***

*பற்றுதான் வெறுப்பு*

ஆம்
ஒன்றின் மீதுள்ள
அதீத பற்றுதான்
மற்றதன் மீதான
அதீத வெறுப்பும்

என்றால்
பற்று
தவறானதா?

இல்லை
பற்று
தவறே இல்லை

பற்றுடை நெஞ்சு
சுருங்கியதாய் இருப்பின்
அதுவே தவறு

பற்றுடை நெஞ்சம்
ஒன்றையே
பற்றிக் கிடக்கட்டும்
தொற்றுநோய்
அப்பற்றிலில்லை

ஆனால்
இவ்வுலகும் தன்போல்
தனக்குப் பிடித்த
ஒவ்வொன்றையும் பற்றிக்கிடக்கும்
பற்றுக் கொடிகளால் ஆனதே
என்பதை
ஏற்கக்கூட வேண்டாம்
மறுக்காதிருந்தால் மட்டுமே
போதும்

வெறுப்புகள் வெளியேறும்
பூமிப்பூ புன்னகைக்கும்

சகிப்பின்மை
பூமிக்கான இருதய நோய்

அன்புடன் புகாரி

No comments: