அணிந்துரை - மலிக்கா - அழகிய கவிதை மலர்கள்

அழகிய கவிதை மலர்கள்

கவிஞர் மலிக்காவின் மனதுக்குள் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கின்றது ஒரு சுவாரசியம். அந்த சுவாரசியம் அவரின் மனக் குளத்தில் அவ்வப்போது துள்ளித் துள்ளிக் குதிக்கிறது. அது குதிக்கக் குதிக்க உணர்வுகளின் மிருதுவான கரைகளை வருடி வருடி அலையலையாய் எழுந்து வீசுகிறது. அந்த அலைகளைப் பிடித்துப் பிடித்து அதன் நுரைகளைக் குழைத்துக் குழைத்துக் கவிதைகளாக்கித் தன் உயிரின் மடியில் இட்டுக் கொஞ்சுகிறார் கவிஞர் மலிக்கா.

முத்துப்பேட்டையில் பிறந்தார். நான்காம் வகுப்புதான் படித்தார். சின்னஞ்சிறு வயதிலேயே திருமணமும் செய்துகொண்டார். கூடவே வைத்துக்கொள்ளும் உயிர்த் தோழியைப் போல ஒரு மகளையும் பெற்றெடுத்துக்கொண்டார். இன்று துபாயின் பாலைவன மணல் வெளியைக் கவிதை முத்துப் பேட்டையாக்கிக்கொண்டிருக்கிறார். அதை அவர் இப்படிச் சொல்லுகிறார்:

          நான்
          கம்பன்வழி வந்தவளில்லை
          கண்ணதாசன் பேத்தியில்லை
          வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை
          வைரமுத்துவின் வாசல் காற்றும் பட்டதில்லை
          ஆனாலும் கவிதை எழுதுகிறேன்

கவிஞர் மலிக்காவின் கவிதைகள் கொத்து மல்லிப் பூக்கள். சின்னச் சின்ன வெண்ணிற இதழ்களால் இதய மொட்டவிழ சிலிர்த்து விரிபவை. சுவாசத்துக்குள் சுகந்தம் ஏற்ற முயல்களாய் தத்தித்தாவி முயல்பவை.

          சன்னலில்லாத வீடு
          இறைவன் தந்த
          சன்னதியின் கூடு

என்று எத்தனை அழகாய் கருவறை வாசத்தைச் சொல்கிறார் பாருங்கள். பனிக்குடம் அதனுள் விளையாடும் பச்சிளம்என்று தொடங்கும்போதே கவிதை, வாசகர்களின் மனதுக்குள் ஒரு வசந்தத்துக்கான பூக்களைத் தூவத் தொடங்கிவிடுகிறது.

          பூவே! உன்மீது
          புகைபடிய வைத்த காற்றை
          கைது செய்யச்சொல்லி-என்
          காதலனை அனுப்பியுள்ளேன்

காலங்கள்தோறும் காதல் கவிதைகள் நம்மைச்சுற்றி ரீங்காரமிடுகின்றன. ஒருநாளும் ஒருவருக்கும் அந்த உயிரிசை அலுப்பதே இல்லை. ஆனாலும் இந்தக் காதல் கவிதையைப் பாருங்கள். ஓர் அழகான காதல் அந்தக் காதலுக்குள் காதலாய்  இயற்கையின் மீதுள்ள உன்னத காதல் அழுத்தமாய்ச் சிறகடித்துப் பறக்கிறது. சுற்றுச்சூழல் சுகாதாரத்தையும் மாசுகட்டுப்பாட்டையும் முதன்மையாக்கிக் காதலிக்கிறது.

என்னைக் கொஞ்சுவது அப்புறம் இருக்கட்டும் முதலில் இயற்கையை நாசம் செய்யும் காற்றைக் கைதுசெய் என்று தன் காதலனை அனுப்பிவைக்கிறாள் காதலி. காற்றைக் கைதுசெய்ததும் அது கூறிவிடப்போகிறது இயந்திரங்களாகிப்போன மனிதர்கள்தாம் குற்றவாளிகள் என்று.

துன்பம் வந்துன் தோள்தொடுமுன்
கண்முன் வருவேன்
உன் தோள்தாங்கி நிற்பேன்
நட்பானதால்

என்று நட்பின் ஆழத்தைக் கவிதையாக்கி கவிஞர் மலிக்கா மெய்சிலிர்த்துக்கொள்கிறார்நட்பின் வலிமைஎன்ற கவிதையில். துன்பம் எல்லோருக்கும் வரும். அதிர்ஷ்டவசமாய் தோள்தரும் நட்பும் எப்போதேனும் அமையக்கூடும். உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்புஎன்பார் வள்ளுவப் பெருமான்.

உடை அவிழ்ந்து விழும்போது அதை உடன் சென்று கட்டும் தன் கரங்களைப் போல நண்பரின் துயரம் தீர்ப்பதே நல்ல நட்பு. ஆனால் துன்பம் வருவதற்கு முன்பே நான் வந்து நிற்பேன் என்று கவிஞர் மலிக்கா உணர்ச்சிவசப்படுவது நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

வீரம் வென்றது என்ற ஜல்லிக்கட்டு கவிதையில் விலங்குகளின் உயிர்வதை பற்றி கவிஞர் மலிக்கா கண்ணீர்விடுவதும் அதற்காக ஆறறிவைச் சவுக்கால் சொடுக்குவதும் அவரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

தெருவோரம் என்ற கவிதை ஓர் அருமையான காட்சியமைப்பு. நறுக்கென்று செருப்பின் ஊசி வறியவனின் கையை மட்டுமல்ல நம் நெஞ்சங்களையும் தைக்கிறது.

காலை மாலை வந்ததும்
சாளரம் வழியே
சரம் சரமாய்க் கவிதைகள் தா

வேண்டும் வேண்டும் என்று கவிதை பாடாத கவிஞர்களே இருக்கமாட்டார்கள். ’காணிநிலம் வேண்டும் பராசக்தி என்று கேட்ட பாரதி மட்டுமல்ல அவனுக்கு முந்தைய கவிஞர்களும் அவனுக்குப் பின் வந்த கவிஞர்களும் வேண்டும் வேண்டும் என்று தன் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறையவே பாடி இருக்கிறார்கள்.

வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்! கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!’ என்று பாடுவார் பாரதிதாசன். ’அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்என்ற கண்ணதாசனின் பாடல்வரிகள் நினைவுக்கு வரலாம். 'ராஜராஜனின் வாளைக் கேட்டேன்! வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்! பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்!' என்ற வைரமுத்துவின் கவிதையும் செவியோரம் ஊஞ்சல் கட்ட வரலாம்.

இங்கே மலிக்காவின் வேண்டும் கவிதை எதை வேண்டுகிறது என்று பாருங்கள். காலை வந்து மாலை செல்லும் சூரியனிடம் சரம் சரமாய்க் கவிதைகளை வேண்டுகிறது. அத்தனை காதல் மலிக்காவுக்கு கவிதைகளின் மேல். சூரியனின் ஒவ்வொரு செய்கையிலும் கவிதையையே அவர் காண்கிறார்.

என்ன பாவம் செய்தேனம்மா என்ற கவிதை இப்படித் தொடங்குகிறது:

          அதிகாலை நேரம்
          சேவலென்ற கோழி கூவவில்லை
          காகங்கள் கூடிக் கரையவில்லை
          கட்டிடங்களுக்கு இடையே
          கதகதப்போடு கிளம்பத்துடித்த சூரியன்

துயாயில் விடியும் காலைப் பொழுதை நம்மூரில் விடியும் பொழுதோடு ஒப்பிட்டு  ஏக்கம் கலந்த வரிகளால் எத்தனை அழகாகக் கூறி இருக்கிறார் பாருங்கள். இந்தக் கவிதையின் கடைசி வரிகளுக்குள் பயணப்படும்போது கட்டிடங்களுக்கு இடையில் எழும் சூரியனைப்போலத்தான் மாறிவிட்டது நம் வாழ்க்கையும் என்று கூறத்தோன்றுகிறது.

துபாயில் சேவல் கூவாதா என்று கவிஞர் மலிக்கா ஏங்கித் தவிக்க, ஆப்பிரிக்க நாடு ஒன்றில் அதிகாலையில் தொல்லையாய் இருக்கிறது என்று கூவும் சேவல்களின் கழுத்தை அறுக்க உத்தரவு இட்டிருக்கிறார்களாம். அதற்கும் ஒரு கவிதை எழுதலாம் கவிஞர் மலிக்கா.

ரகசிய அதிசயம் என்ற கவிதையில்

          முத்தமிடும்போது
          முத்திரைபதிக்க
          முன்னுரை இந்த மூக்குத்தி
 
          காதில் சொல்லும்
          காதல் சங்கதியை
          கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
          இந்தக் கம்மல்
 
என்று தொடங்கி பெண்ணின் ஒவ்வொரு அணிகலனையும் சுவாரசியமாகக் காதலுக்குள் இழுத்திருக்கிறார் கவிஞர் மலிக்கா. மூக்குத்தி, கம்மல், சங்கிலி, வளையல், மோதிரம், கொலுசு என்று எல்லாமே காதலுக்கான மிக அத்தியாவசியத் தேவைகள் என்று வழக்காடுவதுபோல் இருக்கிறது அந்தக் கவிதை.

நகை வேண்டும் என்று ஆசைப்படும் மனைவிமார்களுக்கு அருமையான காரணங்களைத் தொகுத்துக் கொடுத்துவிட்டார். காதல் கணவரால் மறுக்க முடியுயாத காரணங்கள் என்பதுதான் இங்கே சிறப்புக் குறிப்பு :-)

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். படிப்பின் அருமையைப் பற்றி தெரியவேண்டுமா கவிஞர் மலிக்காவிடம் கேளுங்கள் என்று கூறலாம்போலத் தோன்றுகிறது. நீலவானில்என்ற அவரின் கவிதை ஒன்று போட்டிருக்கும் கோலம் அருமையாக உள்ளது.

          புகழ் வந்து சேர்த்த போதும்
          பெரும் வசதிவாய்ப்பு வந்து போதும்
          படிப்பறிவு இல்லையென்றால்
          பத்தாம் பசலியாகக் கூடும்
          பணக்காரனும் படிக்கவேண்டும்
          பாமரனும் படிக்கவேண்டும்

என்று சொல்லிக்கொண்டே செல்லும் கவிதையின் முத்தாய்ப்பு வரிகள் இப்படி வருகின்றன:

          சில்லென்ற காற்றில்கூட
          சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
          நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
          நீலவானில் - உன்
          கால்கள் நடக்கும்

மிகத் துல்லியமான விசயங்களை உணர்வதற்கும் அந்த வானத்தையே ஏறிமிதித்து நடக்கும் வல்லமை பெறவும் படிப்பு மிகவும் அவசியம் என்று கூறி மக்களைப் படிப்பின் பக்கம் இழுக்கும் கவிஞர் மலிக்கா தன் ஏக்கத்தை இங்கே கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றே கூறத்தோன்றுகிறது.

கவிஞர் மலிக்காவின் கவிதைகளை வாசித்துச் செல்லும்போது என் எண்ணங்களில் அடிக்கடி வந்து ஊஞ்சலாடியது ஐயன் வள்ளுவனின் ஒரு குறள்தான்:

          குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
          மழலைச் சொல் கேளாதவர்

குழலைவிட யாழைவிட இனிமை நிரம்பியதாய்த்தான் இருக்கின்றன கவிஞர் மலிக்காவின் கவிதைகள்.

கவிஞர் மலிக்கா தான் எப்படி கவிதை எழுத வந்தேன் என்று தன்னைத் தானே பார்த்து ஆச்சரியப்படுவதையும், அப்படி ஆச்சரியப்படுவதையே கவிதையாக்கி மகிழ்வதையும் காண்பதே ஒரு கவிதையாய் இருக்கிறது.

சுவையான நூல்கள் ரசிகர்களை இழுந்துவந்து ஆவலோடு வாசிக்கவைக்கும். இதயத்தில் நுரைத்துவிட்ட கவிதையோ கவிஞர்களை விடாப்பிடியாக இழுத்துவந்து வேறு எப்பணியையும் செய்யவிடாமல் அப்படியே அமர்த்தி அதை எழுத வைக்கும். அப்படியான இனிய அவதிகளுக்குள் அடிக்கடி சிக்குகிறார் கவிஞர் மலிக்கா என்று நிச்சயமாக உணரமுடிகிறது.

மலிக்கா பிறந்த முத்துப்பேட்டையின் கடலோரம் உள்ள அலையாத்திக்காடுகள் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய அலையாத்தி மரங்களால் ஆனவை. அலையாத்தி மரங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பசுமை விரித்த இலைகளால் மட்டுமின்றி நீருக்கு மேலே எட்டிப் பார்க்கும் வேர்களாலும் அவை சுவாசிக்கக்கூடியவை.

அந்த அலையாத்தி மரங்களைப்போல உள்ளத்தின் உதடுகளால் மட்டுமின்றி உயிரின் இழைகளாலும் கவிதைகளையே சுவாசிக்கின்றார் கவிஞர் மலிக்கா.

கற்றவரெல்லாம் கவிதை எழுதிவிடுவதில்லை. கலைஞர், கண்ணதாசன் போல பள்ளிப்படிப்பைத் தொடராத சிலர் அந்த வானத்தையே கவிதை நட்சத்திரங்களால் நிறைக்காமல் விட்டதில்லை. பள்ளிப்படிப்பைக் கைவிட்டாலும் இவர்கள் கற்பதை ஒருநாளும் கைவிட்டதே இல்லை. கலைஞர் தமிழறிஞர் ஆனார். கண்ணதாசன் கவிதைச் சித்தரானார்.

நல்ல நூல்களைத் தேடிப் படிக்கப்படிக்க கவிதைகளின் பயணங்களை நாளும் பொழுதும் பழகப்பழக கவிஞர் மலிக்கா மேலும் மேலும் சிறகசைத்துப் பறந்து தனக்கான கவிப்பொற் கூட்டை வெகு சிறப்பாகக் கட்டிக்கொள்வார் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. அந்த உறுதியில் திளைக்கும் இந்த மனது கவிஞர் மலிக்காவை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறது.

அன்புடன் புகாரி
கனடா
கோடை 2010







திரையிசைக்
கவிஞர்களுக்கெல்லாம்
பாடல்வரிகளைச் சுரந்தன
அப்துல் ரகுமானின் கவிமுலைகள்

அம்மி கொத்தமாட்டேனென்று
அறுதியிட்டு
உறுதியாய்ச் சொன்னவரின்
ரத்தக் கவிதைகளைக்
கொத்திக்கொண்டுபோய்
திரைக் கல்லில் அரைத்து
மஞ்சள் பூசிக்கொண்டவர்களை

மந்தகாசத்தோடு மட்டுமே பார்த்த
கம்பீரத் தமிழன் கவிக்கோவிற்கு
புவிக்கோள் நிறைத்துப்
பொழியும் என் அஞ்சலிகள்
வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் நம்மைக்
காரணமேயின்றி நேசிப்பார்கள்
சிலரோ
காரணமேயின்றி வெறுப்பார்கள்

மறுக்குமிடத்தில்
மன்றாடுவதல்ல
கொடுக்குமிடத்தில்
கொண்டாடுவதுதான்
வாழ்க்கை

ஆயினும்
நேசிப்பவர்களையும்
வெறுப்பவர்களையும்
ஒரே விழிகளால் காண்பதற்கு
நம் மனதை நாம்
பக்குவப்படுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்

நேசிப்பவர்களை மட்டுமே
நேசிக்காமல்
வெறுப்பவர்களையும்
நாம்
நேசிக்க வேண்டும்

வெறுப்பவர்களை வெறுத்துவிடாமல்
அமைதியாகவும் மௌனமாகவும்
புன்னகை உதிர்த்த வண்ணமுமாய்
நகரும்போது
வெறுத்தவர்களும் விரும்புபவர்களாய்
ஒருநாள் ஆவார்கள்

எல்லாவற்றையும்
பேசியே தீர்த்துவிடமுடியாது

சிலவற்றை
உணர்ந்தும் உணரவைத்தும்தான்
தீர்க்க வேண்டும்

அது காலத்தின்
சக்திவாய்ந்த கரங்களில்தான்
இருக்கிறது

இறைவனின்
அளவற்ற அருளில்தான்
இருக்கிறது
வாய்
திறந்தே கிடந்தால்
செவிகள்
செயலிழந்து கிடக்கும்
வாயடைத்துச்
செவி திறந்தால்
அன்பும் அறிவும்
வளரும்
செவியடைத்து
வாய் திறந்தால்
வம்பும் துன்பமும்
வளரும்
பொய்
சொல்பவர்களால் கூட
இல்லை

பொய்களை
ஆய்ந்தறியாமல்
அப்படியே
உண்மையென்று
நம்பும்
மூடர்களால்தான்

வீடு ஊர்
நாடு உலகம்
எல்லாம்
துண்டு துண்டாய்ச்
சிதைவுண்டு

ரத்தம் சொட்டிக்
கிடக்கின்றன

- அன்புடன் புகாரி
உறவுகளுக்குள்
நண்பர்களுக்குள்
பொறாமை கொள்ளாதே

பொறாமை
அன்பின் நேர் எதிரி

ஆரோக்கியத்தின்
துரோகி

பொறாமை
முதலில்
உன்னை அழிக்கும்
பின்
உறவை அழிக்கும்

பொறாமை
தன்னிடம் உள்ள
உயர்வைக் காணாமல்
பிறரிடம் உள்ள
அற்ப உயர்வையும் கண்டு
உயிரை
மாய்த்துக்கொள்ளும்

பொறாமையால்
குமைவதைத்
தடுத்துக்கொள்வது
சிலருக்குக் கடினம்தான்

ஆனால்
அந்தப் பொறாமையையே
திசைமாற்றி
எவர்மீது
பொறாமை கொண்டோமோ
அவரையே
முன் மாதிரியாய்
ஆசானாய்
வரித்துக்கொண்டு

உழைப்பை உயர்த்தி
உழைப்பை உயர்த்தி
உழைப்பை உயர்த்தி

பண்பை உயர்த்தி
அன்பை உயர்த்தி
அறிவை உயர்த்தி
திறமையை உயர்த்தி

மேலே மேலே
உயர்வதும் வளர்வதும்
எந்த மேன்மைக்கும்
மேன்மை தரும்
சொக்கத் தங்கச் செயல்

அதை விடுத்து
கால்வாரி விடுவதும்
பொய்கள் புனைவதும்
கபடங்கள் செய்வதும்
கதைகள் கட்டுவதும்

உன்னையும்
உன்னை
ஒட்டி இருப்பவர்களையும்
நரக நெருப்பின்
நடுமத்திக்குக்
கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்
அன்பு நெஞ்சே

அது
வேண்டாம்
அது
வேண்டாம்
விட்டுவிடு

- அன்புடன் புகாரி
>>>-----------------

அஸ்ஸலாமு அலைக்கும் பற்றித்
தெரியவில்லை

வணக்கமென்பது
பணிவோடுகூடிய
பாசத்துடன்கூடிய
உடன்பாடு

இது
மற்றெதுவோடும்
பொருந்துவதாகத் தெரியவில்லை

-பத்மனாபன் சிவதானுபிள்ளை

<<<-----------------

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
சாந்தியும் சமாதானமும் உண்டாகுக
என்று பொருள்

அதாவது
அன்பும் அமைதியும்
மன உடன்பாடும் நிறைக
என்று பொருள்

நான் சவுதி அரேபியாவில்
வாழ்ந்திருந்த நாளில்
ஒரு வாடிக்கையாளர் கடுங்கோபத்தில் வந்து
காட்டுக் கத்தாகக் கத்தத் தொடங்கினார்

அவர் முகத்தில் சினம் கூத்தாடியது

அடிப்பதற்கு எந்த நேரமும்
கையை ஓங்கிவிடுவார் என்று தோன்றியது

அல்லது கையில் இருக்கும்
கெட்டுப்போன தொலைபேசியை
எங்கள்மீது விட்டு எறிந்துவிடுவார்
என்று தோன்றியது

இதை
எப்படிச் சமாளிக்கப் போகிறோம்
என்ற கவலை பயமாய் மாறி
படுத்தி எடுத்தது

அப்போது அப்துல்லா கத்தானி என்கிற
எங்கள் மேலாளர் வந்தார்

அந்தக் கடுங் கோபக்கார்
வாய்க்கு வந்தபடி கத்தக் கத்த

அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்....
அஸ்ஸலாமு அலைக்கும்...

என்று
நிதானமான.... தெளிவான.... குரலில்
ஒரு நூறுமுறைக்குமேல்
மேலாளர் அப்துல்லா கத்தானி
சொல்லிக்கொண்டே இருந்தார்

வேறு எந்த பதிலும் சொல்லவும் இல்லை
பதிலுக்குக் கோபமாகத் திருப்பிக் கத்தவும் இல்லை

வந்தவரின் கோபம் படிப்படியாகத் தணிந்தது

அலைக்கும் அஸ்ஸலாம் என்று
வந்தவர் முதன்முறையாகச் சொன்னார்

அடுத்த நொடி இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்
கட்டியணைத்துக் கொண்டார்கள்

வந்தவரின் கோபத்திற்கு எதுகாரணமோ
அதைச் சரிசெய்து
இணக்கமாக அனுப்பி வைத்தார் அப்துல்லா கத்தானி

நான் அப்துல்லா கத்தானியிடம் கற்றுக்கொண்டது ஏராளம்

அதில் முக்கியமான ஒன்று இதுதான்

அன்புடன் புகாரி
அம்மா
என் அம்மா

ஓடி விளையாடிக்கொண்டிருந்த
உன்னை
தூக்கிக்கொண்டுவந்து
மணக்கோலத்தில்
உட்கார வைத்தபோது
உனக்கு வயது 13 - 1955

நீ
அக்காவைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 16 - 1958

நீ
என்னைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 18 - 1960

நீ
காலிதைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 20 - 1962

நீ
ஹாஜாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 22 - 1964

நீ
சகாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 24 - 1966

நீ
பகுருதீனைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 25 - 1967

நாற்பதுநாள்
பால்வாய்ப் பிள்ளையோடு
நீ வெள்ளைச்சேலை கட்டியபோது
உனக்கு வயது 25 - 1967

எதுவும்
தொடங்குவதற்கு முன்பே
எல்லாமும் முடித்துவிட்டது
உனக்கு

28 வயதிலும்கூட
திருமணம் செய்யாமல்
பெண்கள் இருக்கும்போது
25 வயதிலேயே
எல்லாக் கோப்பைகளையும்
வென்று முடித்துவிட்ட
வீராங்கணையாக
உன்னை நிற்க வைத்தக்
காலக் கோலம்
கொடும் அலங்கோலம்

அம்மா
இந்தச் சேலை கட்டுமா
வெள்ளை வேண்டாம்மா
என்று ஒவ்வொருநாளும்
உன் காலைக் கட்டிக்கொண்டு
அழுத எனக்கு
உன் நிலை தெரியவில்லை

வளர வளர
வேண்டாண்டா வேண்டாண்டா
என்று
தொடர்ந்து மறுக்கும் உன்னைக்
கெஞ்சிக் கெஞ்சி
செருப்பு அணிவித்தேன்
பட்டுச் சேலையும்
கட்ட வைத்தேன்

டாப்ஸும்
ட்ராக் பேண்டும்
நைட்டியும் கூட போடவைத்து
கேரளாவில் நடக்க வைத்தேன்

இது எதனாலும்
என் காயங்கள் எதுவும்
ஆறவே இல்லையே
அம்மா

உனக்கு
மகனாக மட்டும் இல்லாமல்
தந்தையாகவும் இருந்திருந்தால்
என்ன செய்திருப்பேன் என்று
எத்தனையோ முறை
சொல்லியழுது புலம்பியும்
அந்தக் காயம் மட்டும்
அப்படியேதான் இருக்கிறது
அம்மா

நீ
எதற்குமே கலங்காத
வீரமகள்
தைரியத்தின் கோட்டை

அம்மா
கை வலிக்குதும்மா என்றால்
’சரியாப் போயிடும்’
என்ற ஒரு வரியில்
பெரிய மருத்துவம் பார்க்கும்
மனோதத்துவ
மேதை

அம்மா சொல்லிட்டாங்க
சரியாப் போயிடும்
என்று நினைக்காத
பிஞ்சுக் குழந்தைகள்
இருக்க முடியுமா

எத்தனைதான்
உனக்கு
உடல் நலம் இல்லாமல்
போனாலும்
நீ பயந்ததே இல்லை
சரியாப் போயிடும்
என்றுதான்
உனக்கும் சொல்வாய்

ஆனால்
முதன் முறையாக
2015ல் என் கைகளைப்
பிடித்துக்கொண்டு
புகாரி
முடிஞ்சுபோச்சுடா என்றதும்
அந்த நொடி முதல்
நான் என்ன செய்தேன்
என்று எனக்கே தெரியாது

இறைவன்
மகா பெரியவன்
அவன் தன் அளவற்ற
கருணையைக் காட்டினான்

எழவே முடியாத
உன்னை
எழுந்து நடக்கவைத்தான்

அந்த
நீண்ட தெருவின்
முனையில் இருக்கும்
மருத்துவமனைவரைகூட
நடந்துவந்துவிட்டாய்

நான் உன்னிடம்
சொன்னேன்

அம்மா
நான் எல்லா டாக்டர்கிட்டயும்
நிறைய பேசிட்டேன்
நீ ரொம்ப நாள்
இருக்க மாட்டாயாம்
இன்னும் 30 வருடங்கள்தான்
உயிரோடு இருப்பாயம்
என்றேன்

நல்லா படிச்சவன்
டாக்டர்கிட்ட எல்லாம்
தாறுமாறா கேள்வி கேட்குறவன்
அவன் சொன்னா
சரியாத்தான் இருக்கும்
என்று உள்மனதில்
ஓரு நம்பிக்கை கொண்டாய்

அவ்ளோ வருசமெல்லாம்
இருக்க வேண்டாம் புகாரி
என்னை விட்டுடுங்கப்பா
என்றாய்

உனக்கு வேண்டாம்மா
ஆனால்
எங்களுக்கு வேண்டுமே
அமெரிக்காவில்
எத்தனை உயிர்கள்
உன்னைக் கண்டு
கட்டியணைத்து
கொண்டாடி வாழத்
துடித்துக்கொண்டிருக்கின்ற
கருணை செய் அம்மா
என்றேன்
கண்களில் கட்டும்
நீரை
துஆவாக மாற்றிக்கொண்டு

அப்படியே
ஹஜ்ஜுக்கும்
போயிடனும்டா தம்பி
என்றாய்

உன் அறை முழுவதும்
மெக்கா மெதினா புகைப்படங்களை ஒட்டி
இதைப் பார்த்துப் பார்த்துச் துஆ செய்மா
உன் உடல்நலம் தேறும்
நாம் எல்லோரும் போகலாம்
அல்லாஹ் அருள்வான்
என்றேன்

உன் கல்யாணத் தேதியைக்
கண்டுபிடித்து
ஹாஜா குடும்பத்தினரிடமும் சொல்லி
என் குடும்பமும் சேர்ந்து
தொடர்ந்து தொலைபேசியில்
நவம்பர் 10ல்
உனக்கு மணநாள் வாழ்த்துச்
சொன்னபோது
எத்தனை பூரித்தாய்
அம்மா

இதோ
அமெரிக்கத் தேர்தல்
முடிந்ததும்
உன் ஆசை நிறைவேறும்
அத்தனை பேரும் வருவார்கள்
நானும் கூடவே ஓடி வந்துவிடுவேன்
எல்லோரும் உன்னோடுதான்
அம்மா என்றதும்

அல்லாஹ்
ஆமீனாக்கித் தருவான்
என்று என்னை நீ நம்பினாய்

உன்னை ஏமாற்ற
அப்படி நான் சொல்லவில்லை
அம்மா

அதுதான் என் தொடர்
துஆவாக இருந்தது
அம்மா

துஆக்கள் நிறைவேறும்
காலம் இதோ கனிந்துவிட்டது
அம்மா

அல்லாஹ் ஆமீனாக்க
முடிவு செய்துவிட்டான்
அம்மா
அன்பே,

நீ மனிதர்களுக்கு மிகுந்த மரியாதை தரவேண்டும். மனிதர்களிடம் மிகுந்த அன்பு காட்டவேண்டும். இறைவன் ஒருவனுக்குத்தான் பயப்படவேண்டும்.

உன் தந்தையாக இருந்தாலும் அவரிடம் நீ மிகுந்த மரியாதையோடும் அன்போடுமே இருக்க வேண்டும் பயப்படத் தேவையே இல்லை.

அன்பும் மரியாதையும் தராமல் நீ ஒருவருக்குப் பயந்தால், அதன் பொருளே வேறு.

நீ செய்யும் செயல் இறைவனின் முன்னிலையில் சரியா பிழையா என்று ஒரு முறைக்கு இருமுறை யோசித்துக்கொள். நீ தவறு ஏதும் செய்யவில்லை என்று பட்டால் துணிந்து செய்.

ஆயினும் நம் அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. பின் எவராவது நீ செய்தது பிழை என்பதைத் தண்மையாகப் புரியவைத்தால் அடுத்த நொடியே மன்னிப்புக் கேட்டுவிடு. ஒரு நொடியும் தயங்கிவிடாதே.

இல்லாமல் செய்த நேர்மையான காரியத்திற்காக கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டோ கட்டாயப்படுத்தியோ மன்னிப்புக்கேட்க எவராவது வலுக்கட்டாயப்படுத்தினால், அப்போதும் நீ மன்னிப்புக் கேள். அதிலும் பிழை இல்லை.

ஏனெனில் மன்னிப்புக் கேட்பது என்பது உயர்வான செயல். அதற்கு நீ குற்றம் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நீ கேட்கும் மன்னிப்பு என்பது இல்லாதவர்களுக்குத் தாராளமாக அள்ளித் தரும் ஈகையைப் போன்றது. அது உன்னை உயர்வு படுத்தவே செய்யும்.


நீ கதாநாயகன்
ஆக வேண்டுமா

அது
மிகவும் சுலபம்

ஒரு
நல்லவனைத் தேடிப்பிடி
அவன்
வில்லன் வில்லன் என்று
பொய்கள் புனைந்துகொண்டே
இரு

கட்டுக்கதைகளால்
அவனைச் சுற்றிச் சுற்றி
இறுக்கிக் கட்டு

முதலில்
மக்கள்
நம்பமாட்டார்கள்தாம்

ஆனால்
பொய்
மகா சக்தி வாய்ந்தது

உண்மை
ஆமையென்றால்
பொய் காட்டு முயல்

கட்டுக்கதைகள்
வெகு
கவர்ச்சியானவை

உண்மைகள்
வேர்களைப் போல் என்றால்
கட்டுக்கதைகள்
வண்ண வண்ண மலர்கள்

பிறகென்ன
ஒரு நாள்
மெல்ல மெல்ல
நல்லவன்
வில்லனாகத்
தெரியத் தொடங்குவான்

அதுதான்
சமயம் என்று
நல்லவனின் உணர்வுகளை
உசுப்பேற்றிவிடு

அவன்
கொதித்துக் குமுறுவான்

மக்கள்
கற்களைக்
கைகளில் எடுத்துவிடுவார்கள்

வழியற்ற நல்லவன்
அழுவான் புலம்புவான்
ஆனால்
கேட்க ஒருவரும்
இருக்க மாட்டார்கள்

வெறுத்து
காட்டுக் கத்து கத்துவான்

பின் வழியற்று
விலகி விலகி ஓடி ஒளிவான்

ஆனாலும்
மக்கள் நல்லவர்கள்
விரட்டி விரட்டி
அடிப்பார்கள்

தர்ம அடி
கொடுப்பதென்றால்
மக்களுக்குக்
கொள்ளைப் பிரியம்

சொந்த
கோப தாபங்களை எல்லாம்
கூட்டி வைத்து
வேக வேகமாய்க்
கல்லெறிந்து
ஆத்திரங்களைத்
தீர்த்துக்கொள்வார்கள்

ஆக
வெற்றிகரமாய்
கற்கள் வீசுவதற்கு
வில்லன்
கிடைத்துவிட்டான்

பிறகென்ன
இனி
நீதானே கதாநாயகன்

சாத்தான்
இருந்தால்தான் இறைவன்
இருக்க முடியும் என்ற
கேடுகெட்ட எண்ணமுள்ள
இந்த உலகை
விருப்பம்போல் வளைப்பது
சாத்தானாகிய உனக்குச்
சுலபமோ சுலபம்

- அன்புடன் புகாரி

அன்பு என்பது
மரியாதை

ஒருவரை
மரியாதையோடு அழைக்கும்போது
அதில் அன்பு
பேரொளியாய்த் தெரியும்

உரிய மரியாதையைத் தராமல்
கட்டிப் பிடித்துக் கைகுலுக்கினாலும்
குண்டுவைத்துத் தகர்த்த
கட்டிடத்தைப் போல
அன்பு அங்கே
தூள் தூளாகிக் கிடக்கிறது

மரியாதை
என்பது
மகத்தான
அன்பு

ஒருவன்
கோபத்தில் கொதிக்கும்போது
வாங்க போங்கவைக்
குழிதோண்டிப் புதைத்துவிட்டு
வா போ என்று தொடங்கி
வாடா போடா என்றுகூட
தரமிழந்து கத்துவான்

மீண்டும்
அன்பு பொங்கும்போது
மன்னித்து
வாங்க போங்க என்று
உயர்ந்து நிற்பான்

ஆம்
மரியாதை என்பது
மகத்தான அன்பு
மனிதப் பண்பு
உறவுகளுக்கிடையே
புரிந்துணர்விருந்தால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்

ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ளாவிட்டால்
சண்டை சச்சரவுகள்
வளரவே செய்யும்

ஆனால்
விட்டுத்தள்ளு என்ற
உயர்ந்த மனம் இருந்தால்
மீண்டும் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்

புரிந்துணர்வு
மற்றும்
விட்டுத்தள்ளு குணம்
ஆகிய
இரண்டுமே இருந்தால்
சொல்லவும் வேண்டுமா

எவரேனும்
பிறர் செய்த
தீங்கினைப் பொறுத்து
மன்னித்து விட்டால்
உறுதியாக அதுவே
உயர்ந்த மனவீரம் கொண்ட
செயலாகும் (குரான் 42:43)

பழிவாங்கும்
சக்தி பெற்றிருந்தும்
மன்னித்துவிடுபவரே
இறைவனின்
மிகுந்த நேசத்திற்குாியவர் (நபிமொழி)

எதிர்பார்ப்புகளே இல்லாமல்
எந்த உறவுகளும் இல்லை
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்போது
வெறுப்பு வளர்வது இயல்பு

வெறுப்பைக் கட்டுக்குள் வைத்து
அதை வெகுவிரைவில்
வெளியேற்றத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை வசப்படும்

கோபத்தைத் தூரத்தில் நிறுத்தி
அது வரும்போதெல்லாம்
வார்த்தைகளை
ஒளித்துக்கொள்பவனின்
வாழ்க்கைதான்
மகத்தான வாழ்க்கை

நின்றுகொண்டிருக்கும்போது
கோபம் வந்தால்
உட்கார்ந்துவிடுங்கள்
உட்கார்ந்தும் தீரவில்லையென்றால்
படுத்துக்கொள்ளுங்கள் (நபிமொழி)

இறைவன்மீது அச்சமுடையோர்
கோபத்தை அடக்கிக் கொள்வர்
மனிதர்களின் பிழைகளை
மன்னிப்போராய் இருப்பர்
அவர்களையே இறைவன்
நேசிக்கின்றான் (குரான் 3:134)

தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே
நாவினாற் சுட்டவடு (குறள்)

எப்பொருள்
யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள்)

இன்னா
செய்தாரை ஒருத்தல்
அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள்)

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பும் அமைதியும் நிறைக⁠⁠⁠⁠
மரணம்
மன்னிக்கும் மகா மனதை
உங்களுக்குத் தருகிறது

மரணித்தவர்
உங்களை மன்னித்துவிடவும்
செய்கிறது

இறைவனிடம் சென்றவர்
மனிதர்களை
மன்னிப்பவராய் ஆனதில்
ஆச்சரியம் ஏதுமில்லை

எப்போதும்
துவாக்களோடு இருங்கள்

துயரில் இருப்பவர்கள்
தனிமையில் இருக்காதீர்கள்

அன்பு நிறைந்த நெஞ்சு
வெடித்துச் சிதறும்
பஞ்சு

இறைவனிடம்
மன்னிப்புக் கேட்பது
பரிசுத்த நிம்மதிக்கான
கதவுகளைத் திறப்பது

மனதில் இருக்கும் மனிதத்தை
நன்னீரூற்றி வாழவைப்பது
தீக்குச்சியாய் இருப்பது
எளிது
தீயணைப்புப் படையாய் இருப்பதோ
கடினம்

தீக்குச்சி தன் தலையில்
கொல்லி நெருப்பின்
கனத்தோடு மட்டுமே
இருக்கிறது

அந்தத் தலைக்கனம்
உரசும்போதெல்லாம்
பற்றி எரியும் தீயைக் கண்டு
அது
கைகொட்டி மகிழ்ந்தாலும்

உண்மையில்
அந்தத் தீக்குச்சியும்கூட
அதில்
கருகிப் போய்தான்
வீழ்கிறது என்பதை
அது
அறியாமல்தான் இருக்கிறது

தனக்கான பாதிப்பையும்
பொருட்படுத்தாத
தீயணைப்புச் சேவை என்பதோ

அமைதிக்கும்
வன்முறையற்ற வாழ்க்கைக்கும்
உத்திரவாதம் தருகிறது

உறவுகளையும் உயிர்களையும்
காக்கிறது

நியாயத்தைத்
தொட்டுத் தடவி
கோபுரத்தில் ஏற்றி வைத்து
பெருமை கொள்கிறது



நல்லவனாய்
இருப்பது முக்கியமா
நல்லவன் என்று
பெயர் எடுப்பது முக்கியமா

நல்லவனாய்
இருப்பவனெல்லாம்
நல்லவன் என்று
பெயர் எடுப்பதில்லை

நல்லவன் என்று
பெயர் எடுத்தவனெல்லாம்
நல்லவனாய் இருப்பதில்லை

நல்லவனாகவும் இருந்து
நல்லவன் என்று
பெயரும் எடுத்தவன்
அரிதிலும் அரிதானவன்

அப்படி அரிதானவன்கூட
எந்தக் காலமும்
எல்லோரிடத்தும்
நல்லவன் என்று
பெயரெடுத்ததுமில்லை

ஒரு கெட்டவன்
மனிதர்களின்முன்
நல்லவன் என்று
பெயரெடுக்க முடியும்

ஒரு நல்லவன்
மனிதர்களின்முன்
கெட்டவன் என்று
பெயரெடுத்திருந்தாலும்
இறைவனின்முன்
நல்லவன் என்றே
பெயரெடுப்பான்

நல்லவனாய் இல்லாமல்
நல்லவனாய்ப்
பெயர் மட்டும் எடுக்கப்
பாடுபட்டவனுக்கு
இரு சபைகளில் தண்டனை
உறுதியாக உண்டு

ஒன்று
மனச்சபை
மற்றது
இறைச்சபை

உயிரை
இழக்கவே முடியாது
ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்
மரணம் தோற்பதே இல்லை
துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால் பெற்றுத்தான் ஆகவேண்டும்
கொடுந்துயர் வலுக்கட்டாயமானது
கண்மூடி மண்மூடி முடிந்தாயிற்று
நெற்றிமூடி நித்திரைமூடி அழுதாயிற்று
நெஞ்சுமூடி நினைவுமூட வழியில்லை
காட்சிமூடி கண்ணீர்மூட முடியவில்லை
செய்திகேட்டதும்
கனடாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு
நெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்
என் நேரிளைய தம்பி காலிதுக்கு
ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் எழுதுகிறேன்
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனிடமிருந்து வந்தோம்
இறைவனிடமே செல்கிறோம்
இறைவன் அவனைத்
தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்
ஆமீன்
*
காலிது அசன்பாவா
மரணம் ஏப்ரல் 17, 2017 @Santa Maria
அடக்கம் ஏப்ரல் 19, 2017 @Livermore - Five Pillars Farm



23

சகோதரனே

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

சட்டென்று
எவரும் சொல்லும்
ஒரே வித்தியாசம்
உனக்கும் எனக்கும் என்ன

நகலெடுத்த நீ
எனக்குச்
சற்றே சிறியவன்

நேற்றைய நானாகத்தானே
இன்றைய நீ இருக்கிறாய்
இருந்தும்
இன்று நீ வேறு நான் வேறு
என்பதுதானே நிஜம்
.

உள்ளே குதித்தோடும்
இரத்த நதிகள் என்னவோ
ஒன்றுதான் என்றாலும்

அவற்றைக் கொப்பளிக்கும்
இதயங்கள் மட்டும்
வேறு வேறுதானே
.

நம்
தாயும் தந்தையும்
சொல்லித்தந்த பாடங்கள்
நமக்கு ஒன்றேதான்
என்றாலும்

நம் பயணங்கள் மட்டும்
வேறு வேறு தானே
.

பிரிந்தோம்

மீசைகளும் ஆசைகளும்
வளர வளர
நாம் பிரிந்தோம்சட்டைகளுக்காக வந்தச்
சண்டைகள்
சட்டுச் சட்டென்று
விட்டுப் போனாலும்

சொத்து சுகமென்று
வந்த சண்டைகள்
நம்மைச்
சும்மா இருக்கவிடவில்லையே
.

வெறுமனே ஓடும்போது
கரைகளைக் காயப் படுத்தாத
நம் நதிகள்

கோபம் என்றதும்
நாடு காடு என்றா பார்த்தன

உனக்கும் எனக்கும்
வீரம் விளைவித்தது
எந்தப் பாலோ
அந்தப் பால்தானா
நமக்குள்
விரோதத்தையும்
விளைவித்தது
.

நாம் பிரிந்தோம்

இந்த இடைவெளியில்
எனக்கும் உனக்கும்
எத்தனையோ உறவுகள்
புதுப் புது பந்தங்கள்
இரத்தக் கிளைகள்

எல்லாமும் ஆகின
.

இன்றோ
நானென் சாய்வு நாற்காலியின்
தனிமை மடியில்
மனதைத்
தொங்கப் போட்டுக்கொண்டு
மல்லாந்து கிடக்கிறேன்
.

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

நீ எங்கே

நீர் நிறைந்த
என் விழிகளுடன்
இன்று நான்
உன்னைத் தேடுகிறேன்

-அன்புடன் புகாரி 1997

அரசியல்வாதிகள் செத்து
என்றோ
பெருவணிகர்களாய்ப்
பிறந்துவிட்டார்கள்

இனியும் ஏன் இவர்களை
அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்
என்று நாம்
தப்பும் தவறுமாய்ச்
சொல்லித் திரியவேண்டும்

முதலே இடாமல்
முதல் எடுக்க
எத்தனைப் பாடுபட்டு
ராப்பகலாய் உழைக்கிறார்கள்

அவர்களது
விளம்பரயுத்திகளின் தரம்
வேறு யாருக்கேனும் வருமா

அவர்களது
கூட்டுச் செயல்பாட்டுப் பணிதான்
எத்தனை அபாரம்

அவர்களது
நிறுவன வளர்ச்சியும்
பெருலாப நோக்குப் பார்வைகளும்
எத்தனை வலிமையானவை

எதைக் கொடுத்தாலும்
விற்றுத் தீர்க்கிறார்களே

நேர்மை
பண்பு
நாட்டின் வளர்ச்சி
மக்கள் முன்னேற்றம்
என்று
எதை வேண்டுமானாலும்
கொடுத்துப் பாருங்கள்

ஓட்டு என்ற
வணிக உரிமம் பெற
ஒற்றைக் காலில் நிற்பார்கள்

ஒழுக்கத்தை ஏலம்விடுவார்கள்
உண்மையை விற்பார்கள்

எந்த விலை தந்தும்
ஓட்டுகளைப் பெற்றுத்தான் 
ஓய்வார்கள்

இனியும்
இந்த வணிகமணிகளை
அரசியல்வாதிகள்
என்று
பிழையாக அழைத்து
அவர்களின் பிழைப்பைக்
கொச்சைப் படுத்தாதீர்கள்

பெரு வணிகர்கள் என்றழைத்தே
கௌரவப்படுத்துங்கள்


- அன்புடன் புகாரி
பழக்கம்
வலிமையானது

ஆயின்
உண்மை
அனைத்தைக் காட்டிலும்
வலிமையானது

உண்மையறிவோம்
உயர்வோம்

- அன்புடன் புகாரி