19 ஓ... பாரதத்தாயே

ஓ பாரதத்தாயே...

உன்
ஓட்டை வீட்டின் நடை பாதைகளில்
எலும்புக் குழந்தைகள்
விழிக் குருதியைக்
கன்னப் பாலைகளில் ஆவியாக்கி
மேகக் கன்னிகளைக்
கர்ப்பம் தரிக்கச் செய்ய வேண்டாம்

உன் பட்டினிக் காட்டினில்
பச்சிளங்கன்றுகள்
ஒட்டிய மார்களில்
இரத்தம் குடிக்க வேண்டாம்
உன்
இருண்ட வீதிகளில்
இராப்பிச்சைகள்
பகல் பிச்சைப் பாத்திரங்களில்
எச்சமிட வேண்டாம்

எச்சிலைத் தோப்புகளில்
வறண்ட நாக்குகளைத் தொங்கப் போட்ட
காய்ந்த நாய்கள்
உன் வாரிசுகளால்
பட்டினி போடப்பட வேண்டாம்.

உன் கண்ணகிகள்
வயிற்றடுப்புகளை அணைக்க
கற்புச் சிலம்புகளைக்
கோவலன்களிடமே
விற்பனைக்கு அனுப்ப வேண்டாம்

O

ஆம் தாயே.
இனியேனும்
உன்
செல்லக் குழந்தைகள்
இந்திய நரகத்தில்
வயிறின்றி பிறக்கட்டும்

இல்லையேல்
உன்
கர்ப்பக் கருவறைகள்
கால வரம்பின்றி
மூடிக் கிடக்கட்டும்.

No comments: