***47

பெண் 2020


பக்கத்துவீட்டுப் ப்ரியா
சின்னவீடு வைத்திருக்கிறாளாம்

கடந்த மாதம் வரை
அலுவலகம் விட்டு வரும்போதெல்லாம்
பாதி நாட்கள் அங்கும்
மீதி நாட்கள் இங்குமாய்த்தான் தங்குவாளாம்

கடந்த இரு மாதங்களாக
பொறுத்துக்கொள்ளமுடியாத
பெரியவீட்டுக் கணவனால் சச்சரவுகள் எழுந்ததாலும்

தன் குழந்தைக்கு தாயின் பெயரோடு
தன் பெயரையும் இணைக்க வேண்டும் என்று
மரபணு வழியாய் தந்தையென அறியப்பட்ட
மூன்றாமவன் ஒருவன் வழக்குத் தொடுத்ததாலும்

எவருக்குப் பிறந்திருந்தாலும்
தன்னுடையவர்கள்தான் என்பதால்
பிள்ளைகளும் தானும் ஒரே வீட்டில்தான்
இருப்போம் என்றும்

மூன்றாமவன் குழந்தையை
வாரம் ஒரு தினம் மட்டும்
வந்து பார்த்து விட்டுச் செல்லலாம் என்றும்

எக்காரணம் கொண்டும்
பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்
எந்த ஆணின் பெயரும்
இணைக்கப்படமாட்டாது என்றும்

மரபணு வழியாய்
தந்தையென அறியப்பட்டாலும்
முறையாகத் திருமணம் செய்துகொள்ளாதவர்
குழந்தைகளிடம் உரிமைகொண்டாட
இயலாது என்றும்

சின்னவீடும் பெரியவீடும்
தான் விரும்பி அழைக்கும்போது மட்டுமே
வந்து இருந்துவிட்டுச் செல்லவேண்டும் என்றும்
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளாம்

இருவரும் சமயலறையிலும் சலவையறையிலும்
அடித்துக்கொள்ள மட்டார்கள்
என்று வாக்குறுதி வழங்கும் பட்சத்தில்
இவளுடனேயே ஒரே வீட்டில்
தங்கிக்கொள்ளலாம் என்றும் சலுகை தந்தாளாம்

இருவருடனும் காட்டும்
அன்பிலும் காதலிலும் தனக்கு
எந்தவித பாரபட்சமும் இல்லை என்றும்
இரு கண்களாகவே இருவரையும் மதிப்பதாகவும்
உறுதி கூறினாளாம்

ஏற்புடையது என்ற தீர்ப்போடு
மூன்றாவது இணைய மன்ற வழக்குச் சுற்று
முந்தாநாள்தான் முடிவடைந்ததாம்.

8 comments:

Agathiyan John Benedict said...

இந்த உண்மையை வாசிக்குபோதே தலை சுத்தோ சுத்துன்னு சுத்துதேய்யா....ஆஆஆஆஆஆஆஆஆஆ.

என்னப் போல ஆம்பளைய தலையில கல்லைத் தூக்கிப் போட பொம்பளையாளுக்குக் கத்துக்கொடுத்த ஆசாமி நீங்க நல்லாயிருக்கோனும்! வேற நான் என்னத்தைச் சொல்றது???

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

இன்னும் நாற்பதாண்டு காலத்துக்குள் நடக்க வாய்ப்புகள் உண்டு - இருப்பினும் க்ற்பனை கொடி காட்டிப் பறப்பது போல நடக்காது - நம்புவோமாக

Anonymous said...

ரொம்ப சிக்கலான விஷயம்தான். இது கற்பனைன்னாக்கூட - பாருங்க மொதோ பின்னூட்டத்திலயே ஒருத்தருக்கு தலைசுத்திடுச்சு.

பூங்குழலி said...

இந்த கவிதையின் கருப்பொருள் எனக்கு வருத்தத்தை தருகிறது புகாரி .

இப்படியும் ஆகலாம் என்று கருதுகிறீர்களோ ?

Unknown said...

இல்லை பூங்குழலி

பெண்ணுரிமை என்பது இதுவல்ல என்பதே நான் பெண்களுக்குச் சொல்ல வருவது.

சம உரிமை என்பது இதுவல்ல என்பதை உணரச்செய்வதே நோக்கம்.

அதோடு பெண்கள் இப்படி ஆகிவிட்டால் என்னாகும் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்து பெண்ணை வெறுப்புக்கும் அகங்காரத்துக்கும் தளாமல் உரிமைதந்து நட்போடு பேணவேண்டும்.

சாந்தி said...

நகைக்க எளிதாயிருந்தாலும் ஜீரணிக்க கடினமாகவே இருக்குதே...

பெண் குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...

இருப்பினும் கற்பனை சிறப்பு...

Unknown said...

சாந்தி,

>>>நகைக்க எளிதாயிருந்தாலும் ஜீரணிக்க கடினமாகவே இருக்குதே...<<<

ஆமாம். இப்படி ஆகக்கூடாது என்று இன்றைய் பெண் நினைக்கிறாளில்லையா? பெண் மட்டுமல்ல ஆண் அதிகமாகவே நினைக்கிறான் இல்லையா? ஆகவே பெண்ணியம் என்ற வரட்டுப்பேச்சும் வேண்டாம், பெண்ணை அடிமைப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமும் வேண்டாம். நட்பு பாராட்டி ஆணும் பெண்ணும் வாழவேண்டும்.


>>>>பெண் குழந்தை பெற்ற பின் ஆணின் தேவை அதிகம் இருக்காது எக்காலமும் என்பது என் கருத்து..அவள் கவனமெல்லாம் குழந்தைகளே...<<<<<

இப்படி பெண் மாறுவது தவறு சாந்தி. ஆணை அனாதை ஆக்கிவிட்டால், அவன் மனம் அலையத் தொடங்கும். ஏக்கம் வளர்ந்து அவனை அவன் நல் குணங்களைத் திசை திருப்பும்.

ஓர் ஆணுக்கு தன் ஆயுள் முழுவதும் காதலும் காமமும் வேண்டும். அதை மனைவிதானே தரவேண்டும். தராவிட்டால் வேறு எங்கேயாவதுபோய் பெற்றுக்கொள் என்றுதானே அர்த்தம் ஆகிறது.

பெண்கள் இதைக் கவனமானவும் அக்கறையாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.

30 வயதுக்கு முன் பெண் அலங்கரித்துக்கொண்டு தன் கணவன் முன் நிற்பது அத்தனை அவசியம் இல்லை. ஆனால் 30க்குப் ஒரு புதுப்பெண்ணைப்போல் தன்னை அலங்கரித்து கணவனின் விழிகளை இழுக்க வேண்டும்.

ஓர் ஆணை பெண் கவர்ந்துவிட்டால் அவன் ஒன்றுமற்ற பெட்டிப்பாம்புதானே? ஆனால் அப்படி கவராவிட்டால் அவன் பெட்டியைவிட்டு வெளியே வந்த பாம்பு என்று சொல்லத் தேவையே இல்லை.


>>>இருப்பினும் கற்பனை சிறப்பு...<<<<


நன்றி. சில விச்யங்களை எதிர்மறையாகச் சொன்னால் உடனே போய்ச் சேர்கிறது :)))


அன்புடன் புகாரி

வனம் said...

வணக்கம் புகாரி

\\ அதோடு பெண்கள் இப்படி ஆகிவிட்டால் என்னாகும் என்று ஒவ்வொரு ஆணும் யோசித்து பெண்ணை வெறுப்புக்கும் அகங்காரத்துக்கும் தளாமல் உரிமைதந்து நட்போடு பேணவேண்டும்.\\

சரியாத்தான் சொல்கின்றீர்கள், நியாயம்தான் ஆனா பெண்களிடமிருந்துதான் இந்த விருப்பமும் வெளிப்பாடும் வரனும் என நிணைக்கின்றேன்.

கேட்கப்படுவதுதானே கொடுக்கப்படும்.

அப்புறம் இந்த கவிதையை பெண்னுக்கு பதில் ஆணாய் கொண்டு பார்த்தால் மிகச்சாதரணமாக ஏற்றுக்கொள்ள கூடியதாய் இந்த பின்னூட்டங்கள் காணப்படும் -- இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறுதானே

இராஜராஜன்