன். அதைத்தான் வேலூரைப் பார்த்துவிட்டேன் விழியூரில் கலந்துவிட்டேன் என்கிறான். பல பெண்களின் வேல் விழிகளைக் கண்டு தித்திப்பாய்க் காயப்பட்டு திசைதெரியாமல் அலைந்தவன் ஒருத்தியின் விழியில் மட்டும் ஒன்றிக் கலந்துவிட்டானாம்.

வேலூரைப் பார்த்துவிட்டு காதல் கன்னியின் விழியூரில் கலந்து சிக்கிக்கொண்டவன் அடுத்த கட்டமாக, பருவத்தின் மேன்மையை உணர்கிறான். அது படுத்தும் பாட்டில் வாழ்வைக் காண்கிறான். அது பாலூறுவதாக இனிமையாக இருக்கிறது.

பருவங்களிலெல்லாம் தாண்டிவரமுடியாமல் நம்மைச் சிக்க வைக்கும் பருவம் வாலிபப்பருவம்தானே? அந்தப் பருவத்தில் பசியில்லை உறக்கமில்லை. ஆனால் அந்தப் பருவம்தான் மிகவும் பிடித்திருக்கிறது.

இருக்காதா பின்னே காதலி கிடைத்துவிட்டால் இந்த உலகில் வேறென்ன வேண்டும்? பால் மட்டுமா ஊறும் உயிரும் ஊர்ந்து வேறு உலகத்தில் சுற்றித் திருயுமே. அப்படிப் பாலூரும் பருவம் தன் தாய் மடியில் பெற்ற இன்பத்தை மீண்டும் தருவதாக அமைவதுபோல சுகமாக இருக்கும்.

அப்படியே அதில் குடிபுகுந்து நிரந்தரம் ஆகிவிடுகிறான் வாலிபன். அதைவிட்டு விலகவோ அதை வெறுக்கவோ அவனால் அதன்பின் எப்போதும் இயலுவதே இல்லை. அதுவே அவனின் நிரந்திரப் பட்டினமாய் ஆகிவிடுகிறது.

இங்கே கண்ணதாசன் ஏன் பட்டினம் என்கிறார் இந்தப் பருவத்தை என்று நாம் கவனிக்க வேண்டும். பட்டினம் என்பது கிராமத்துக்காரர்களின் கனவு. ஒரு வாழ்க்கைத் தரத்துக்கான மேன்மை நிலை. காதலி கிடைத்து அவளுடன் பருவத்தைப் பாலூறக் காண்பதைவிட மேன்மை வேறேது. உலகின் மிக உயர்ந்த நகரத்தில் குடிபுகுவதைப்போல வாலிபன் மகிழ்கிறான்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதுவரை கதாநாயகன் பல ஊர்களில் குடியிருந்தாலும் அதையெல்லாம் நிரந்தரம் என்று அவன் நினைக்கவில்லை சொல்லவில்லை. இந்தக் காதலியோடு காதலில் கவிழ்ந்து உலகையையே வெற்றிகண்ட இந்த ஊரைத்தான் நிரந்தரமாக தான் தங்கும் இடமாக கூறுகிறான் கதாநாயகன். அதனாலேயே அதைப் பட்டினம் என்கிறான்.

”ஓ... அப்புறம்... அப்புறம்.... சொல்லு... சொல்லு...” என்று அவசரப்படுத்துகிறான் அந்தக் கிராமத்தான் கதாநாயகனிடம்.


*

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடியேறி நிரந்தரம் என்று அந்த வாலிபன் நினைத்ததெல்லாம் சரிதான். ஆனால்... நிலைமை அப்படியே இருந்துவிடுவதில்லை

என்பதுதானே பலரும் கண்ட கசப்பான உண்மை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசனே அதற்கும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

இந்தப் பெண்களை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. காதல் கனியும்முன் சுத்திச்சுத்தி வந்துவிட்டு காதல் கனிந்தபின் சே... இவ்வளவுதானா என்பதுபோல

விலகிவிடுவார்களோ? அவர்களுக்கே வெளிச்சம். அந்த மர்மம் எவருக்கும் விளங்குவதில்லை. எவருக்கும் என்றால் ஆண்களுக்கு மட்டுமல்ல அந்தப் பெண்களுக்கே விளங்குவதில்லை. இது ஒரு வகையான வேடிக்கை இல்லையா?

தன் காதலூரை (காதல் ஊரை) சுற்றிக் காட்டி குடியமர்த்திக்கொண்ட காதலி சரி போதும் போதும் போய்த் தொலை என்று அவனை திக்குத் தெரியாத காட்டூரில் விட்டுவிட்டு

அவனை மறந்து போயே போய் விடுகிறாள். பாவம் வாலிபன். என்ன செய்வான்? எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று கண்ணீரோடு

பாடவேண்டியதுதான். வேறென்ன செய்யமுடியும்?

சுகமான பாலூறும் பட்டினத்திலிருந்து வேதனை முட்களே நிரம்பியிருக்கும் காட்டூரில் விடப்படுகிறான் பாடலின் கதாநாயகன். காட்டூர் என்றாலே அங்கே எந்த அமைதியோ நிம்மதியோ கிடையாது என்பதைச் சொல்லித் தெரியவேண்டிய அவசியமே இல்லை. அங்கே வீடில்லை உறவில்லை எந்த சுகமும் இல்லை எல்லாமே காணாமல் போன விச முட்களடர்ந்த கொடிய காடு அது.

காதல் தோல்வி தருகின்றன வலிக்கு நிகரான வலி இந்த உலகில் கிடையவே கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். அதனால்தான் பாலைத்திணையில் பாடல்கள் அதிகம். இன்றைய திரைப்படங்களிலும் தொட்டதெற்கெல்லாம் ”போகாதே போகாதே நீ இருந்தால் நானிருப்பேன் நீ பிரிந்தால் நான் இறப்பேன்” என்று அழுவாச்சி பாடல்களே அதிகம்.

கன்னியூரில் அதாவது அந்தக் கன்னிக்குள், கன்னியின் மனதுக்குள் அழகாகக் குடியேறி இருந்தான் வாலிபன். புதிதாய்ப் பிறந்தவனைப்போல அவன் ஆனான். ஆனால் அந்தக் கன்னியோ அவனை சுத்தமாய் மறந்தவுடன், மறந்து அவனை விட்டு மறைந்தவுடன் அவன் துக்கம், சோகம், கண்ணிர், அழுகை என்ற மாபெரும் உப்புக் கடலூரில் விழுந்துவிடுகிறான். அதாவது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகக் கொட்டிக் கொட்டி அப்படியே கடலாகி. அந்த கடலுக்குள் அவனே விழுந்துவிடுகிறான்.

அப்புறம்?

*


பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!


பிறகென்ன? காதல் தோல்வி என்ற ஒன்று போதாதா கனவுகளையே வாழ்க்கையாய்க் கொண்ட, எந்தக் கபடமும் அறியாத இளைஞனுக்கு. நொறுங்கிச் சிதறிவிடமாட்டானா

அவளையே பிரதிபளித்த அவனது கண்ணாடி இதயம் உடைந்து தூள் தூளாக.

வாழ்வே படு ஆழமான துக்கங்கள் மட்டுமே நிறைந்த பள்ளமாகிவிடுகிறது அவனுக்கு. அந்த அதலபாதாள பள்ளத்தில் இவனைத் தள்ளிவிட்டுவிட்டு கண்ணீர் கடலுக்குள் இவனை மூழ்கடித்துவிட்டுவிட்டு அவள் மட்டும் எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாமல் முன்பை விட மகிழ்ச்சியாய் உயர்ந்த இடத்தில் ஏறிக்கொண்டு வாழ்வைச் சுவைக்கிறாள் என்று புலம்புகின்றான்.

கொடும் துயரம் என்ற பள்ளத்தூரில் இவனைத் பரிதவிக்கவிட்டுவிட்டு உயர் வாழ்வு என்ற மேட்டூரின் கீழே கூட இல்லை மேலேறி (மேலே ஏறி) நின்று கொள்கிறாள் அவள்.

காதல் தோல்வி என்பது பெண்ணுக்கு மட்டும் கிடையாதோ என்று அவன் கலங்குகிறான் துடிக்கிறான் துவள்கிறான். காதல் என்பது ஆணின் ஆயுளை அழிக்கும்

எமனாகத்தான் இருக்கிறது என்று் உறுதியாக நம்புகின்றான்.

இவன் வாழ்வை அழித்துவிட்டு அவள் மட்டும் எந்த மனத்துயரும் இல்லாமல் புதிய வாழ்வைத் தேடிக்கொண்டு மேட்டீரின் மேலேறி நின்று கொண்டால் இவன் என்னதான்

செய்வான்? அவள் இவனை மறந்ததுபோலவே இவன் அவளை மறந்து விலகி புதிய வாழ்வைத் தேடுவதுதானே சரி. பாடலின் நாயகன் என்ன செய்யப் போகிறான்?

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா!


அவள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் என் காதல் புனிதமானது. இந்த உலக வாழ்க்கை என்பது துக்கங்களே நிறம்பிய கீழ்மையானதுதான். அதில் உயர்வானதே

காதல் என்ற புனிதம் ஒன்றுமட்டும்தான்.

இந்தக் கீழூரில் வாழ்வதற்கு கிளியைப் போல மொழி பேசும் என் காதலி இல்லை. அவள் இல்லாமல் எனக்கு எதுவுமே இல்லை. எனவே நான் என் மரணத்திற்காகக்

காத்திருக்கிறேன். மரணம் என்ற அந்த மேலூருக்குப் போவதற்கு இன்னும் எனக்கு வேளை வரவில்லையே என்றுதான் நான் இப்படி ஊர் ஊராய்

அலைந்துகொண்டிருக்கிறேன். அங்கே போய்ச் சேரத்தான் நடந்துகொண்டே இருக்கிறேன் என்று தன் கதையை முடிக்கிறான் காதலிலே தோல்வியுற்ற அந்த வாலியன்.

இந்தச் சூழலை எத்தனை அற்புதமாய் தன் சிலேடைப் பாடல் மூலம் பாடுகிறார் கண்ணதாசன் பார்த்தீர்களா? ஆச்சரியமாய் இல்லை? எங்கே எல்லோரும் கண்ணதாசனுக்கு ஒரு பாராட்டு மடல் எழுதுங்கள் பார்க்கலாம்.

- கவிஞர் புகாரி