நான் காத்திருக்கிறேனடி

அடீ
என் பிரியக் கிளியே
நான்
காத்திருக்கிறேனடி

விழிகள்
சிவப்பேற
இரவுக் கவிஞனுக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கும்
மேற்கு வானமாய்

நான்
காத்திருக்கிறேனடி

உன்னிடம்
சொல்லச் சுரந்த
கவிதை முத்துக்களை
ஒவ்வொன்றாய்
கழற்றி
எறிந்துகொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

நிச்சயம் வருவேன்
என்ற உன்
சத்தியமொழி மெல்ல
வெளுக்க வெளுக்க
அதற்குப்
பொய்வர்ணம் பூசிக்கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

மலரசையும் நேரமெல்லாம்
உன்
மார்பசையும்
இசையமுதோவென
எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

நிமிச விசங்களைச்
சீரணிக்கத் தவிக்கும்
என் பொறுமையுடன்

நான்
காத்திருக்கிறேனடி

மூடி மலரும் என் இமைகளே
உன்னை
நேரங்கழித்துக் காட்டிவிடும்
என்றெண்ணி அவற்றைக்
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பிய்த்தெறிந்து கொண்டே.

நீ வரும் வாய்க்காலை
என் விழிகளால்
ஆழப் படுத்திக் கொண்டே

நான்
காத்திருக்கிறேனடி

அடீ
நீ வரமாட்டாயா

வந்துவிடு
இல்லையேல்
வரமாட்டேன் என்று
என் கல்லறையிலாவது
வந்து எழுதிவிடு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: