04 அந்நியம்

நண்பனே

நம் அறிமுகப் பூமரத்தின்
அடிநிழல் விரிப்பில்

நீ
என்னைத் தூரவைத்தே
மிக நெருக்க பாவனையில்
கலந்தாய்

ஏனெனில்
நம் நட்புமலர் பூக்க
சந்தர்ப்ப சுப நிமிஷங்களுக்காய்
நீ
தவமிருந்தவனல்லவாநான் உன்
மனப் புத்தகத்தைப்
புரட்டுகிறேன் என்பதற்காக
நீயதில்
சில பக்கங்களை
அவசர அவசரமாய் மறைத்துக் கொண்டு
இல்லாத பக்கங்களை
இருப்பதாய் காட்டிக்கொண்டாய்

என் எண்ணத்தராசில்
உன் கனம்
கூடியிருக்க வேண்டுமே
என்ற மனக்கவலை உனக்கு

இன்றோ
நான் நிஜமென்று நெருங்கிவந்த
உன் சிருஷ்டி நாயகன்
தன் அரிதாரத்தைக்
கலைத்துப் போட்டுவிட்டான்

ஏனெனில்
என் எதிர்பார்ப்புக் குருவிகள்
உன் பொய்ரூப நார்களிலேயே
கூடுகட்ட வந்தன

கானலில் வீசிய மீன் வலைக்கு
என்ன கிடைக்கும்

நண்பனே
இன்னமும் நீ எனக்கு
அந்நியப்பட்டே நிற்கிறாய்.

No comments: