வருவாளா

ஆயிரம் பெண்ணின்
காதலைச் சுமந்து
ஒரு பெண் வருவாளா
என் உயிருடன் துடிப்பாளா

என் தாகம் கோத்த
ராகம் கேட்டு
பாடல் புனைவாளா
அதில் பரவசம் கொள்வாளா

தவிப்பின் தவங்கள்
வரமாய் மலர
உணர்வைத் திறப்பாளா
அதில் உயிரைக் கரைப்பாளா

இருளின் அணைப்பில்
ஏக்கக் கொதிப்பில்
உருகும் உயிரை
இறுக்கிப் பிடிப்பாளா
இடர் கருக்கிச் சிதைப்பாளா

எச்சில் நெய்யால்
துயரம் எரிக்கும்
ஈர முத்தங்கள்
வாரித் தருவாளா
அதில் ஊறித் திளைப்பாளா

மொத்தச் செல்களின்
நித்திரைத் தவிப்பின்
சத்தம் நிறுத்தப்
பாலூட்ட வருவாளா
காதல் பசியாற்ற வருவாளா

No comments: