விடுபட்ட நரம்புகளில்
விட்டுவிட்டும்
பொடிபட்ட எலும்புகளில்
புதைபட்டும்

இடிபட்ட மத்தளத்தின்
துடியதிர்வில்
விடைகேட்டு நடுக்கத்தில்
எனது உயிர்

கிழிபட்ட நெஞ்சத்தின்
சந்துகளில்
கீறலிட்ட இசைத்தட்டின்
பாட்டாக

****
முதுமை


இளமொட்டுக் காலத்து
நினைவலைகள்
இடைவிடாத லயத்தோடு
பொழுதெங்கும்

காற்றடித்தச் சுடுமணலின்
வரிக்கவியாய்
கணக்கற்று மேனியெங்கும்
சுருக்கங்கள்

சுருக்கத்தின் இடுக்குகளில்
சரிந்துவிழும்
சுவையான அனுபவத்தின்
பழங்கதைகள்

நான்கூட மழலைதான்
அண்டத்தில்
சூரியனின் வயதென்ன
கொஞ்சமோ

ஏனெனக்கு பூமித்தாய்
இளையவளோ
என்சிரிப்பு குழந்தைக்கு
ஒவ்வாதோ

ஊன்றுகின்ற கம்பெனக்கு
இன்னொருகை
மூன்றாவது காலென்பது
அறியாப்பொய்

கையைத்தான் நானூன்றி
நடக்கின்றேன்
கைக்கிடையே கம்பொன்றை
வைக்கின்றேன்

முதுமைநிலை என்பதுவும்
சிலந்திவலை
வலையோடு சிலந்திகூட
நானேதான்

சாவென்னும் காற்றுவந்து
வீசும்வரை
தினமோடித் திரிகின்றேன்
எனக்குள்ளே

விழிப்புக்கும் நித்திரைக்கும்
இடையிலொரு
மங்கலான மோனநிலை
எனக்குள்ளே

தனிமையென்று தனித்துவொரு
பொழுதுமில்லை
தனிமைதானே நானென்று
ஆனநிலை

எனைச்சுற்றிக் கேட்கின்ற
சப்தங்கள்
அத்தனையும் இன்றெனக்கு
நிசப்தங்கள்

நினைவுகளில் கனவுகளில்
நின்றாடும்
அந்நாளின் ஓசைகளே
செவிப்பறையில்

வந்துமண்ணில் விழுந்தபோது
அழுதநாளும்
எனக்கேநான் சொல்லாத
பிரிவுநாளும்

ஒன்றென்றே ஆவதையும்
கண்டீரோ
இரண்டுக்கும் ஞாபகத்தில்
இடமுண்டோ

சாவினின்று கையணைத்து
எனைக்காத்த
முன்பறியா புதியவனின்
அன்புமுகம்

ஒருமுறையே கண்கலந்த
தேவதையின்
ஒருநாளும் மறவாத
அழகுமுகம்

ஓய்வென்று ஒதுக்கிவைத்த
தனிமைநாளில்
உயிரேந்தி எனைக்கண்ட
ஈரமுகம்

ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
இவைபோல
அத்தனையும் காணவேண்டும்
இந்நாளில்

இன்றுகூட இறுக்கமாக
நான்பற்றும்
என்னுயிரின் பொருளென்று
எனக்குண்டு

என்னைவிட்டு முன்போன
என்னவளின்
இடுப்பழுக்குச் சேலைநுனி
தலைப்பு அது

முழுமொத்த விழிவிரித்து
நான்காண
முற்றாக என்பேத்தி
தெரிவதில்லை

விழிமொத்தம் நான்சுருக்கிக்
கூர்ந்தாலென்
வாழ்க்கைக்கு அர்த்தமெனச்
சிரிக்கின்றாள்

நோக்கித்தான் நிற்கின்றேன்
மரணத்தை
நெஞ்சிலின்று உணர்கின்றேன்
இன்பத்தை

நோக்கியநாள் வந்தாலது
சுகந்தானா
நெஞ்சேது நானேது
அறிவதற்கு

No comments: