05 இன்றைய பொழுதும் தீயில் விழுந்தது

நேற்று தபால்காரன், இன்று இணையம், கடிதம் ஏந்திவரும் பூசாரிகள். ஆனால், கடவுள் வரம் தந்திருக்கவேண்டுமே. வரம் தராதபோது வந்து விழுந்த கவிதையே இது.


கண்களில் தவிப்பும்
தவிப்பாய்த் தவிக்க
கைகளைக் கைகளே
சிவக்கப் பிசைய

தென்றலும் என்னிடம்
நெருப்பாய் வீச
திசைகள் எங்கிலும்
வெறுமை நிலவ

கண்களில் ஏறியே
அலையும் மனதில்
கன்றினைத் தேடும்
பசுக்கள் கதற

இன்றய பொழுதும்
தீயில் விழுந்தது
ஏந்திழைக் கடிதம்
வரவே இல்லை

என்நிலை உணர
ஏனிவள் மறந்தாள்
இனிய மனத்தை
எங்கே புதைத்தாள்

பின்னல் அவிழ்த்து
என்முகம் நனைத்து
பேசிப் பேசியே
உயிரை அணைத்து

என்னில் கலந்தவள்
எங்கு மறைந்தாள்
எழுதி உயிர்தர
எப்படி மறந்தாள்

சென்றுவா மூச்சே
என்நிலை சொல்லிவா
சிந்தை சிதறுமுன்
அஞ்சலைக் கொண்டுவா

No comments: