தீயில் கரையத்தானே

அவன்:

புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒரு நாள் தீயில் கரையத்தானே

உன்மீது நான் வளர்த்த
என் காதலைப்போல

கனவுப் பாதங்களின்
பிரிய அசைவுகளால்
நிலாத் தளங்களில்
புல்லரிக்கப் புல்லரிக்க
சஞ்சரிப்பது மட்டுமே
போதுமானதாகிவிடுமா

கறுத்த மேகங்களை
விரட்டுகின்ற
அடர்ந்த மூச்சுக்களையும்
அடைந்திருக்க வேண்டாமா

என் கையெலும்புகளோ
கோடிச் சுக்கல்களாய்
நொறுக்கப் பட்டவை

என் பிஞ்சுப் பாதங்களோ
உதவாக் கரிக்கட்டைகளாய்
கருக்கப் பட்டவை

என் ஆசைவிழிப் பயணங்களோ
செக்கு மாட்டு எல்லைகளாய்
சுருக்கப்பட்டவை

நின்று நோக்கி
நானும் வரக் காத்திருக்காமல்
ஒடுவதொன்றே குறிக்கோளாய்
ஒடும் கால வெள்ளத்தின்
உடன் செல்லுவதே
மூச்சுத் திணறலில் இருக்க
எதிர்த்து நீந்த
எனக்கேது உர உயிர்

அன்பே
மறந்துவிடு என்னை

நான் உன்னை மறக்காமல்
அமைதி புதைந்த
மயான மேடைகளில்
அழுது கொண்டிருந்தாலும்
என்னை நீ தொடரத் துடிக்காமல்
வெகு தூரமாய்ச் சென்று
மறந்துவிடு என்னை


அவள்:

என்னருமைக் காதலா
உன்னை எடுத்து நிறுத்தும்
தன்னம்பிக்கையாய்
நானென் சத்தான முத்தங்களைச்
சரம் சரமாய் அனுப்புகிறேன்

அவற்றை
இறுக்கமாய்க் பிடித்துக்கொண்டு
ஏறிவர முயல்வாயா?

ஒரு குங்குமப் பொட்டு அளவிற்கேனும்
நீ உன் விருப்பம் சொல்
உனக்குள் உறங்கிக்கிடக்கும்
ஆண்மை விழித்தெழ
உன் உயிர் உசுப்பி
உன்னை அந்த வான உச்சிக்கே
ஏற்றி வைக்கிறேன்

உன் வக்கற்ற வார்த்தைகளால்
காலம்காலமாய் வலிமைகொள்ளும்
சமூகத் தடைகளும்
பொருளாதாரத் தடுப்புகளும்
நாளைய உள்ளங்களையும்
நம்பிக்கையில்லாப் புற்களாக்கிவிடும்
என் அன்புக் காதலா

நேற்றுவரை
மூச்சுமுட்டி மூச்சுமுட்டி
மடிந்த காதலர்களின்
கண்ணீர்ப் பூக்களையெல்லாம்
ஒவ்வொன்றாய்க் கோத்து
ஒரு துயர மாலை தொடுத்து
இன்று நம் காதலுக்குப்
பரிசளிக்கும்
மரண கோழையல்ல நான்

நம் காதல் வாழவேண்டும்
உன் அவநம்பிக்கை
சாகவேண்டும்

இதுவரை சுரந்த
உன் கண்ணீரையும்
வெட்டியாய் விட்டுவிடாமல்
தடைகளைத் தின்னும் திராவகமாய்த்
திரிப்போம் வா

அதைவிடுத்து
தோல்விக்குக் காரணம் தேடும்
துரோகிதான் நீ என்றால்
இன்றே இப்பொழுதே
இறந்துவிடு என் கண்முன்

இல்லையேல்
என் காதல் விழிகளே இன்று
கோடிச் சூரியன்களாய்க்
கூர்தீட்டி நின்று உன்னைப்
பொசுக்கிச் சாம்பலாக்கும்

No comments: