பலசாலியல்ல

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா

0

பலசாலியல்ல....
வாழக் கிடைத்ததை
வாழாதிருப்பவர்

பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத்தனம் பற்றியவர்

பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்

பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படியாய் நிற்பவர்

பலசாலியல்ல....
வாழ்வின் கழிவுகளைக்
களையத் தெரியாதவர்

பலசாலியல்ல....
விட்டுக்கொடுப்பதோ
என்றோர் ஜம்பமடிப்பவர்

பலசாலியல்ல....
உயிராய் வந்ததை
உதறும் கர்வமுடையவர்

பலசாலியல்ல....
அன்பைத் தெரியாது
பிழைகளைத் துருவுபவர்

பலசாலியல்ல....
வாழத் தெரியாது
வீழ்வதில் பெருமையுடையவர்

பலசாலியல்ல....
சந்தேகங்களுக்கு
சந்தோசங்களை பலியிடுபவர்

பலசாலியல்ல....
முட்டாள்தனங்களையே
முறையென்று பற்றியவர்

பலசாலியல்ல
தொலைந்துபோவதே ஏதெனத் தெரியாது
சினம் கட்டிக் கூத்தாடுபவர்

பலசாலியல்ல
பழநெறிகள் பற்றிக்கொண்டு
துளிர் மனம் புதைப்பவர்

பலசாலியல்ல
அன்புதரும் மெல்மனப் பிறப்பறியாது
வஞ்சந்தரும் மரணங்கள் நேசிப்பவர்

0

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா


இருட்டில் இருக்கிறது இன்பம்

பிரபஞ்சத்தில் இருக்கிறது
இருட்டு

இருட்டில் இருக்கிறது
சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பத்தில் இருக்கிறது
பூமி

பூமியில் இருக்கிறது
கடல்

கடலில் இருக்கிறது
சிப்பி

சிப்பிக்குள் இருக்கிறது
முத்து

முத்தில் இருக்கிறது
அழகு

அழகில் இருக்கிறது
ஒளி

ஒளியில் இருக்கிறது
இன்பம்

இன்பத்தில் இருக்கிறது
பிரபஞ்சம்

பிரபஞ்சத்தில் இருக்கிறது
இருட்டு

இருட்டில் இருக்கிறது
இன்பம்

இருட்டு பேசுகிறது - கேள்விகள் பதில்கள் - 2


அப்துல் ரகுமான்: நீங்கள் சொல்வதுபோல் சூரியனின் வெளிச்சம் எட்டும் தூரம் வரை உள்ள பகுதியைத்தான் வானம் என்கிறோம் இது பற்றி எனக்கு போதிய தெளிவு இல்லை என்பதால் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொண்டாலும், நீங்கள் சொன்ன 70 % dark energy யை வெளிச்சம் இல்லாமல் பூமிப் பந்தின் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எப்படி அடையாளம் கொள்ளும்? 70 % இருப்பதால் dark energy யை நீங்கள் தாய் என்கிறீர்கள் அப்படி என்றால் இந்த பூமிப் பந்தின் முக்கால் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனால் கடலும் தாய்தான் என்பீர்களா? 70 % dark energy உண்மை என்றாலும் அதை தாயாக உருவகப்படுத்துவதை ஏற்க முடியாது

அன்புடன் புகாரி: முதலில் ஒன்று. உங்கள் எண்னங்கள் எல்லாம் நம் பூமிப் பந்தின் மீதே இருக்கின்றன. அதில் தவறில்லை ஆனால் இந்த பூமி என்பது பிரபஞ்சத்தில் ஒரு தூசுத் துகள் அளவுகூட இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

Now consider that there are at least 10 trillion planetary systems in the known universe. Notice the “at least”. That is 10,000,000,000,000. Earth would be “1″ of those.
http://www.joshuakennon.com/how-big-is-earth-compared-to-the-universe/

இதுபோல பல ஆயிரம் தகவல்கள் இணையம் முழுவதும் கிடைக்கும். வானவியல் பற்றி ஒரு நல்ல புத்தகம் வாசித்தால், ஆச்சரியங்களால் அசந்துபோவோம். அதையெல்லாம் விட்டுவிட்டு பூமி பூமி என்று மட்டுமே எண்ணுவது நம் அறிவின் எல்லையைத்தான் காட்டுகிறது.

70% of the Universe is dark energy.
Dark matter makes up about 25%.
The rest adds up to less than 5% of the Universe.

நான் முன்பு கொடுத்த தகவலை முழுமையாக வாசியுங்கள். வெறும் 70 விழுக்காடு அல்ல. குறைந்தது 95 விழுக்காடு. அது 99 ஆகவும் இருக்கலாம். நம்மிடம் சரியான அளவுகள் இதுவரை இல்லை. அறியும் திசையில் பயணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டிருக்கிறது அதனால் நீரை தாய் என்று கூறுவீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள். நல்ல கேள்வி.

உண்மையில் நீரும் தாய்போலத்தான். நீரில்தான் உயிரினங்கள் தொடங்கின. நீரில்லாமல் மனிதன் இல்லை. உங்கள் உடலிலும் பெரும் பகுதி நீர் மட்டும்தான். நீர் இல்லாவிட்டால் நீங்கள் மரணமடைந்துவிடுவீர்கள்.

பிரபஞ்சத்தில் எந்த கோளில் நீர் இருக்கிறதோ அந்தக் கோளில் மட்டும் தான் உயிரினங்கள் வாழமுடியும். பூமிக் கோளில் நீர் இருப்பதால்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. நிலாவில் நீர் இல்லை, எனவே அங்கே உயிர்கள் இல்லை. செய்வாய்க்கோளில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறார்கள். அதனால் அங்கே உயிரினங்கள் வாழ வழியிருக்கக்கூடும் என்றும் நினைக்கிறார்கள். கீழுள்ள சுட்டியைப் பாருங்கள்.

http://www.marsdaily.com/reports/Can_People_Live_On_Mars_999.html

இருட்டைத் தாயாக உங்களால் ஏற்க முடியாவிட்டால் ஏற்காதீர்கள். நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லையே. இறைவன் தந்த என் சிந்தனையால் நான் அறிவதையும் உணர்வதையும் அப்படியே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

இருட்டு பேசுகிறது - கேள்விகள் பதில்கள்

அதிரை அஹ்மது: الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை
கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

அன்புடன் புகாரி” மூத்த சகோதரர், கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர் அஹ்மது அவர்களுக்கு. இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான நிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவை அல்ல. தாயாய் நிறைந்திருக்கும் இறைமை என்று கூறலாம்.

அந்த இருட்டு தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. காற்று என்ற வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது.

அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும்.

சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான்.

ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

Dark Enery, Dark Matter - What Is Dark Energy?

http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/

It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

*

முகமது தஸ்தகீர்: அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி! பின் வருபவைகளில் ஜோதி என்பதின் பொருள் நீங்கள் புரிந்து வைத்துள்ளது என்ன? "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான் - குர் ஆன்

அன்புடன் புகாரி: இங்கே ஜோதி என்பது கவி நயத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான நயங்களைத்தான் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வார்கள். இறைவனின் ஜோதி என்பதை ஏதோ எரியும் ஒரு நெருப்பு என்று நினைத்துவிட்டீர்கள். இறைவன் வெறுமனே எரியும் எந்த நெருப்பும் அல்ல. அவனுக்கு உருவமே கிடையாது. நெருப்புக்கு உருவம் உண்டு.

இந்த வார செய்திகளைப் பார்த்தீர்களென்றால், கமல ஹாசன் பேஸ்புக் ஜோதியில் கலந்தார் என்று இருக்கும். கமல் ஹாசனும் கடவுளும் ஒன்றா அல்லது பேஸ்புக்கும் இறைவனும் ஒன்றா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

ஜோதி என்பதற்கான பொருளே இங்கு வேறு. இறைவன் என்கிற இருப்பு, இறைவன் என்கிற ஆளுமை, இறைவன் என்கிற நிஜம் என்று வேண்டுமானால் கூற முயலலாம். அதை சரியாக எடுத்துக்கொள்வதே இங்கே முக்கியம்.

ஒன்றுக்கு உருவகமாகவோ உவமையாகவோ கூறுவதை அதுவாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் மொழி உங்களை நிறையவே ஏமாற்றிவிடும்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றால் காதில் நிஜமாகவே தேன் பாயுமா?

இன்று மனம் உருகித் தொழுதேன் என்றால் மனம் வெண்ணை என்றும் அது அனல் பட்டு உருகுகிறது என்றும் மனதை ஒரு திடப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியுமா?

இருட்டு பேசுகிறது - என்னை விடாது போலிருக்கிறது

அப்துல் ரகுமான்: சூரிய குடும்பமும் நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளன. அப்படி இருக்கையில் இந்த சூரிய, நட்சத்திர குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்? இந்த கேள்விக்கு பதில் உங்கள் பதிலுரையில் இல்லை. விஞ்ஞானம் வளரவில்லை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது

அன்புடன் புகாரி: இதுவரை நம் பிரபஞ்சம் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. அது இன்னமும் மூடுமந்திரமாகத்தான் இருக்கிறது. வெளிச்சம் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை நோக்கித்தான் மனிதன் பயணப்படுகிறான். இதுவரை அதுதான் அவனுக்கு இயலுமானதாக இருக்கிறது. நாளையும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றுக்கும் கருவிகளையும் அளவுகோல்களையும் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறான் மனிதன்.

ஒரு காலத்தில் எக்ஸ்-ரே என்ற ஒன்று இல்லை என்று அறிவீர்கள். அப்போது ஒருவனிடம் உன் எலும்பை எல்லாம் அப்படியே நான் பார்க்கப் போகிறேன் என்று ஒருவன் சொன்னால். அதற்கு அவன் என்ன பதில் சொல்லி இருப்பான்? என்ன, என்னை அறுத்து சதையை எல்லாம் கழித்துவிட்டு என் எலும்பைக் காணப்போகிறாயா, என்னைக் கொலை செய்யப் போகிறாயா என்றிருப்பான். ஏனெனில் வெளிச்சம் இருந்தால்தான், கண்பார்வை செல்லும் இடத்தில்தான் எதையும் காணமுடியும் என்ற அறியாமையின் பதில்தானே அது?

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்பதும் உண்மை. விஞ்ஞானம் வளரவில்லை என்பதும் உண்மை. எனெனில் அது அறிவு. அறிவுக்கு எல்லையே கிடையாது. இதுவரை நாம் விஞ்ஞானத்தில் எட்டி இருக்கும் தூரம் மகத்தானதுதான் என்றாலும், அத்தோடு அது நின்றுவிடப் போவதில்லை. நம் சந்ததியர் இன்னும் விளக்கமாகவும் விபரமாகவும் காணுவார்கள். ஆனால் அவர்களோடும் அது நின்றுவிடப்போவதில்லை. தொடரும் தொடரும் தொடரும் எப்போதும்.

வெறுமனே ஒரு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்த மிகப்பெரிய எண் எது? நீங்கள் அறிந்த மிகச் சிறிய எண் எது? யோசித்துப் பார்த்தீர்களா?

இதைத்தான் நான் என் ஆகாயம் என்ற கவிதையில் இப்படி எழுதி இருந்தேன்:

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

இருட்டு பேசுகிறது - மேலும் சில கேள்விகள்

அதிரை சித்திக்: இருட்டை துரத்த வெளிச்சம் காட்டிய வேகம், வேகமாக சென்று மறைந்தது போன்றிருந்தது. வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே கவியன்பன் கவி சமாதானம் செய்தது போல் இருந்தது. தொடரட்டும் கவி யுத்தம்.

புகாரி: உலகம் தட்டையென்று கூறிய காலத்தில் இல்லை அது உருண்டை என்று சொன்னவனைக் கொன்றுபோட்டுவிட்டார்கள். எதையும் புதிதாய்க் கேட்கும்போது அப்படித்தான் இருக்கும், பிறகு அவர்கள் மனதிலேயே ஆணிவேராய் ஓடத் துவங்கிவிடும்.

இந்தப் பிரபஞ்சம், பேரண்டவெளி(space) முழுவதும் இருட்டுதான். கருவறை தொடங்கி கருந்துளை வரை இருட்டுதான்.

இருட்டு தாய். ஐம்பூதங்களில் ஒன்றுதான் நெருப்பு. நான் ஐம்பூதங்கள் என்பதையே உடைத்தவன். நான்கு பூதங்களே என்று உரத்துச் சொன்னவன். நான்கு பூதங்களும் ஆகாயம் என்ற ஒற்றை பிரமாண்டத்தின் கூறுகள் என்று உறுதி செய்தவன்.

பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மையையும் எழுதி இருக்கிறேன். ஏதேனும் தீனி இருந்தால் மட்டுமே அது வாழும். தீனி தீர்ந்தால் அது இல்லாமல் போய்விடும். மேல் நோக்கிமட்டுமே தாவும், நம்மோடு இருக்க அதற்கு ஆகாது, ஆனால் நம்மைத் தின்று செரிக்க விரும்பும். இருள் அப்படியல்ல. நிலைபெற்றது. தாய் போன்றது. எந்தத் தீங்கும் செய்யாதது.

