Showing posts with label * * 00 முகநூல். Show all posts
Showing posts with label * * 00 முகநூல். Show all posts
20161028 முகநூல்



*

Jeyaruban Mike Philip 

திரு.புகாரி! மதங்கடந்த மனிதாபிமானத்தைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். மதம் என்பது மனிதாபிமானமற்ற சூழலில் அவரவர்களால் அறிவுறுத்தப்பட்ட போதனை.

ஜெயரூபன், நீங்கள் கானலைக் கண்டு நிஜமென்று நம்புகின்றீர்கள்.
மார்க்கங்களின் நோக்கம் அறம் வளர்ப்பது மட்டுமே. அது பிழையானதா?

பிழைப்புவாதிகளும், ஆதிக்கவெறியர்களும், அரசியல் சில்லுண்டுகளும் மார்க்கத்தைப் பிழையாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நெருப்பு என்பது புனிதமானது. அதை கூரையில் வைப்பவனின் கையே வக்கிரமானது! இல்லை என்று சொல்வீர்களா?

*

முட்டி முட்டி மோதி மோதி கருகக் கருகத் துளிர்விட்டுத் துளிர்விட்டு முளைப்பதென்ன சாதாரணமா?

ஆனாலும் ஏற்க முடியவில்லையே இந்த வைரப்பயிரை, ஏன்?
உச்சகட்ட ஊழல்?
பிச்சைக்காரர்களாய்ப் பார்க்கும் பணக்காரம்?

எழுந்தால்தானே கவிழ்க்க வருவாய் என்று தரையோடு தரையாய்க் கட்டிவைத்திருக்கும் அதீத அதிகாரம்?

எல்லாம் தொலையட்டும்
மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே அம்மா!

ஆனாலும் நீ நலம்பெற வேண்டும் எழுந்து நடமாடவேண்டும்!

நீ இல்லாததால் மட்டுமே இங்கே தங்கம் விளையப் போவதில்லை அதே ஊழல்தான் இன்னும் அதிக விளைச்சல் காணப் போகிறது!

*

>>> மதமாகி சகமனிதனை எதிரியாக பார்க்க வைக்கும் போது அதை விமர்சிப்பது தேவையாகி விடுகிறது ஐயா!<<<

அடுத்த ஊர்க்காரனையும் எதிரியாய்ப் பார்ப்பது மனித இயல்பு. அதுதான் ஒழிக்கப்பட வேண்டும். நான் அறிந்து எந்த மதமும் இன்னொரு மதத்தவனை அழிக்கவோ வெறுக்கவோ சொல்லவில்லை. அயலானை நேசி என்பது கிருத்தவம் முஸ்லிம் இரண்டிலும் சொல்லப்பட்டவை. புத்தரோ மகாவீரரோ எவரையும் எதிரியாகப் பார்க்கச் சொல்லவில்லை. மனித வக்கிரங்களை எதனோடு முடிச்சுப் போட்டாலும் அது கெட்டது என்றாகிவிடும்.
அரசியல் அவசியமானது அதனுள் வக்கிரம் புகும்போது அது கேடுகெட்டதாகிறது. சுத்தம் செய்ய வேண்டும் அதற்குக் காமராஜர்கள் தேவையே தவிர அரசியல் ஒழிப்பால் நாடு அனாதையாகிவிடும்!

*

மூடநம்பிக்கைகளிலிருந்து தனிமனிதன்தான் திருந்த வேண்டும்.
அவன் காதுகொடுக்கத் தயாராக இருந்தால் ஒரு கோடி மூடநம்பிக்கைகளைக் கொட்டிவிட்டு ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலிக்க ஆட்கள் நிறையவே உண்டு. அந்தப் பிழைப்பில் வாழ்ந்தவர்கள் அன்று ஏராளம். ஆனால் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் நம் கல்வி தந்த அறிவுக்கான சவால்.

*

ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும் எல்லா வயதிலும்
எல்லாப் பெண்களுக்கும் கிடைத்தலே வேண்டும்!


20160925 முகநூல்

*
நாம்
நம் தமிழை
வேறு இனத்திடமும் சென்று
என்றுமே
திணித்ததில்லை

எங்களிடமே
அதைக்
கட்டிக்காக்கத்
திராணியற்றுத்
திணறுகிறோம்
*


நிசத்தில் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கைதான். ஆனால் கற்பனையில் வாழ்வது பல்லாயிரம் வாழ்க்கை அதுதான் இலக்கிய வாழ்க்கை. அப்படி வாழ்பவன்தான் கவிஞன் கலைஞன்

*

Murugan Arumugam >>>>மந்திரங்களை உச்சரிக்கும்போது நம் உள்ளுக்குள் நிகழும் அதிர்வுகள் நமக்குள் மாற்றம் உருவாக்குபவை. அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும் பயன் தரும்<<<<<
ஒருவரின் மனம் அப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அது நெடுங்காலம் நீடிக்காது.
ஒரு மூதாட்டி மருத்துவரைப் பார்க்க வந்தாள்.
என்ன செய்கிறது என்று கேட்டார் மருத்துவர் தலையில் ஒரே வலி என்றால் மூதாட்டி. சரி என்று ஸ்டெத்தை எடுத்து அவள் மார்பில் வைத்து இதயத்துடிப்பைச் சோதிக்க முயன்றார் மருத்துவர்.
டாக்டர் எனக்கு தலையில்தான் வேதனை. என் தலையில் வைத்துப் பாருங்கள். என் நெஞ்சாங்கூடு நன்றாக வே இருக்கிறது என்று கோபமாகச் சொன்னாள் மூதாட்டி.
மருத்துவரும் தலையில் ஸ்டெத்தை வைத்துப் பார்த்துவிட்டு, தலைவலிக்கு மருந்துகொடுத்தார். சட்டென்று மூதாட்டியின் தலைவலி பூரண குணமாகிவிட்டது ;-)
மருத்துவர் முட்டாள் அல்ல, மன இயல்பை உணர்ந்த சாதுர்யக் காரர் 

*
இஸ்லாம் என்பது மதம். மதத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
சாதியை மாற்றமுடியுமா?
கிருத்தவர்கள் இஸ்லாமியர்கள் போன்றே இந்துக்களும்.
ஆனால் இந்துக்களில் சாதி இருப்பதால் யாரும் இந்துமதத்துக்குள் நுழையவே முடியாது. இதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
ஆரியர்களின் வருகையின் பின்னரே தமிழர்களுக்கு இந்துமதம் வந்தது.
காலகட்டம்தான் வேறே தவிர எல்லோரும் மதம் மாறியவர்களே! அதில் பிழையில்லை. இன்றும் மாறலாம். என்றும் மாறலாம். ஏனெனில்

மதம் என்பது
மூர்க்கம் அல்ல
மார்க்கம்
*

மதம்
என்பது
மூர்க்கம்
அல்ல
மார்க்கம்
*

சிலருக்குப் புகழ்ந்து தரப்பட்ட பட்டங்களும் பின்னாளில் சாதியானது. அது அந்தக் காலம்.
இந்தக் காலத்தில்...
கலைஞர் என்று ஒரு சாதி வரமுடியாது.
உலகநாயகன் என்று ஒரு சாதி வரமுடியாது
இசைப்புயல் என்று ஒரு சாதி வரமுடியாது
ஏனெனில் இன்று அறிவு வளர்ந்தவர்களே அதிகம். ஆனாலும் பழயனவற்றை மனரீதியாக்ப் பற்றிக்கொண்டு எப்படி விடுவது என்று அறியாமல் தவிக்கிறார்கள்.

*
Ananthi Ananthi இது எப்போ ! இப்படி எல்லாம் அடுத்தவர்களை வேதனைப்படுத்துவதால் இவர்களுக்கு என்ன லாபம்<<<<
மனித வக்கிரம். அறம் ஆரம்பம் முதலே அழுத்தமாகப் போதிக்கப்படாததின் காரணம். பணம் சம்பாதிக்க கல்வியைப் பயன்படுத்துகிறார்கள். உலக அமைதி வாழ்க்கைக்கு அறவாழ்க்கைக்குக் கல்வி பயன் தரவே இல்லை

*

ஒன்றாக தீண்டாமையில்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
ஆரியம் திராவிடம் மட்டுமல்ல, சீனம், ஈரோப், அரபு எல்லாம் தீண்டாமை இல்லாமல் இருக்க வேண்டும். உலகம் ஒரு குடையின் கீழ் ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருக்க வேண்டும்

*
ஆரியர் திராவிடர் கலந்து வாழத் தொடங்கிய காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், பல கலாச்சாரங்கள் பண்பாடுகள் காலப்போக்கில் கலந்தநிலை அடைவது இயற்கை.
இன்று கனடாவில் வெள்ளைக்காரனுக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்தக் கலாச்சார வேற்றுமையும் இல்லாத நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள்.
என்றால் வெள்ளைக்காரனும் தமிழனும் ஒருவர்தான் என்று முறையிடலாம் சில காலத்தில்
*

கல்வி என்பது அறம் போதிக்க என்றும் ஆகவேண்டும், வெறுமனே வருமானத்திற்கான கருவியாக இருந்தால் உலகம் உருப்படாது

*
Gnana Suriyan

>>>
பிறப்பின் வம்சம் அவர்களது வாழ்வியல் முறையில் வெளியில் அடையாளம் காணப்படுகிறார்கள்
<<<

ஒரே வீட்டில் ஒரே தகப்பன் தாய்க்குப் பிறந்தவர்களின் வாழ்வியல் முறைகள் மாறுபாடானதாக இருக்கும் நண்பரே 

*
Gnana Suriyan

 >>>இரத்தமாதிரியில் தெரிவதல்ல சாதி<<<<
ஒரு பத்து பேரை உங்கள் முன் நிறுத்தினால், அவர்களைப் பார்த்து இவர் இன்ன சாதி என்று சொல்லிவிடுவீர்களா நண்பரே 

*
Gnana Suriyan யார் சொன்னாங்க நயன்தாரா இந்துவாக இடைப்பட்ட காலத்தில் மாறினாரே
எந்த சாதியில்?
Gnana Suriyan இந்துவாக சாதி என்பது தேவையல்ல
என்றால் அவர் சாதியை என்னவென்றுதான் அழைப்பீர்கள்?
Gnana Suriyan அவருக்கு சாதிய அடையாளம் இருந்தால் அதனைக்கொண்டு அழைக்கலாம்
இல்லையெனில் அழைக்க இயலாது
அவர் யாரைத் திருமணம் செய்துகொள்வார்?
Gnana Suriyan அவர் யாரை விரும்புகிறாரோ அவரை யார் விரும்புகிறாரோ அவரை
அவர் எந்தச் சாதிப் பெண்ணையும் போய் பெண் கேட்க முடியுமா?
அவருக்குத்தான் எந்த சாதி அடையாளமுமே இல்லையே ;-)
Gnana Suriyan அது அவரவர் சொந்த விருப்பம். அப்பெண்ணும் அவரின் தந்தையின் சொந்த விருப்பம்
சாதியற்றவரை மணம்முடிக்க அவர்களுக்கு விருப்பம் எனில் செய்வதில் தவறில்லை
விருப்பமில்லையெனில் அதுவும் தவறில்லை
Gnana Suriyan விருப்பமில்லை என்பது தவறில்லை என்றால் அவருக்குப் பெண் கிடைக்காத நிலையையல்லவா தரும்:-)
இந்து மதத்துக்குள் மாறி வந்தவர்கள் திருமணமே செய்யாமல் வாழ வேண்டுமா?
இதற்குப் பதில் சாதிகள் இல்லை என்றீர்கள் என்றால் அவர் எத்தனை ஆனந்தமாய் இந்துமதத்தில் இருப்பார்?
இப்போது அவரை அனாதை ஆக்குகிறீர்களே? அவர் ஏன் மதம் மாறி இந்துவாக ஆகவேண்டும்? தண்டிக்கப்படவா?












                       
;-)


*
*

20160920


நீ 
அழுக்கா புனிதமா
*
கழிப்பிடத்திற்கும்
தொழுகைக்கும்
ஒன்றே தேகம்


*
தொழுகை என்பது
உடலையும் மனதையும்
தூய்மைப் படுத்திக் கொள்வதற்கான
தொடர்ப் பயிற்சி

*
இன்றைய
உன்
வாழ்க்கை
உன்னுடையதல்ல
வணிகர்களினுடையது

*

எல்லோருமே கிழித்த கோட்டைத் தாண்டும் சீதைகளாய்.....
ராவணனுக்கு யாரைத்தான் கவர்ந்துசெல்வது என்றே அறியாத பெருங் குழப்பம்....
மூக்கறுபட்ட நிலையிலேயே வாகனச் சட்டங்கள்...
மாயமான்களாகக் கட்டற்ற மூர்க்கச் சுதந்திரம்...
வனம்தான்... வாசம்தான்... வனம்விட்டு எப்போது வருவார்களோ நாட்டுக்குள்...
ஊரும் ஊர்திகளும் நடு இரவுக் கொடுங்கனவுகளாய்...
திடுக்கிட்டுத் திடுக்கிட்டு எத்தனைமுறைதான் எழுவது

*
அரசியலைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அரசியலுக்குள் நல்லவர்கள் வரவேண்டும்
மதவெறிகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் மதங்களுக்குள் உள்ள நல்லவர்கள் பேசவேண்டும்

*
பாரபட்சம் பார்த்து வந்தால் அது அற அன்பு கிடையாது.
நாச திசையில் பயணப்பட்டால் அது அற அறிவு கிடையாது
அறம்தான் அனைத்திற்குமான மையப்புள்ளி
அறம் சொல்லித் தருவது மட்டுமே நல்ல பாடசாலை, நல்ல மார்க்கம், நல்ல வீடு, நல்ல நாடு, நல்ல உலகம்!
*
நீரைவிட
ரத்தம்
மலிவானது
காவிரி

*
தீண்டாமை தீண்டப்படாது
சாதி சாதிக்காது
மூடநம்பிக்கை மூடப்பட்டிருக்கும்
ஏழ்மை ஏழ்மைப்பட்டிருக்கும்
இஸ்லாம்
*
குர் ஆனை பொருள் தெரியாமல் மனப்பாடமாக ஓதிக்கொண்டே இருந்தால் அதுவே சொர்க்கம் செல்லும் வழி என்று நினைப்பது மூடநம்பிக்கை!
பொருள் தெரியாமல் ஓதப்படும் எதுவும் எதையும் தராது.
பொருள் தெரிந்து ஓதப்படும் ஒற்றைச் சொல்லும் இறைவனின் அருகாமைக்கு அழைத்துச் செல்லும்

மூட நம்பிக்கை களைவோம்!
ரமதான் மாதம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களால் மீண்டும் பலமுறை குர் ஆன் பொருள் தெரிந்து ஓதப்படுகிறது. அவர்களுள் ஒருவராய் இணைவதே மார்க்கம் பேணுவது!
*
ரத்த ஆற்றிலேயே நீந்தாமல், கொஞ்சம் நல்லது கெட்டதையும் பார்த்தால்தானே ரத்த ஆறு நிற்கும்?
எந்த ஆட்சி மழை நீரைச் சேகரித்தது?
எல்லா ஏரிகளையும் பிளாட் போட்டுத்தானே விற்றது?
குழியை நீங்களே தோண்டிக்கொண்டு, பழியை யார் மீதும் போடவேண்டாம்
*

*
கருநாகங்களை முடக்க வேண்டியவர்கள் அறம் சார்ந்து ஆட்சியில் இருப்பவர்கள்.
இன்று அறம் சார்ந்த ஓர் அரசைச் சொல்லுங்கள் நண்பரே
இன்று எல்லாமே கருநாகங்களில் பிடியில்தான். அதில் மயங்கித்தான் நீங்கள் பேசுகிறீர்கள்>
கருநாகங்களை எதிர்த்து அதை அழிக்க எது சரியான வழியென்று அறிந்து அதையே உலகுக்குச் சொல்லும் நல்ல மனம் உங்களிடம் வளரவேண்டும்.
அதை விட்டுவிட்டு அறம் சொல்ல வந்த மார்க்கம்மீது எகிறுவது கருநாகங்கள் உங்களை ஆளுகின்றன என்பதையே காட்டுகின்றது
*
வேலு.ஞானம். பெருஞ்சேரிரி >>>>கருநாகங்கள் நாச வேலைகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது அல்லாஹூஅக்பர் என்று முழங்குகிறார்கள்.
நாச வேலைகளுக்கான ஆயத்த பணிகளின் போது அல்லாஹு அக்பர் என்றே முழங்குகிறார்கள்.
நாசவேலைகளை செய்து முடித்துவிட்டும் அல்லாஹூ அக்பர் என்றே முழங்கிறார்கள்.
நாச நிகழ்வுகளில் பலியாகிறவர்களும் அல்லாஹூ அக்பர் என்று முழங்கியபடியே பலியாகிறார்கள்.
பலியானவர்களுக்கான சிறப்பு தொழுகையிலும் அல்லாஹூ அக்பர் என்றே முழங்குகிறார்கள்.
என்னங்க இது.
யாருங்க இந்த அல்லா?
எதை தவிர்க்கலாமோ
எதை தடுக்கலாமோ அதையெல்லாம் விட்டுவிட்டு ...
போங்க.. போங்க.<<<<
நீங்கள் குழந்தைத்தனமாகக் கேட்கிறீர்களா? அல்லது உங்களின் சிந்தனையின் உயரமே அவ்வளவுதானா?
பசுத்தோல் போர்த்திய புலி தன்னைப் பசு என்று அழைத்துக்கொள்ளுமா அல்லது புலி என்று அழைத்துக்கொள்ளுமா?
அடிப்படையே தெரியவில்லையே உங்களுக்கு நண்பா, வருந்துகிறேன்.
விழித்துக்கொள்ளுங்கள்!
எது சரி எது பிழை என்று அறிவது பகுத்தறிவு. அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் வேண்டும்

*



தமிழ் சமஸ்கிருதம்

பிறமொழிச் சொற்களில் தவிர்க்கமுடியாதனவற்றை மட்டும் திசைச்சொற்கள் என்று தமிழ்ப்படுத்திப் பயன்படுத்த தொல்காப்பியம் இலக்கணம் தந்தது.
அதற்காக தமிழ் சொற்கள் அனைத்தையும் அழித்துவிட்டு பிறமொழிச் சொற்களை மட்டும் வைத்துக்கொள்ளச் சொல்லவில்லை.
ஒரு பழந்தமிழ்ப் பாடலை வாசித்துப் பொருள் அறிய ஒரு தமிழன் தமிழ் ஆசிரியரையே நம்பி இருக்கிறான். இது தமிழனுக்கு அவமானம். இதற்குக் காரணம், நாம் தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திலிருந்து அழித்துவிட்டு பிறமொழிச் சொற்களைத் தமிழில் அதிக அளவில் ஏற்றுக்கொண்டதுதான்.
குறிப்பாக சம்ஸ்கிரதம் தமிழை அழிக்க அரும்பாடுபட்டிருக்கிறது

*
சிலப்பதிகாரத்திற்கு முன்பே வடமொழி தமிழுக்குள் வந்துவிட்டது.
ஞானம் என்பது சிலம்பில் இருப்பதால் அது தமிழ்ச் சொல் ஆகிவிடாது.
தமிழ்ச்சொல்லான அறிவு என்பதைவிட ஒரு துளியும் மேம்பட்டும் விடாது.
தமிழர்களே தமிழைத் தாழ்த்திப் பிறமொழியை உயர்த்துவதுதான் சாபக்கேடு!

*


*
>>>ஏன் சமஸ்கிருதம் அழிந்து தமிழ் இன்றும் வாழ்கிறது?<<<
ஒரு மொழி வாழவேண்டும் என்றால் அது மக்கள் மொழியாய் இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் மொழி. எளிய மக்களின் இனிய மொழி.

அந்த மொழியால்தான் அவர்கள் பல்துலக்குகிறார்கள் பசியாறுகிறார்கள் கற்பனை செய்கிறார்கள் காதல் கொள்கிறார்கள் மொத்தத்தில் வாழ்கிறார்கள்.
தமிழர்களின் மரபணுக்களில் தமிழ் மொழி பல்லாயிரம் வேர்கள் பரப்பி விரிந்து கிடக்கிறது.
சமஸ்கிருதம் மக்கள் மொழி இல்லை. அது தேவ மொழி என்று அவர்களால் சொல்லப்பட்ட தெய்வ மொழியாகிவிட்டது. அதுவே அதற்கான கேடாகவும் ஆகிவிட்டது.
சமஸ்கிருதத்தை மிக உயரமான இடத்தில் உயர்த்தி வைக்க வந்தேறிய வடவர்கள் அரும்பாடு பட்டார்கள். வந்து சேர்ந்த அந்த மொழியைக் கொண்டு மண்ணின் வாசம் வீசும் மண்ணோடு வேர்களாய் வாழும் மொழியான தமிழைச் சிதைக்க அழிக்க வேரில் தீவைக்க அரும்பாடு பட்டார்கள்.
ஆனால் அவர்கள் மிக உயரத்தில் ஏற்றிவைத்து உச்சிமுகர்ந்து தேவமொழி என்று உயர்த்திச் சொன்னதே அந்த மொழிக்கு மகா தீங்கினைச் செய்தது.
கோவில்களில், புரோகிதர்களிடம், பண்டிதர்களிடம் இருந்தது சமஸ்கிருதம், ஆனால் சாதாரண மக்களிடம் அது இல்லாமலேயே போனது.
நான் புலம்பெயர்ந்து வாழும் கனடாவுக்கும் ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்வேன், தமிழைக் காக்க வேண்டுமென்றால், அதன் சங்க இலக்கியங்களை உயர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கானதாய் ஆக்குவதால் அது நிகழப் போவதில்லை.
மூன்று முக்கியமான விசயங்களால் மட்டுமே தமிழ் என்றென்றும் வாழும். அழிக்கவே முடியாததாய் இன்றுபோலவே நிலைக்கும்.
1. தமிழன் தமிழில் பேசவேண்டும்
2. தமிழன் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
3. தமிழனின் வாழ்வாதாரம் 50 விழுக்காடாவது தமிழிலேயே இருக்க வேண்டும்

*
>>>இரண்டும் அடிப்படையில் தூரத்து உறவுமொழிகளே, இரண்டுக்கும் இடையில் பல சொற்கள் மயக்கமான முறையில் உள்ளன,அதன் மூலம் தமிழா சமஸ்கிரதமா என அறிவது கடினம், ஏனெனில் இரண்டும் ஆபிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதே. பேசப்பட்ட மொழிகளே. <<<
தமிழ் ஆப்பிரிக்க மொழியல்ல! அப்படியாயின் இன்று ஆப்பிரிக்காவில்தான் அதிகம் தமிழர்கள் இருக்க வேண்டும்.
தமிழ் பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மொழி. தம்மொழி தமிழ்மொழி!
அதை எத்தனைச் சுருக்கியும் அதைத் தென் இந்தியப் பரப்பைவிட்டு நீக்க முடியவில்லை.
தமிழிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதம் தன் கைவரிசையை வெகுவாகக் காட்டி இருந்தாலும், தமிழ்நாட்டை அத்தனை தூரம் அழிக்க முடியவில்லை.
கடைசியாக சமஸ்கிரத்தை ஏற்றி எற்றி தமிழிலிருந்து மலையாளம் பிரித்தார்கள். அது நடந்தே ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.
சிலப்பதிகாரம் எழுதிய தமிழன் இன்றைய கேரளக்காரன்தானே?
சமஸ்கிருதம் வந்தேறிய மொழி. அதை வாழ்ந்த மொழியாம் தமிழோடு ஒப்பிடுதல் கூடாது.
மொழி என்ற நிலைப்பாட்டில் எல்லா மொழிகளையும் அள்ளி அணைக்கலாம். ஆனால் வேரில் தீ வைக்க வந்த மொழி என்றறிந்தால் அது இயலுமானதாக ஆவதில்லை.
சமஸ்கிருதம் ஈரானியர்களின் பெர்சியாவின் ஈரோப்பியர்களின் மொழி. அதற்கும் தமிழுக்கும் அனைத்து அமைப்பிலும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டென அறிஞர்கள் சொல்வார்கள்.
Sanskrit is a member of the Indo-Iranian subfamily of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Avestan and Old Persian.

*
>>>யப்பான் மற்றும் தாய்லாந்த மொழிகளில் திராவிட அல்லது தமிழின் கலப்பு இருக்கிறது என அறிஞர்கள் கூறுகிறார்கள். <<<
தமிழ், சைனாவிற்கும் ஜப்பானுக்கும் கொரியா தாய்லாந்து இந்தோநேசியா என்று பலநாடுகளுக்கும் பயணப்பட்ட மொழி.
அன்றைய தமிழர்கள், அறிவியல், வர்மக் கலை, சித்தமருத்துவம் என்று மிகவும் அறிவார்ந்தவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருந்தார்கள்.
ஆகவே தமிழ் தமிழன் செல்லும் இடமெல்லாம் பயணப்பட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சொல்கிறான் என்றால் அவன் எங்கெல்லாம் தமிழைக் கொண்டு சென்றிருப்பான் என்று சொல்லத் தேவையில்லைதானே?
*
Defend Snowden அன்பினிய முகமூடியாரே நீங்கள் சொல்வதெல்லாம் ஏற்கிறேன் ஆனால்
>>>தமிழும் இனி மெல்லச்சாகும் என்பது அசைக்க முடியாது இயங்கியல் விதியாகம்.<<<
இதை மட்டும் ஏற்பதற்கில்லை.

தமிழ்மீது பற்றால் மட்டுமே மகிழ்வோடு வாழும் மக்கள் இருக்கும்வரை அது மாண்டுபோகாது.
அப்படியான மக்கள் எந்நாளும் இருப்பார்கள் என்று நான் இன்னமும் காண்கிறேன்.
தமிழ் *போஜன* மொழியாக இல்லாவிட்டாலும் உயிரின் உரத்துக்கான மொழியாக இருப்பதால், தமிழர்கள் ஈரமுள்ளவர்களாக இருப்பதால் தமிழுக்கு இறப்பில்லை!

*

அறிவு ஞானம்

Ncr Kumar This is the trouble. If I feel comfortable to express in a language that you can also understand, why enforce? If I insist on your posting in a language of my choice then am I not a dictator?
1. இங்குள்ளோர் எல்லோருக்கும் நீங்கள் எழுதுவது போய்ச்சேரவேண்டும்
2. தமிழில் கருத்தாடவே என் முகநூல் பக்கம்
3. இங்காவது தமிழில் உரையாடுவோமே?
4. இங்ககூடவா தமிழில் எழுதமாட்டாய் தமிழா?
5. ஒரு தமிழன் தமிழில் எழுதுவதைவிட வேறு செய்யத் தகுந்த நல்ல செயல் உண்டா
*
அறிதல் என்பது ஒரு தொடர்
ஆதியும் அல்லாத அந்தமும் அல்லாத
ஓர் உயிர்த் தொடர்
மிகச் சிறிய எண்ணும் இல்லை
மிகப்பெரிய எண்ணும் இல்லை
அறிவும் அவ்வண்ணமே

*
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
என்பதெல்லாம் கவிதை.
நயம் கருதி உருவாக்கப்படுவது.
சுவாரசியம் கருதி எழுதப்படுவது.
ஒன்றின் துக்கத்தையும் துயரத்தையும் சொல்லும்போது இப்படியான அதீத உணர்ச்சியைக் கொட்டுவது.
அது ஒரு கலை. அவ்வளவுதான் அந்தக் கலையும் அறிவுதான். ஞானம் இல்லை.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
என்றால் மனித வாழ்வு நிலையானதில்லை என்றுதான் பொருள், ஆனால் மனிதவாழ்வே பொய் என்பது விரக்தியின் உச்சக்கட்டம்

*
யூகங்களால் கணிக்கப்படுவதை ஞானம் என்று சொல்வார்களேயானால் அது பிழை. அதுவும் அறிவுதான்.
இருப்பதைக் கொண்டு இல்லாதவற்றை உருவாக்கிப் பார்க்கும் அறிவு
இப்படி நடந்திர்ந்தால் அப்படி நடந்திருக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் கூடச் செய்யக்கூடியது
மூளையின் வீச்சம் எட்டுத் திக்கல்ல எண்ணாயிரம் திக்குகளில் எகிறிப் பாயும்.
*
அறிவு எத்தனை வகைப்படும் தெரியுங்களா? அதைக் குறிப்பாக
படிப்பறிவு
பட்டறிவு
என்று எளிமையாகப் பிரிக்கலாம்.
பின் பொது அறிவு, அடிப்படை அறிவு, பகுத்தறிவு, அறிவியல் அறிவு என்று போய்க்கொண்டே இருக்கும்
நீங்கள் சொல்லும் தானாக வருவது அடிப்படை அறிவு
அனுபவத்தில் வருவது பட்டறிவு
தேடலில் வருவது பகுத்தறிவு
மற்றபடி ஞானம் என்பது அறிவுக்கான சமஸ்கிருதச் சொல்.
கேள்வி ஞானம் என்றால் என்ன?
விஞ்ஞானம் என்றால் என்ன?
என்றெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்
*
ஞானம் என்பது அறிவு
அறிவு எகிறிப் பாய்ம் என்றால் ஞானம் எகிறிப் பாயும் என்று பொருள்
யூகங்கள் என்பது அறிவின் வழி வருவது. அறிவின்றி யாதொரு யூகமும் இல்லை
தேடுதல் நடத்துவது அறிவு. அறிவில்லாமல் எந்தத் தேடுதலும் இல்லை
*
இவ்வகை அறிவைத் தத்துவ அறிவு என்பார்கள்.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
உச்சி நனையும்வரை உன் தூக்கம் கலையும்வரை
மலர்ந்தும் மலராத பாதிமலராக
வளர்ந்த இளந்தென்றலே
சுவாரசியமான கற்பனை உலகம்
இதெல்லாமும் அறிவுதான். தனியே ஞானம் என்று ஏதும் இல்லை
அறிவு = ஞானம்

*
ஒரு எஸ் பி பால சுப்ரமணியன்
ஒரு பி சுசீலா
ஒரு கமல்ஹாசன்
ஒரு அப்துல்கலாம்
ஒரு ராமானுஜம்
ஒரு சாக்ரடீஸ்
பிறந்தவண்ணமே இருப்பார்கள். இது மரபில் மரபுக் கூறுகளில் நிகழும் உன்னதங்கள்.
சிலர் இதை இறையருள் என்பார்கள், சிலர் இதை இயற்கை விதி என்பார்கள்.
அறிவு கருவிலேயே உருவாகிறது என்பதை அறிதல் வேண்டும்.
பட்டறிவையும் படிப்பறிவையும் மட்டுமே எண்ணி இருத்தல் கூடாது
*
அறிவுக்குமேல் அறிவேயன்றி வேறில்லை அறிக!
அறிவுக்குமேல் ஒன்று வேண்டுமெனில் அது அன்பாகவும் அறமாகவுமே இருக்கவியலும்.
ஞானம் என்ற மொழிமாற்றுச் சொல்லாக இருக்க முடியாது.
*
அன்பும் அறிவும் ஒன்று சேர்ந்தால் அதன் பெயர் நல்லறிவு !
அறிவும் வக்கிரமும் ஒன்று சேர்ந்தால் அதன் பெயர் கெட்டறிவு
இதில் அறிவு என்னும் இடத்திலெல்லாம் ஞானம் என்ற சொல்லைப் போட்டும் வாசித்துக்கொள்ளலாம்.
தவிர ஞானம் என்பது எவ்வகையிலும் மேதாவித்தனமான சொல் அல்ல.

*
>>> மெய்ஞானம் -- சரீரரத்தின் உள்தாங்குதல் இல்லாமல் அமையும் சிந்தனையில் கிடைக்கப் பெறும் இறை தொடர்பு<<<<
சரீரத்தின் உள்வாங்கும் திறன் - ஐம்புலன்களும் மூளையும் செய்யும் பணி
சிந்தனை - மூளையின் செயல்பாடு

இறைத் தொடர்பு - நம்பிக்கை
இப்போது இவை மூன்றையும் ஒன்றாக இணையுங்கள்.
ஐம்புலன்களாலும் மூளையாலும் உள்வாங்காமல் சிந்தனை செய்து நம்பிக்கை கொள்ளும் காரியம்
இடிக்கிறதா இல்லையா?
ஐம்புலன்களாலும் மூளையாலும் உள்வாங்காமல் சிந்தனை என்றால் என்னபொருள்?
உங்களின் மூளை தன் செயல்பாட்டைச் சுத்தமாக இழந்துவிட்டபின், கோமா நிலைகூட இல்லை, பிண நிலை.
பிணநிலையில் சிந்தனையா?
குழப்பிக்கொள்ளாதீர்கள், தெளிவாகச் சிந்தியுங்கள். மீண்டும் ஒருமுறை முயலுங்கள், நான் காத்திருக்கிறேன்
அறிவு = ஞானம்
அறிவு தமிழ்ச்சொல்
ஞானம் சமஸ்கிருதச் சொல்
இன்னும் பலமொழிகளிலும் பல சொற்கள் உள்ளன.
எந்த மொழியும் தேவமொழியும் அல்ல நீச மொழியும் அல்ல. எல்லா மொழியும் அதனதன் வழியில் நல்ல மொழிகளே!
அரபு மொழி என்றால் உயர்ந்தமொழியும் அல்ல அரபிகள் என்றால் உயர்ந்தவர்களும் அல்லர் என்று இஸ்லாம் மிக அழுத்தமாகச் சொல்லும்.
*
>>>ஞானம் என்பது தமிழ் சொல் அல்ல என்பதை விஞ்ஞானம் மற்றும் அஞ்ஞானம் எனும் தமிழ் சொற்களால் மறுக்கப்படுவதைப் போலவே , மெயஞானம் என்பது இறைத் தொடர்பினை ஏற்படுத்தும் மெய்யறிவே என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்களின் மறுக்க முடியாத உண்மை வரிகள்.<<<
விஞ்ஞானம் = அறிவியல்
அஞ்ஞானம் = அறிவின்மை
மெய்ஞானம் = மெய்யறிவு
அனுபவம் என்ற பெயரில் சிலரின் கற்பனை கரைபுரண்டு ஓடும்.
தனக்குப் பின் ஏதோ ஒளிவட்டம் வந்ததாய் கிளர்ச்சியடைவார்கள்.
எல்லாம் மனோவியாதிதானே அன்றி வேறில்லை.
நானும் அப்படியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு
என் கற்பனையைத் தட்டிவிட்டால்
அப்படியே போகாத இடமெல்லாம் போய்விட்டுவந்துவிடுவேன்
விவரிக்க முடியாத கற்பனை வெளிகளை எல்லாம் சாத்தியப்படுத்தித் தருவது எது?
மூளை மூளை மூளை
மூளைக்கு அப்படியானதொரு ஆற்றல் உண்டு. மூளையைக் கணினியால்கூட இதுவரை வெல்ல முடியவில்லை. இனி வருங்காலங்களால் வெல்லமுடியுமா என்று தெரியவில்லை.
வெறும் வேற்றுமொழிச் சொற்களில் மயங்கவேண்டாம். தரையிறங்கி வாருங்கள்!

*
>>>சிந்தனைத் திறன் அற்ற அல்லது நீங்கிய நிலையில் இறைத் தொடர்பு கிட்டுகிறது<<<
சிந்தனை அற்ற நிலையில் ஒன்று கிட்டினால் அதை உணர முடியுமா?
சிந்தியுங்கள்!
சும்மா இருடா என்ற என் கவிதையை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். அதைப் பகிர்கிறேன் மீண்டும்.
*
உனக்குச் சொன்னால் புரியாது என்று இறுதியாகச் சொல்லப் போகிறீர்கள்
நான் கண்டதை நீ காணவில்ல என்று அடுத்துச் சொல்லக் கூடும்
நாம் நம் கற்பனைகளிலிருந்து வெளிவருவது என்பது சிரமமான காரியம்தான்.
ஆனால் காலத்தின் ஓட்டத்தில் அது ஓடுடைத்து வெளிவரும் குஞ்சுகளாக வெளிவரும்.
நான் உங்களை நோகடிப்பதாக நினைத்தால் அதற்காகக் கவலைப்படுகிறேன். ஆனால் நான் தெளிவுகளை முன்வைத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எனக்கு உறக்கம் வராது

*
>>>அனுபவ பாடங்களை ஏற்க மறுக்கும் அறிவுத் திறனை நாம் பெற்றதே அநீதிகள் பெருகும் வாய்ப்புகளை உருவாக்கியது <<<
அனுபவப் பாடங்களை முழுக்க முழுக்க ஏற்பதுதான் அறிவு.
நேற்றைய அனுபவம் இன்றைய பாடம். இன்றைய அனுபவம் நாளைய பாடம்.
அப்படியாய் வளர்ந்ததே அறிவு. ஆகவேதான் அது வளர்ந்த வண்ணமாகவே இருக்கிறது.
>>>சிலிர்க்கும் உணர்வுகள் இறைத் தொடர்பில் கிட்டாது<<<
இறைபக்தி பெருகி நிறைந்து நிற்போர் சிலிர்ப்பில்தான் எழுகிறார்கள். அதையே பேரின்பம் என்கிறார்கள். பெண்வழி வருவதோ வெறும் சிற்றின்பம் என்கிறார்கள்.
>>>>எம்பெருமான் நபிகள், இந்த நிலையிலேயே இறைவனிடம் செய்திகளை பெற்றார் <<<
அவர் ஆழ்ந்த தியானத்தில் கடுந் தவத்தில் ஒன்றையே நினைத்திருந்து ஒன்றையே பெற்றார். சிந்தனையைத் தீட்டித் தீட்டித் தீட்டி மகா அறிவினைப் பெற்றார்.
எனக்கொரு வேதனை இப்போது. ஞானம் என்ற பிறமொழிச் சொல் பற்றிய இக்கருத்தாடலில் நான் மீண்டும் மார்க்கத்துக்குள் இழுத்துடப்படுகிறேன்.
*



 









 




 

மனம் போன போக்கில்

வாழ்த்துக்கள் சிந்து! 
உன்னை நினைத்துப் பெருமைப் படுவதை நான் கௌரவமாகக் கருதுகிறேன்!
உன்னைக் கண்டு வளரப்போகும் பெண் வீராங்கனைகளுக்கு இப்போதே மலர் தூவுகின்றேன்!
பூப்பந்தாடும் பூ
நீ புயல் பந்தாடி வென்றதோ வெள்ளிக் கின்னம்!
முதலடியே இத்தனை நெருக்கத்தில் என்றால் உன் அடுத்த அடி எப்படி இருக்கும்?
உன்னைக் கண்டாவது இந்தியா மதவிரோதங்களைக் கைவிட்டு சாதியப் பாகுபாடுகளைக் கழுவித் துடைத்துவிட்டு ஊழலை எரித்துவிட்டு பெருமைகொள்ளும் தளங்களில் வளரட்டும் கண்மணி!
வாழ்த்துகிறேன் உன்னை மீண்டும் மீண்டும்!
இந்த வாழ்த்து உனக்கே உனக்கானதல்ல, உன்னைக் கண்டு உயரப்போகும் அத்தனை நல்வீரப் பெண்களுக்கும்!

(ஒலிம்பிக் வெள்ளிக்கோப்பை வாங்கிய பூப்பந்தாட்டப் புயல்)

*
தங்கங்களாகத் தாங்களே இருப்பதால் வெள்ளியும் வெண்கலமும் போதும் என்று நினைத்தார்களோ
அல்லது தங்கத்தை ஆண்களுக்கென்று விட்டுவைத்தோம் என்று அடக்கத்தோடும் நக்கலோடும் சொல்லப் போகிறார்களோ                                           
*
*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்*
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்" என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்.
*அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா? என்று கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.*
இல்லை என பதில் சொன்னார்.
*அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா? என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.*
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
*யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
*உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.*
*மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை.*
எனவே வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்.
வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.
நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.
நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.
மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.
*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.*

*

>>>குஷ்பூவை குடும்பப் பெண் தரத்திற்கு காணமுடியுமானால்
தெய்வமாகவும் காணலாம்.
தாசி அபஞ்சிக்கு கம்பன் அடிமை.<<<
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாய் இருங்கள்.
கலைஞரின் அடிமையாய் இருங்கள்
அம்மாவின் அடிமையாய் இருங்கள்
ரஜினியின் அடிமையாய் இருங்கள்
தலயின் அடிமையாய் இருங்கள்
குஷ்புவின் அடிமையாய் இருங்கள்
பறத்தையின் அடிமையாய் இருங்கள்
கொலைகாரனின் அடிமையாய் இருங்கள்.
ஆனால் இவர்களை எல்லாம் கடவுளாக்கி அழியாதீர்கள்.
அறம் என்பதன் பொருள் சுத்தமாகச் செத்துச் சுண்ணாம்பாய்ப் போய்விடும்       
வேந்தன் அரசு >>>நம் வேலையும் தப்பு கண்டுபிடிக்கிறதுதான், சிறக்கவிரும்புவோர் வரவேற்பார்கள். புகழ்ச்சி விரும்புவோர் தவிர்ப்பார்கள்<<<
தப்பு கண்டுபிடிப்பது தவறு கண்டு பிடிப்பது குறைகண்டு பிடிப்பது குற்றம் கண்டுபிடிப்பது எல்லாம் உண்மையில் மிகப் பெரிய வேலை.
எளிதில் கைகூடாத உயர்ந்த கலை.
அதைச் செய்வோரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்
ஆனால் அதை முதலில் நம்மிடம்தான் நாம் செய்ய வேண்டும்.
அடுத்தவனிடம் *மட்டும்* கண்டால் செய்தால் அது முழு மூடனின் செயல் அறிவிலியின் செயல் அற்பனின் செயல் கேவலப் புழுவின் செயல்!

*
அரசியல் விளையாட்டு என்று ஒரு பிரிவு ஒலிம்பிக்கில் இல்லையா?
இருந்தால் இந்தியா இரண்டாயிரம் மூவாயிரம் என்று தங்கப் பதக்கங்களைத் தட்டிச் செல்லும்

*
கமல் நடிக்கத் தொடங்கிய நாள்முதல் நான் அவரின் ரசிகன்!
இன்று இந்த நாள் வரை எந்த படமாக இருந்தாலும் அதில் கமல் தோன்றினால் என்னால் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பார்க்க முடியும்.
செவாலியே எல்லாம் அவருக்குப் பெரிய விருது என்று சொல்லிவிடமாட்டேன்.
கமலுக்கு விருது தர யாருமில்லை ஏதுமில்லை என்றே சொல்வேன்.
கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி மட்டுமல்ல உலகத்திற்கே அவர்தான் கலைக்கொடி என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகநாயகன் என்ற பட்டம்தான் அவருக்கு மிகச் சரி என்று நான் அவ்வப்போது நினைப்பேன்.

*
வேந்தன் அரசு <குர்-ஆன் ஒரு மொத்த நூலாக அப்படியே வந்து இறங்கிவிடவில்லை.>
அதனால்தான் சால்மன் ரஷ்டி ”சாட்டனிக் வெர்சஸ்” என்றார். முதல் வெர்சனை மக்கள் ஏற்காமல் விரட்டிவிட்டார்கள். பின்னர் பிற வெர்சன்கள் வந்தன.
>>>
சாத்தான் என்பது ஒருவருக்குள் இருக்கும் தீய சக்தி. உங்களிடம் சாத்தான் நிறைந்திருக்கிறான் வேந்தன். அதனால் இஸ்லாத்திற்கு யாதொரு கேடும் இல்லை. உங்களுக்கே கேடு!
முகம்மது நபிபெருமானார் அதீத இறைபக்தி யுடையவர். அவர் ஹிரா என்னும் குகையினுள் சென்று ஊனுறக்கமின்றி சில நாட்கள் தொடர்ந்து இருப்பார்.
அவர் இறைவன் அருளியதாய்க் கூறும் வசனங்கள்தாம் இறை வேதங்கள்.
எப்போதெல்லாம் கலக்கம் வருகிறதோ எப்போதெல்லாம் இன்னல்கள் வருகின்றனவோ, எப்போதெல்லாம் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லையோ. அப்போதெல்லாம் அவர் இறைவன் முன் மன்றாடி நிற்பார். கடுந் தியானத்தில் இருப்பார். வரும்போது இறைச் செய்தியோடு வருவார். இதுதான் அவரின் நம்பிக்கை.
மக்கா நகரில் இருந்தபோது வந்த வசனங்களை மக்கி என்பார்கள். அவை ஆரம்பகால வசனங்கள். பின் மதினா வந்தபின் வந்த வசனங்களுக்கு மற்றொரு பெயருண்டு.
நபிபெருமானார் இந்த உலககுக்கு மகா அறத்தைத் தந்திருக்கிறார். தூய்மையான உலகத்தைக் காட்டி இருக்கிறார்க். எல்லோரும் இன்புற்றிருபப்துவே அல்லாது வேறொன்றுமிலலி என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்திருக்கிறார்.
நீங்கள் யார்? சல்மான் ருஷ்டியார்?
நிலைதடுமாறிய அறமற்ற நாவுடைய சாத்தான் கைப் பொம்மைகள்தானே?
உலகம் முழுவதும் சுபிட்சமாய் வாழ வழி சொன்னாரா சல்மான் ருஷ்டி?
அல்லது வழிசொன்னீர்களா வேந்தன் அரசு.
சும்மா மூளைக்குள் அரிப்பெடுத்து வம்பளக்கிறீர்கள். வேறென்ன சாதித்துவிட்டீர்கள்.
சாத்தானின் பிடியிலிருந்து விலகுங்கள். உங்கள் உள்ளக் கசடுகளைக் கழுவுங்கள். மனிதனாய் மாறுங்கள்!

*
தந்தையின் உள்ளம் தாயை மட்டுமே உயிரில் ஏற்றிக்கொள்ளும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.
’தவமாய்த் தவமிருந்து’ என்ற சேரனின் படம் தந்தையின் பாசத்தைச் சொல்லும் அருமையான திரைப்படம்.
பின் பிரகாஷ்ராஜ் ’அபியும் நானும்’ எடுத்தார்.
மகள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த வெற்றி என்று இயக்குனர் சேரன் கூறினார்.
எனது மகள் வழக்கில் நீதிபதிகள் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும், பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சேரன், திடீரென கீழே விழுந்து கும்பிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுதான் தந்தையின் உள்ளம்

*
ஒரு மூன்று பேர்!
பலமுறை புரியவைத்ததையே மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி வார்த்தைகளைப் போட்டுக் கேட்பார்கள்.
சரி இந்த முறை முழு விளக்கமும் தரலாம் என்று பக்கம் பக்கமாக எழுதிச் சொல்லான்லும். அப்போதைக்கு மட்டும் அப்படியே அகன்றுவிடுவார்கள்.
இரு தினங்கள் கழித்து மீண்டும் முருங்கை மரம் ஏறுவார்கள்!
கேள்விகள் மட்டுமே கேட்பார்கள். எந்த ஒரு தீர்வும் தரவே மாட்டார்கள்.
எந்தக் கேள்விக்கும் பதிலும் தரமாட்டார்கள்.
வாய்வன்முறைவேறு எகிறித் தாண்டும்.
என்ன செய்யலாம் இவர்களை    

*
இது சாத்தான்களே நிறைந்த உலகம். இறைவன் மீது அச்சம் கொண்டு அறம் அன்பு அறிவு சென்றால் அத்தனை சாத்தான்களும் அழிந்து இறைவனே நிறைந்த உலகம் மீளப்பெறும்.
இறைவனே நிறைந்த என்பதும் மனிதநேயமே நிறைந்த என்பதும் ஒரே பொருளுடைய இரு சொற்கள் 
*
உங்கள் தாயை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?
உங்கள் தந்தையை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?
உங்கள் சகோதரனை மரபணு சோதனை செய்யாமல் தாய் என்று நம்புவது அன்பா? அறமா? அறிவா?

*
Elamuruguporselvi Ramachandran ஆனால் இதெற்கெல்லாம் பின்னால் வேறு ஏதோ உலக சதி அல்லவா நடக்குறது போல் தெரிகிறது! இஸ்லாத்தை இழுப்பது பேருக்குத் தான் இல்லையா ஐயா?!
>>>>
ஆமாம்!
ஓர் உணர்ச்சிப் பூர்வமான விசயத்தை வைத்துத்தான் வீட்டில் அரசியல் செய்கிறார்கள்.
அப்படியேதான் ஊரிலும், நாட்டிலும் உலகத்திலும்.
அந்த அரசியலில் ஆதாயம் அடைபவர்கள் யார் என்று பார்த்தீர்களென்றால், ஏன் என்ற காரணம் சட்டென்று புரிந்துவிடும்   
*
என்னிடம் வரும் அர்த்தமற்ற கேள்விகளுக்கு நான் தரும் ஒரே பதில் இதுதான்!
இந்தக் கேள்விக்கும் எல்லோரும் இணக்கமாக வாழ்ந்து வன்முறையற்ற உலகம் காண்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
என்றால் உங்கள் திசை எது?
எதை நோக்கியது உங்கள் பயணம்?
அர்த்தமுள்ள பயணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா?
அல்லது கேவலமாக பயணத்தில் இருக்கிறீர்களா?
*
வில்லன்களைக் கொண்டுதான் நாம் நல்லதை ஊருக்குச் சொல்லமுடியும்.
ஒரு நல்ல கதையில் கண்டிப்பாக வில்லன்கள் வேண்டும்.
எது பிழை என்பதை வேறு எப்படி மக்களுக்குக் காட்ட முடியும்?

*
நீங்கள் பிழையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். நான் இதுகாறும் எழுதியவற்றை நீங்கள் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்.
தவிர, விரோதம் என்பது காரணமற்றது என்றால் நான் அதில் ஒன்றுமே செய்யமுடியாது.
விரோதம் என்பது அறியாமையால் என்றால் என்னால் நிறைய செய்ய முடியும்.
ஆக உங்கள் பயணம் வெறுப்பின் பயணம்!
உங்கள் பயணம் அன்பு அறம் அறிவு இணக்கம் வன்முறையற்ற வாழ்வு என்று ஆகும்போது, அவசியம் என்னிடம் வாருங்கள். நான் சொல்லும் ஒவ்வொன்றும் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.
அதுவரை நிச்சயமாகப் புரியாது 

