கணினிக்குள் கனிந்துருகும்
கண்ணறியாப் பொன்நிலா
அவள் என்நிலா

அன்பு கொய்து கனவு நெய்யும்
உறவு நெஞ்சப் பொய்கை
அவள் என் நம்பிக்கை

முகம்காணும் ஏக்கம்
நெஞ்சக் கூட்டில்
ஆயிரம் பெண்டுலம்
அதை
அழகாய் மறைக்கும்
வண்டுளம்

உனக்காகப்
பின்னப்படும் சொல்லாரங்களை
ஏதுமறியாதவளைப் போல
யாருக்கென்று கேட்பது
சொல்லவொண்ணாச்
செல்லக் குறும்பு செல்லம்

வாழ்க நீ
பஞ்சுப்பொதி நெஞ்சே

என் தனிமைக்குள்
ஏற்றிவைத்த உன் தீபங்களில்
என் விழிகள் மலர்கின்றன
விழாக்கோலம் பூண்டு

நன்றிகளின் ஊர்வலத்தை
உன் நாடுவரச் செய்கிறேன்
கடவுச்சீட்டு கேளாமல்
கதவு திறந்து நில்

ஏதோ ஒரு புள்ளியில்
எதிர்பாரா தருணத்தில்
இதய விரல்கள் கவ்வி
புல்லரித்துகொள்வதை...
தடைகளேதுமின்றி
அனுபவிக்கும் அனுபவிப்புக்கு
ஒரு பெயர் சூட்ட வேண்டுமென்றால்
என்னவென்று சூட்டுவது?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

No comments: