குரானைப் பொருளறிந்துதான் ஓதவேண்டும். பொருளறிந்து ஓதாவிட்டால் அதனால் ஏதும் பயன் இல்லை என்று முகநூலில் எழுதி இருந்தேன்.

குர்ஆனை ஓதினால் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என்பது ஆதாரபூர்வமான நபிமொழி என்று நண்பர் ஒருவர் சொன்னார்.  

ஆதாரப் பூர்வம் என்பது விரிவாகப்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனாலும் அதை இப்போதைக்கு ஒத்தி வைப்போம்.

அந்த நபி மொழிக்குச் சரியான பொருளை நாம் உணர்ந்திருக்கிறோமா என்று இப்போது பார்ப்போம்.

பொருள் தெரியாமலேயே ஓதுதல் என்று இன்று சிலர் பிழையாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

அன்று நபிபெருமானார் காலத்தில் அவருடன் இருந்தவர்கள் அராபியர்கள்.

அராபியர்களுக்கு அரபு மொழி தெரியும்.

எழுதவும் படிக்கவும் தெரியாத அராபியர்கள் பலரும்கூட இஸ்லாத்தில் இணைந்திருந்தார்கள். அவர்களை ஓதவைப்பது பெரும்பாடு.

குரானை ஓதவைப்பதற்காக அதில் நன்மை உண்டு என்று சொல்வது இயல்பான ஒன்றுதான்.

ஓதுதல் என்றால் அன்று பொருளுடன் ஓதுதல் என்றுதான் ஆகிறது.

இங்கே நாம் பொருள் தெரியாமல் வெறும் சப்தங்களை ஓதினால் ஆயிரம் நன்மை பத்தாயிரம் நன்மை என்பது சரியானது என்று நினைக்கிறீர்களா?

நபிமொழியை அனுகும்போது அது சொல்லப்பட்ட காலம் எது? எவருக்குச் சொல்லப்பட்டது? எதன் காரணமாகச் சொல்லப்பட்டது? அதில் நம்பகத்தன்மை உள்ளதா? என்ற பலவிடயங்களையும் நாம் ஆய்ந்தறிந்து கருத்தில் கொள்ளவேண்டும்.

பாடப்புத்தகத்தை எடுத்துப் படி அதுதான் உனக்கு நன்மை பயக்கும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளிடம் சொல்வார்கள்.

பொருள் தெரியாமல் படி என்று சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வீர்களா?

நல்ல நூல்களை வாசித்தால் நன்மை உண்டாகும் என்று எல்லோரும்தான் சொல்கிறார்கள்.

பொருள் தெரியாமல் படியுங்கள் என்று சொல்வதாக எடுத்துக்கொள்வீர்களா?

பொருள் விளங்காமல் எதைப் படித்தாலும் அதில் எந்த நன்மையும் கிடையாது.

இதை நபிகளார் மீண்டும் உயிர்பெற்று வந்துதான் சொல்ல வேண்டுமா? நம்மால் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமமா அது?

நபிகளின் நாயகம் பொருளற்ற நம்பிக்கைகளை ஒதுக்கிவைத்தவர் ஒழித்துக் கட்டியவர்.

அன்புடன் புகாரி

No comments: