பூமியின்
விடியலுக்கு
கிழக்கு மட்டுமே போதும்

லஞ்ச ஊழல் ஒழிக்கவோ
அத்தனை திசைகளும்
ஒன்றாய்க் சேர்ந்து
விடிந்திடல் வேண்டும்

லஞ்சம்
கொடுப்பதும் குற்றம்
பெறுவதும் குற்றம்

கொடுத்ததைக் கண்டதும்
கொதித்தெழவேண்டும்

பெற்றதைக் கண்டதும்
படைசூழவேண்டும்

திசைகளின்
கைகள் ஒவ்வொன்றிலும்
தீப்பந்தம் வேண்டும்

விடியல்
நம் உலகில்
உருவாகியே தீரவேண்டும்

அதிகாரிங்களுக்கும்
அரசியல்வாதிங்களுக்கும்
கெடைச்சாச்சு

காவல்காரங்களுக்கும்
கலப்படக்காரங்களுக்கும்
கெடைச்சாச்சு

பணக்காரங்களுக்கும்
பிச்சைக்காரங்களுக்கும்
கெடைச்சாச்சு

அட
எனக்கும் கெடைச்சாச்சு
உனக்கும் கெடைச்சாச்சு

இந்தியாவுக்குக் கிடைக்கலயாமே
இன்னுமே சுதந்திரம்?

வெள்ளையன் பட்டியிலேர்ந்து
மீட்டுக்கிட்டு வந்த குட்டியாட்டை
நம்ம வீட்டு பிரியாணிக்கின்னு
கட்டிவெச்சுட்டமாமில்ல

நீயே சொல்லு...

நூறு ரூவா லஞ்சம் கொடுத்து
குறுக்கு வழியில சாதிக்கும்போது
செல்லாத ஒத்தைச் காசா
இந்தியாவை ஆக்கிடறோம்னு
நமக்குத் தெரியாதா

சிறு லஞ்சம்
பெரு ஊழல்

இந்தியாவுக்குச்
சுதந்திரம் எப்போ?

நிழலைத் தேடியே
ஓடிடும் ஓட்டம்
இருளில் நின்று
தேம்பித்தான் விம்மும்

கனவின் கால்களில்
கட்டுகள் ஏது

நினைவின் முதுகில்
பாரங்கள் ஏது

நிஜத்தை நினைத்தால்
நிம்மதி இருப்பதில்லை

விலகிப் போய்விட
விருப்பம் வருவதில்லை

மறந்த திசைகளில்
பயணங்கள் தொடங்கு

விரிந்து வரவேற்கும்
வெளிச்சத்தின் கீற்று
முடிவிலா உப்பு மழையை
விழிகளில் பொழிந்து
அதனுள் தானே விழுந்து
துகள்துகளாய்க் கரையும் உயிர்களே
உங்களுக்கெல்லாம்
ஓர் நற்செய்தி

கவ்விய மையிருட்டின்
மயானக் கொடுமைகளில்
வெடித்துத் துடித்தாலும்
முழுதும் உதிர்ந்துவிடாமல்
இறுதிச் சொட்டு உயிரை
நடுங்கும் கரங்களில்
பத்திரப்படுத்திக் காத்திருக்கும்
கொடுந்துயர் இதயங்களுக்கு
உண்டு உண்டு
ஒரு பெரும் பிரகாச வெளிச்சம்

உனக்கே உனக்கான
அந்தச் சொர்க்கத்திற்காக
உன் கடைசி நரகத்திலும்
நம்பிக்கை புதையாமல்
பிரியும் உயிர்பற்றிப் பிடித்துக்
காத்திரு
அன்பு உயிரே
அன்பிலெல்லாம்
உயர்வான அன்பென்பது
யாதெனிலோ
அது
நிராகரிக்கப்படுவோர் மீது
காட்டும்
பரிசுத்தமான
அன்புதான்

எவருக்குமே விளங்காத
இதயங்களை நெருங்கி
உண்மை அன்பைப்
பொழியும்போது

எல்லோருக்கும்
புரிந்துபோனவர்களாய்
அவர்கள்
நிறம்மாறிவிடுகிறார்கள்

வாழ்வோம்
தீவிரவாதிகளையும்
அன்புக் காட்டியால்
திசைமாற்றி

சகிப்போம்
அறியாமைகளையும்
அன்புக் கரங்களால்
அள்ளியெடுத்து

இணைவோம்
பொருந்தாத இடங்களிலும்
அன்புப் பசை
ஒட்டி

இனிய
புதிய
வாழ்த்துக்கள்
என்னை ஏன் இப்படி
உடைந்தழிய வைக்கிறாய்?

காயங்களை
ஆற்றும் மயிலிறகு
காயம்பட்டே செத்துப்போவதா?

என் செவிக்குள்
உன் உதட்டுச் சிறகுகளை அசை
உன் துயரங்களிலிருந்து
பறந்து பறந்து வெளியேறுவாய்

அரவணைக்க வரும் உயிரை
நிராகரித்தல் தற்கொலை

உன் மன அமைதியாய்
என் பெயர் மாறினால்
என் உயிர் இருப்பின்
பொருள் விளங்கும் எனக்கு

கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள்
கட்டிவைத்திருக்கிறாயே

உனக்கே
நீ ஏன்
எதிரியானாய்

ஒரு கனவு விரிகிறது
என் மடியில் நீ
நான் பாடுகிறேன்

கங்கை
நீர் வீழ்ச்சியாய் விழுவதைப்போல்
என் கண்கள்

வார்த்தைகள் அழுகைக்குள்
அமிழ்ந்து அமிழ்ந்து
சிதைந்து போகாத அர்த்தங்களுடன்
வெளிவருகின்றன

அது எனக்கு
உயிர் வாழ்க்கை

உன்னால்மட்டுமே
அதைத் தரமுடியும்

வேறு எவர் தந்தாலும்
ஏற்றுக்கொள்ளும் உள்ளம்
இல்லை என்னிடம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
ஆதாமின் புத்திரர்கள்

ஓர்
உயர்ந்த இதயம்
சந்தர்ப்பங்களின்
சதியில்
தடுமாற்றம்
கண்டிருக்கலாம்

அதனால் மட்டுமே
அது
கெட்டுவிட்டது
என்றில்லை

அப்படித்தான்
உயர்வுகள் கெடுமென்றால்
உயர்வு என்ற ஒன்று
இல்லவே இல்லை

இதயநெறி

நீ
விழும்போது
மின்னல் கீற்றாய்
விரைந்து
உன்னைத் தாங்கும்
ஓர் இதயம்
முன்பே விழுந்து
பேரடி
வாங்கியதாய்த்தான்
இருக்கும்
உனதே உனது

எந்த விரல்கள்
உன் சந்தோச தீபங்களை
ஏற்றி வைக்கின்றனவோ
அதே விரல்களே
உன் சோக ஊற்றுகளையும்
தீண்டித்
திறந்துவிட்டு நிற்கும்

சந்தோசமோ சோகமோ
எதுவாயினும்
அதன் காரணியை
வெளி விரல்களில் இருந்து
கைப்பற்று
உன் சொந்த விரல்களுக்கு
இடம்மாற்று

மறுகணம்
நீ வாழும் வாழ்க்கை
உனது

உன்
இன்ப துன்பங்கள்
உனதே உனது



நானொரு கவிதை
நீயொரு கவிதை

ஒருவர் வரியிலே
ஒருவரடி

அறிமுகமாயிற்று...

ஒருவர் உயிரிலே
ஒருவரடி

சிலிர்த்தாகிவிட்டது...

ஒருவர் மெய்யிலே
ஒருவரடி

கலந்தாயிற்று...

ஒருவர் பொய்யிலே
ஒருவரடி

வாழத்தொடங்கியாயிற்று...

எங்கிருந்து வந்தாய்

உன் வேர்களில்
எப்படி வந்தது என் வாசம்

உன் வாசத்தில்
எப்படி பூக்கிறது என் காலம்

இன்றோடு எனக்கொரு
புது ஜென்மமா

நீயா...
நீயேதானா
அதைத் தரவந்த தேவதை

உன்னை
அணைக்கத் துடிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னை
முத்தமிட ஏங்குகிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னுள்
மூழ்கிப்போக கொதிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

ஏன்

நீ சொல்
என்னைத் தெரிந்த
கர்வம் உனக்கிருந்தால்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***

*பற்றுதான் வெறுப்பு*

ஆம்
ஒன்றின் மீதுள்ள
அதீத பற்றுதான்
மற்றதன் மீதான
அதீத வெறுப்பும்

என்றால்
பற்று
தவறானதா?

இல்லை
பற்று
தவறே இல்லை

பற்றுடை நெஞ்சு
சுருங்கியதாய் இருப்பின்
அதுவே தவறு

பற்றுடை நெஞ்சம்
ஒன்றையே
பற்றிக் கிடக்கட்டும்
தொற்றுநோய்
அப்பற்றிலில்லை

ஆனால்
இவ்வுலகும் தன்போல்
தனக்குப் பிடித்த
ஒவ்வொன்றையும் பற்றிக்கிடக்கும்
பற்றுக் கொடிகளால் ஆனதே
என்பதை
ஏற்கக்கூட வேண்டாம்
மறுக்காதிருந்தால் மட்டுமே
போதும்

வெறுப்புகள் வெளியேறும்
பூமிப்பூ புன்னகைக்கும்

சகிப்பின்மை
பூமிக்கான இருதய நோய்

அன்புடன் புகாரி
அறக் கண்ணாடியில்...

வஞ்சகர்களின்
தந்திரங்களில் ஏமாறும்போது
உங்களை நீங்களே
குறைவாக எண்ணிக்
குமையாதீர்கள்

அறக் கண்ணாடியில்
உங்கள்
அழகைப் பாருங்கள்
நீங்கள் நீங்களாக
நல்ல மனதோடு இருக்கிறீர்கள்

அதைப்
புலன்கள் ஐந்தும் குதூகலிக்கப்
பூதங்கள் ஐந்தோடும்
கூடிக் கொண்டாடுங்கள்

அப்போதுதான் உங்கள்
நல்ல மனம்
விரியத் தொடங்கும்
தந்திரக்காரர்களைத்
தடாலடியாய்த்
தோற்கடிப்பீர்கள்

இல்லையேல் உங்கள்
நல்ல மனம்
மெல்ல மெல்லச்
சுருங்கத் தொடங்கிவிடும்
நீங்களும் அந்த அற்ப அழுக்குப்
புழுக்களாகிவிடுவீர்கள்
உன்னையே உயிரென்று
நான்
ஏற்றிவைத்த பின்
உன்னை
எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
புல்லரிக்கவே செய்கிறது

...பைத்தியம்
...பிசாசு
...உசுரு
...லட்டு
...ராட்சசி
...டைனசர்
...செல்லக்குட்டி
...சாத்தான்

நீ பைத்தியம் என்றால்தான்
என் நோய் வைத்தியம் பெறும்

நீ பிசாசு என்றால்தான்
என் உயிர் உனதாகிப்போகும்

நீ உயிர் என்றால்தான்
தமிழ் எனக்குக் கவிதைகள் தரும்

நீ லட்டு என்றால்தான்
என் எறும்புகளெனைக் கொல்லாதுவிடும்

நீ ராட்சசி என்றால்தான்
என் காதல் சாந்தம் பெறும்

நீ டைனசர் என்றால்தான்
என்னைத் தேடித்தேடிக் கடிப்பாய்

நீ செல்லக்குட்டி என்றால்தான்
என் மடிவிட்டு இறங்கவே மாட்டாய்

நீ சாத்தான் என்றால்தான்
நான் உன் ஆப்பிள் உண்ணுவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *

எங்கே நீ என்று
என்னிடம் கேட்டால்
நான் எப்படிச் சொல்வேன்


நீ
கண்டுபிடித்தால்
ஒப்படைத்துவிட
ஓடோடி வந்துவிடாதே

ஏனெனில்
நீ
கண்டுபிடிக்கப்போவது 
என்னை அல்ல
உன்னை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விளையாடிச் செல்கிறது...

வசந்தங்கள் தேடும்
பார்வைகளோடும்

வாய்ப்புகளுக்கேங்கும்
தாகங்களோடும்

விழிகளில் நிறையும்
கனவுகளோடும்

விரல்களில் கனியும்
தவிப்புகளோடும்

உயிரூட்டித் தேற்றும்
தமிழோடும்

அத்தனைக்கும் மேலொரு
முத்தமாக
இந்நொடி நலம் கேட்கும்
மனம்பிடித்தக் கவிதையோடும்
விளையாடிச் செல்கிறது
வாழ்க்கை
இந்துக்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
இந்தியா என்றோ
அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
யூதம் என்றோ
தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
உலகம் என்றோ
முடிந்துபோயிருக்கும்

தீவிரவாதம்
லாபநோக்குடைய வியாபாரம்

வல்லரசுகள்
நல்ல வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச்
சந்தைக்குக் கொண்டுவராவிட்டால்
வல்லரசுகளின் பிழைப்பு
நாறிப்போகும்

தீவிரவாதத்தை
வல்லரசுகள் விரும்புவதைப் போல
உலக மக்கள் யாவரும்
விரும்பிவிட்டால்
ஜீவராசிகளே மண்ணில் இல்லாதொழியும்

தீவிரவாதம் வெறுக்கும்
மக்களைப் போற்றுவோம்

தீவிரவாதம் உருவாக்கும்
நச்சு வல்லரசுகளைத் தூற்றுவோம்
நீ ஒரு வானம் கொண்டுவந்தாய்
நான் ஒரு வானம் கொண்டுவந்தேன்

உன் நட்சத்திரங்களை
நீ என் வானில் இறைத்தாய்
என் நட்சத்திரங்களை
நான் உன் வானில் நிறைத்தேன்

இரண்டு வானங்களிலும்
நீயே ஒற்றை நிலவானாய்
உன்முக ஒளியெழிற்காகவே
நான் கதிர்வீசும் சூரியனானேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மூடப்பட்டுக் கிடக்கும் புத்தகங்கள்

படிப்பதற்காக வாங்கி வைத்த
புத்தகங்களின் அட்டைகளில்
ஏறி நின்று
விருப்பமும் நேரமும்
ஒன்றை ஒன்று
தேடிக்கொண்டிருக்கின்றன

நிரம்பி வழியும் சறுக்கல்களில்
ஓடிப் போகும் நேரத்தைத்
தப்பவிடும் விருப்பம்
எங்கே தொலைந்தாய் நேரமே
என்று சாடுகிறது

துளியும் வைத்துக்கொள்ளாமல்
வாரிக்கொடுக்கும் நேரம்
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
எங்கே தொலைந்தாய் விருப்பமே
என்று வழக்காடுகிறது

கத்தி கம்புகளோடும்
நித்திரை விழிப்புகளோடும்
மான அவமானங்களோடும்
அட்டைகளின் மேல்
யுத்தம் விருவிருப்படைகிறது

மூடப்பட்டுக்கிடக்கும்
புத்தங்களின் உள்ளே
தீர்வுகள் எழுதப்பட்டிருக்கலாம்

மயக்கமா தெளிவா

ஹதீதுகளில் மயங்குவதைவிட
குர்-ஆனில் தெளிவதே நலம்