தமிழுகுச் சோறூட்டு

பாராட்டு
உன் பாராட்டால்
நண்பா
நம் தமிழுக்குச் சோறூட்டு

நீ
பாராட்டும்போது
உனக்குள் மலரும்
பௌர்ணமி நிறைவும்
அதைக் கேட்ட கணமே
மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும்
தீபவிழிகளைச் சந்திக்கும்
இதய நெகிழ்வும் தவிர
உயர்வான இன்பங்கள் வேறுண்டா

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டேனென்று
ஏன்தான் அடம்பிடிக்கிறாய்

உன்
அரைகுறைச் சொல்லைப் பாராட்ட
ஆளற்றுப் போனதே
அந்தச் சோகமா

உன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே இவன்
அந்தப் பொறாமையா

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
என் கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனமா

இவன் என்
எதிரி எழுத்தாளனின் தாசனாயிற்றே
அந்த விரோதமா

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணமா

நெஞ்சின் நேர்மைக்குக்
கருஞ்சாயம் பூசி
காணாதொழிக்கும் நண்பனே
உன் நெஞ்ச வஞ்சங்களைக்
காலைக் கடனாகக்
கழித்துத்தான்
தொலைக்க வேண்டும்
நீ

வெளிச்சத்தைத் தட்டி எழுப்ப
விரலிடுக்கில்
எழுத்து நீர்க் குவளையோடு வருகிறாய்
பாராட்டுக்கள்
ஆனால்
அந்த வெளிச்சத்தை
முதலில் முத்தமிடவேண்டியவன்
நீயல்லவா

பாராட்டலாம் வா
பாராட்டுவதால்
பாராட்டியவன்தான்
பன்மடங்காய் உயர்கிறான்

மனதாரப் பாராட்டினால்
மறுகணமே நீ
மனிதனாய்ப் பிறந்துவிடுவாய்

ரசனைகளே நமது உள்ளம்
ரசித்ததைப் பாராட்டும் பண்புதான்
அதன் மகுடம்

ரசனைகளற்றவனின் உடலும் உள்ளமும்
ஐம்புலன்களும் புதைபட்ட
சமாதிகளல்லவா

கண்ணுக்குள் விழுந்து
பூவிரித்ததைப் பாராட்டாதவன்
குருடனல்லவா

காதுக்குள் நுழைந்து
கிசுகிசுத்ததைப் பாராட்டாதவன்
செவிடனல்லவா

நாவினில் தித்தித்து
நினைவழித்ததைப் பாராட்டாதவன்
ஊமையல்லவா

மறந்துவிட்டாயா
தாலாட்டிப் பாராட்டியதாலேயே
நீயன்று
நிம்மதிக்குள் கண்ணயர்ந்தாய்

சொல்...

வண்டுவந்து பாராட்டாமல்
மலர்கள் பூக்கத் தவிக்குமா

தென்றல் வந்து பாராட்டாமல்
வசந்தம் உன்னைத் தழுவுமா

நிலவு வந்து பாராட்டாமல்
இரவு நெஞ்சில் இனிக்குமா

மழை வந்து பாராட்டாமல்
சோறு உனக்குக் கிடைக்குமா

இளமை வந்து பாராட்டாமல்
வாழ்க்கைதான் இனிக்குமா

பெண்ணைப் பாராட்டாமல்
ஒரு காதல் இல்லை
அவள் கண்ணைப் பாராட்டாமல்
ஒரு மயக்கம் இல்லை

சொந்தம் பாராட்டாமல்
இன்பம் இல்லை
உறவைப் பாராட்டாமல்
உயிர்களே இல்லை

பாராட்டி வளர்வதன்றோ
கலைகள்
பாராட்டி செழிப்பதன்றோ
உலகம்

அடடா
இப்படி நீ பாராட்டாமல்
மூடிக்கிடந்தால்
கொத்துக் கொத்தாய் அழிந்துபோகுமே
உன் மொத்த இனமும்

அந்த அழிவின் கருங்குழி வாசலில்
முதலாமவன் யார் தெரியுமா
நீதான் நண்பா
நீயேதான்

பெண்ணியப் போலி


கொஞ்சமே கொஞ்சம்
அதுவும்
சிலுசிலு கண்ணாடி
ஆடையணிந்து

போதாதென்று
தொப்பலாய் நனைந்து

சிதைந்த செல்களிலும்கூட
செக்கச் செவேரென்ற
நெருப்பு மூட்டி

கால்வாசி ஆடைகூட
சாதிக்காது இனி என்ற
காலம் உணர்ந்து
மேலும் மேலும்
வெட்டியெறிகிறாள்
நனைகிறாள்
காணும் தேகங்களை
'தந்தூரி' செய்கிறாள்
கோலி-பாலி-ஹாலிவுட்காரி

நெஞ்சு நிமிர்த்தி
பெண்ணியம் பேசும்
முற்போக்கு அரங்கில்
அனைத்தையும் கழற்றியெறிந்த
அந்தரங்கச் சொல்லாடலும்
படுக்கை நெடி வெடிக்கும்
கசங்கல் நடையுமாய்
எழுதிக் கவிழ்கிறாள்
பெண்ணியப் போலி

வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்

காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை

சிந்தனைத் துளிகள்
சொட்டச் சொட்ட
அனுபவ ராகங்கள்
கேட்கக் கேட்க
ஞானப்பல்
முளைக்க முளைக்க

நிம்மதி
செத்துப் போய்
நித்திரை
அற்றுப்போய்
விரக்தி
ரொம்பிப்போய்

அப்பப்பா
இது என்ன வாழ்க்கை
என்றே
கருகிய என்னிடம்

மனைவியின்
மடியில் கொஞ்சம்
மகளின்
மடியில் கொஞ்சம்
பேத்தியின்
மடியில் கொஞ்சம்
என்று
நழுவிய தாய்மடி
மெல்ல
மீண்டும் மலர்ந்ததில்

முதிர்ந்த இந்தக் கூட்டுக்குள்
புத்தம் புது மழலை
பூரணமாய் வந்து
குடியேற

அர்த்தமான நிம்மதி
ஆனந்தமான கண்ணீர்
அவசரமில்லாத புன்னகை

நிம்மதிதான் வாழ்க்கை


வாழ்க்கைக்கு விளக்கம்தேடி
வட்டமடித்த என் கழுகு அலகுகளில்
இதுவரை அகப்பட்டதெல்லாம்
இரைகளல்ல இரைகளல்ல
கேள்விகள்தாம் கேள்விகள்தாம்

உள்ளம்தான் சுமை தோழா


தாழ்ந்த
வாயில் கடக்க
தலையைக் கொய்வதோ

சூழ்ந்த துயரம் வெல்ல
சுடுகாட்டில் வீழ்வதோ

வாழ்ந்த
நாட்கள் எண்ணி
வாடுவதால் ஆவதென்ன

வீழ்ந்த நாட்கள் தொட்டு
விசும்புவதால் போவதென்ன

மண்ணுயிர்
பறிக்கும் ஒருவன்
மதிகெட்ட மிருகமென்றால்
தன்னுயிர் பறிக்கும் மனிதன்
தலையில்லா சாத்தான்தானே

கண்ணிலே
புகுந்த எண்ணம்
கணநேரக் கலக்கம்
எண்ணியே முடியும் முன்னர்
எடுத்தாலது தீர்மானமா

எண்ணமே
உயிரைத் தின்னும்
இதுஎன்ன வேடிக்கை
எண்ணமும் உயர்ந்தது என்றால்
இப்படியும் நடக்குமா

புதைமனம்
சிந்தும் கண்ணீர்
புத்திக்குள் தீயைமூட்ட
பதைத்தவன் புதையும் குழிதான்
பரிதாபத் தற்கொலைகள்

பாசமும் அன்பும் நட்பும்
பழகிய காதல் யாவும்
வேசமாய்ப் போவதென்றால்
ஆசையாய்க் கட்டிய கனவுகள்
அனைத்துமே சிதறியதென்றால்
வேதனையோ உச்சம்தான்
வெறுப்பொன்றே மிச்சம்தான்

ஆசையின்
வேர்கள் ஓடும்
அனைத்துமா வெற்றிகொள்ளும்
வேகமாய்ச் சாவைத் தேடும்
வெறித்தனம் கயமையாகும்

கண்வழி
வழிவது சிலர்க்கோ
நீரல்ல இரத்தம்தான்
பொன்மொழி கேட்கும் நிலையில்
பொழுதவர்க்கு இல்லைதான்

தருவாள்
தருவாள் என்றே
தாய்ப்பாலுக்கு அழும்பிள்ளை
பருகும் தாய்மார் பிழியலாம்
தன் உயிரையே பிழியலாமா

நதியுடன்
நீந்தும் நீச்சல்
நலமென்றே கொள்ளலாகுமா
எதிர்த்து நீ நீந்தும் நீச்சல்
இனிப்பான சொர்க்கமில்லையா

எஃகினால்
ஆனதா வாழ்க்கை
இழுபடும் சவ்வுதானே
இயற்கையும் ஈன்ற உயிரை
இழிவென்று நசுக்கலாமா

உயிர்
ஒரு சுமையே அல்ல
உன்
உள்ளம்தான் சுமை தோழா

கயிறினைத் தூக்கி எறி
கலக்கத்தைச் சுட்டு எரி

சுமைகளில்
அனுபவம் பாரு
சுதந்திரம் உனக்குள் தேடு
அமைவதில்
உயர்வினைப் பாரு
அழியாத நம்பிக்கையோடு

குயவன் கைபட்ட மண்ணாய்


குயவன் கைபட்ட மண்ணாய் - உன்
குரலில் வளைகிறேன் பெண்ணே
வயலின் நெல்மணிப் பொன்னாய் - உன்
விழியில் வளர்கிறேன் கண்ணே

புயலை எதிர்கொள்ள வேண்டும் - உன்
பொங்கு புன்னகை போதும்
துயரில் வெடித்ததென் காலம் - உன்
துணையில் பூத்ததே யாவும்

சின்னச் சின்னதாய்ப் பேசு - என்
சிந்தை நனைவதைப் பாரு
வண்ண வண்ணமாய்ப் பாடு - மனம்
வழிந்து மொழிவதைக் கேளு

முன்னம் இருக்குமோ பந்தம் - உன்
முகமும் சொல்லுதே சொந்தம்
எண்ணம் ஒருபட்ட நெஞ்சம் - அது
இறைவன் ஏந்திடும் மஞ்சம்
நீ
கோலம் போடுவதற்கு
என்னால்
புள்ளிகளாய்
இருக்க முடிந்தது

நீ
கோயில்
செல்லுவதற்கு
என்னால்
பக்தியாய்
இருக்க முடிந்தது

ஆனால்
நீ மாலை
சூடும்போது மட்டும்
என்னால்
மாப்பிள்ளையாய்
இருக்க
முடியவில்லையே

வட அமெரிக்கத் தென்றலில்


கவிதைப் பந்தலில் ஆசிரியர் கவிஞர் மதுரபாரதி
இதழ்: ஆகஸ்ட் 2004

கனடாவில் வசிக்கும் புகாரியின் கவிதைகளை மின்னிதழ்கள் மடற்குழுக்கள் என்று இணையமெங்கும் பரவலாகக் காணலாம். நா.பா. தனது 'தீபம்' இதழில் தொடர்ந்து இவரது பல கவிதைகளைப் பிரசுரித்துள்ளார். 1986-ல் அதில் வெளிவந்த இவரது 'உலகம்' கவிதையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை தனது ஆண்டுமலரான 'வார்ஷிகி-86' இல் இந்தியில் பிரசுரித்தது.

தொகுப்புகள்: வெளிச்ச அழைப்புகள் (2002), அன்புடன் இதயம் (2003), சரணமென்றேன் (2004), பச்சை மிளகாய் இளவரசி (அச்சில்). இதில் 'அன்புடன் இதயம்' தொகுப்பு தமிழ் உலகம் மடற்குழுவின் மூலம் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது ஒரு புதுமை. தனிக்கவிதைகளுக்காகவும் நூல்களுக்காகவும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 'தென்னங்கீற்றுகளைப் போல் வாரி வகிடெடுத்த" ஊரான ஒரத்தநாட்டைச் சேர்ந்த புகாரி, கனடாவில் வானொலிச் சேவைகள் மூலமும் தமிழ்மணம் பரப்புகிறார்.



கவிதைப்பந்தலில் ஆசிரியர் மணி மு.மணிவண்ணன்
இதழ்: ஆகஸ்ட் 2003

கவிஞர் புகாரி கனடாவாழ் கவிஞர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில், மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற கேள்விக்கு இவர் விடை இசைக்கவிதை. இவருடைய கவிதைகள் பெரும்பாலும் சந்தத்தின் சத்தத்தோடுதான் வலம்வருவன. அண்மையில் இரண்டு கவிதைத் தொகுதிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டவர். 1. வெளிச்ச அழைப்புகள் 2. அன்புடன் இதயம். முதல் புத்தகம் சிறப்பாக விற்பனையாகி, பரிசும் பெற்றிருக்கிறது.

ஆகப்பெரிய கருணை


ஓர்
உயிரின் மீது
இறைவன் காட்டும்
ஆகப்பெரிய
கருணை
வேறொன்று
என்று
எதுவுமே இல்லை
அன்னையின்
ஆயுளைத்
தவிர






இணைவது ஒன்றே வரமாகும்


வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்
வாழும் கவிதை பிறப்பதில்லை
காற்றில் சுரங்கள் பிரிந்திருந்தால்
கானம் செவியை நிறைப்பதில்லை

கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டால்
காட்சிப் பிழைகள் நிறைவதில்லை
விண்ணும் விழியும் முத்தமிட்டால்
விரியும் ஞானம் குறைவதில்லை

பள்ளம் மேடுகள் தோள்தொட்டால்
பட்டினி என்னும் மிருகமில்லை
எல்லைக் கோடுகள் இணைந்துவிட்டால்
எங்கும் யுத்த நரகமில்லை

நிலமும் மழையும் உறவென்றால்
நெல்லும் புல்லும் கூத்தாடும்
நிலவும் வானும் நேர்பட்டால்
நிம்மதி நெஞ்சில் பாலாகும்

பலரும் சிலரும் கையணைத்தால்
பிரிவினை வஞ்சம் தூளாகும்
உள்ளம் உயிரைத் தழுவிவிட்டால்
உண்மைக் காதல் பயிராகும்

மண்ணைப் பிரிந்தால் துயராகும்
மனிதம் பிரிந்தால் அழிவாகும்
இணைவது ஒன்றே வரமாகும்
இணைக்கும் யாவும் இறையாகும்

அடக்கம் ஒடுக்கம்


அடக்கம்
ஒடுக்கம் என்ற
சொற்களின் உச்சரிப்பில்
அடக்கமும் இல்லை
ஒடுக்கமும் இல்லை

பூ சிறியது
காம்பு பெரியது
எழுத்துக்களில்

(இதை நீங்களும் தொடரலாம், நானும் தொடருவேன்)

பணம் பக்தி பரமன்


வால்மார்ட்டுக்குப்
பக்கத்தில்
டிம் ஹார்டனுக்கு
எதிரில்
கனடியன் டயருக்கு
அடுத்து

பணம்
தேடுபவர்கள்
கட்டுகிறார்கள்

பக்தி
தேடுபவர்கள்
கூடுகிறார்கள்

கடவுள்
வீற்றிருக்கிறார்
அதே
முத்திரை மௌனம்
முகத்தில் பிரகாசிக்க

கவிஞர் புகாரி

கண்களின் திறவுகோல்


உன்
உபதேச தேசத்தில்
கர்ணனும்
நீயே
கையேந்துபவனும்
நீயே

இருந்து
கொடுத்தாய்

இருந்தே
தவிக்கிறாய்

உன்
கண்களின் திறவுகோல்
உன்னிடமே இருந்தும்
பிறர்தாம்
திறக்கவேண்டும்

இது
உனக்கு
மட்டுமல்ல
எல்லோருக்குமே
தலையெழுத்து
வாலிபமே வாலிபமே


ஈடற்ற நிம்மதியும்
இதயம்
நிறைத்தக் குதூகலமுமாய்
இனித்துக் கிடந்த
என்
பிஞ்சுப் பிராயத்தைத்
தாண்டிவர
எனக்குள் அன்று
எந்த
எதிர்ப்பும் எழவில்லை

இன்றோ
விசக் கொடுக்கால்
முத்தமிடும்
ஏமாற்றங்களும்

பொறுக்க மாட்டாத
தவிப்புகளும்

புரையோடிய
நினைவுகளும்

சுட்டுச் சுட்டுச்
சுகங்காணும் உணர்வுகளும்

ஆழத்தில் புதைந்து விட்ட
அமைதியுமாய்

நான்-
கிழிந்து
குரலுடைந்து
விடியல் விடியலென்று
வரமாட்டாத
ஏதோ ஒன்றுக்காய்
நிரந்தரமாய்
விக்கித் தவித்தாலும்

இந்த
வாலிபத்தைத்
தாண்ட மட்டும்
என் இதயம்
அனுமதிக்க மறுப்பது ஏன்?

ஆசை



இன்னும்
ஒரு
ஜென்மம்
கவிதைகளோடு
மட்டும்
ஹைக்கூ என்ன விடுகதையா


உணர்வு வேண்டாம்
கற்பனை வேண்டாம்
மொழியழகு வேண்டாம்
உவமை என்பதோ
வேண்டவே வேண்டாம்

ஹைக்கூ என்ன
கவிதையா
ஹைதர் கால விதவையா?

முதல் இரு அடிகளில்
ஒரு கேள்வி
மூன்றாம் அடியில் பார்
ஒரு தடால் விடை

அட ஹைக்கூ என்ன
கவிதையா
கத்துக்குட்டி விடுகதையா?

ஐந்து அசை
பதினோரு அசை
மீண்டும் ஐந்து அசை
மூவரிக் கட்டுக்கோப்பு

ஹைக்கூவா அல்லது
உள்ளூர் மரபை
உடைத்தெறிந்துவிட்டு
புதிதாய்
வெளியூர் விலங்கா?

சிக்கனக் கவிதைக்குச்
சீற்றம் அதிகம்
அதை
வரட்டுச் சட்டங்களுள்
முடக்குவானேன்?

ஹைக்கூ என்னும்
அயல்கூண்டு தகர்ப்போம்

தமிழின்
செழுமை திமிறும்
வனப்பு குழைத்த
துளிக்கவிகள் பாடித்
துள்ளிக்குதிப்போம்
கறுப்புநிலா

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்
என்ன சம்பந்தம்

விழிக்குஞ்சுகளை
இமைப்பரண் ஏறவைக்கும் இக்கேள்வியை
மோனைத்தனமாய்க் கேட்டவர் யாரோ எவரோ

ஆனால்...
கறுப்புநிலா கண்டுதானே
மாதமொன்று நிறைந்துபோன
உண்மையறிகிறான் அப்துல்காதர்

பெருநாளையும் நோன்பையும்
அவனுக்கோர் உற்சாக மணியோசையாய்
உணர்த்துவதுதான் எது

வெள்ளை நிலா என்றொரு நிலா
நம் வானமாளிகையில் உண்டா

பூசிக்கொள்ளும் அரிதாரமே
மெய்முகமென்று சத்தியம் செய்யும்
திரைக்கதாநாயகியா நம் நிலா

வானத்தின் நிறம் நீலமென்றும்
நிலவின் நிறம் வெள்ளையென்றும்
இன்னும் நம்பித் தொலைக்க
இது என்ன ஹைதர் காலமா

பௌர்ணமி என்று நாம் பிதற்றும் வட்டநிலா
முழுமொத்தமும் வெள்ளைதானா
அதன் முதுகெங்கும்
பத்தை பத்தையாய் அப்பிக்கிடப்பது
சுத்தமான கறுப்பல்லவா

முழுமொத்த வெள்ளையென்பது
நிலவின் வாழ்வில் வாய்க்குமா
எந்த நொடியிலும்

பூமிக்குடை புகுந்து
சூரியச் சுடுவிழி தொடாத குருட்டுச் சிறைக்குள்
சிக்கிக்கொள்ளும்போது
நிலா என்ன நிறமாம்

கறுப்பென்று ஆனதால் மட்டும்
நிலவென்னா குறைந்தா போகும்

உலகப் பேரழகி
கிளியோபாட்ரா மட்டுமல்ல
உலகின் முதல் மனிதனே
கறுப்புநிலாதானே

அது மட்டுமா
இந்த அண்டமே ஓர் அழகு கறுப்பு
அந்தச் சத்தான கறுப்புக்குள்தானே
சகலமும் இருப்பு

வெள்ளாவியில்...


வெடிச்சு வெடிச்சுச் சிதறும் மனசு
வெள்ளாவியில் கிடக்குது
வெட்டுப்பட்டப் பல்லி வாலா
துடிச்சுத் துடிச்சுச் சாகுது

இனிப்புத் தொட்ட நாக்குநுனி
நெருப்புக் காட்டில் வேகுது
உசுரை மடிச்சு வெத்திலையாப்
போட்ட வாயி சிவக்குது

பருந்து கிழிச்ச சுண்டெலியா
மனசு நாத்தம் அடிக்குது
கிழிஞ்ச கூளம் கூட்டிவெச்சு
நெனப்பு நரியும் திங்குது

விழிப்பில்லாத தூக்கம்தேடி
கண்ணு ரெண்டும் ஏங்குது
விழிச்சு விழிச்சுப் பாத்துப்புட்டு
விம்மி விம்மிக் கதறுது

நெனப்புச் சுமை தாங்காம
மனசு எலும்பு நொறுங்குது
நொறுங்க நொறுங்க விட்டுடாம
நெனைப்புச் சுமையும் உசருது

அவமானச் சின்னமாகி
ஆவி கிடந்து அலையுது
கண்ணாடிப் பிம்பத்தையும்
காரிக் காரி உமிழுது

உச்சு முதல் பாதம்வரை
ஊசியேறிக் கிடக்குது
ஊசிமேல ஊசியேற்ற
வெந்த மனசு கெஞ்சுது

அழுகையும் சிரிப்பும் தூரமில்லை


என்னை மீறும் எண்ணங்கள்
என் இதயம் எங்கும் காயங்கள்
மண்ணில் வாழ்க்கை மாயங்கள்
மடியும் வரைக்கும் துயரங்கள்

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

தாழம்பூ நெஞ்சத்தின் தென்றல் அஞ்சல்


கடல்
அலைகளுக்கோ
கால்களில்லை
அவை
நடப்பதுவோ
ராஜநடை

உன்
விழிகளுக்கோ
இதழ்களில்லை
அவை
மொழிவதுவோ
தேன்கவிதை

உன்னைத்
தொடும்வரைத்
துயிலிலிருக்கும்
தென்றல்

உன்னைத்
தொட்டதும்
துள்ளித்துள்ளி
ஆடிவந்து

என்
காதுகளில்
கிசுகிசுக்கும்

ஏனெனில்
உன்
தாழம்பூ நெஞ்சம்
எப்பொழுதும்

எனக்குத்
தூதனுப்பத்தானே
துடித்துக்கொண்டிருக்கும்