போறியேடி போறியேடி பொண்டாட்டி


ஒருநாள் மாலைப்பொழுது. நண்பர் ஒருவரோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். கவிதையெல்லாம் எழுதறீங்களே கானப்பாட்டு எழுத முடியுமா உங்களால் என்று கேட்டார். நான் கவிதையின் அனைத்து வகைகளையும் முயன்றுபார்க்கும் ஆர்வம் கொண்டவன். ஆனால் கானா என்று கூறிக்கொண்டு எதையும் எழுதியதில்லை. எனவே இதுவரை முயன்றதில்லை, இப்போது முயல்கிறேன் என்றேன். ஆனாலும் என் கானாவில் ஆங்கிலக் கலப்பை எதிர்பார்க்காதீர்கள் என்றேன். அது சென்னைத் தெருவுக்கு ஒத்துவராதே என்றார். சென்னைத் தெருவில் தமிழ் தெரிந்தவனே இருக்கக்கூடாதா என்றேன் சற்றே கோபமாக. சரி.. சரி... என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

இனி காட்சி வர்ணனை வேண்டுமே, அதை நீங்கள்தான் சொல்லவேண்டும் என்று கேட்டேன். கானாவுக்குப் பின்னணியாய் ஒரு சோகம் இருந்தால் நல்லது என்றார். சரி என்றேன். காட்சியைச் சொல்லத் தொடங்கிவிட்டார்.

ஒரு கணவன் வேதனையோடு அழுதபடி தண்ணியடித்துக்கொண்டே பாடுகிறான். மனைவி அவனை விட்டுப் பிரிந்து கோபமாகச் செல்கிறாள். ஆத்திரத்தில் கிளம்பியதால், பிள்ளைகளைக் கூட கூட்டிக்கொண்டு போகவில்லை. பெரிதாய்த் துணிமணிகளும் எடுத்துக்கொள்ளவில்லை. தன் வெறுப்பின் உச்சத்தில் அவனை உதறித் தள்ளிவிட்டு நடக்கவேண்டும் என்ற வெறி அவ்வளவுதான். இறுக்கமான முகத்தோடு போகிறாள்.

சில ஆண்டுகளாகவே அவர்களுக்குள் வேற்றுமை வந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. கணவன் எப்போதோ ஒரு தவறு செய்துவிடுகின்றான், அதை அறிந்த அவளால் இப்போதும் சீரணிக்க முடியவில்லை.

அவன் எத்தனையோ சமாதானம் சொல்லியும், எப்படி எப்படியோ அழுது கூறியும், தற்கொலைக்கு முயன்றும்கூட அவளால் அவனுடன் ஒட்டமுடியவில்லை. அவன்மீது மிகுந்த நம்பிக்கையும், பிரியமும் வைத்திருந்தவளுக்கு அவன் செய்தது மிகப்பெரும் துரோகமாகப்பட்டது.

சீ... என்று அவனை விட்டு மனதளவில் என்றோ பிரிந்துவிட்டாலும், ஊருலகிற்காகவும் வேறு வழியில்லை என்பதற்காகவும் ஒன்றாய்க் குப்பைக்கொண்டிக்கொண்டு இருந்தவள், திடுமென வந்த சண்டையால் வீட்டைவிட்டே வெளியேறுகிறாள். அப்படி அவள் வெளியேறி தெருமுனையைத் தாண்டும்வரை கணவன் பாடுகிறான் ஒரு கானா. கூட குறைச்சலை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று நண்பர் சொன்னார்.

இது வழக்கமா எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒரு விசயம்தான் என்பதால் இது பரவலாகப் போய்ச்சேரும் என்று நானும் ஒப்புக்கொண்டு எழுதத் தொடங்கினேன். புதிதாக நான் எதையும் கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை. அவர் சொன்னவற்றை அப்படியே கானாவாக மாற்றினேன். அவ்வளவுதான் என் பணி.

இது கானாதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். என் நண்பர் என்ன சொன்னார் என்று நான் பிறகு சொல்கிறேன் :)

இப்போதெல்லாம் கற்பனை செய்யும்போது சினிமா நடிகர்களின் முகங்கள் வருவதைத் தடுக்கமுடிவதில்லை :) பாடுவது நம்ம தாடி மணிவண்ணன் என்று நீங்களும் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு சுவாரசியத்திற்காகத்தான்!



போறியேடி போறியேடி பொண்டாட்டி - நீ
போனதென்ன போனதென்ன இன்னிக்காடி
பாரமோடி பாரமோடி பொண்டாட்டி - நீ
பெத்ததையும் விட்டுட்டியே பொண்டாட்டி

ஆடியோடிப் பாத்துப்புட்டேன் பொண்டாட்டி - வெறும்
அனாதையா நிக்கிறேன்டி பொண்டாட்டி
மாடிவீடு கெடச்சுதடி பொண்டாட்டி - உன்
மனசுமட்டும் கெடக்கலடி பொண்டாட்டி

ஆசைமேல ஆசைவெச்சேன் பொண்டாட்டி - உன்னை
அள்ளியள்ளி அணைச்சேன்டி பொண்டாட்டி
ஓசையில்லா ஊமையடி பொண்டாட்டி - நான்
ஒண்ணுமத்துப் போயிட்டேன்டி பொண்டாட்டி

செத்துச்செத்து வாழ்க்கையடி பொண்டாட்டி - நான்
செத்தப்புறம் குதிக்கலான்டி பொண்டாட்டி
வெத்துவேட்டுப் பயதான்டி பொண்டாட்டி - நான்
விசம் குடிச்சும் சாகலேடி பொண்டாட்டி

கத்திக்கத்திப் பாத்துப்புட்டேன் பொண்டாட்டி - நான்
கதறிக்கதறி அழுதுபுட்டேன் பொண்டாட்டி
சுத்திச்சுத்தி அடிக்கிறேடி பொண்டாட்டி - நான்
செத்தப்பொணம் ஆனவன்டி பொண்டாட்டி

ஊருவிட்டு ஊருவந்தேன் பொண்டாட்டி - உன்னை
உத்தமமா மணமுடிச்சேன் பொண்டாட்டி
தேடித்தேடித் தவிச்சேன்டி பொண்டாட்டி - நீ
தேவதையா வந்தியேன்னு நினைச்சேன்டி

ஓடியோடிப் போனியேடி பொண்டாட்டி - என்னை
ஓட்டஞ்சல்லி ஆக்கிட்டேடி பொண்டாட்டி
வாடிவாடி வெந்தேன்டி பொண்டாட்டி - வந்த
விசந்தொட்டுச் துடிச்சேன்டி பொண்டாட்டி

பட்டிக்காட்டில் பொறந்தேன்டி பொண்டாட்டி - தினம்
படிச்சுபடிச்சு வளந்தேன்டி பொண்டாட்டி
பட்டணமும் பாத்தேன்டி பொண்டாட்டி - நெசப்
பாசம்மட்டும் பாக்கலேடி பொண்டாட்டி

மடியக்கேட்டுப் படுப்பேன்டி பொண்டாட்டி - நீ
இடியக் குடுத்துப் போறியேடி பொண்டாட்டி
அடியடியா வாங்கிட்டேன்டி பொண்டாட்டி - இந்த
அனாதைக்கு யாரிருக்கா பொண்டாட்டி

பொறந்தநாளா துடிக்கிறேன்டி பொண்டாட்டி - நான்
பொறந்தமாதம் சித்திரையடி பொண்டாட்டி
பொறக்கும்போதே திட்டுப்பட்டேன் பொண்டாட்டி - என்னை
பெத்தவளே மொத்திவிட்டா பொண்டாட்டி

கூனிக்குறுகி வாழ்ந்தேன்டி பொண்டாட்டி - தினம்
குட்டுப்பட்டு நொந்தேன்டி பொண்டாட்டி
ஆணிமேல ஆணிதான்டி பொண்டாட்டி - நான்
அகப்பட்டது சிலுவைதான்டி பொண்டாட்டி

பாக்காததை பாக்கவெச்சே பொண்டாட்டி - இந்தப்
பாழும்மனம் மாட்டிக்கிச்சே பொண்டாட்டி
கேக்காதத கேக்கவெச்சே பொண்டாட்டி - நான்
கெட்டழிஞ்சு போனேன்டி பொண்டாட்டி

தூக்குப்போட்டும் தொங்கினேன்டி பொண்டாட்டி - அந்த
தூக்கும் கையவிட்டதடி பொண்டாட்டி
நோக்கிநோக்கி நிக்கிறேன்டி பொண்டாட்டி - ஒரு
நொடியில் சாவுவேணுமடி பொண்டாட்டி

பெத்தெடுத்தேன் ரத்தினங்கள் பொண்டாட்டி - அந்த
புண்ணியந்தான் கோடியடி பொண்டாட்டி
முத்துமுத்தா புள்ளைங்கடி பொண்டாட்டி - அந்த
மொகத்தப்பாத்து வாழுறேன்டி பொண்டாட்டி

சுடுகாட்டுப் பொணமானேன் பொண்டாட்டி - தெனம்
சுட்டக்கரு வாடானேன் பொண்டாட்டி
எடுபட்டப் பயலானேன் பொண்டாட்டி - நான்
எட்டணாக்குப் பத்தானேன் பொண்டாட்டி

எனக்கு ஒரு வழியச் சொல்லு பொண்டாட்டி - என்னை
எங்கயாச்சும் பொதச்சுப்போடு பொண்டாட்டி
உனக்குத்தீனி வேணுமடி பொண்டாட்டி - என்
உசுரைதின்னா செரிக்குதாடி பொண்டாட்டி

2 comments:

சேதுக்கரசி said...

கொஞ்சம் அதிக நீளமாக இருக்கறது, மற்றபடி ஓகே தான்...

Unknown said...

ஆமாம் சேதுக்கரசி, இதன் சில பத்திகளை மட்டும் எடுத்து இசையமைத்தால் போதும். அப்படித்தான் பல்கலைத்தென்றல் ஆரெஸ்மணி செய்வார் :)