உங்கள் ஆர்வம் கருதி, மேலும் ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:

ஆகாயம்
===========

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவ பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்


அதிரை அஹ்மது: الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

புகாரி: இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அப்படியே ஏற்கிறேன். இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன், ஏற்கிறேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான இறைநிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவையல்ல தாயாய் நிறைந்த இறைமை. அது தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது. அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும். சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான். ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

Dark Enery, Dark Matter - What Is Dark Energy? http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/
It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

சித்திக்: உள்ளத்தின் வெளிச்சம் = தெளிவு பெற்ற சிந்தை

புகாரி: ஆகவே வெளிச்சம் என்பது வெறுமனே வெளிச்சம் அல்ல. அறிவு, தெளிவு, தீர்க்கம், நேர்வழி மனமாற்றம் என்று பல. இருள் என்பது வெறுமனே இருட்டு அல்ல. மடமை, கயமை, துரோகம், துக்கம் என்று பல. இனி ஒருமுறை என் ”ஆகாயம்” கவிதையை எவரும் வாசித்தால், சரியான பொருளையே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அப்துல் ரகுமான்: இந்த பூமியில் வாழும் நமக்கு வெளிச்சம் என்று ஒன்று இல்லாவிட்டால் இருள் எப்படி வரும்?

புகாரி: உங்களைப் பொருத்தவரை எப்போதும் உலகமும் அண்டமும் பேரண்டமும் வெளிச்சத்திலேயே இருக்கின்றன. இருள்தான் ஓடி வந்து இரவு என்ற பெயரில் வெளிச்சத்தைக் கவ்விக்கொள்கின்றன என்று நினைக்கிறீர்கள். இது பிழையான பார்வை அன்பரே. சூரியன் என்ற எரியும் நெருப்புப் பந்து பூமியின் எந்த இடங்களில் படுகின்றதோ அந்த இடங்களில் மட்டுமே டார்ச் அடித்தாற்போல வெளிச்சம் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, தன்னைத்தானேயும் சுற்றிக்கொள்கின்றது என்று பள்ளிகளில் படித்திருப்பீர்கள். அப்படி பூமி சூரியனைச் சுற்றும்போது பூமியின் எந்தப் பகுதி சூரியனின் பக்கம் இருக்கிறது அங்கே வெளிச்சம் பரவுகிறது. அவ்வளவுதான். ஆகவே பூமியில் இருட்டுதான் எப்போதும் இருக்கிறது. சூரிய ஒளி படும் சமயங்களில் மட்டுமே வெளிச்சம் வருகிறது. அதாவது இருட்டுதான் வெளிச்சத்திற்கு தன்னை விளக்கிக்கொண்டு இடம் தருகிறது. அல்லது இருட்டுதான் வெளிச்சமாக உருமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம்.

வெளிச்சம் என்பது குறைவான இருட்டு. அவ்வளவுதான். முழு இருட்டையும் விரட்டும் வலிமை எதற்கும் இல்லை. ஏனெனில், வீடுகளுக்குள், மரத்தின் கீழ், நம் நிழல்களாக என்று இருட்டு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். இருட்டு என்பது நல்ல விசயம் அது கெட்ட விசயம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்துல் ரகுமான்: சூரிய குடும்பமும் ,நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளதாகும் அப்படி இருக்கையில் இந்த சூரிய ,நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்?<<<<<

புகாரி: ஆமாம் சூரியன் நட்சத்திரங்கள் எல்லாம் ஓளிதான் வெளிச்சம்தான் நெருப்புதான். சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்பதே உண்மை. ஆனால் நீங்கள் இரவில் வானத்தைப் பார்த்தீர்கள் என்றால் என்ன தெரிகிறது? அடர்ந்த கருமைக்குள் இங்கும் அங்குமாக நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவ்வளவுதான். அதாவது இருட்டுக்குள் சில விளக்குகள் எரிகின்றன. அந்த விளக்குகளும் அணையக் கூடியன. கருந்துளைக்குள் இழுத்துக்கொள்ளப்படுபவைகளாகவே இருக்கின்றன என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதால் நான் அதிகம் அதுபற்றிக் கூற விரும்பவில்லை. வானத்தை முழுமையாக அறிந்துகொள்ள மனிதனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அதனால்தான் இப்படி பாடல்கள் எழுதிச் செல்லுகிறான்.

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும் -வைரமுத்து

அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா -மதுக்கூர் கண்ணன்

அப்துல் ரகுமான்: அந்த வெளிச்சங்கள் இல்லாமல் எப்படி நாம் வானத்தை பார்க்க முடியும்?

அன்பரே, உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் தெரியணும். நாம் வானத்தைப் பார்க்கவில்லை. தூரத்தில் நீல நிறமாகத் தெரிவதை, வானம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவுதூரம் வெளிச்சம் பரவுமோ அவ்வளவுதூரம்தான் பரவும். அப்படி அது பரவிமுடியும் எல்லை நீல நிறமாகத் தெரியும். இணையத்தில் அறிவியல் கட்டுரைகள் கோடிக்கணக்கில் உள்ளன. அற்புதமான பொக்கிசங்கள் அவை. வாசிக்கத் தொடங்குகள். மிக மிக சுவாரசியமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

நாம் வெளிச்சத்தின் அடிமைகளாக இருப்பதால்தான் முழு பிரபஞ்சத்தையும் உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாமல் தவிக்கிறோம். எதைப் பார்க்கவும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. நமக்கு இருப்பது அய்ந்து புலன்கள். ஆனால் கண் மட்டுமே வெளிச்சத்தை நம்பி இருக்கிறது. மற்ற நான்கு புலன்களும் வெளிச்சத்தை நம்பி இல்லை. அவை இருட்டில்தான் மிகத் தெளிவாக இருக்கும். ஒரு மலரை முகர்ந்து வாசனை பார்க்கக்கூட நாம் கண்களை மூடிக்கொள்வோம். முழு உணர்வுகளையும் சேர்த்து ஒரு முத்தமிடுவதற்குக்கூட நாம் நம் கண்களை மூடிக்கொள்வோம்.

நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இப்படி அடிப்படையான *இருள்* களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டால், அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரங்கள் தானே *வெளிச்சத்துக்கு* வந்துவிடும்

ஆராதனை எனும் தலைப்பில்...

அதிரை நிருபர் என்ற வலைப்பூங்காவில் கவிதைகள் பற்றிய ஒரு கருத்தாடலில் இப்படி ஒரு கேள்வி வந்தது எனக்கு

கேள்வி: விளக்கம் தரும் ஓர் எழுத்தாளராக இதுவரை உங்களைக் காண முடிகிறது. ஒரு கவிஞராய்க் காண ஆசைப் படுகிறேன் *ஆராதனை* எனும் தலைப்பில் சிறு கவிதை ஒன்றைத் தாருங்களேன் (அதிரை சித்திக்)

பதில்: இங்கே நான் இப்படி உரைநடை எழுதினாலும் நான் கவிதைக்கு ஆதரவாக எழுதி வருகிறேன். நான் உரைநடை எழுதும்போதே அர அல போன்ற சகோதரர்கள், இறைவனுக்கு இணைவைப்பதை நான் ஆதரிப்பதுபோல் தவறாக எண்ணி இருக்கிறார்கள். நான் கவிதை எழுதினால் என்னாகும்? சற்றே கலக்கமாக இருக்கிறதல்லவா :-)

உரை நடையில் நான் அழுத்தமாகச் சொன்னாலும் அதை சகோ அர அல லேசாக எடுத்துக்கொள்வார். ஆனால் கவிதையில் நான் மென்மையாகச் சொன்னாலும் கடும் கோபம் கொண்டுவிட வாய்ப்பிருக்கிறதல்லவா? அப்படி இருக்க, ஏன் என்னை வம்பில் மாட்டிவிடும் விதமாய் இப்படி ஒரு விருப்பத்தை என்முன் வைக்கிறீர்கள்? சகோ அர அல அவர்களைக் கோபம் கொள்ளச் செய்வதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. அதே சமயம் என் முன் வைக்கப்பட்ட உங்கள் விருப்பத்தை நிராகரிக்கவும் மனம் வரவில்லை. ஆகவே.....

முதலில் கவிதையைப் பற்றி சில வரிகள் சொல்லிவிடுகிறேன். கவிஞனிடம் கவிதைக்கான தலைப்பைக் கொடுத்து கவிதை கேட்கக் கூடாது. ஏனென்றால் கவிதை என்பது செய்வதல்ல. இயல்பாக இதயத்திலிருந்து ஓர் உந்துதலில் தானே வருவது. அந்த உந்துதலுக்குக் காரணம் எதுவோ அந்தத் தலைப்பில்தான் கவிதை அமையும். அதுதான் உண்மையான கவிதை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். என் கவிதை நூல் ஒன்றுக்கு இப்படி ஒரு முன்னுரை எழுதினேன்:

*

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?' என்று கேட்கிறார்கள் சிலர்.
என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக 'இல்லை' என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ 'விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்' என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் 'இன்று கடிதம் இல்லை' என்று அவர் சொல்லமாட்டார் 'அவசியம் நாளை தருகிறேன் தம்பி' என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.
இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.
தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

சரி, ஆராதனை என்ற தலைப்பில் ஒரு கவிதை கேட்டீர்கள் அல்லவா? நான் இருட்டை ஆராதித்த ஒரு கவிதையை இங்கே இடுகிறேன். நான் எப்படி இருட்டை ஆராதிக்கிறேன் என்று இருட்டே சொல்வதுபோல் அமைந்த இந்தக் கவிதை என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைப்புகளில் வெளிவந்தது. எத்தனை முரண் பார்த்தீர்களா? வெளிச்ச அழைப்புகளில் இருட்டு பேசுகிறது :)

*

இருட்டு பேசுகிறது
==================

நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்

வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன
கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன

உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
பிணைத்துக் கட்டுகிறது

வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய்
இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோசம்

வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும்
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா
வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து உருவங்களாலா
உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்

வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம் உங்களை
ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்

*

பின்னூட்டங்கள்:

கவிஞர் சபீர்:
இருட்டில் இத்துனை வெளிச்சம் பாய்ச்சுதல் எங்ஙனம் சாத்தியம் என எழுதியவர்க்கே சாத்தியம். முதன்முதலாக இருட்டைத் தெளிவாகப் பார்க்க வாய்த்தது, எனினும் எனக்கென்னவோ... வெளிச்சமே இருப்பு எனவும் இருட்டு இல்லையின் வறையரை எனவும் ஓர் அபிப்ராயம் உண்டு. நேரம் வாய்க்கும்போது பதிலடி தருகிறேன்,,,வெளிச்சமே வெற்றி என்று. க்ளாஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங், சகோ.

*

அதிரை சித்திக்:
எதையும் தெளிவாய் சொல்ல கவிஞனால் மட்டுமே முடியும். கருவுக்குள் இருளில் அமைதியாய் இருந்த குழந்தை வெளிச்சத்தை கண்டு வீரிடுவதாக கூறும் கவி மனிதனுக்குள் திணிக்க படும் முதல் விஷயம் வெளிச்சம் ...கவியின் ஆழம் கருத்து கடலின் ஆழம் ..கவிஞர் சபீர் கருத்து மோதலுக்கு தயாராகிறார். நானோ கவிஞரின் கவியில் மயங்கி கருத்தில் ஆழ்ந்து போனேன் இருளில் துவக்கமும் முடிவும் உள்ளதாகவே நினைகிறேன் தூக்கத்திற்கும் இருள் தேவை ..இருளின் குணம் அமைதி .கோழைக்குஇருள் பிடிக்காது பயம் பிடிக்கும் இருள் ..மீது ஒரு காதலையே கொண்டு வந்து விட்டீர்கள் கவிஞரால் எதையம் எப்படியும் கூறி மனதில் பதிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.

*
கவிஞர் சபீர்:

நான்… வெளிச்சம்!
==================

விடியல் என்றொரு வினையில்
சற்றுமுன்தான்
உலகின் இருட்டு அழுக்கைத்
துடைத்தெடுத்தத்
தூய்மை நான்.

இருட்டு
இல்லையின் வறையரை
நானோ
இருப்பின் அறிவிப்பு

என்னைக்கொண்டே
நாட்களைக் கணக்கிடுவர்
இருட்டைக் கொன்றே
நானும் வெளிக்கிடுவேன்

உள்ளுக்குள் உறங்கும்
மிருகம்
இருட்டின் தயவிலேயே
குற்றம் புரியும்
இருட்டை உடுத்தியே
எங்கும் உலவும்
நான்
நல்லது கெட்டதை
நானிலத்திற்குக் காட்டும்
நல்லவன்

இருட்டு
கண்கொத்திப் பாம்பு
துரோகத்தின் துணைவன்
எல்லாப் பொருட்களையும்
இல்லையென்றாக்கும்
ஏய்ப்பு இருட்டு.

