13 குபுக் குபுக் குற்றாலம்


நான் கவிதை எழுதினால் என் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டி அது வேறு எங்கும் செல்லாத நாட்கள். நான் வெட்கப் படுவேன்தான், என் கவிதைகளை வேறு எவரிடமும் காட்டுவதற்கு. அது என் முதல் காதலை அது முளைத்தபோதே ஊர் கூட்டிச் சொல்லுவதைப்போல எனக்குச் சங்கடமாய் இருக்கும்.

ஏனெனில் கவிதை என்பது அப்போதெல்லாம் ஒரு வகையில் எனக்கு என் இதய ரகசியம்தான். பிறகுதான் புரிந்துகொண்டேன், என் இதய ரகசியங்கள்கூட என் வார்த்தை வசீகரத்துக்காக, பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைதான் என்று.

அதன்பின்னும் நண்பர்கள் என் கவிதைகளை வாசிக்கும்போது என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இது உன் சொந்த அனுபவம்தானே என்ற கிண்டல் அதில் இருக்கும். என் அனுபவம்தான். துவக்கத்தில் அது முழுக்க முழுக்க என் அனுபவம்தான். பிறகெல்லாம், மற்ற நண்பர்களின் அனுபவங்களும் எனக்குக் கவிதைகளாயின.

பார்த்துப் பாதி உணர்ந்து பிறகு மீதியை கற்பனையால் நிரப்பிக் கொண்டவையும் கவிதைகளாயின.

இப்போதெல்லாம், எங்கோ ஓர் மூலையில் அழும் குழந்தையின் உணர்வுகள் தெளிவாகக் கேட்கிறது. நான் எழுதுகிறேன். ஆக, கவிதைகள் சொந்த அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும், சொந்த உணர்வுகள்தாம் அவை. என்னால் உணராமல் எதையும் எழுதிவிட முடியாது.

இந்த உணர்வுகளைப் பெற்றதற்காக நான் பெரிதும் பெருமை கொள்கிறேன். அந்த உணர்வுகளே கவிஞன்.

நான் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வணிக நிர்வாகம் (Business Administration) படித்துக் கொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் குற்றாலம் சென்றேன். அதற்குமுன் நான் என் சிறுவயதில் சென்றிருக்கிறேனாம். எனக்கு நினைவு தெரியாத அனுபவத்தை என்னால் நினைவில் கொள்ள முடியாதென்பதால் அதை நான் சென்றதாய் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

கல்லூரியின் துடிப்புத்தனத்தோடு நான் குற்றாலம் சென்றதும், மலைமீது நெடுந்தூரம் ஏறிச்சென்று, தேனருவியில் தனித்து நீந்தியதும், நீ மீண்டுவந்தது அதிசயம், பெரும்பாலும் மரக் கிளைகளால் சுழற்றப்பெற்று மடிபவர்களே அதிகம் என்றதை அலட்சியப்படுத்தி சந்தோசமாய்க் கூச்சலிட்டதும்.... அது ஒரு வயது. எனக்கு நீந்தத் தெரியும் நான் தஞ்சாவூர்க்காரன் என்று என்னோடு வந்த சென்னைப் பொடியன்களுக்குப் பெருமையாய் அறிவிப்பதே எனக்கு அன்றைய சாகசமாகப்பட்டது.

இப்படியான தத்துப்பித்துச் சாதனைகள் என் வாழ்வில் அவ்வப்போது நான் செய்துவந்திருக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். பின் என் கல்லூரி கழிந்த அடுத்த ஆண்டே சவுதியில் நான் சிறைபட்டேன். ஆமாங்க... என்னால் அதை அப்படித்தான் சொல்லமுடியுங்க.... நான் சவூதி சென்று என் முதல் பணியில் அமர்ந்தேன். அதைத்தான் சிறைப்பட்டேன் என்கிறேன்.

ஒரு எட்டு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே உடகார்ந்திருப்பது கடுஞ் சிறையல்லவா? எப்படி இயலும் ஒரு கல்லூரி இளைஞனுக்கு? அதுவும் கவிதை மனம் கொண்ட பறவைக்கு? துடிப்பான இளைஞனுக்கு? அந்தப் பாலைவெளியில் என் கவிதை உணர்வுகளைத் துறந்து, நெருக்கமான நண்பர்களின் கச்சா முச்சா சம்பாசனைகளைத் துறந்து, பாரதிராஜா, பாலுமகேந்திரா, கங்கையமரன் லூட்டிகளைத் துறந்து, அடடா.... மகா கஷ்டம் மகா கஷ்டம். அது கொடுஞ் சிறையேதான்.

ஆனால் அதே சமயம் நான் சவூதியை மறக்கமாட்டேன். எனக்கு முதல் வேலை தந்ததும். என் குடும்பத்தை நிலை நிறுத்தியதும். எனக்கு அனுபவங்களை வாரிக்கொடுத்ததும் சவூதிதான். மனம் நெகிழ்ந்து சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

அந்தக் காலக்கட்டத்தில், ஒரு அறிவிப்பு குமுதத்தில் வந்தது. குபுக் குபுக் குற்றாலம் என்ற தலைப்பில் கவிதை எழுதி பரிசு பெறுங்கள். கவிஞர் நிர்மலா சுரேஷ் பரிசுக்கான கவிதைகளைத் தேர்வு செய்கிறார். நானோ, சொந்தத்தில் எழுதி சொந்தத்தில் வாசித்து சொந்தத்தில் முகர்ந்து சொந்தத்தில் சுகப்படுபவன்.

ஆனாலும் நண்பர்களின் தூண்டுதலால், அலிபாபா இதழ்களில் என் கவிதைகளை இடம்பெறச் செய்திருக்கிறேன். மாலனின் திசைகளில் என் கவிதைகளை வரச்செய்திருக்கிறேன். நா. பார்த்தசாரதியின் தீபத்தில் என் கவிதைகளை ஊர்வலம் போகச் செய்திருக்கிறேன். வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த தாய் பத்திரிகையில், ஆசிரியர் பக்கத்திலேயே என் கவிதைகளை பிரசுரிக்கச் செய்திருக்கிறேன்.

ஆக, இந்த முதல் போட்டியில் கலந்துகொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

அது என் மகள் பிறந்த நேரம். முதல் குழந்தை. எத்தனை ஆனந்தமும் குதூகலமும் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். என் மகள் பெயரில் குபுக் குபுக் குற்றாலம் தலைப்பிற்கு என் போட்டிக் கவிதையை அனுப்பிவைத்தேன்.

பாலையில் காய்ந்துகிடந்த எனக்கு பசுமையாய் இருந்த குற்றால நினைவுகள் வார்த்தைகளை வாரி வாரித் தந்தன. அப்படியே பதிவு செய்தேன். நிர்மலா சுரேஷ் அக்கவிதையைத் தேர்வும் செய்துவிட்டார். ஏதோ பரிசுத்தொகை தருகிறேன் என்றார்கள் குமுதத்தினர். அட... அதெல்லாம் வேண்டாமய்யா.. இந்தப் பரிசு எனக்கு ஒரு கோடி பொன் பெறும் என்று எழுதி அனுப்பினேன்.

இப்போது பார்க்கும்போது, இது என்ன அத்தனை உசத்தியான கவிதையா என்று எண்ணத் தோன்றுகிறது. இதைவிட அருமையான கவிதைகள் பல நான் எழுதிவிட்டேன் என்றே நினைக்கிறேன். இக்கவிதையில் மேலோங்கி நிற்பது குதூகலம் தேடும் ஒரு இளைஞனின் ரசனை உணர்வுகள்தாம். அதற்குப் பரிசும் தேவைதான். அது எங்கே மீண்டும் நமக்குக் கிடைக்கிறது? சொல்லுங்களேன் பார்க்கலாம்?

ஆக நான் பரிசு பெற்ற முதல் கவிதை இதுதான். நான் கலந்துகொண்ட முதல் போட்டியும் இதுதான்.

குபுக் குபுக் குற்றாலம்

நம்ம ஊரு நயாகராவே

பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா

கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன் சிலீர்ச் சந்தங்களா

யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா

அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா

அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண.

என் காதலியின்
ஊடலிலா

2 comments:

Nandu said...

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண.

என் காதலியின்
ஊடலிலா

-அருமையான ஒப்பிடு.. குபுக் குபுக் குற்றலாம் உங்களின் சிறந்த படைப்புகளின் ஒன்றாகும்

Unknown said...

குமுதம் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைதான் இது நந்து