தமிழ்ப் புத்தாண்டு
தையிலாம்

புது வருஷமோ
சித்திரையிலாம்

நலமும்
ஷேமமும் பெற்று
வளமும்
சுபிட்சமும் பெற

நான்
எதை
எப்போது
கொண்டாட வேண்டும்

இப்படிக்கு
அன்புடன் தமிழன்
உன்னிடம்
ஆரியம் வெல்லும்
ஆங்கிலம் வெல்லும்
ஆனால்...
தமிழ் வெல்ல
வழியில்லை என்றால்
நீ தமிழன்தானா?

உன்னிடம்
மதம் வெல்லும்
வயிறு வெல்லும்
ஆனால்...
தாய் வெல்ல
வழியில்லை என்றால்
நீ மனிதன்தானா?

என்
பணி முடியும்முன்
நீ கல்
நான் சிற்பி

என்
பணி முடிந்தபின்
நீ கடவுள்
நான் தீண்டத்தகாதவன்

மகாவீரர் அகிம்சையே
உலக மொழியாதல் வேண்டும்

அன்னை தெரிசா அன்பே
உலகக் கலாச்சாரமாதல் வேண்டும்

வன்முறையற்ற மனிதமே
உலகம் என்றாக வேண்டும்

மனிதா
உன் வாழ்வில்
இவை நோக்கிய உன் ஓரடியும்
சொர்க்கத்தின் கதவுகளைத்
தட்டாமல் திறக்கும்

வன்முறை அறுப்போம்

நெஞ்சுக்கே திரும்பும்
கூர்முனைக் கத்தி

கண்ணுக்குக் கண்கேட்கும்
குருட்டுக் கோடரி

ரத்தம் குடிக்கத் துடிக்கும்
போதை ராட்சசன்

தலைமுறை அழிந்தாலும்
அழியாப் பிணந்தின்னி

வன்முறை வெறுப்போம்
நாம் வாழ

வன்முறை துறப்போம்
நம் குடும்பம் வாழ

வன்முறை மறுப்போம்
நம் ஊர் வாழ

வன்முறை அறுப்போம்
நம் உலகம் வாழ

குடி
குடியைக் கெடுக்கும்

குடிக்காவிட்டால்
குடியரசு
தடியால் அடிக்கும்

ஊற்றித் தந்து
ஊட்டம் பெறுகிறது
தமிழரசு

குடித்துவிட்டு
மாய்ந்து மடிகிறது
தமிழினம்

தமிழ்நாடு
தனிநாடு

தன்னிகரில்லா
தண்ணிநாடு

அன்புடன் புகாரி
மனசாட்சி எனப்படும் ஆழ் உள்ளத்தின் குரலுக்கு உண்மையாகவே செவி சாய்த்து, அதன் வழியில் நேர்மையாக நடப்பதும் வழிபாடு எனப்படும்
இறைவன் வழியைப் பின்பற்றுதல் என்பதும் வழிபாடு எனப்படும்
ஆகவேதான் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறான் என்கிறார்கள்
இறைவனின் அறத்தை காலங்காலமாகக் கேட்டு வளர்ந்த உள்ளத்தில்தான் மனசாட்சி உறுதியாக நிற்கும்
இறைவனைத் தொழுதல் என்றாலும் அவனை வழிபடுதலே
இறைவணக்கம் என்றாலும் அவனை வழிபடுதலே
சொல்லில் ஏதும் இல்லை, வைக்கும் எண்ணத்தில்தான் எல்லாம் இருக்கிறது
அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்
இத்தனைச் சோதனைகளா

என்றால்
ஏதோ மிக நல்லதொன்று
உங்கள் வாழ்வில்
வெகு விரைவில் மலரப் போகிறது

கரி
மேலும் கருகிக் கருகி
இறுகுவது
வைரமாவதற்குத்தான்

உங்கள் வழமையான
அன்பிலும் பண்பிலும்
நயாகராவாகவே
இருங்கள்

வந்து குவியும் துக்கங்களை
வந்த நொடியே
காலைக் கடன்போல
வெளியேற்றிக்கொண்டே
இருங்கள்

ஏறும் துன்பம்
எதுவென்றாலும்
இறங்குவதே இல்லை
அதைச்
சுமந்து கொண்டே
நின்றால்

உங்களை
உண்மையிலேயே
உயிரில் வைத்து நேசிப்பவர்கள்
யார் யார் என்பதை
இவ்வேளையில்
கணக்கெடுத்துக்கொண்டே
இருங்கள்

பகட்டுகளையும்
ஏமாற்று வித்தைகளையும்
அடையாளப்படுத்திக்கொண்டே
இருங்கள்

இறைவன் உங்களை
அடுத்ததோர் உயர் நிலைக்குத்
தயார் செய்கிறான்

வெற்றி பெறுங்கள்
வாழ்த்துக்கள்






25 எழுது ஒரு கடுதாசி

கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம்.

இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.


நேத்துவர எம்மனச
      நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
      பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
      விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
      ஒன்னெனப்பா பொங்குதிப்போ

பாழான எம்மனசு
      பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
      நீ நடக்கும் நெலமாச்சி

மாளாத கனவாச்சி
      மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
      தீராத ஆசையில

வாடாத மருக்கொழுந்தே
      வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
      பொல்லாத மனசமாத்தி

போடாட்டி எம்மனசு
      புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
      மச்சினனத் தூதுவிட்டேன்

ஆடாத மனசோட
      அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
      புதிராக இருந்துட்டே

வாடாத எம்மனசும்
      வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
      குத்தமுன்னு யாருசொன்னா

தாத்தா சொன்னாரா
      தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
      போட்டாவக் கொடுத்தாங்க

கூத்தாத் தெரியலியா
      கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
      வீணாயேன் மறுத்தாங்க

யாருவந்து கேட்டாங்க
      ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
      ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

நீரயள்ளி எறைச்சாக்கா
      நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
      தொலையுதுன்னு போவாதா

தேர இழுத்தும் இப்போ
      தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
      புதுவாசம் வீசலியே

நாளமெல்லப் போக்காத
      நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
      எழுதமட்டும் தயங்காத

நாந்தான ஒங்கழுத்தில்
      நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
      வாடினாலும் எங்கூட

நாந்தானே ஒனக்கூன்ன
      நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
      எழுது ஒரு கடுதாசி

- அன்புடன் புகாரி

24 அன்பு நெஞ்சே

ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு
         ஏணியைப் பள்ளத்தில் இறக்கிவிட்டு
ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு
         உள்ளமே இல்லாத கள்வர்களாய்
ஊரிலே பலபேர் நல்லவரே
         உன்தலை மீதேறி நடப்பவரே
யாரிவன் யாரவன் என்பதைநீ
         எண்ணி நடப்பாயென் அன்புநெஞ்சே

தோளிலே கையிடும் நண்பனென்பான்
         துணைக்குநீ அழைக்காமல் வந்துநிற்பான்
நாளிலே பலமுறை தேடிவந்து
         நன்றியே நானென்று கூறிநிற்பான்
ஏழைநீ துயர்பெற்ற நாட்களிலோ
         எங்கும் உன்கண்களில் படமாட்டான்
தேளிவன் கொடுக்கினை மறைத்துவிட்டான்
         தெரிந்துநீ நடப்பாயென் அன்புநெஞ்சே

யாருமே போற்றிடும் ஏற்றதொழில்
         எவனையோ குறைகூறித் திரிவதென
ஊரிலே பலபேர் அப்படித்தான்
         உன்னையே குறைகூற வந்துநிற்பார்
யாரினைக் கண்டும் நடுங்காதே
         எவர்சொல் கேட்டும் நீ சிதையாதே
பேருக்கு அவர்முன் செவிமடுத்து
         பிறகதைத் தனிமையில் எடைபோடு

ஏனெனுங் கேள்வியைக் கேட்பதற்கு
         என்றும் எவருக்கும் அஞ்சாதே
ஆனது ஆகட்டும் என்பதுபோல்
         அசைய வெறுத்துமட்டும் விலகாதே
ஆனது உன்னால் எவையெவையோ
         அனைத்தையும் செய்து நீ முன்னேறு
ஊனமே எதுவென அறிவாயோ
         உடைந்து கைகட்டிக் கிடப்பதுதான்

தேனினைப் போலே இனியதெது
         தெளிந்தநல் லறிவுக்கு ஏற்றதெது
மானிட மொழிகளில் உயர்ந்ததெது
         மௌனமே யல்லாது வேறெதது
தூணிணைப் போலே அமைதியினைத்
         தூக்கி நிறுத்துவதப் பேரழகு
வேணும் போதே வாய்திறந்தால்
         வேதனை ஒண்டாது அன்புநெஞ்சே

சாதிகள் சிறிதெனத் தள்ளிவிடு
         சமத்துவம் பெருஞ்சுகம் போற்றிவிடு
சேதிகள் கேட்டிட அனுதினமும்
         செவியினைப் பிறருக்காய் வளர்த்துவிடு
பாதியை மெழுகிப் பொய்யுரைக்கும்
         பகட்டினை மதியாதே என்றென்றுமே
தேதியொன் றானதும் நிலைமறந்து
         தேவையைப் பெருக்காதே அன்புநெஞ்சே

ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
         ஆயிரம் படிகீழே தாழ்ந்திருப்பார்
ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
         ஆயிரம் படியேறி உயர்ந்திருப்பார்
ஆயினும் அவற்றையே பெரிதாக்கி
         ஆணவம் அவமானம் அத்துமீறும்
நோயினில் வீழ்ந்தே நோகாமல்
         நேர்வழி நடப்பாயென் அன்புநெஞ்சே

சாதனை ஆயிரம் செய்துவிடு
         சாவினை அழிக்கப் பெயர்நாட்டு
வேதனை வேண்டாம் தோல்விகளில்
         வேண்டும் திடநெஞ்சம் எப்போதும்
சோதனை எத்தனை வந்தாலும்
         சோர்வது கூடவே கூடாது
பாதம் பணிந்திட ஆசைகளைப்
         பழக்கப் படுத்திவை அன்புநெஞ்சே
ஆசை கொண்ட
எந்த உரையாடல் துவக்கமும்
வாக்குவாதச் சம்மட்டியால்
காயப்படாமல்
நிறைவு பெற்றதாய்
ஞாபகமே இல்லை

எடுத்துச் சென்ற
அப்பழுக்கற்ற
எந்த அன்பும் பாசமும்
அடிபட்ட புறாக்களைப் போல்
காலொடிந்து
அலகொடிந்து
சிறகொடிந்து
திரும்பும் வாடிக்கையேயன்றி
வேறெதுவும் இருந்ததே இல்லை

இன்று உறுதியாய்
புரியவைத்தே தீரவேண்டும்
விடிவுபெற்றே ஆகவேண்டும் என்ற
அரும்பெரும் முயற்சிகளெல்லாம்
குழப்பங்களின் மீது
கொடுங் குழப்பங்களைக்
கொப்பளிக்காமல் இருந்ததே இல்லை

இருப்பதோ
ஒரே ஒரு வாழ்க்கை
இதிலும்
ஏன் தட்ட வேண்டும்
இந்தக் கதவையே என்று
உட்கிளி கெஞ்சிக் கெஞ்சிக்
கேட்டழாத நாளே இல்லை

இருந்தும்
உறவுச் சங்கிலிகளில்
சின்னச் சின்ன வண்ண விழிகளின்
பெரிய பெரிய கண்ணீர்த் துளிகள்
கொட்டிக் கொட்டி
இறுக்கும் இறுக்கத்தை
அவிழ்த்து முடிப்பதற்கும்
அவிழாதவற்றை
உடைத்தெறிவதற்கும்
நாள் குறித்தால்
பாழும் மனம்
கேட்கவா செய்கிறது

இதோ
வந்துவிடப் போகிறது
மரணம்
பிறகென்ன விட்டுத் தள்ளு
என்று
சொல்லிச் சொல்லியேவல்லவா
எதிராய் நிற்கிறது

அன்புடன் புகாரி
20170404

நெஞ்சுடையச் செய்திடுமோ
என்றஞ்சி
தன் பொன் முட்டையை
அடைகாத்துத்
தவித்துத் துடித்துக்
காத்திருக்கும் மௌனம்

சட்டென்று
தாறுமாறாய் உடைந்து
வெளியேறும்
தகரக் குஞ்சுகளாய்

மௌனக்
கவிமொழியறியா
மந்தைகளிடம்

அன்புடன் புகாரி
20170321
அமெரிக்க மாப்பிள்ளை

பட்டில் வைத்துப்
பவளத்தில் வளர்த்த
என் தேவதை மகளை

முதிர்கன்னியாகவே
வைத்திருப்பேன்

கழுதைக்குக்
கட்டிக்கொடுப்பேன்

பாழுங் கிணற்றில்
பிடித்துத் தள்ளுவேன்

குதிருக்குள் அமர்த்தி
நெல்கொட்டி மூடுவேன்

எரியும் நெருப்பில்
இறங்கச் சொல்வேன்

ஆனால்...