நான் நிஜம்
இருட்டு நிழல்

வெளிச்சம் விருந்தாளியல்ல
இருட்டு தரிக்கும்
வேடம் திருத்தி
யதார்த்தமாக்க முயலும் அறிவாளி

யாவற்றின்
இயல்புகளையும்
கருமை பூசி
போலியாகக் காட்டும்
முகமூடி இருட்டு

நிஜம்தான்
நிரந்தரம்
இருட்டு
எத்தனை முயன்றாலும்
என்னைக்கொண்டு
விரட்டவே விழையும் உலகு

இருட்டு
காத்திருக்கு மொரு கயமை
நான்தான்
அதைக் கட்டுப்படுத்தும்
காவல்காரன்.

நான் துவக்கம்
இருட்டு இறுதி
என்னில்
வாழ்க்கைத் துவங்கும்
இருட்டில் எல்லாம் இறக்கும்

இருட்டு இருமாப்பு
வெளிச்சமே இறை வார்ப்பு!

*

கவிஞர் அபுல் கலாம்:

கறுப்பும் வெள்ளையும்:
=====================

கருவறை இருட்டெனும் கறுப்பு;
பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!
இருட்டும் வெள்ளையும் கலந்து
பிறப்பது குழந்தை எனும் கவிதை!
கரும்பலகையில்
வெள்ளைக் கட்டியால்
எழுதினாற்றானே
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!

கருமையையும் வெண்மையையும்
பிரித்துக் காட்டும் வைகறைப்
பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!

இருட்டு அறியாமையை
வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்
அறியாமையும் அறிவும் கலந்து
ஐயமும் தெளிவும்
ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!

கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்த பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!

நிகரற்று ஒளிதெறிப்பாய்



ஏதும் மீதமின்றி
எக்கதவும் திறப்பின்றி
யாவும் இழந்தே
இருட்சிறை வீழ்ந்தனையோ

மனமே....
நீ ஏதும் இழக்கவில்லை
எத்துயருளும் மூழ்கவில்லை

இழந்தது ஏதாகிலும்
எள்ளளவும் தேடா இதயம் பெறு

ஜென்ம விடுதலையின்
பூரணப் பொருள்
உன் உயிரில் பொரிக்கப்படும்

நெருப்பெனும் பூதமாவாய் நீ
நிகரற்று ஒளிதெறிப்பாய்

உனைத் தொடவும் அஞ்சும்
உலகுமேலேறி
என்றுமழியா பிரபஞ்சம் நிறைவாய்
அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்

தோழியை அழைத்தேன்....

இந்த வேற்றுக்கிரகவாசியைக்
கட்டிக்கொண்டு நான் படும்பாடு
அப்பப்பா
எரிச்சலில் என் இதயத்தையே
இடியாப்ப இழைகளாய்ப்
பிழிந்துகொண்டிருக்கிறேன்
பிறகு பேசலாமா என்றாள்

*

நண்பனை அழைத்தேன்...

விமான நிலையம் வந்திறங்கினேன்
இடி என் நடுத்தலையில்
சன்னமாய் இறங்கியது

எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
வெட்டிப்போட்ட நகங்கள் கூட
குதித்துக் குதித்துச்
சண்டைபோட்டுக்கொள்கின்றன
அப்புறம் பேசலாமா நண்பா
என்றான்

*
தொப்புள் கொடியால்
பிரித்தெடுக்கப்படாத
ஆனால் தாய்ப்பால் அருந்திய
பாசந்தரும் என்னைப் பெறா
அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

வீடு சீரானால்
நானும் உயிருடன் இருந்தால்
நானே அழைப்பேன்
அதுவரை
வேண்டாம் உன் தொலைபேசி
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

*
எங்கு போனாலும்
இதுதானா?

என்னிடமும்
அந்த எழவெடுத்த
நெருப்புச் சுனாமி என்றுதானே
தொடர்ந்து
ஒவ்வொருவராய் அழைத்தேன்

வீட்டைவிட்டு
வெளியேற....

என் துக்கம் தாண்டி
ஒரு துயரத்தில் குதிக்க...

வாடகைக்கு நிலவறை தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
ஒரே படகில் பயணப்படும்
என் உறவுகளே

இது என்ன
விதி?

மண்ணில்
மனித வாழ்க்கைபோல்
ஒரு கேடுகெட்ட நரகம்
விண்ணில் இருக்கிறதா என்ன?

ச்சும்மா
பூச்சாண்டி காட்டுகிறார்கள்
செத்தப் பேய்களிடம்

சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
எனக்கு

உங்களுக்கு???

கணியன் பூங்குன்றன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்,
இன்னா தென்றலும் இலமே ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

 -கணியன் பூங்குன்றன்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்

அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
அவனும் இல்லை
காலம் மாறித்தான் போச்சு

தொப்புள்கொடி அறுந்ததோடே
தொலைந்து போனதாய் இருக்கலாம்
தாயின் உறவு

ஆனால்
விந்துப்பையில்
துளிகளாய் நெளியும்போது மாத்திரமே
பிள்ளைகளின் உறவு
தகப்பனுக்கு

ஐ-பேடில் அழகுதமிழ் செல்லினம்

முத்தழகா
முத்து நெடுமாறா
தமிழைக்
கணியுலகக் கன்னத்தில்
முத்து முத்து முத்தங்களாய்
முப்பொழுதும் பதிக்கும்
வித்தகா

மெல்லினம் வல்லினம்
இடையினம் காட்டும்
தமிழழகியின் மடியில்
சொக்கி விழுந்த நான்
இன்னமும்
எழுந்து கொள்ளவே இல்லை

அதற்குள்
உன் செல்லினத்திலும் விழுந்து
சிறைபட்டுப் போவதா?

அடடா
அந்த சிறைக்குள்தான்
எத்தனை எத்தனை லட்சங்களில்
வண்ண வண்ணச் சிறகுகள்?

செல்லினச் சுந்தரா
முத்தெழில் முத்து நெடுமாறா
உனக்கு இத்தமிழனின் நன்றிகள்
காலத்தால் காய்ந்துபோகாத
கோடி கோடிக் கணிப்பூங்கொத்துக்களாக

அன்புடன் புகாரி
20110312


ஒரு கனவு

வளைந்த எழில்
வானப் பெண்ணின்
நீல முகத்தில்
வைர மூக்குத்தியாய்
கதிரோன் ஒளிர

அவள்
கழுத்து ஆரமாய்
கோள்கள் அத்தனையும்
கோத்துக்கிடக்க
ஓரமாய்
அந்த நிலவும் வந்து
ஓர் மச்சமாய்
மோவாயில் மிளிர

செவ்வாய் மட்டும்
கொஞ்சம் மேலெழும்பி
பனிமேடு பிளந்த உதடுகளால்
கவிதைகள் சொல்ல

அந்தக்
கவிதைகளெல்லாம்
தமிழ் தமிழ் என்று
தங்கத் தாம்பூலச்
சொற்களேந்த

பேரண்ட வெளிகளெங்கும்
தமிழனின் ஆட்சி
பால்வீதி ஒளிச்சுழல்
பலவண்ணத் தலைப்பாகை
சூடிக் கிடக்க

அட
இதையெல்லாம்விட
அதிசயமாய்

அண்டசராசரப்
பேரதிசயமாய்

ஆரும் கண்டிராத
தேவ அதிசயமாய்

தமிழன்
தமிழில் மட்டுமே
உரையாடுவான்

மொழி ஒரு வாகனம் மட்டும்தான்


நேற்று நவம்பர் 5, 2011 டொராண்டோவில் எழுத்தாளர் நரசய்யா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒற்றை வெற்றுச் சொல்லும் இல்லாத அதே சமயம் மிக இயல்பான பேச்சாக அது இருந்ததால் எனக்குப் பிடித்திருந்தது. தமிழன் புனைவிலக்கியங்களில் காட்டிய அக்கறையை ஆராய்ச்சி இலக்கியங்களில் காட்டவில்லை என்ற உண்மையைப் பல சம்பவங்களின் மூலமாக உணரச்செய்தார்.

தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் பாரதி, இந்தியாவில் முதலில் விமானம் வாங்கியவர் ஆவுடையப்பச் செட்டியார் என்ற தமிழர், கப்பல் என்பது தெலுங்குச் சொல் என்று பல சுவாரசியமான தகவல்களை அநாயாசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நீயா நானா கோபிநாத் மொழியைப் பற்றி இவரிடம் கேட்டபோது, மொழி ஒரு வாகனம் மட்டும்தான் அதுவே போய்ச்சேரும் இடம் அல்ல என்று கூறியதாகச் சொன்னார்.

நிகழ்ச்சி முடிந்தததும் நரசய்யாவோடு தனியே உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. ஐயா ஒரு சிறு கேள்வி, உங்கள் கடல்வழி வாழ்வில் எத்தனையோ மனிதர்கள் புலம்பெயர்ந்து செல்வதையும் வாழ்வதையும் கண்டிருப்பீர்கள் கேட்டிருப்பீர்கள், அவர்கள் சென்ற இடங்களின் தங்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற சொந்த அடையாளங்களைத் தொலைக்காமல் வாழ என்னென்னவெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்கள், ஒவ்வொன்றாக கூறுங்கள் என்று கேட்டேன்.

மொழி மட்டும்தான் என்று சட்டென பதில் அளித்தார். என்றால் மொழி என்பது ஒரு வாகனம் மட்டும்தான் அதே சமயம் சுய அடையாளத்தோடு வாழும் பலருக்கு அதுவே வாழ்க்கை என்று அவர் கூறுவதாக நான் எடுத்துக்கொண்டேன்.

இவரின் எந்த நூலை வாசிக்காவிட்டாலும் ’கடல்வழி வணிகம்’ என்ற நூலை கட்டாயம் வாசித்துவிடுங்கள் புகாரி என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் என்னிடம் கூறினார். நரசய்யாவின் அத்தனை எழுத்துக்களையும் வாசித்துவிடவேண்டும் என்ற ஆவல் மூளையில் கோடு கிழித்துக்கொள்ள விடை பெற்றுக்கொண்டேன்.

ரீங்காரத்தில் வந்த ஒரு காரம்

டியர் மிஸ்டர் கடவுள்ஸ்,
உங்களது மத பொஸ்தகங்கள் மற்றும் உங்களது தூதர்களின் வாழ்க்கை வரலாறு வகையறாக்களை பூமியில் இருந்து அள்ளிக்கொண்டு போகவும். உங்களால் பட்டது போதும்

நோர்வே ‍ - கிறிஸ்த்துவ தீவிரவாதத்திற்கு பலி
இந்தியா - இந்து இஸ்லாம் தீவிரவாதத்திற்கு பலி
இலங்கை - பௌத்த தீவிரவாதத்திற்கு பலி

இது வரை உங்களால் செத்தவன் எல்லாம் மனிதர்களே.
உங்களுக்கா​ன சண்டையில், இதுவரை எந்தக் கடவுளும் சாகாதது எனக்கு ஆச்சர்யமாய் இல்லை. ஏன் என்றால் தலைவர்கள் என்று தீக்குளித்து உள்ளார்கள்?

(எழுதியது நானல்ல. இது ரீங்காரத்தில் கண்டெடுத்த முத்து)

நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.

கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.

சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!


நிகழ்ச்சி இரண்டு:

அதே சவுதி அரேபியா. அதே அலுவலகம். இப்போது ஒரு ஹைதராபாத் அப்துல் கதீர்.

அப்துல் கதீர் புதிதாக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான். அவன் இந்தியனா பாகிஸ்தானியா அல்லது பங்களாதேசியா என்று தெரிந்துகொள்ள நீ எந்த நாடு என்று கேட்டோம்.

”ஹைதராபாத்” என்றான்.

”ஓ இந்தியாவா” என்று கேட்டோம்.

”இல்லை. ஹைதராபாத்” என்றான்.

”ஹைதராபாத் இந்தியாவில்தானே இருக்கிறது? உன் நாடு எது என்று கேட்டால் இந்தியா என்றுதானே சொல்லவேண்டும். உன் ஊர் எது என்று கேட்டால்தானே ஹைதராபாத் என்று சொல்லவேண்டும்” என்று கேட்டோம்.

”இல்லை. என் நாடு ஹைதராபாத்” என்றான்.

அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிப் போய்விட்டோம்.

(நிஜாம் ஹைதராபத்தை தனி நாடாகக் கேட்டார். ஹைதராபாத் இந்தையாவுடன் இணைந்ததை அப்துல் கதீர் இன்றுவரை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. இனியும் ஏற்க மாட்டான்)


நிகழ்ச்சி மூன்று:

அதே அப்துல் கதீர். அதே நிறுவனம். அதே சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

அதன்படி நாங்கள் தொழுகை அழைப்புக்கு முன் உணவு உண்டு நோன்பு வைத்துவிட்டோம். மணி மூன்றரை ஆகிவிட்டது.

மணி நான்கு ஆகியும் அப்துல் கதீர் உணவு உண்டுகொண்டு இருந்தான்.

”கதீர், என்னாச்சு இன்று உடல் நலம் சரி இல்லையா?”

“இல்லையே, நன்றாக இருக்கிறேன்”

“நோன்பு வைக்க வில்லையா?”

”வைக்கிறேனே”

”இன்று நோன்பு மூன்று மணிக்கே வைக்க வேண்டும்? தொழுகை அழைப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது”

“நான் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்பேன்”

”ஏன்?”

”ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்போம்”

“கதீர், அங்கே சூரிய உதயம் தாமதமாக வரும். அதனால் தொழுகை அழைப்பு தாமதமாக வரும். ஆகவே நோன்பை நாலரை மணிக்கு வைக்கலாம். ஆனால் இங்கே சூரிய உதயம் முன்பே வந்துவிடுகிறது எனவே மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டும். அப்படித்தானே குரானில் சொல்லி இருக்கிறது?”

”நான் சவுதிக்காரன் அல்ல. நான் ஹைதராபாத். ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு”

அப்துல் கதீர் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிவிட்டோம்.

இதில் உபரி சிரிப்பு என்னவென்றால், நோன்பு திறப்பதை மட்டும் ஹைதராபாத் நேரத்தில் திறக்க மாட்டான். சவுதி படி முன்கூட்டியே பள்ளிவாசலில் தரும் இலவச உணவை உட்கொண்டு திறந்துவிடுவான்.
வாழ்த்து அட்டைகளையும்
வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்...

காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்

அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்

ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க்
கிடந்தால்...

காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்
மனிதம் மாய்வதற்கு மதம்தான் காரணமா?

மனிதம் மாய்வதற்கு மதம் காரணமல்ல மனித வக்கிரமே காரணம். மனித வக்கிரம் மடிந்தால்தான் மனிதம் தழைக்கும்.

மனித வக்கிரம், சாதி மதம் இனம் மொழி நிறம் நிலம் அரசியல் காசு காமம் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தி தன் வக்கிரத்தைக் காட்டும்.

இனங்களுக்குள் யுத்தமும் அழிவும் நடக்கிறது என்பதற்காக, மனித வக்கிரத்தை அழிக்காமல் இனங்களை அழித்தால், உலகில் மனித இனம் மொத்தமாக அழிந்துபோகுமல்லவா?

அன்னை தெரிசா, பாரதி, காந்தி போன்ற எண்ணற்றோர் மதம் சார்ந்தவர்கள்தாம். அவர்களால் உலகிற்குக் கேடு விளைந்ததா?

ஒரு மதத்தில் நல்லவரும் இருப்பர். வக்கிர மனிதரும் இருப்பர்.

மதம் அற்றவர்களிலும் நல்லவரும் இருப்பர் வக்கிர மனிதரும் இருப்பர்.

மதத்தில் உள்ள வக்கிரபுத்திக்காரர்களை பார்த்து மதத்தை அழிக்க நினைப்பதும் மதமற்றோரில் உள்ள வக்கிரபுத்திக் காரர்களைப் பார்த்து மதமற்றோரையெல்லாம் அழிக்க நினைப்பதும் அறிவீனம்.

மதங்கள் எல்லாம் இணையவேண்டும். மதங்கள் இணைகின்றன என்றால் அது ஓர் ஆண் பெண் உறவைப்போல. ஆண் ஆணாகவே இருப்பான். பெண் பெண்ணாகவே இருப்பாள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பர். ஏற்பர். அதனால் இணைவர்.

அப்படியான இணைவு மதங்களுக்கு இடையே வேண்டும். அதற்குத் தடையானவர்கள் வக்கிர மனம் கொண்டவர்கள்.

மனிதர்கள் எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எதை வேண்டுமானாலும் நம்பிச் செல்லட்டும். எதற்கு வேண்டுமானாலும் தாசர்களாய் இருந்துவிட்டுப்போகட்டும். எதன்மீது வேண்டுமானாலும் பக்தி கொள்ளட்டம். அது எதுவுமே மனிதத்தை சாகடிக்காது. ஆனால் மனிதன் வக்கிரம் கொண்டால் அங்கே மனிதம் சாகும்.

ஒருவர் தெலுங்கு பேசட்டும், ஒருவர் தமிழ் பேசட்டும், ஒருவர் இந்தி பேசட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் வானத்தின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் பூமியின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் நெருப்பின்மீது பக்தியாய் இருக்கட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் இந்துவாய் இருக்கட்டும் ஒருவர் முஸ்லிமாய் இருக்கட்டும் ஒருவர் கிருத்துவராய் இருக்கட்டும். அதனாலென்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

மதங்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாய்த்தான் மண்ணில் இருக்கின்றன. அதற்குமுன் மனிதன் எப்படி வாழ்ந்தான். முழுக்க முழுக்க மனித நேயத்தோடா? இல்லையே, காடுமிராண்டிகளாகத்தானே வாழ்ந்தான்.

சிலர் மதங்களின்மீது அதீத வெறுப்பு கொண்டுள்ளனர். அதுவும் வெறிதான். மதவெறிக்கு எப்படி மனித வக்கிரம் காரணமாக இருக்கிறதோ அதே போல மத அழிப்பு என்ற வெறிக்கும் மனித வக்கிரமே காரணமாய் இருக்கின்றது.

எந்தக் காலத்திலும் வெறியற்ற வாழ்வுதான் அமைதியான வாழ்வு.

வக்கிரம் கொண்ட மனிதன் எதையோ ஒன்றை கையில் எடுத்துக்கொள்கிறான். மதம், இனம், நிறம், பெண், பணம், பொருள், குடும்பம் என்ற எல்லாமும் அவனுக்கு ஆயுதங்கள்தாம். புதுப்புது ஆயுதம் தேடுவதும் புதுப்புது ஆயுதம் எடுப்பதும் மனித வக்கிரம்தான். மனித வக்கிரம் ஒழிய வேண்டும். அது ஒழியாமல் மனிதம் விமோசனம் அடையாது

மதவெறியன் என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அரசியல் துரோகி என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அந்த மத வெறியனிடமும் அரசியல் துரோகியிடமும் இருப்பது எது? வக்கிரம்தானே?

இன்று மதத்தைவிட அறிவியல்தான் உலக அழிவிற்குக் காரணமாய் இருக்கிறது. துப்பாக்கி தொடங்கி அணுகுண்டுவரை எத்தனை கண்டுபிடிப்புகள்? வேதியல் வெடி தொடங்கி கிருமிக் குண்டுவரை எத்தனை நாசங்கள். ஆகையால் அறிவியலை  அழித்துவிடுவோமா? அறிவியலைத் தவறாகப் பயன்படுத்தும் வக்கிரக்காரர்களைத்தான் அழிக்க வேண்டும் அல்லவா?

மதங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள். ஆனால் மதங்களால் முழு வெற்றியைக் காணமுடியவில்லை. அதற்குக் காரனம் இன்னனும் அழிக்க முடியாத வக்கிரம்தான்.

 அதுமட்டுமல்லாமல் எதிர் வினைகளையும் அது உருவாக்கிவிட்டது. அந்த எதிர் வினைகளுக்கான காரணமும் மனித வக்கிரம்தான்.

இலங்கையில் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார்களே அது ஏன்? மதம் காரணமா? கடவுள் காரணமா? இனம்தானே காரணம், பாகுபாடுதானே காரணம்? அந்த இனவெறியையும் பாகுபாடு வெறியையும் தந்தது மனித வக்கிரம்தானே?

மதங்களே தோன்றாத மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் கொத்துக்கொத்தாகப் போரில் செத்தார்களே ஏன்?

முதல் உலகப்போர் ஏன் வந்தது? இரண்டாம் உலகப்போர் ஏன் வந்தது? சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டார்களே ஏன்? வெள்ளைக்காரன் இந்தியாவைப் பிடித்தானே ஏன்?

அமெரிக்கா முதன் முதலில் ஜப்பானில் அனுகுண்டை தூக்கி ஏன் போட்டது? அலெக்சாண்டர் ஏன் உலகெங்கும் படையெடுத்து மக்களைக் கொன்று குவித்தான்? ஹிட்லர் ஏன் மக்களையும் கொன்று தானும் மாண்டான்?

மதங்கள் ஏன் தோன்றின? அது மனித வக்கிரத்தை மட்டுப்படுத்தவே தோன்றின. ஆனால் மனித வக்கிரம் மதத்தையே சாய்த்துப் போட்டுவிட்டது. ஆனாலும் வலுவான மார்க்கம் எழுந்து நிற்கும். அறத்திற்கு என்றும் அழிவில்லை. அது அமுக்கப்பட்டாலும் காற்றுள்ள பந்தினைப்போல் நீரின் மேலே வந்தே தீரும்.

அடுத்து சட்டம் ஒழுங்கு மனித வக்கிரத்தை அடக்க முயல்கிறது. ஆனால் வெற்றி பெற்றதா? வெற்றிபெற்றிருந்தால் உலகம் அமைதியாகி இருக்குமே!

உலக அழிவிற்கு மதங்கள்தான் காரணம் என்றால் அமெரிக்கா, இந்தியா என்று எந்த நாட்டிலாவது எந்த மதமும் கூடாது என்று சட்டம் போட்டார்களா? உலகில் எந்த மதமும் கூடாது என்று நாடுகள் பலவும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதா?

புத்தர் ஏசு காந்தி போன்றோரின் வழிகள் வேறாக இருக்கலாம் ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றுதான்.

மதங்கள் வேறாக இருக்கலாம் அவற்றின் நோக்கம் ஒன்றுதான். கடவுள் பயம்காட்டி மனிதனை நேர்வழிப்படுத்துவது. சொர்க்கம் நரகம் என்று கூறி மனித வக்கிரத்தைக் கொல்ல முயல்வது. ஆனால் மனித வக்கிரமோ அந்த மதத்தையே கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களைக் கொன்று குவிக்கிறது.

மனிதர்களின் வக்கிரத்தை அழிப்பதற்குப் பதிலாய் சிலர் மனிதர்களையே அழித்துவிடலாம் என்பதுபோல் பேசுகிறார்கள். குடும்பத்தில் உள்ள வக்கிர மனங்களை மாற்றுவதற்குப் பதில், குடும்பத்தையே அழித்துவிடலாம் என்று யோசனை கூறுகின்றனர். மதங்களில் உள்ள வக்கிர மனிதர்களைத் திருத்துவதற்குப் பதில் மதங்களையே அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் மனைவி பாடு திண்டாட்டம். பெண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் கணவன்பாடு திண்டாட்டம். ஆகவே திருமணங்களையே அழித்துவிடுவதா? இப்படியே வேர் பார்த்து வேரறுக்க முயலாமல், மரம் பார்த்து கிளைகளையும் இலைகளையும் அழிப்பதா?

மத எதிர்ப்பு என்பது வெறியாகும்போது அது மதவெறியைவிட கொடுமையானதாய் ஆகலாம். ஒருவன் தனக்கு மதம் வேண்டாம் என்று விரும்பினால் அதில் தவறே இல்லை.

மதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மதத்தைக் கட்டிக்கொண்டு அழத் தேவையில்லை. மதச்சம்பிரதாயங்களில் மூட நம்பிக்கையைக் காண்போர் அதைக் கட்டித் தழுவிக் கிடக்கத் தேவையில்லை.

ஆனால் மத எதிர்ப்பில் வெறி கொண்டால் ஒருவன் வக்கிரம் கொள்கிறான். பிறகு மதவெறியனுக்கும் அவனுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை!

மதப்பற்றுடையவர்கள் மதவெறியர்கள் ஆகமாட்டார்கள். உலகில் பெரும்பாலானவர்கள் மதப்பற்றாளர்கள். அதில் அதிகப்படியாய் ஒரு விழுக்காட்டிற்கும் மிகக் குறைவாகவே வெறியர்கள் இருப்பார்கள். அந்த வெறியர்களிடம் இருக்கும் வக்கிரம்தான் அழிக்கப்படவேண்டிய ஒன்று வேறு எதுவும் அல்ல.
எனக்கொன்றும் பிடிக்கவில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின்
இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம்
சொல்பவற்றுள் உப்புமில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

நெஞ்சில் ஏக்கம் ஓங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ

படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும்
ஊற்றுகளும் எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மைதான்
மிளிர்கிறது

குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும்
கோணலாகிச் சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம்
ஐந்தெனக்குக் கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
முடக்கமின்றி
பொய்களற்று வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து
எனக்குள்ளே திணிக்கும்
இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில்
தொட்டதெலாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று
புண்ணாவது பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த
மூளைமரம் வளர்த்துவிட்ட
சிலிர்ப்புசெத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்