***69
பாவப்பட்ட முகமூடியே


தப்பான நிமிடத்தில் தவறான முடிவெடுத்து
கற்பிலா நிழல்முகம் பூட்டி
மெல்லச் சுயமுகம் சிதைந்தொழிய
அரிதார முகமாய் மட்டுமே
பரிதாப நிலை கொண்டுவிடும்
பாவப்பட்ட முகமூடியே

எதைச் செய்தாலும் அதை
நீதானே செய்கிறாய்
உன் சொந்த முகங்கொண்டு
செய்யமறுப்பதேன்

ஓ.. நீதான் எத்தனை பெரிய
கோழை என்று நீயே
வெட்கித் தலைமறைகிறாய்

தன்னைத்தான் சாகடிப்போன்
கோழை என்பதை
உன் வேரில் தீமூட்டி
உறுதிப்படுத்துகிறாய் பார்

தலைகெட்டக் கமலவாய் கழிப்பதையெல்லாம்
உன் முகவாய் மொழிந்து குமட்ட
முகமூடி சூடிக்கொண்டாய்
உன்னை நீயே தெருநாய் ஆக்கிக்கொண்டாய்

இட்டுக்கொண்ட மூடிக்கேற்ப
உன் ஜாடியை ஆட்டினாய்
அது உன் நாடிக்கே வேட்டுவைக்க
மூடியாய்மட்டுமே உடைந்துபோனாய்

தன் சொல் சொல்ல தன் முகம் தாரா
கேடுகெட்ட கோழையின் மரணச் செய்தியைத்
தாங்கி நிற்கும் ஓடுதானே முகமூடி
தன் சாவுக்கு தானே ஒப்பாரி வைக்கும்
அவலம் வந்த நிலை காணாயா

இனியாவது சுயம் மீட்டுக்கொள் நண்பா
தற்கொலை வேண்டாமடா
வீரனாய் வெளியில் வா
அதுவுன் தோள்களை வெற்றியாக்கும்
முகத்தைப் பொற்சூரியனாக்கும்
சரித்திரம் அடையாளம் கண்டு
உன் முகக்கீற்றை
வைர வரிகளால் குறித்துக்கொள்ளும்

*

பின் குறிப்பு:

இது புனைப்பெயர் வைத்துக்கொள்வதைப் பற்றியதல்ல. முகமூடி இட்டுக்கொண்டு தன் கருத்துக்கு தன்னையே தகுதியற்றவராக்கிக் கொள்பவர்களைப் பற்றிய கவிதை.

புனைபெயர் தவறல்ல.

பாரதி, கண்ணதாசன், இளையராஜா, பாரதிராஜா போன்ற அனைவரும் முகமூடிகள் அல்லர்.

2 comments:

சீனா said...

இது தான் பூங்குழலி குறிப்பிட்ட புனைப்பெயர் பற்றிய கவிதையா ? நன்று நன்று

ஆனால் தான் கூறும் கருத்துகள் புலைக் கிளப்பும் எனத் தெரிந்து முகம் மறைக்கும் மனிதர்களுக்கு இது சரி. உண்மையில் நல்ல கருத்துகளைக் கூறும் பொழுது - கூறுபவர் யாரென உலகமே அறிந்தும் கூட - ஒரு வசதிக்காக ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்வது தவறல்லவே நண்பா !

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

Unknown said...

அன்பின் சீனா, நான் இக்கவிதையை இடும்போது ஒரு விளக்கம் தர மறந்துவிட்டேன்.

இது புனைப்பெயர் வைத்துக்கொள்வதைப் பற்றியதல்ல. முகமூடி இட்டுக்கொண்டு தன் கருத்துக்கு தன்னையே தகுதியற்றவராக்கிக்கொள்பவர்களைப் பற்றிய கவிதை.


புனைபெயர் தவறல்ல.

பாரதி, கண்ணதாசன், இளையராஜா, பாரதிராஜா போன்ற அனைவரும் முகமூடிகள் அல்லர்

அன்புடன் புகாரி