அமெரிக்க
மாப்பிள்ளைக்கு மட்டும்
கட்டித் தரவே மாட்டேன்

இது
டிரம்பின் வெற்றிமீது
உறுதியாக

டிரம்பின் நிறம்மீது
நிச்சயமாக

டிரம்பின் ஆட்சிமீது
சத்தியமாக

அன்புடன் புகாரி
20170305
தோல்விகளைக்
கொண்டாடு

ஒரு வெற்றி என்பது
பல தோல்விகளால்
ஆனது

அன்பினிய நண்பனே

தோல்விகளின் சுமைகளைத்
தூக்கித் தூக்கி
தோள்வலிமை உயர்த்தி உயர்த்தி
ஒரு நாள் நீ உன்
வெற்றியை ஏந்தி நிற்பாய்

ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றி கிடைக்கவில்லை
என்று நீ புலம்புவது 
அறிவீனம்

ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றியின் ஒரு பகுதி
உனக்குக் கிடைக்கிறது என்பதால்
உண்மையில்
நீ உன் தோல்விகளைக்
கொண்டாடத்தான் வேண்டும்

தேன்கூடு என்பது
எத்தனையோ தேன் துளிகளின்
கூட்டு அல்லவா

தேன்கூடு 
நிறைவடையும்வரை
நீ காத்திருக்கத் தேவையில்லை

ஒவ்வொரு 
தேன் துளிக்குமே
நீ உன் வெற்றியைக் கொண்டாடலாம்

மீண்டும் மீண்டும்
தேன் 
கொண்டுவருவதுமட்டுமே
தேன் கூட்டிற்கான 
மாறாத நியதி

அதுதான்
வெற்றியைத் 
தக்கவைத்துக்கொள்ளும்
ரகசியம்

ஆனால்
உன் கொட்டாட்டங்கள்
உன் வலியைக் கொன்றுவிட்டால்
அன்றோடு உன் முயற்சிகள்
நின்றுவிட்டால்
அது ஒன்றே உண்மையான தோல்வி

கவலை வேண்டாம்
அதற்கும் 
மாற்றுமருந்து உண்டு

மீண்டும் எழு
நண்பனே மீண்டும் எழு

அன்புடன் புகாரி
20170227

12 இருட்டு பேசுகிறது


நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன
கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன

உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்
வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம் இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன் இருட்டே உங்கள் தாய்
நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும்
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது
கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை

புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து உருவங்களாலா
உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்

வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம் உங்களை
ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்
மெரினா
தமிழ்நாட்டின்
அரசியல் போதிமரம்

புத்தன்வரக் காணவில்லை
ஆனாலும்
புத்திவரக் காண்கிறோமோ

காற்று
வாங்கப்போகும் இடத்தில்
கல்லறைகள்

ஏன்?

செத்தும்
அகலாத புழுக்கத்தோடு
அரசியல் தலைகள்
இங்கே அடக்கம்

தலைகள் ஏதும் வழிநடத்தாமல்
தங்கத்தமிழ் எழுச்சி மக்களின்
சல்லிக்கட்டுப் போராட்டம்
இந்தக் கல்லறையைச்
சுத்தப்படுத்தியது

ஆனால்
தடால் தடியடியால்
தறுதலைகளோடு நடுத்தலை
மீண்டும் இதை
அசுத்தப்படுத்தியது

எண்ணையைக் கொட்டி
கடல்வளம் அழிக்கும்
வணிகக் கப்பல்கள்
மெரினாவில்

கேட்க வாயற்றவை
சமாதிகள் மட்டுமல்ல
நடமாடும் சமாதிகளும்தான்
என்று நிரூபிக்கின்றன

எத்தனையோ குரல்களையும்
எண்ணற்ற கூக்குரல்களையும்
கேட்டவண்ணம்
பரந்து விரிந்து
அலைவீசிக் கிடக்கிறது
மெரினா

இன்றுவரை
இங்கே நடந்த கூட்டங்கள்
குவிந்த மக்கள்
மணல் எண்ணிக்கையை
என்றோ மூழ்கடித்த
சாதனை

இன்றெல்லாம்...

மெரினா
தமிழ்நாட்டின்
அரசியல் போதிமரம்

புத்தன்வரக் காணவில்லை
ஆனாலும்
புத்திவரக் காண்கிறோமோ

அன்புடன் புகாரி
20170210
இந்நொடி உனைக்காண
ஏதோவொன்று
உள்ளிருந்து
துடியாய்த்துடிக்கிறது

கொஞ்சும் தமிழோடும்
குழையும் இதழோடும்
என் உயிரே


காலங்கள்
தன் திருப்பங்களோடு
தொடர்ந்து
பயணித்துக்கொண்டேதான்
இருக்கிறது

நிகழாத நிகழ்வெல்லாம்
நிகழ்த்திக் கொண்டேதான்
இருக்கிறது

ஆனாலும்
யாதொரு மாற்றமும் இல்லை
கண்ணுக்குள் உயிராக
உயிருக்குள் கண்ணாக
நீ

தித்திக்கத் தித்திக்கச்
செவிக்குள் கரும்பாய்
என் இனிய பாவாய்

உன்
கண்களும் காந்தமும்
தமிழும் தகிப்பும்
ஆழமாக பதிந்த
சொர்க்கத்தின் சொர்க்கங்கள்

வந்தால் தருவேன்
நயாகராவாக
வந்ததும்
சட்டென்று கேட்டுவிடாதே
கேட்கும் முன் கொடுக்காவிட்டால்
உனக்கான என் உணர்வுகள்
வெறும் சொத்தைகள்

களவாடப்பட்ட கனவா
நீ
ஆனால்
கனவு எப்படி களவுபோகும்

களவுபோக வழியற்ற
என் கனவே

உயிரும் உயிரும் உயிர்க்கும்
நம் கனவுகளின் திருவிழா
எப்படியும் பூக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நாயக்கட்டு பேயக்கட்டு
         பீட்டாவுக்குப் பாடைகட்டு
நாட்டுடமை பாடிக்கிட்டு
        நடக்கட்டும்டா ஜல்லிக்கட்டு

ஓட்டப்போட்ட எம்பிசீட்டு
       ஒடச்சுப்போட்ட முட்டபல்பு
ஆறப்போட்டு ஆறப்போட்டு
       அமுக்குறாண்டா வெத்துவேட்டு

அடக்கிப்போட்டு முடக்கிப்போட்டு
       அட்டூழியம் யாரைக்கேட்டு
ஒண்ணுகூடு சுத்துப்பட்டு
       ஒசத்திப்பாடு உரிமைப்பாட்டு

ஊரைக்கூட்டு உலகைக்கூட்டு
       ஊர்வலமா கோசங்கட்டு
மறத்தமிழன் வீரங்கேட்டு
       மறுபடியும் ஜல்லிக்கட்டு

அன்புடன் புகாரி
20170210
ஸ்பெயினின்
கொலைக்களம் அல்ல

எருதுகளின்
விருது மேடை

தமிழ்நாட்டின்
சல்லிக்கட்டு
திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

சொர்க்கத்தை
மண்ணில் காணவும்
நரகத்தை
நாட்களிலிருந்தும்
நெஞ்சினின்றும்
விலக்கிவைக்கவும்


திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

இதயங்களின் ஈர்ப்புகளிலோ
இதழ்களின் தவிப்புகளிலோ
இன்பமாய் வாழ
இனிமையாய் வாழ

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

நரகத்தை
மண்ணில் கண்டுவிட்டால்
சொர்க்கம்
நாட்களிலிருந்தும் நெஞ்சினின்றும்
விலகிப் போய்விட்டால்
ஒப்பந்தம் என்பது
தானே முறிந்து
அதன் தலை தொங்கிவிடுகிறது

திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயக்கப்பட்டதல்ல

ஏனெனில்
கண்ணில் காணும்
இத்தனை நரகத்தையும்
சொர்க்கமா
நிச்சயித்திருக்க முடியும்

திருமணம் என்பது
ஆயிரம் காலத்துப் பயிர்
என்பதும் பிழை

இன்பத்தின் ஆயுள்
எத்தனை எத்தனை மணநிலங்களில்
காய்ந்து கருகி உதிர்ந்து
சாம்பலாய்க் கிடக்கின்றன

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

நீ விரும்புகிறாய்
நான் விரும்புகிறேன்
இதோ சொர்க்கம்

நீ வெறுக்கிறாய்
நான் வெறுக்கிறேன்
அது நரகமல்லவா

இந்த வாழ்க்கை
ஒரே ஒரு முறைதான்
அதை
வாழாமல் போனால்
போனதுதான்

இந்த உயிர்
எந்த உத்திரவாதத்திற்கும்
கட்டுப்படுமா

வருடங்களா நாட்களா
நிமிடங்களா நொடிகளா
சொல்லமுடியுமா

இதனுள்
மல்யுத்தம் வேண்டுமா
கயிறிழுத்தல் வேண்டுமா
துரோகங்கள் வேண்டுமா
காயங்கள் வேண்டுமா
கண்ணீரில்
கரைதல்தான் வேண்டுமா

அன்பு அல்லவா
வேண்டும்
காதல் அல்லவா
வேண்டும்

காதல் என்பது
ஓர் அற்புதப் பயிர்

இறுக்கிக் கட்டும்
கட்டுகளுக்குள்
காதல்
காந்துபோய்விடுகிறது

அன்பில் கட்டும்
நட்பில் கட்டும்
ஈர்ப்பில் கட்டும்
பிணைப்புக் கட்டுகளுக்குள்
காதல் செழித்து வளரும்
கல்யாணம் நீடித்து நிற்கும்

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்