புலம்பெயர் வாழ்வு தேவைதானா?

நம்மூர் வாழ்க்கை
மாட்டுவண்டி வாழ்க்கை
மாடிரண்டைப் பூட்டிவிட்டால்
ஓடிக்கொண்டே இருக்கும் வண்டி

கனடிய வாழ்வென்பதோ
மிதிவண்டி வாழ்கை
உயிரழுந்த
மிதிப்பதை நிறுத்தினால்
அந்நொடியே
மரண மிதிபடுவோம்

உறங்கவும் பொழுதின்றி
இருபணி முப்பணியென்று
செக்குப்பணி வாழ்க்கைதான்
பலருக்கும் இங்கே

கிரடிட் கார்டு என்பதைத் 
தவறாக மொழி பெயர்க்காதீர்கள்
கடன் அட்டை என்பது பிழை
கடவுள் அட்டை என்பதே நிலை

இது இங்கே சிலரின் அழுகை

]

படிக்கத்தானே அனுப்பினோம் மகனை
பள்ளிசேர்ந்த ஒராண்டுக்குள்
மகனே இல்லை என்றாகிவிட்டதே
மருந்துக்கு விருந்தாகி
மறைந்தே போனானே

பெண் பிள்ளைகள் மட்டுமென்ன
ஆளுக்கு நாலு காதல் வீசி
எட்டுபேரைப்
புதைத்துவிடுகிறார்களே

அடடா
பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள்
கட்டி வைப்பதென்பது
நயாகராவை முந்தானையில்
முடிந்து வைப்பதாகவல்லவா
இருக்கிறது

        இது இங்கே சிலரின் குமுறல்

]

இத்தனையும் போதாதென்று
மூச்சுக் குழாய்களில் அடுக்கடுக்காய்
பிணவறைகள் கட்டியெழுப்பும்
குளிரோ கொடுமை

இது இங்கே சிலரின் புலம்பல்

]

ஆக

குளிர்
குதறிக் கிழிக்க

வேலை
விழிகளுக்குள் விரலாட்ட

வருமானம்
முகத்தில் கரிபூச

பிள்ளைகள்
உயிரில் ஆணியடிக்க

இந்தப்
புலம்பெயர் வாழ்வு தேவைதானா
என்ற கேள்வி
உயிரில் பற்றிய நெருப்புதான்
மறுப்பதற்கில்லை

ஆயினும் தமிழா
ஒரே ஒரு கேள்வி உன்னிடம்

பிறந்தமண்ணில்
தமிழ் ஈழம் மலரப்போவது
நாளை
இன்றே மலர்ந்திருப்பது
கனடாவில்
உண்மையா இல்லையா
சொல்

உழைப்பிருந்தால்தானே
பிழைப்பிருக்கும்
அயரா உழைப்பால்
அந்தக் கடவுள் அட்டை
உன் கட்டைவிரலாகாதா

உன் வீட்டில் தமிழிருந்தால்
வீதியில் தடம்மாறுமா
தமிழ்ப்பிள்ளை

தமிழ் வெறும் மொழியல்ல
தரமிகு பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின்
அடையாளம்

புலம்பெயர் வாழ்வில்
மிகப்பெரும் பிழையென்று நான்
உறுதியாய்ச் சொல்வது
ஒன்றே ஒன்றைத்தான்

ஊரில் என் விடலைப்பருவத்தில்
கவிதை கவியரங்கம் பட்டிமன்றம்
வருகின்றனவென்றால்
தமிழ் கேட்டு நெகிழ உருக
உள்ளமும் உயிரும் உச்சத்துக்கு உயர
கேளிக்கைகளை எல்லாம்
ஓரங்கட்டிவிட்டு
ஓடிச்சென்று செவி விரித்துக்
காத்துக்கிடப்பேன்

எங்கே அந்த
இளைஞர்கள் இங்கே?

இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வென்பது
புழுதிவாழ்வாகித்தானே போகும்

நாம் அவர்களின் பக்கம்
திரும்புவதாக
அவர்கள் தமிழின் பக்கம்
உருகுவதாக
இந்த மேடைகள்
அமைதல் வேண்டும்

அதுவே என்
நயாகராத்தனமாக
உயிராசை

நெஞ்சில் நெருப்பிருந்தால்
கொடும் பனியும் கொடிய குளிரும்
உன்னைக் கும்பிட்டுப் பணியாதா

எதையும் தாங்கும் இதயத் தமிழனை
குளிர் வவ்வால்கள்
கொன்றுபோடவும் முடியுமா?

என் முதற்பணி தேர்வில்
முதன்மை மேலாளர் இத்தாலிக்காரர் கேட்டார்
பனியிங்கே கொன்றெடுக்குமே
வாழத்தான் முடியுமா உன்னால்?

உன்னால் இயலுமெனில்
என்னால் இயலாதா?
குரலுயர்த்திக் கேட்டேன்
நொடியும் தாமதமின்றி
கையெழுத்தானது பணியொப்பந்தம்  
அப்பொழுதே மறுபேச்சின்றி

ஈழத்தமிழா
பிறந்த மண்ணை உயிர்முத்தமிட்டு
ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய
தாய் மண்ணைவிட்டு
விதி விரட்டிய திசைகளெங்கும்
சிதறியோடும் அவலத்துக்கு ஆளானாய் நீ

ஆனால்
வந்த இடம்
கொடுவாசப் புதரில்லையே
அச்சு அசல் சொர்க்க பூமியல்லவா

லஞ்சம் ஊழல்
சாதிவெறி மதவெறி
அழுகல் அரசியல்
கற்பழிப்பு கிட்னிதிருட்டு என்று
தாய்மண்ணின் சீர்கேடுகளைப்
பட்டியலிட்டு
நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத்
தேவையில்லை

ஏற்றத்தை நோக்கியதொரு
மாற்றமே புலம்பெயர்பு

புலம்பெயர்வின்றி
சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
பாடினான் பாரதி
ஆனால் கனடாவுக்கும் ஊருக்குமே
இன்று பாலம் வந்துவிட்டதல்லவா
புலம்பெயர்வுகளைப்
பூசைக்குரியதாய் ஆக்கிவிட்ட
ஆகாயப் பாலம்

அவலத்தையும் கண்ணீரையும்
கருணையோடு துடைத்து
தாய்மடி விரித்துத் தந்த
சுவனமல்லவா கனடியமண்

இருளும் உறங்கிப்போகும் இரவுகளில்
உறங்காத இருபத்துநாலு மணிநேர
தமிழ் வானொலிகள்
தமிழ்த் தொலைக்காட்சிகள்
தமிழ்ச் செய்தித்தாள்கள்
தமிழிலேயே நீதிகேட்கலாம் என்னும்
நீதி மன்றங்கள்

'வருக வருக' என்று
தமிழிலும் வரவேற்கும்
கனடா தேசக்கோபுரம்  

நம்மூரில்கூட அவசரப்பிரிவுக்கு
ஐசியூ என்றுதானே சொல்கிறார்கள்
கனடாவில் அழகு
தமிழிலல்லவா எழுதியிருக்கிறார்கள்

நாள் தவறாமல்
எங்கோ ஓர் அரங்கில்
ஜல் ஜல் சலங்கையொலி
கொட்டும் பனியிலும்
தமிழ்த்தேன் தட்டேந்தி
முத்தமிழ் விழாக்கள்

கேட்கத் தவித்த
தாய்மண் கவிஞர்கள்
பார்க்கத் தவித்த
தமிழ்மண் கலைஞர்கள்
வாரந்தோறும் வந்து வந்து
தமிழ்மண் மணத்தை
இதயத்தில் கொட்டிச் செல்கிறார்களே

நெஞ்சு திறந்துச் சொல்லுங்கள்
இரண்டாம் தாயகமா
கனடா முதலாம் தாயகமல்லவா
அன்பின் முதன்மைத் தாயகமல்லவா

அகதிகளாய் வாழாமல்
அசல் குடிமக்களாய் வாழும் பெருவாழ்வு
பெறுதற்கரிய பேறல்லவா

அடையாளம் தொலைத்து வீழும்
ஈனத் தமிழரை நான்
தமிழ் மண்ணிலும் காண்கிறேன்
புலம்பெயர் மண்ணிலும் காண்கிறேன்

எங்கே வாழ்கிறோம் என்பதல்ல
எப்படி வாழ்கிறோம் என்பதே
தமிழ் அடையாளத்தின்
தாரக மந்திரம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழர் பண்பாடு

புலம்பெயரும் போது
விழுதுகளைத்தான் பரப்புகின்றோம்
நம் வேர்கள் பிறந்த மண்ணில்தான்
அழுத்தமாகக் கிடக்கின்றன

ஒரு பெண் பிறந்த வீடுவிட்டு
புகுந்த வீட்டிற்குப் புலம்பெயர்கிறாள்
அவள்தான் உன் தாய்

ஓர் உயிர்
கர்ப்பப்பையிலிருந்து
பூமிக்குப் புலம்பெய்கிறது
அதுதான் நீ

மனிதன்
ஆப்பிரிக்காவில் பிறந்தானாம்
உலகெலாம் புலம்பெயர்ந்தானாம்
யாவரும் புலம்பெயர்ந்தோரே என்று
சத்தியமே செய்கின்றன
சரித்திரமும் அறிவியலும்

பறவைகள் யாவும்
புலம்பெயர்ந்த வண்ணமாய்
இருக்கின்றன

வாழ்விற்காகப்
புலம்பெயர்வென்பது
இயற்கை வகுத்த
நியதியல்லவா

தேம்பாவணி வீரமாமுனிவர்
தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்தார்
தன் பெயரைத்
தமிழுக்குப் பெயர்த்தார்

தமிழ்மொழிக்குப்
பெருந்தொண்டாற்றினார்

அன்னை தெரிசா புலம்பெயர்ந்தார்
அவரின் ஆத்மா
கருணைமிக்க அந்தப்
புலம்பெயர்வில்தானே
வாழ்ந்து கொண்டிருக்கிறது

பிறநாட்டவர் நம்நாடு பெயர்ந்து
நம் வாழ்வை மொழியை பண்பாட்டை
உயர்த்தினால் போற்றலாம்
நாம்
பிறநாடு சென்று
அம் மண்ணை மக்களை
செழிக்கச் செய்தால் தூற்றுவதா

யுத்தம் ரத்தம் ஆயுதம்
என்பன
வெறுக்க வேண்டிய
நாசங்கள்

வாழ்க்கை வளமை வளர்ச்சி
என்பன
புலம்பெயர்வின்
பயணங்கள்

எல்லைக்கோடுகள்
உலகக் கேடுகள்

சிறு சிறு
வட்டங்கள் மீதொரு
பெரு வட்டம் இடுவோம்
அண்டங்களையும் உள்ளடக்கிய
ஒற்றை வட்டமாய்
நாம் வளர்வோம்

பஞ்சபூதங்களின் பணியே
புலம்பெயர்வுகள்தாம்

தாமும் பெயர்ந்து
ஒவ்வொன்றையும் பெயர்த்தி
காலங்கள்தோறும் இவ்வுலகை
புத்தம்புது இயற்கைச் செழுமையாய்
வடிவமைத்துச் சுழலச் செய்கின்றன

நீர் தன் புலம் பெயராமல்
உலகுக்கு மழையில்லை
பயிர் தன் புலம் பெயராமல்
வயிற்றுக்குச் சோறில்லை
நதி தன் புலம்பெயராமல்
கடல்சேர வழியில்லை

புலம்பெயரா மரங்கள்கூட
விதைகளைப் புலம்பெயர்க்கின்றன

காற்று புலம்பெயரும்போதுதான்
மேலி சிலிர்க்கிறது

நெருப்பு புலம்பெயரும்போதுதான்
உணவு விருந்தாகிறது

கோள்கள் புலம்பெயரும்போதுதான்
நாள்கள் மலர்கின்றன

ஆதியில்
அனைத்துக் கண்டங்களும்
ஒட்டிக்கிடந்தனவாம்

இன்றும்கூட
கண்டங்கள் யாவும் 
ஆண்டுக்கு ஓரங்குலமேனும்
புலம்பெயர்கின்றனவாம்

மண்ணின் புலம்பெயர்வுகள்
இவ்வாறு
நிகழ்ந்த வண்ணமாய் இருக்க
மனிதப் புலம்பெயர்வு
கூடாதென்றால்
அமெரிக்காவும் இல்லை
கனடாவும் இல்லை

அமெரிக்கா கனடா மட்டுமல்ல
உலக நாடுகள் அனைத்துமே
புலம்பெயர்ந்தோரின் நாடுகள்தாம்

வானம் பேரறிவுச் சுரங்கம் 
அதிலுண்டோ எல்லைக்கோடுகள்

எந்த வானம்
உங்கள் வானம்?

எந்த நட்சத்திரம்
உங்கள் நட்சத்திரம்?

இந்த பூமி ஒருநாள்
வாழ வழியற்றதென மாறிப்போனால்
வேற்றுக் கோளுக்குப் புலம்பெயர
வெறியோடு நிற்பான்
மனிதன்

அறிவியல் வளர்ச்சி
எல்லைக்கோடுகளைக்
கேலிக்கோடுகளாக்கிவிட்டது

ஊடக வளர்ச்சி
உலகைச்
சிறு குடிலாக்கிவிட்டது

தொலைதொடர்பு வளர்ச்சி
நியூயார்க்கை
பக்கத்து இருக்கையாக்கிவிட்டது.

இவையெல்லாம் ஆனபின்
புலம்பெயர்வு என்பதற்கான
பொருள்தான் என்ன?

தாய் தாய்மொழி தாய்மண்
தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம் என்ற
அடிப்படை வேர்களோடு
பிரபஞ்ச வெளிகளெங்கிலும்
கிளை பரப்புவதும் இலை விரிப்பதும்
கலாச்சாரக் கலப்புமலர் சொரிவதும்
சிறந்த பண்புகளை
சூரிய ஒளியாய் உள்வாங்குவதும்
இயல்பானது அவசியமானது

அகிலமெங்கும் நிகழும்
அயராப் புலம்பெயர்வுகளே
மனிதனையும் மனிதநேயத்தையும்
இமயத்தில் ஏற்றுகின்றன

அதியளவில் நிகழும்
புலம்பெயர்வுகளால் உலகம் என்னாகும்
எல்லா நிலமும் ஒன்றுதான்
நமதுதான் என்றாகும்
எல்லா மக்களும் ஒருவர்தாம்
உறவுதாம் என்றாகும்

இதைத்தானே அன்றே
சொல்லிப் போனான் சங்கத் தமிழன்
அது நிறைவேறும் காட்சி நிலைகள்தானே
இன்றைநாள் புலம்பெயர்வுகள்

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

2008 கனடா எழுத்தாளர் இணையக் கவியரங்கம்

No comments: