*வாய்த்தவாய்*

உன்
திருவாய் திறந்துவிட்டால்....

திட்டு மட்டும்தான்
கொட்டுமா

கூர்முனைக்
கொம்பு மட்டும்தான்
முட்டுமா

கொடுந்தேள்
கொடுக்கு மட்டும்தான்
வெட்டுமா

ஈதென்ன
அழிந்தொழியாத
உன்
கொட்டமா

0

உன்
வாய் முகூர்த்தம்
என்பதென்ன
பேய் முகூர்த்தமா

0

வசையே நீண்டால்
வைதலே மூண்டால்
வெறுப்பே புரண்டால்
விசமே திரண்டால்

அதென்ன
வாயா
வயக்காட்டுத் தீயா
நாக்கா
நடுக்கூடத் தூக்கா

0

பார்
உன் வாய் திறந்தால்
எத்தனைப் பிணங்கள்
செத்தபின்னும்
அலறியடித்துக்கொண்டு
ஓடுகின்றன

பார்
உன் வாயை மூடக்கேட்டு
கொடுநெருப்புத் தீப்பந்தங்களும்
கதறியழுது துடிக்கின்றன

பார்
உன் வாய் மூடிய
அந்நொடியில்
ஜென்ம ஜென்மயாய் அடைபட்ட
ஆகாய தேவதைகளெல்லாம்
சட்டென்று விடுதலைபெற்று
படபடக்கும் சிறகுகளின்
மாமதுர ஓசைகளோடு
பறந்து பறந்து
பூத்துக் களிப்பதை

0

இந்
நோய் தீரும் நாளென்று
ஓர் நாள் இப்பிறப்பில்
உனக்குண்டா

ஒரே ஒரு முறை
உன் திருவாய் மலர்ந்து
இன்னிசையாய்
ஒரு சொல்
சொல்லித்தான் பாரேன்

அந்நொடியே
அரளிவிதை நச்சுக் காயும்
அமுதாகும்
சபிக்கப்பட்ட வெறி நாயும்
முயலாகும்

அன்றித்
திறவாதே திறவாதே
உன் வாயை
திறந்து
மூடாதே முடிக்காதே
பலர் வாழ்வை

அன்புடன் புகாரி

செல்லும் பாதை
அறம் அறம்
அறம் என்றே ஆனால்
செல்லும் சாலையும்
சேரும் சோலையும்
சொர்க்கம் சொர்க்கம்
சொர்க்கம் என்றே ஆகும்

கவிஞர் புகாரி
கவிமுகத்தின் அறிமுகம் - கனடா கவிஞர் புகாரி

https://www.youtube.com/watch?v=ZV6Fz0PiWVM

வெளிநாட்டில்
தமிழைக் காக்கிற ஒரு தூதுவராக
தமிழைக் காக்கிற
காவலர்களில் ஒருவராக

தமிழ்ப் படைப்பாளிகளில்
ஒரு முன்னணி
படைப்பாளியாகத் திகழ்கிற
புகாரியின் விழாவில்
கலந்துகொள்வதை நான்
பெருமையாகக் கருதுகிறேன்

வெல்க  புகாரியின் தமிழ்
வாழ்க அவர்தம் குடும்பம்  என்று
வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து


மற்றும்....

மூத்த எழுத்தாளர் மாலன்
கவிஞர் யுகபாரதி
கவிஞர் இந்திரன்
கவிஞர் வைகைச் செல்வி
கவிஞர் அண்ணா கண்ணன்
சென்னை பத்திரிகையாளர்கள்

அன்புடன் புகாரி
கனடாவில் மக்கள் பாதையின் தமிழ்க் கையெழுத்துத் திருவிழா

என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே 
உங்கள் அனைவருக்கும் 
என் அன்புவளர் நட்பு வணக்கம்

சகாயம் அவர்களைத் 
தெரியாதோர் இருப்பதரிது 

சகாயம் என்றால் நேர்மை
நேர்மை என்றால் சகாயம் என்று 
தமிழ் அகராதிகள் ஏற்றுக்கொண்டுவிட்டன

எத்தனை இன்னல்கள் வந்து 
எதிர்த்து நின்றாலும்
விடாப்பிடியாய் அவர் தன்
நேர்மையோடு மட்டுமே ஒட்டிக்கிடப்பது 
என்னை வெகுவாகக் கவர்ந்த 
அவரின் அறம் போற்றும் ஆண்மை

மக்கள் பாதை
என்று ஓர் இயக்கத்தை
ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி 
அவரின் வழிகாட்டுதலில் உருவாக்கி 
அதன் செயல்பாடுகளில் ஒன்றாக
தமிழ்க் கையெழுத்துத் திருவிழா ஒன்றை 
சென்னையில் அக்டோபர் இரண்டில் நடத்துகிறார்கள்

அந்தக் கையெழுத்துத் திருவிழாவை
உங்கள் அனைவரின் ஆதரவோடும்
கனடாவில் நிறைவேற்றும் பணியை
நான் மகிழ்வோடு ஏற்றுள்ளேன்

நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒரு சிறு காரியம்தான்

படிவம் ஒன்றினை நான்
அச்செடுத்துக் கொண்டுவருவேன்

அதில் உங்கள் பெயரைத் தமிழில் எழுதி
தமிழிலேயே கையொப்பமும் இட்டுவிட்டால் 
நம் பணி சிறப்பாக நிறைவடைந்துவிடும்

அப்படிக் கனடாவிலும்
தமிழுணர்வோடு 
தமிழர்களாய் ஒன்றிணைந்து
தமிழ்க் கையொப்பம் இடுவதை
ஒரு காணொளியாக எடுப்போம்
மக்கள் பாதைக்கு அனுப்பி வைப்போம்

வரும் சனிக்கிழமை 
2018, 29 செப்டம்பர் மாலை 
6:30 மணிக்கு
186 Staines Road, Scarborough விலுள்ள
என் இல்லத்தில் நிகழும்
தமிழ்க் கையெழுத்துத் திருவிழாவில் 
கனடாவாழ் அன்புத் தமிழர்கள் அனைவரும்
அன்புடன் கலந்துகொண்டு சிறப்பிக்க
உங்கள் அனைவரையும்
பேரன்புடன் வரவேற்கிறேன்

நன்றி
*
அழைப்பது 
நானல்ல 
அன்னைத்தமிழ்

வரப்போவது 
நீங்களல்ல 
உங்கள் 
தாய்த்தமிழ் உணர்வு

தரப்போவது 
வெறும் கையெழுத்தல்ல
தாய்நில மக்களின் 
தலையெழுத்தை மாற்றும் 
பொன்னெழுத்து

*
தலைவன் தலைவி 
தவப்பிள்ளைகள் என்று 
அனைவரும் வருக 
அமுதத் தமிழுக்கு 
உங்கள் 
கையெழுத்து முத்தம் 
தருக

*

உங்களின் 
பத்து நிமிடங்கள் போதும்
பொங்கு தமிழின் 
கையொப்பத் திருவிழா வெற்றிக்கு

அந்தப் பத்து நிமிடங்களோ
தமிழர் வாழ்வை மீட்டுத்தரும்
தங்கப் பொழுதுகளாய் உருவெடுக்கும் 
வரும்நாட்களில்

*
தமிழனுக்கு என்று ஒரு 
தனி நாடு இல்லைதான்
ஆயினும்
அவன் காலூன்றும் ஒவ்வொருநாடும்
தமிழின் நாடாய் பரந்து விரிவதை
மெய்சிலிரிக்கக் காண்கிறோம்

யாதும் ஊரே 
யாவரும் கேளிர்

வேறெவன் சொன்னான்
தமிழனே வென்றான்!

(குறுங்கால அழைப்பினைத் தொடுப்பதற்காக 
என்னை அருள்கூர்ந்து மன்னிக்கவும்)

அன்புடன் புகாரி
416-500-0972

*இறைவன் இல்லை*

இறைவன் இல்லை
என்று இயம்புவதும்
மதங்கள் இல்லை
என்று மறுப்பதும் 
சாதிகள் இல்லை
என்று சாடுவதும்
அவற்றை
இல்லை என்று
அழித்தெறிவதற்காக
அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று முழங்குவதற்காக
காட்டுமிராண்டித்தனம் ஆகாது 
என்று கர்ஜிப்பதற்காக
வன்முறை கேடு 
என்று வலியுறுத்துவதற்காக
தீண்டாமை தவறு 
என்று தடுப்பதற்காக
மட்டுமே

அறமற்ற
கூடாதுகளைச்
செய்யாதிருக்கும் ஆத்திகர்களும்
அவற்றை
அடையாளங் காட்டும்
நாத்திகர்களும் 
உயர்ந்தவர்கள்தாம்

வேரையே
அறுக்கச் சொல்லிக்
கதறுவது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால்
மட்டும்தான்

அன்புடன் புகாரி
*அழுகையும் சிரிப்பும் தூரமில்லை*

இந்த வாழ்க்கை வினோதமானது. ஆனந்தத்தில் ஆடும்போது காலம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. ஆனந்தம் வடிந்து, கொடுந்துக்கம் பற்றிப் புறட்டிப் போடும்போது, ஆழமான தத்துவ வரிகள் நெஞ்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அவை பெரும்பாலும் விரக்தி வரிகளாகவும் நம்பிக்கையைச் சிதைக்கும் முட வரிகளாகவும் இருப்பதால், அவற்றை நான் பொதுவெளிகளில் பகிர்வதில்லை. ஆனால் இந்தக் கவிதையின் முதல் நான்கு வரிகள் என் வாழ்வின் ஒரு மிக முக்கிய காலகட்டத்தை அழுத்தமான என் நினைவில் கொண்டுவந்து நிறுத்துவதால், அவசியம்தான் என்று எண்ணிப் பகிர்கிறேன். மடியும் வரைக்கும் துயரம் என்பதெல்லாம் சுத்தப் பொய். அந்த நேரக் காயத்தின் வேதனைச் சொற்கள் அவை. அதன் பின் நான் ஏராளமான இன்பங்களைத் தாராளமாகச் சுகித்துதுவிட்டேன் சுகித்துக்கொண்டும் இருக்கிறேன் என்பதே நான் இங்கே வாழ்க்கையின்மீது முன்வைக்கும் மேலான நம்பிக்கை. சத்தியம், வாழ்க்கை இனிமையானது, அதில் வந்துபோகும்ம் துயரங்கள் அந்த இனிமையை நமக்கு எடுத்துச் சொல்லும் தத்துவப் பாடப் புத்தகங்கள்.

என்னை மீறும் எண்ணங்களே
என் இதயம் எங்கும் காயங்களே
மண்ணில் வாழ்க்கை மாயங்களே
மடியும் வரைக்கும் துயரங்களே

0

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

0

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

அன்புடன் புகாரி
*முற்றுப்புள்ளி*

எல்லாமும் எந்நாளும்
தொடக்கப்புள்ளிகளே
முற்றுப்புள்ளி
என்றொரு புள்ளி
கிடையவே கிடையாது

அன்புடன் புகாரி



ஹஸ்னா

ஊத்துமலைத் தேனு
ஹஸ்னா
ஓடிவரும் மானு

பூத்தப்புதுப் பூவு
ஹஸ்னா
பொங்கிநிக்கும் பாலு

ஆத்தங்கரை வூடு
ஹஸ்னா
அழகு சந்தனக் கூடு

சாத்துக்குடி கண்ணு
ஹஸ்னா
சோத்துப்பாறை பொண்ணு

அன்புடன் புகாரி
இது நம் முதலிரவு
உன்
காதலை
நீ
சொல்
இது நம் முதலிரவு
என்
காதலை
நான்
சொல்கிறேன்
இது நம் முதலிரவு
நம்
காதலை
பின்
நாம்
மெல்லத்
தொடங்குவோம்
இது நம் முதலிரவு
தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது இறைவனுக்கு இணை வைப்பதா?
#அன்புடன்#இஸ்லாம்

கொடியைத் தொழுது துவாச் செய்யாதபோது, அது கூடாததாகாது.

தாயை மதிக்கிறோம்
தந்தையை மதிக்கிறோம்
தாய் மண்ணை மதிக்கிறோம்
தாய் நாட்டை மதிக்கிறோம்
தாய் மொழியை மதிக்கிறோம்
ஆசிரியர்களை மதிக்கிறோம்
தலைவர்களை மதிக்கிறோம்

இப்படியாய் நாம் உயர்வாக எண்ணி மதிப்பவர்கள் அல்லது மதிக்கும் பொருட்கள் ஏராளம். அவையெல்லாம் இறைவன் ஆகாது/ஆகமாட்டான் ஒரு நல்ல முஸ்லிமிற்கு.

அதைத் தெளிவாக அறியாதவன் நல்ல முஸ்லிமும் அல்ல.

மதிக்க வேண்டியவற்றை மதிக்காமல் செல்வது நல்ல முஸ்லிமிற்கு அழகல்ல.

இமாமை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

ரசூலை மதிக்கிறோம் இறைவனைத் தொழுகிறோம்

என்ன சங்கடம் இருக்கிறது இதில்?

அன்புடன் புகாரி

*உருண்டைகள்*

உலகம்
உருண்டை

இந்த
வாழ்க்கையும்
உருண்டை

இயற்கையின்
இணையிலா நியதிப்படி
உலகம்
தட்டையாக இல்லாத போது
இந்த வாழ்க்கையும்
தட்டையாக இருக்க
வாய்ப்பே இல்லை

உலக உருண்டை
ஆதாரமே இல்லாத
வெற்றிடத்தில்
பிடிமானமே இல்லாமல்
சுற்றுகிறது

வாழ்க்கையும்
எந்த ஆதாரமும் இல்லாமல்
வெறுமையில்
பிடிமானமே இல்லாமல்
சுற்றுகிறது

ஒன்றை ஒன்று
ஈர்க்கும் ஈர்ப்பில்தான்
உலக உருண்டை
வீழ்ந்துவிடாமல் சுற்றுகிறது
தன்னைச்
சுற்றிச் சுற்றும்
உருண்டைகளையும்
வீழ்ந்துவிடாமல்
காக்கிறது

அவ்வண்ணமே
வாழ்க்கையும்
மாற்றமில்லாமல்

ஈர்ப்புதான் மையம்
ஈர்ப்புதாம் உலகம்
ஈர்ப்புதான் வாழ்க்கை

ஈர்க்காத
ஈர்க்கப்படாத
எதுவும்
வெற்றிடத்தில்
வெறுமையில்
சுற்றிச் சுற்றி
உலர்ந்து
மூச்சிருந்தபோதும்
மன மரணத்துள்
வீழ்ந்து மடிவே செய்யும்

அன்புடன் புகாரி


*கலைந்தார் கலைஞர்*

கலைந்தது
தங்கத் தமிழ்ச்சங்கம்

கலைந்தது
அரசியல் ஞானக்கூடம்

கலைந்தது
சாதுர்ய மறுமொழிக்கோட்டம்

கலைந்தது
போராட்டப் படைத்தளம்



*கலைந்தார் கலைஞர்*

சூரியனுக்கே
முகவரி தந்தவர்

சந்திரனையும்
எதிர்த்து நின்றவர்

கறுப்புக்கே
நிறம் வரைந்தவர்

கழகத்தோடு
உடன் பிறந்தவர்


*கலைந்தார் கலைஞர்*

எமனோடு
மல்யுத்தம் செய்தவர்

எமலோக
விருதுபல வென்றவர்

கலைந்தும்
கலையாத நிரந்தரர்

காலத்தால்
அழியாத மறத்தமிழர்


*கலைந்தார் கலைஞர்*

அன்புடன் புகாரி
20180807












சாதுர்யமாக விளையாடுகிறோம்
என்கிற பெருமையில்
அன்பான அன்பைக்
கொன்று புதைக்கிறார்கள்
சில அறிவாளிகள்

அன்புடன் புகாரி
முதியோர் இல்லம் நோக்கித்
தானே நடையைக் கட்டுபவரே
நாலும் அறிந்த முதியவர்

அன்புடன் புகாரி
எல்லாமே
தொடக்கப்புள்ளிதான்
முற்றுப்புள்ளி என்று
ஒரு புள்ளியே கிடையாது

அன்புடன் புகாரி

நீ வரும்போது

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

நீ என்னைக்
கொடுநெருப்பில்
தள்ளிவிட்டுக்
கண்டுகொள்ளாமல்
சென்றிருக்கிறாய்

ஆமாம்

நீ என் மீது
திராவகத்தைக் கொட்டிவிட்டு
திரும்பிப் பார்க்காமல்
ஓடியிருக்கிறாய்

உண்மைதான்

நீ என்னை
அனாதையாய் அறிவித்து
குப்பைத் தொட்டியில்
கொட்டிவிட்டுச்
சென்றிருக்கிறாய்

ஆனால்
என் செம்பவளமே

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

வா...

இன்றா?
நீ என்றோ
என் நெஞ்ச நதிக்குள்
நீராய் வந்தவன் தானே

நீ
வராமல் போயிருந்தால்
என் மனஆறு
வெறும்
சுடுமணற் கூடுதானே

நீ
என்
உற்சாக
உயிரல்லவா

நீ
என்
நிழலற்ற
நானல்லவா

வா...

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

ஏன்
எப்படி
எதற்காக

உன்மீதான
என்
உறவின் உணர்வை
நான்
ஒரு வார்த்தையில்
சொல்வதானால்
அப்படி
ஒரு
வார்த்தையே
உலக மொழிகள்
எதிலும்
இல்லவே இல்லை
என்பேன்

ஏன்
எப்படி
எதற்காக

நீ
வெட்டித் தின்று
துப்பிய சக்கையாய்
நான்
கிடந்தாலும்
ஒரு கோகினூர்
வைரமாய்
முத்துக்களால் அலங்கரித்தத்
தங்கத் தட்டில்
நான்
கிடப்பதாய்ப்
பெருமை கொள்வேன்

ஏன்
எப்படி
எதற்காக

கேட்டா
நான் உன்னைப்
பெற்றேன்

பெற்றுத்தானே
நானுன்னைக்
கேட்டேன்

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

எப்போது வருவாய்

வா....
வா....

நான் காத்திருக்கிறேன்

வா....
வா....

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

அன்புடன் புகாரி





டொராண்டோ தமிழ் இருக்கை
University of Toronto Chair in Tamil Studies
ஜூன் 25, 2018

Image may contain: 3 people, people smiling, people standing and suit

இன்று சரித்திரம் காணாத ஓர் அருமை நிகழ்ச்சி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இனிதாய் நடந்தேறியது. ஒரே மணி நேரத்தில் 600,000 கனடிய டாலர்களைத் தாண்டி மகத்தான வசூல். இதில் பாதிக்கும் மேல் நன்கொடை வழங்கியவர்கள் அமெரிக்காவிலிருந்து இதற்கென விமானத்தில் வந்திறங்கிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் எனும்போது மெய் சிலிர்த்தது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. அதை பெருவெற்றியுடன் திரட்டி நிறுவிய சூடு இன்னும் ஆறவில்லை. அந்தச் சூட்டோடு சூடாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அடுத்ததொரு தமிழ் இருக்கை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு 3 மில்லியன் கனடிய டாலர்கள் போதுமாம். அமெரிக்க டாலர்களில் கணக்கிட்டால் சுமார் 2.5 மில்லியன் டாலர்கள் போதும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் தலைவர் ஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் தொடங்கிவைத்த யோகமா இது என்று தெரியவில்லை. மின்னல் வேகத்தில் நன்கொடைகள்  'கொடை' (குடை)யின்றி நிற்கும் பெண்ணின் மீது விழும் மழையாகக் கொட்டிப் பொழிந்தன.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் சார்பாக ஜானகிராமன் 51,000 அமெரிக்க டாலர்களை (சுமார் 70,000 கனடிய டாலர்கள்) முதல் நன்கொடையாக வழங்கித் துவங்கிவைத்தார். பின் 50, 000, 25,000, 10,000 என்று பல்கிப் பெருகி வந்து குவிந்தன நன்கொடைகள்.

இரண்டு வருடங்களில் 3 மில்லியன் சேர்த்தால் போதும். 18 மாதங்களில் சேர்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள். போகின்ற போக்கைப் பார்த்தால் ஓரிரு மாதங்களிலேயே 3 மில்லியன் சேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் இன்னும் நன்கொடை வழங்கத் துவங்கவே இல்லை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே தமிழ் ஆர்வத்தோடு பயில அநேகம் பேர் இருக்கிறார்கள். மாணவ எண்ணிக்கை நிச்சயமாக ஹார்வர்ட் இருக்கையைக் காட்டிலும் பன்மடங்காய் அதிகரிக்கும் என்று நான் நம்புகின்றேன்.

தமிழக அரசிடமிருந்து வாழ்த்துச் செய்தி வேறு வந்தது. அடுத்து நன்கொடையும் வரக்கூடும்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் MP நேரில் வந்து வாழ்த்துச் செய்தி வழங்கினார். கனடிய அரசு நிதியுதவி செய்யுமா என்று தெரியவில்லை. தமிழுக்கென்று கனடிய அரசும் ஏதேனும் செய்யத்தானே வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

எனக்குள் சற்றே கவிதைச் சிறகுகள் படபடத்தன. அப்படியே எழுதி வைக்கிறேன் ஆனந்தத்தோடு கீழே:

*

உலகெலாம் தமிழ் இருக்கை!

இருகை குவித்து நறுமுகை விரித்து
இருக்கை இருக்கை என்றார்கள்
காணுமிடமெலாம்

ஏதென எட்டிப்பார்த்தேன்
அட இறக்கை இறக்கை
எங்கும் இறக்கை என்றே
கண்டேன்

ஒவ்வொன்றாய் இறக்கைகள்
வெடித்துப் படபடக்க
அடடா
வான் கிழித்துப் பறக்கும்
வைரப் பறவையாய்த்
தமிழ்

தமிழ்த்தாய்க்கு
புலம்பெயர் ஏக்கப் பிள்ளைகள்
எடுத்துக் கட்டும் பொன்னாரங்கள்
அள்ளி வழங்கும் பொற்கிழிகள்

நீறு பூத்த நெருப்புத் தமிழ்
இங்கே பற்றி எரியுதடி
தங்கமே தங்கம்
என்று பாடத் தோன்றியது

*
உலகில்
ஏழாயிரம் எட்டாயிரமாய்
மொழிகள் மொழிகள்

இருந்தும்
ஏழே ஏழுமட்டுமே
அவற்றுள் செம்மொழிகள்

செம்மொழித் தேர்வின்
தகுதிகளோ பதினொன்று
அவற்றுள்
ஆறு மொழிகள் பெற்றது
ஏழோ எட்டோதாம்

அத்தனையும் பெற்றது
உலகில்
ஒரு மொழிதான்
ஒரே ஒரு மொழிதான்
அது நம் தமிழ் மொழிதான்
தமிழா தமிழா
அது நம் தமிழ் மொழிதான்

*
உலகின்
பழம்பெரும்
பல்கலைக் கழகங்களின்
இருக்கைகளுக்கு
ஏற்றப் பெருமை சேர்க்கும்
எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே

அன்புடன் புகாரி



கார்பரேட்
காசு குவிக்க
மனித உயிர்களை
உண்ணத் தொடங்கி
காலங்கள் ஆகிவிட்டனதாம்

ஆனாலும்
இன்று
இப்போது

அரசியல் தலைகளைத் தின்று
அரசு நிர்வாகங்களைத் தின்று
காவல் அதிகாரங்களைத் தின்று
மனிதநேய அமைப்புகளைத் தின்று
நீதிமன்றங்களைத் தின்று

மனித உயிர்களைத்
தங்குதடையின்றி
விழுங்கிநிற்கும்
அவலக் காட்சி

ஜனநாயகத்தின்
ஒட்டுமொத்த வீழ்ச்சி

ஜனநாயகத்தை
பூட்ஸ் கால்களால்
ஏறி மிதித்து நின்று
கார்பரேட்டின்
வீர முழக்கம்

ஒட்டுமொத்த
உலக அழிவிற்கான
சங்கின் முழக்கம்

அன்புடன் புகாரி

நன்றியுரை

என் புத்தக வெளியீட்டிற்கு வந்து சிறப்பித்த டொராண்டோ வாழ் தமிழர்களுக்கு நான் சொன்ன நன்றியுரையின் துவக்கமாக இப்பாடலை வாசித்தேன். இது சிந்துவகைப் பாடல். இசைகூட்டிப் பாடிப்பார்க்கலாம்.

*


இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
  இருப்போரில் பலருக்கும்
  அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
  சிரிக்கின்ற தமிழ்நாடோ
  வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
  வளமான மண்ணுக்குப்
  பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
  செழித்தோங்க நெல்வார்க்கும்
  எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
  நாளெல்லாம் அணைக்கின்றேன்
  நல்லதமிழ்ச் சொல்லை

மானந்தான் தமிழர்தம் எல்லை - உண்ட
  மண்தாண்டி வந்தும்மண்
  மறந்ததே இல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
 வார்த்தைக்குள் உயிராக
 வரவேண்டும் ஓடி

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
   டொராண்டோ தமிழர்க்கென்
   நன்றிகளோ கோடி

ஆண் பெண் ஆடைபற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் மிகக் குறைவு.

தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கோத்து பெண்களை மட்டும் துணி மூட்டைக்குள் கட்டுவதுதான் எளிதானதாக இருக்கிறது பலருக்கு

இஸ்லாம் என்ற பெயரில்....