அம்மா
என் அம்மா

ஓடி விளையாடிக்கொண்டிருந்த
உன்னை
தூக்கிக்கொண்டுவந்து
மணக்கோலத்தில்
உட்கார வைத்தபோது
உனக்கு வயது 13 - 1955

நீ
அக்காவைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 16 - 1958

நீ
என்னைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 18 - 1960

நீ
காலிதைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 20 - 1962

நீ
ஹாஜாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 22 - 1964

நீ
சகாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 24 - 1966

நீ
பகுருதீனைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 25 - 1967

நாற்பதுநாள்
பால்வாய்ப் பிள்ளையோடு
நீ வெள்ளைச்சேலை கட்டியபோது
உனக்கு வயது 25 - 1967

எதுவும்
தொடங்குவதற்கு முன்பே
எல்லாமும் முடித்துவிட்டது
உனக்கு

28 வயதிலும்கூட
திருமணம் செய்யாமல்
பெண்கள் இருக்கும்போது
25 வயதிலேயே
எல்லாக் கோப்பைகளையும்
வென்று முடித்துவிட்ட
வீராங்கணையாக
உன்னை நிற்க வைத்தக்
காலக் கோலம்
கொடும் அலங்கோலம்

அம்மா
இந்தச் சேலை கட்டுமா
வெள்ளை வேண்டாம்மா
என்று ஒவ்வொருநாளும்
உன் காலைக் கட்டிக்கொண்டு
அழுத எனக்கு
உன் நிலை தெரியவில்லை

வளர வளர
வேண்டாண்டா வேண்டாண்டா
என்று
தொடர்ந்து மறுக்கும் உன்னைக்
கெஞ்சிக் கெஞ்சி
செருப்பு அணிவித்தேன்
பட்டுச் சேலையும்
கட்ட வைத்தேன்

டாப்ஸும்
ட்ராக் பேண்டும்
நைட்டியும் கூட போடவைத்து
கேரளாவில் நடக்க வைத்தேன்

இது எதனாலும்
என் காயங்கள் எதுவும்
ஆறவே இல்லையே
அம்மா

உனக்கு
மகனாக மட்டும் இல்லாமல்
தந்தையாகவும் இருந்திருந்தால்
என்ன செய்திருப்பேன் என்று
எத்தனையோ முறை
சொல்லியழுது புலம்பியும்
அந்தக் காயம் மட்டும்
அப்படியேதான் இருக்கிறது
அம்மா

நீ
எதற்குமே கலங்காத
வீரமகள்
தைரியத்தின் கோட்டை

அம்மா
கை வலிக்குதும்மா என்றால்
’சரியாப் போயிடும்’
என்ற ஒரு வரியில்
பெரிய மருத்துவம் பார்க்கும்
மனோதத்துவ
மேதை

அம்மா சொல்லிட்டாங்க
சரியாப் போயிடும்
என்று நினைக்காத
பிஞ்சுக் குழந்தைகள்
இருக்க முடியுமா

எத்தனைதான்
உனக்கு
உடல் நலம் இல்லாமல்
போனாலும்
நீ பயந்ததே இல்லை
சரியாப் போயிடும்
என்றுதான்
உனக்கும் சொல்வாய்

ஆனால்
முதன் முறையாக
2015ல் என் கைகளைப்
பிடித்துக்கொண்டு
புகாரி
முடிஞ்சுபோச்சுடா என்றதும்
அந்த நொடி முதல்
நான் என்ன செய்தேன்
என்று எனக்கே தெரியாது

இறைவன்
மகா பெரியவன்
அவன் தன் அளவற்ற
கருணையைக் காட்டினான்

எழவே முடியாத
உன்னை
எழுந்து நடக்கவைத்தான்

அந்த
நீண்ட தெருவின்
முனையில் இருக்கும்
மருத்துவமனைவரைகூட
நடந்துவந்துவிட்டாய்

நான் உன்னிடம்
சொன்னேன்

அம்மா
நான் எல்லா டாக்டர்கிட்டயும்
நிறைய பேசிட்டேன்
நீ ரொம்ப நாள்
இருக்க மாட்டாயாம்
இன்னும் 30 வருடங்கள்தான்
உயிரோடு இருப்பாயம்
என்றேன்

நல்லா படிச்சவன்
டாக்டர்கிட்ட எல்லாம்
தாறுமாறா கேள்வி கேட்குறவன்
அவன் சொன்னா
சரியாத்தான் இருக்கும்
என்று உள்மனதில்
ஓரு நம்பிக்கை கொண்டாய்

அவ்ளோ வருசமெல்லாம்
இருக்க வேண்டாம் புகாரி
என்னை விட்டுடுங்கப்பா
என்றாய்

உனக்கு வேண்டாம்மா
ஆனால்
எங்களுக்கு வேண்டுமே
அமெரிக்காவில்
எத்தனை உயிர்கள்
உன்னைக் கண்டு
கட்டியணைத்து
கொண்டாடி வாழத்
துடித்துக்கொண்டிருக்கின்ற
கருணை செய் அம்மா
என்றேன்
கண்களில் கட்டும்
நீரை
துஆவாக மாற்றிக்கொண்டு

அப்படியே
ஹஜ்ஜுக்கும்
போயிடனும்டா தம்பி
என்றாய்

உன் அறை முழுவதும்
மெக்கா மெதினா புகைப்படங்களை ஒட்டி
இதைப் பார்த்துப் பார்த்துச் துஆ செய்மா
உன் உடல்நலம் தேறும்
நாம் எல்லோரும் போகலாம்
அல்லாஹ் அருள்வான்
என்றேன்

உன் கல்யாணத் தேதியைக்
கண்டுபிடித்து
ஹாஜா குடும்பத்தினரிடமும் சொல்லி
என் குடும்பமும் சேர்ந்து
தொடர்ந்து தொலைபேசியில்
நவம்பர் 10ல்
உனக்கு மணநாள் வாழ்த்துச்
சொன்னபோது
எத்தனை பூரித்தாய்
அம்மா

இதோ
அமெரிக்கத் தேர்தல்
முடிந்ததும்
உன் ஆசை நிறைவேறும்
அத்தனை பேரும் வருவார்கள்
நானும் கூடவே ஓடி வந்துவிடுவேன்
எல்லோரும் உன்னோடுதான்
அம்மா என்றதும்

அல்லாஹ்
ஆமீனாக்கித் தருவான்
என்று என்னை நீ நம்பினாய்

உன்னை ஏமாற்ற
அப்படி நான் சொல்லவில்லை
அம்மா

அதுதான் என் தொடர்
துஆவாக இருந்தது
அம்மா

துஆக்கள் நிறைவேறும்
காலம் இதோ கனிந்துவிட்டது
அம்மா

அல்லாஹ் ஆமீனாக்க
முடிவு செய்துவிட்டான்
அம்மா

2 comments:

mohamedali jinnah said...

இறையருள் நிலவட்டும் .சாந்தியும் சமாதானமும் பரவட்டும்
அண்ணா !
பலமுறை படித்தேன் .கண்களில் நீர் வழிந்தன
அம்மா ! சொர்க்கத்தின் வாசல்
அம்மா அம்மாதான்
அன்புடன்

mohamedali jinnah said...

இறையருள் நிலவட்டும் .சாந்தியும் சமாதானமும் பரவட்டும்
அண்ணா !
பலமுறை படித்தேன் .கண்களில் நீர் வழிந்தன
அம்மா ! சொர்க்கத்தின் வாசல்
அம்மா அம்மாதான்
அன்புடன்