ஹைக்கூ என்ன விடுகதையா


உணர்வு வேண்டாம்
கற்பனை வேண்டாம்
மொழியழகு வேண்டாம்
உவமை என்பதோ
வேண்டவே வேண்டாம்

ஹைக்கூ என்ன
கவிதையா
ஹைதர் கால விதவையா?

முதல் இரு அடிகளில்
ஒரு கேள்வி
மூன்றாம் அடியில் பார்
ஒரு தடால் விடை

அட ஹைக்கூ என்ன
கவிதையா
கத்துக்குட்டி விடுகதையா?

ஐந்து அசை
பதினோரு அசை
மீண்டும் ஐந்து அசை
மூவரிக் கட்டுக்கோப்பு

ஹைக்கூவா அல்லது
உள்ளூர் மரபை
உடைத்தெறிந்துவிட்டு
புதிதாய்
வெளியூர் விலங்கா?

சிக்கனக் கவிதைக்குச்
சீற்றம் அதிகம்
அதை
வரட்டுச் சட்டங்களுள்
முடக்குவானேன்?

ஹைக்கூ என்னும்
அயல்கூண்டு தகர்ப்போம்

தமிழின்
செழுமை திமிறும்
வனப்பு குழைத்த
துளிக்கவிகள் பாடித்
துள்ளிக்குதிப்போம்

4 comments:

cheena (சீனா) said...

மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், துளிக்கவிதைகள் இவைகள் புது வடிவங்கள் எடுப்பது காலத்தின் கட்டாயம். தவிர்க்க இயலாது. எளிய சொற்கள், குறுகத் தரித்த குறளடிகள், நச்சென்று நெற்றியில் அடிக்கும் முடிவு இவைதான் அயலகத்தில் இருந்து இறக்குமதியான துளிக்கவிதைகளின் இலக்கணம். இன்றைய துரித வாழ்க்கைக்கு ஏற்ற கவிதை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே குறளாசான் குறள் எழுத வில்லையா ? அவை துளிக் கவிதைகள் இல்லையா ?

cheena (சீனா) said...

//சிக்கனக் கவிதைக்குச்
சீற்றம் அதிகம்
அதை
வரட்டுச் சட்டங்களுள்
முடங்குவானேன்?//

அதை : அவை எனவோ
அல்லது
முடங்குவானேன் : முடக்குவானேன்

என மாற்றுதல் நலமாயிருக்குமா ?

Unknown said...

ஒரு தட்டச்சுப்பிழையைக் கண்டு சொன்னீர்கள். மாற்றிவிட்டேன். மிக்க நன்றி சீனா

Unknown said...

ஒரு தட்டச்சுப்பிழையைக் கண்டு சொன்னீர்கள். மாற்றிவிட்டேன். மிக்க நன்றி சீனா