*
Nandha Kumar
என்ன கேட்கிறார்கள்... எதைப்பற்றி என்று சொல்லுங்கள்... முடிந்தால் எனக்குத் தெரிந்ததையும் பகிர்கிறேன்
அவர்களிடமே கேளுங்கள்
ஆக்கப் பூர்வமாக எதையும் கேட்கவே மாட்டார்கள், அது மட்டும் உண்மை.
அவர்களின் கேள்வி எதுவும் இந்த உலக அமைதிக்கோ சிறந்த அறவாழ்விற்கோ நல்லிணக்கத்திற்கோ பண்பட்ட மனித நேயத்திற்கோ ஒரு சிறு கல்லையும் நகர்த்தாது.
அதுமட்டுமல்ல பலமுறை பதிலிட்ட கேள்வியாகத்தான் இருக்கும். புதிதாக ஏதும் இருக்காது
நீங்களே பதில் சொல்லுங்கள்
வன்முறை அற்றவர்களாய் அவர்களை மாற்றுங்கள்
ஓர் ஊர் என்றிருந்தால் அங்கே ஒரு நம்பியார் ஒரு வீரப்பா ஒரு மனோகர் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை நான் மறுக்க வில்லை,
ஆனால் என்னால் எம் ஜி ஆர் வேசம் கட்டமுடியாது 
எம்ஜிஆர் அப்படியே ஓரமா கூட்டிட்டுப் போயி கும்மு கும்முன்னு கும்மி எடுப்பாரு   
*
பெண்களின் உடை
பெண்களின் உடை என்பது அதை அணிகின்ற பெண்களின் விருப்பம்.
சாதி மதம் பண்பாடு கலாச்சாரம் என்று எதையாவது சொல்லி எந்த உடையையும் வலுக்கட்டாயமாக அணிய பெண்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
ஊருக்கு ஏற்ப உடை, வீதிக்கு ஏற்ப உடை, வீட்டுக்கு ஏற்ப உடை, தனக்கு ஏற்ப உடை என்று உடுத்தும் பெண்கள் முடிவு செய்யட்டும்.
ஏன் உடையில் ஆணாதிக்கமும் அதன் சுயநலமும் இனம், மதம், சாதி, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில்?
ஆயினும், வன்முறையைத் தூண்டும் உடை பெண்ணுக்கும் ஆணுக்கும் கூடவே கூடாது.
ஒரு பெண்ணால் காட்சி வன்முறை செய்து வலுவற்ற உள்ளங்களை உண்டு இல்லை என்று செய்யமுடியும்.

*
ஒரே ஒரு கேள்வி.
இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பது சரி. சாதிகள் கூடவே கூடாது என்பது சரி. அதுதான் இஸ்லாம் என்பது சரி.
ஆனால் சியா என்பதும் சுன்னா என்பதும் பிரிவுகள் தானே? சாதிகள் தானே? அவர்களுக்குள் திருமண உறவுகள் இல்லைதானே?
இந்தக் கொடுஞ் செயலின் பின் ஓர் இஸ்லாமியன் செல்லலாமா?
தன்னை ஏன் சுன்னா முஸ்லிம் என்று அழைத்துக்கொள்கிறான் ஓர் இஸ்லாமியன்?
நான் இஸ்லாமியன் எனக்குச் சாதி கிடையாது பிரிவு கிடையாது. பிரிந்து போகின்றவன் இஸ்லாமியன் இல்லை என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டாமா?

*
மார்க்கம் சாதியை அழிக்கிறது. அழித்தது.
ஒரு கருப்பினத்தவர், ஒரு தீண்டத்தகாதவர், ஒரு சிவப்பர், ஒரு கபில நிறத்தவர், பல சாதிகளாய் இருந்தவர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்தது மார்க்கம்தான்.
எல்லோரும் இங்கே சமம் என்று வணங்கும் இடத்தை மனித நேயம் மிக்கதாய்ச் செய்தது மார்க்கம்தான்
இல்லாதாரை உயர்த்த ஈகையை கட்டாயமாக்கியதும் மார்க்கம்தான்
அட இன்னும் ஆயிரம் சொல்வேன்.
ஆனால் நீங்கள்தான் செவிரராயிற்றே  
உங்கள் காதில் நான் ஏன் ஊதவேண்டும் சங்கு  
ஆளைவிடுங்கப்பா... ஜூட் !!!

*
கனவின் விதையே தையலே
கண்டதும் விழுந்தேன் தையிலே
கவிதை
கவிதை

*
இந்த வேறுபாடுகளை எல்லாம் சொல்லாதீர்கள்.
ஒருவன் பிரிந்தால், நீங்கள் ஏன் நானும் பிரிந்தேன் என்கிறீர்கள்?
நீங்கள் மூல இஸ்லாத்தில்தானே இருக்க வேண்டும்?
சுன்னா என்று ஏன் அழைத்துக்கொள்ள வேண்டும்?
என்றால் பிரிவில் சாதியில் உங்களுக்கும் அதீத விருப்பம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?   
*
முகம்மது நபி அவர்கள் குர்-ஆனைப் பின்பற்றினார்
குர் ஆனைப் பின்பற்றினால் நாம் முகம்மது நபிபெருமானைப் பின்பற்றியதாய் அர்த்தம்.
குர் ஆன் ஒரு சொல்லும் மாற்றமுடியாமல் பாதுகாக்கப்பட்டது.
குர் ஆன் சத்தியம்
அதைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள்.
நீங்கள் இஸ்லாமியர்தானே?
குர் ஆனின் படி பிரிவுகள் இல்லை. நீங்கள் பிரிந்தால் நீங்கள் இஸ்லாமியர்களே இல்லை.
பிரிவினையைப் பாராட்டும் ஒரு பெயரை நீங்கள் உங்களுக்குச் சூட்டிக்கொண்டால் நீங்கள் குர்-ஆனைவிட்டு விலகுகிறீர்கள் என்று பொருள்தானே?
சிந்தியுங்கள்!

*
பெருங்கல்லை அசைக்கும்போது கொஞ்சம் முக்கல் முனகல் நம்மிடமிருந்து வரத்தான் செய்யும்.
அதற்காக நாம் நம்பிக்கை அற்றவர்கள் அல்ல.
அசைக்கமிடுயாத கல்லையும் உடைத்து அசைப்போம்!




 


 

 



 


சும்மா

பொது அறத்தைப் 
பெரிதும் போற்றுபவர்கள் 
ஆண்கள் அல்ல
பெண்களே

*
அழுகை
ஒரு மிகப்பெரிய
ஆனந்தம்
கொடுந்துயரில் 
இருந்துபாருங்கள்
அழுகையின்
அருமை புரியும்

*


*
அம்மா ஜெயலலிதா மீது போட்ட பொய் வழக்கையும் அவர் முறியடித்து ஊழலே இல்லாத தலைவியாய் பவனி வருகிறார்.
உங்கள் தலைவரோ (கலைஞர்) ஒரு பைசாவும் ஊழல் செய்யாத கண்ணியமிக்கவர்
தமிழ்நாடு இந்த இரு கரைபடியாத அற்புதர்களைக் கொண்டு வளமாக செழுமையாக இந்தியாவில் ஊழலே இல்லாத மாநிலமாக சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது
அதன் உண்மையான குடிமகன் நீங்கள் ஒருவரே.
ஐயா சாமி, ஆளை விடுங்கள். எனக்கு வேலை நிறைய இருக்கு.
வெட்டிப்பேச்சுக்கும் உங்கள் அறமற்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேறு தளம் செல்லுங்கள்.
என் நேரம் பொன்னானது!

*
குடித்துவிட்டுச்
செய்யத் தகுந்த காரியங்கள்
என்னென்ன?
குடித்துவிட்டுச் செய்தால்
எந்த எந்தக் காரியங்களைச்
சிறப்பாகச் செய்யலாம்?
குடிக்காமல் இருக்கும்போது
செய்யவே முடியாது
ஆனால் குடித்தால் சூப்பராகச் செய்யலாம்
என்னும் காரியங்கள் யாவை?

*
தண்ணியடிச்சிட்டு போனபோக்கில் திசையறியாமல் எசகுபிசகா கருத்திடுபவர்கள் என் நட்பு வட்டத்திலிருந்து நீங்களாகவே விலகிக்கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இதை தண்ணியில் இல்லாத நேரத்தில் வாசிக்கவும் 
*