டொராண்டோ தமிழ் இருக்கை
University of Toronto Chair in Tamil Studies
ஜூன் 25, 2018

Image may contain: 3 people, people smiling, people standing and suit

இன்று சரித்திரம் காணாத ஓர் அருமை நிகழ்ச்சி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இனிதாய் நடந்தேறியது. ஒரே மணி நேரத்தில் 600,000 கனடிய டாலர்களைத் தாண்டி மகத்தான வசூல். இதில் பாதிக்கும் மேல் நன்கொடை வழங்கியவர்கள் அமெரிக்காவிலிருந்து இதற்கென விமானத்தில் வந்திறங்கிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் எனும்போது மெய் சிலிர்த்தது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. அதை பெருவெற்றியுடன் திரட்டி நிறுவிய சூடு இன்னும் ஆறவில்லை. அந்தச் சூட்டோடு சூடாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அடுத்ததொரு தமிழ் இருக்கை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு 3 மில்லியன் கனடிய டாலர்கள் போதுமாம். அமெரிக்க டாலர்களில் கணக்கிட்டால் சுமார் 2.5 மில்லியன் டாலர்கள் போதும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் தலைவர் ஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் தொடங்கிவைத்த யோகமா இது என்று தெரியவில்லை. மின்னல் வேகத்தில் நன்கொடைகள்  'கொடை' (குடை)யின்றி நிற்கும் பெண்ணின் மீது விழும் மழையாகக் கொட்டிப் பொழிந்தன.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் சார்பாக ஜானகிராமன் 51,000 அமெரிக்க டாலர்களை (சுமார் 70,000 கனடிய டாலர்கள்) முதல் நன்கொடையாக வழங்கித் துவங்கிவைத்தார். பின் 50, 000, 25,000, 10,000 என்று பல்கிப் பெருகி வந்து குவிந்தன நன்கொடைகள்.

இரண்டு வருடங்களில் 3 மில்லியன் சேர்த்தால் போதும். 18 மாதங்களில் சேர்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள். போகின்ற போக்கைப் பார்த்தால் ஓரிரு மாதங்களிலேயே 3 மில்லியன் சேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் இன்னும் நன்கொடை வழங்கத் துவங்கவே இல்லை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே தமிழ் ஆர்வத்தோடு பயில அநேகம் பேர் இருக்கிறார்கள். மாணவ எண்ணிக்கை நிச்சயமாக ஹார்வர்ட் இருக்கையைக் காட்டிலும் பன்மடங்காய் அதிகரிக்கும் என்று நான் நம்புகின்றேன்.

தமிழக அரசிடமிருந்து வாழ்த்துச் செய்தி வேறு வந்தது. அடுத்து நன்கொடையும் வரக்கூடும்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் MP நேரில் வந்து வாழ்த்துச் செய்தி வழங்கினார். கனடிய அரசு நிதியுதவி செய்யுமா என்று தெரியவில்லை. தமிழுக்கென்று கனடிய அரசும் ஏதேனும் செய்யத்தானே வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

எனக்குள் சற்றே கவிதைச் சிறகுகள் படபடத்தன. அப்படியே எழுதி வைக்கிறேன் ஆனந்தத்தோடு கீழே:

*

உலகெலாம் தமிழ் இருக்கை!

இருகை குவித்து நறுமுகை விரித்து
இருக்கை இருக்கை என்றார்கள்
காணுமிடமெலாம்

ஏதென எட்டிப்பார்த்தேன்
அட இறக்கை இறக்கை
எங்கும் இறக்கை என்றே
கண்டேன்

ஒவ்வொன்றாய் இறக்கைகள்
வெடித்துப் படபடக்க
அடடா
வான் கிழித்துப் பறக்கும்
வைரப் பறவையாய்த்
தமிழ்

தமிழ்த்தாய்க்கு
புலம்பெயர் ஏக்கப் பிள்ளைகள்
எடுத்துக் கட்டும் பொன்னாரங்கள்
அள்ளி வழங்கும் பொற்கிழிகள்

நீறு பூத்த நெருப்புத் தமிழ்
இங்கே பற்றி எரியுதடி
தங்கமே தங்கம்
என்று பாடத் தோன்றியது

*
உலகில்
ஏழாயிரம் எட்டாயிரமாய்
மொழிகள் மொழிகள்

இருந்தும்
ஏழே ஏழுமட்டுமே
அவற்றுள் செம்மொழிகள்

செம்மொழித் தேர்வின்
தகுதிகளோ பதினொன்று
அவற்றுள்
ஆறு மொழிகள் பெற்றது
ஏழோ எட்டோதாம்

அத்தனையும் பெற்றது
உலகில்
ஒரு மொழிதான்
ஒரே ஒரு மொழிதான்
அது நம் தமிழ் மொழிதான்
தமிழா தமிழா
அது நம் தமிழ் மொழிதான்

*
உலகின்
பழம்பெரும்
பல்கலைக் கழகங்களின்
இருக்கைகளுக்கு
ஏற்றப் பெருமை சேர்க்கும்
எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே

அன்புடன் புகாரி



கார்பரேட்
காசு குவிக்க
மனித உயிர்களை
உண்ணத் தொடங்கி
காலங்கள் ஆகிவிட்டனதாம்

ஆனாலும்
இன்று
இப்போது

அரசியல் தலைகளைத் தின்று
அரசு நிர்வாகங்களைத் தின்று
காவல் அதிகாரங்களைத் தின்று
மனிதநேய அமைப்புகளைத் தின்று
நீதிமன்றங்களைத் தின்று

மனித உயிர்களைத்
தங்குதடையின்றி
விழுங்கிநிற்கும்
அவலக் காட்சி

ஜனநாயகத்தின்
ஒட்டுமொத்த வீழ்ச்சி

ஜனநாயகத்தை
பூட்ஸ் கால்களால்
ஏறி மிதித்து நின்று
கார்பரேட்டின்
வீர முழக்கம்

ஒட்டுமொத்த
உலக அழிவிற்கான
சங்கின் முழக்கம்

அன்புடன் புகாரி

நன்றியுரை

என் புத்தக வெளியீட்டிற்கு வந்து சிறப்பித்த டொராண்டோ வாழ் தமிழர்களுக்கு நான் சொன்ன நன்றியுரையின் துவக்கமாக இப்பாடலை வாசித்தேன். இது சிந்துவகைப் பாடல். இசைகூட்டிப் பாடிப்பார்க்கலாம்.

*


இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
  இருப்போரில் பலருக்கும்
  அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
  சிரிக்கின்ற தமிழ்நாடோ
  வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
  வளமான மண்ணுக்குப்
  பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
  செழித்தோங்க நெல்வார்க்கும்
  எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
  நாளெல்லாம் அணைக்கின்றேன்
  நல்லதமிழ்ச் சொல்லை

மானந்தான் தமிழர்தம் எல்லை - உண்ட
  மண்தாண்டி வந்தும்மண்
  மறந்ததே இல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
 வார்த்தைக்குள் உயிராக
 வரவேண்டும் ஓடி

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
   டொராண்டோ தமிழர்க்கென்
   நன்றிகளோ கோடி

ஆண் பெண் ஆடைபற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் மிகக் குறைவு.

தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கோத்து பெண்களை மட்டும் துணி மூட்டைக்குள் கட்டுவதுதான் எளிதானதாக இருக்கிறது பலருக்கு

இஸ்லாம் என்ற பெயரில்....

கொஞ்சு முகப் பிஞ்சுப் பெண்ணே

அந்நியனோ
அடிக்கடி வீடுவரும்
அங்கிளோ

தொடுதல்
காமத் தொடர்தலுக்கானத்
தூண்டில்கள்

தொடும் விரல்களின்
வேர்களில்
தீவிர காமத் தாகம்
தகித்துக்கொண்டிருக்கலாம்

சொல்லித்
தருவதில்லையா
உன் அம்மா

உன்
ஐந்தே வயதுக் காலழகு
அம்மாவுக்கு அற்பம்தான்
அலைபாயும்
கண்களில் பட்டாலோ
அபாயமல்லவா

பாவம்தான்
நீ
என் கண்கள்
கழன்று விழுகின்றன
உன்முன்
துயரத் துளிகளாய்

என்செய்வது
அறம் அவிழ்ந்த பாவிகளின்
பூமியாகிப் போனதே
நம் மாண்புமிகு மண்

முகம்விரித்து முறுவலித்து
சாக்லெட் தரும் உள்ளம்
அன்பு உள்ளமாகத்தான்
இருக்க வேண்டும்
ஆனால்
எக்ஸ்ரே எடுத்தால்
கபடம் மறைத்த வாய்ப்பல்லவா
அதிகரித்துக்கிடக்கிறது

யார் தொடலாம்
எவர் தந்தால் பெறலாம்
யாரழைத்தால் செல்லலாம்
என்று சொல்லித் தரும்
தாயே
ஏமாந்து நிற்கிறாளே

பாழும் உலகமம்மா இது
மிருகங்கள்
கட்டவிழ்ந்துத் திரிகின்ற
பாதகக் காலமம்மா

ஊரோர ஐயனாரின்
கொடுவாள் எடுத்து
நான்
வீட்டுக்குள் விளையாடும்
உன் பிஞ்சுப் பருவத்தைக்
கொய்கிறேன்
உன் சிறுமி ஆசைகளைத்
துண்டிக்கிறேன்
உன் அடிப்படைச் சுதந்திரத்தைக்
கொல்கிறேன்

தறிகெட்டத் தறுதலைகளுக்குத்
தண்டனையாய்
அக் கருந் தலைகளை
அந்நொடியே வெட்டிவீசும்
கட்டுமானமும்
கட்டளையும்
களையெடுப்பும்
இல்லையே இங்கே
நான் வேறென்ன செய்ய?

அன்புடன் புகாரி

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் - Edited Version

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரையே எழில் முத்திரையே
சொல்லிவிடு உன் சூட்சுமத்தை

அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்

முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ

கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி

எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே

முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே

முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும் வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்
ஏப்ரல் 8, 2018 கனடா ஸ்டெர்லைட் போராட்ட நாளில்...

காப்பரைத் தின்று
தமிழினத்தின் மீது கேன்சரைக் கக்கும்
வேதாந்தா பணப்பிசாசே

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரங்கள்
சிதைத்தழிய ஆட்டிப்படைக்கும்
அணில் அகர்வாலே

தமிழினத்தின் மீது
தொடர்த் துயரங்களை
வாரி வாரி இறைக்கும்
கொடுங்கோல் மத்திய அரசே

அடடாவோ
இது என்ன கொடுமை

சுந்தரத் தமிழினத்தின்மீது
சீறிப்பாயும்
ஸ்டெர்லைட் கருநாகமே

ரத்தினகிரி உன்னை மொத்தி அனுப்பும்
தமிழ்நாடு மட்டும் ஆரத்தி எடுத்து அணைக்குமா

குஜராத் உன்னைக் குதறியனுப்பும்
தமிழ்நாடு மட்டும் கும்பிடுபோட்டு வரவேற்குமா

கோவா உந்தன் மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும் தத்தெடுத்து உச்சிமுகருமா

தமிழினத்தின் மீது
தரங்கெட்ட அரசியல் மிருகங்கள்
தரிகிடதித்தோம் போடுகின்றன

குரங்குகள் எல்லாம் தாவிக் குதித்து
நட்டநடுவீட்டிலேயே ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில் சிறுநீர் கழிக்கின்றன
படுக்கையறையில் மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில் நாற்றுநடும் தினவு
எப்படி வந்தது உங்களுக்கு?

எங்கள் பொறுமையைக் கண்டு
அடடா கோழைகள் தமிழர்கள் என்று
தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்களா

நீறுபூத்த நெருப்பு
எங்கள் மறத்தமிழர் மார்பு

அது சிறுமைகண்டு பொங்கும்போதும்
விம்மித் துடித்து எழும்போதும்
தடுத்து நிறுத்த இந்தத் தரணியில்
எந்த ஒரு சக்திக்கும் எள்ளளவு திராணியும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

உங்கள் கொட்டங்கள் அனைத்தையும்
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
எங்கள் தமிழ் மண்ணையும்
எங்கள் தமிழர்தம் வளமிகு வாழ்வையும்

***பாரதிதாசனைத் துணைக்கழைக்கிறேன்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்

தமிழ் வாழ்க தமிழினம் வளர்க
துரோகங்கள் ஒழிக துயரங்கள் ஒழிக

பிரிக்கவும் சேர்க்கவும் பழகவும்

மகிழ்ச்சியையும் முத்தத்தையும்
பகிர்ந்தால் மட்டுமே
இன்பத்தைச்
சுவைக்க முடியும்

கோபத்தையும் ரகசியத்தையும்
பகிராவிட்டால் மட்டுமே
நிம்மதியைக்
காக்க முடியும்

உதடுகளையும் உள்ளத்தையும்
ஒட்டவைத்தால் மட்டுமே
சத்தியத்தில்
நனைய முடியும்

துக்கத்தையும் தூக்கத்தையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
நெடுந்தூரம்
கடக்க முடியும்

கண்களையும் காட்சிகளையும்
பிணைத்துவைத்தால் மட்டுமே
உலகத்தை
ரசிக்க முடியும்

கனவுகளையும் யதார்த்தங்களையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
வாழ்க்கையை
ருசிக்க முடியும்

சிந்திப்பையும் சிரிப்பையும்
பிண்ணிவைத்தால் மட்டுமே
செவிகளை
ஆள முடியும்

கருத்தையும் கட்டளையையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
ஏற்பினை
எட்ட முடியும்

உயிரையும் உணர்வையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
அன்பை
வளர்க்க முடியும்

புகழையும் பேச்சையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
சுயத்தைக்
காக்க முடியும்

நட்பையும் நம்பிக்கையையும்
இணைத்து வைத்தால் மட்டுமே
மெய்யாக
நகைக்க முடியும்

காதலையும் கபடத்தையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
உறவுகள்
தழைக்க முடியும்

காயங்களையும் கருணையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
எவரையும்
மன்னிக்க முடியும்

வார்த்தைகளையும் வக்கிரங்களையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
வன்முறையைக்
கொன்றழிக்க முடியும்

இறைவனையும் நம்பிக்கையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
இறைவனிடம்
கையேந்த முடியும்

நன்மையையும் தீமையையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
இன்னல்களை
எடுத்தெறிய முடியும்
உன்னை நீ நேசித்தால்...

யாரோ உன்னை
நேசிக்கலாம்
யாரோ உன்னை
வெறுக்கலாம்

சிலர் நேசிப்பதால்
சில புன்னகைகள் உன் தோட்டதை
மணங் கமழச் செய்யலாம்

ஆனால்
எவரோ உன்னை வெறுப்பதால்
உன் வேர்கள் ஒருக்காலும்
நீரின்றிப் போகப்போவதில்லை

நேசிப்போர் நேசிக்கட்டும்
வெறுப்போர் வெறுக்கட்டும்
பெருவிளைவு அதிலேதுமில்லை

ஆனால்
உன்னை நீ நேசிக்கிறாயா
என்பதில்தான் இருக்கிறது
அறிவு அறிவு பேரறிவு

ஏனெனில்
நீ நேர்மறையாய்
நெஞ்சு நிமிர்த்தி நிற்பதென்பது
வெளியிலிருந்து உள்ளே வருவதில்லை
உனக்கு உள்ளிருந்துதான்
வெளியே வருகிறது

அந்த உள்
உருவாவது
வேறு எவற்றாலோ
அல்ல
உன்னை
நீ
நேசிக்க நேக்கத்தான்

அன்புடன் புகாரி


ஒரு நிமிடம் ஒத்திவைத்தால்

அன்பின் சிறப்பே
பேராழம்தான்
பிரிதொரு கருத்தில்லை

அன்புடை நெஞ்சம்
பழகுநாள் பொழுதுகளில்
கொதியுணர்வுக் கோட்டைதான்
குறையேதும் இல்லை

ஆனபோதிலும்
திடீர் உதய உணர்வுகளை
திறம்பட அலசாமல்
தாமதித்துப் பொழியாமல்
பேரன்புடைய உறவுகளிடமே
சட்டெனக் கொட்டிவிடும் துயரம்
உயர்ரக நெய்யில் விழுந்து
உயிரிழக்கும் மரணம்

ஒரு நொடி நாவசைவை
ஒரு நிமிடம் ஒத்திவைத்தால்
உண்மை அன்பு
உடையாத உயரம்
ஏறிக்கொள்ளும்

ஒரு நாள் ஒத்திவைத்தாலோ
அன்பின் வெள்ளத்தில்
அழகிய பாசப் படகில்
அழியாத ஜென்மப் பிணைப்பில்
உறவின் ஆயுள்
அற்புதமாய் அமர்ந்து
அமர்க்கள உலாப்போகும்

அன்புடன் புகாரி
இதயக்கூடு திறந்துவைத்து...

ஒருவன்
நல்லவனாய் இருப்பதை
ஏமாளியாய் இருக்கிறான்
என்று நகைப்பவர்கள்
ஏமாற்றுக்காரர்கள் என்று
உறுதியாய்த் தங்களை
அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்

நல்லவன் என்பது
ஏமாளி என்று பொருள்தரும்
குணாதிசயமன்று

எந்த நல்லவனும்
ஏமாந்து நிற்கத் தயாராய்
இருப்பதே இல்லை

நல்லவனாய் இருப்பதென்பது
உன்னையும்
நல்லவனாய்க் காண
விழைகிறேன் என்பதற்கான
அறிவிப்புப் பலகை

அவ்வகை அறிவிப்புகளின்
சங்கமங்களால்
நல்லோர்
நல்லோரைக் கண்டு
கட்டியணைத்து
அன்புபாச முத்தமிட்டு
மரணம்வரை உயர்ந்துவாழ
உறுதி எடுக்கிறார்கள்

அதுவே
நல்லவர்கள் பெருகவும்
ஏமாற்றுக்காரர்கள் அழியவும்
இறைவன் எத்திவைத்த
ஏற்பாடு

இறைவன்
இருக்கிறான் என்று
நம்புவதாலேயே
உள்ளங்கையில்
இதயக்கூடு திறந்துவைத்து
யாதொரு சூதுமின்றி
வெளிப்படையாய்
உரையாடுகிறார்கள்
நல்லவர்கள்

அப்படி
உயிரின்
சிற்றிழைகளும் தெரிய
அளவளாவும்
ஒருவனைக் கண்ணுற்றதும்
சிக்கிவிட்டான் ஓர் அடிமையென்று
சப்புக் கொட்டுபவன்
மனிதனை வெட்டித் திண்ணத்
தேடியலையும்
மனிதக்கறி வெறியன்

அவ்வாறான
மனிதக்கறி வெறியர்களைக் கண்டால்
தானும் வெறியனாய் ஆக
எந்த ஒரு நல்லவனும்
சிற்சிறு நொடியும்
எண்ணுவதே இல்லை

மாறாக
அவன் நிழல்தீண்டும்
தளத்தையும் விட்டு
வெகுதூரம் விலகி
நல்லோர் வாழும்
சுவனபுரிக்குள்ளேயே
ஓடிப்புகுந்து
பெருமூச்சுவிடுவான்

அவ்வகைப்
பெருமூச்சுகளால் ஆனதே
இம் மண்ணிலேயே
சொர்க்கம் காணும்
மகத்துவத்தின் பெருவெளி

அன்புடன் புகாரி


ஸ்டெர்லைட் எனும் கருநாகம்

ரத்தினகிரி
மொத்தி அனுப்பும்
குஜராத்
குதறியனுப்பும்
கோவா
மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும்
தத்தெடுத்து
உச்சிமுகருமா

தமிழன்
தன் தரங்கெட்டு
அரசியல் அயோக்கியன்
ஆகிவிட்டான்

அதனால்தான்
குரங்குகள் எல்லாம்
தாவிக் குதித்து

நடுவீட்டிலேயே
ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில்
சிறுநீர் கழிக்கின்றன

படுக்கையறையில்
மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில்
நாற்றுநடும் தினவை
யார் தந்தார் உங்களுக்கு

இருப்பது
கெடுப்பது போதாதென்று
இன்னொன்றும்
வருகிறதென்றால்
இழிச்சவாயன் தமிழனென்று
எங்கள் நெற்றியில் எழுதி இருப்பதை
நீங்கள் எப்படியோ
வாசிக்கப் பழகிக்கொண்டீர்கள்
என்று அர்த்தமா

அல்லது
நாங்கள் இன்னமும்
யோசிக்கப் பழகவே இல்லை
என்று பொருளா

யோசித்துப்
பொங்கியெழுந்த சிலரையும்
சிறையில் அடைத்தீர்கள்

இப்படிப் பூச்சாண்டி காட்டி
இன்னும் எந்த நஞ்சை
எங்கள் மீது
கக்க இருக்கிறீர்கள்

நாங்கள்
சாதிப்பற்றுச் சோதரர்கள்தாம்
அதைத் தூண்டி
எங்களைப் பிரித்தாளவும்
முடியும்தான்

ஆனால்
அதெல்லாம்
சிறுபொழுதுமாத்திரமே
என்பதை அறிவீர்களா

நீறுபூத்த நெருப்பு
மறத்தமிழன் மார்பு

அது
சிறுமைகண்டு பொங்கும்போது
விம்மித் துடித்தெழும்போது
தடுத்து நிறுத்த இத்தரணியில்
ஒரு சக்தியும் இல்லை

உங்கள் கொட்டங்களை
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
தமிழ் மண்ணையும்
தமிழர்தம்
வளமிகு வாழ்வாதாரங்களையும்


தலாக் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே: ஒருநாள் அமர்ந்து முழுமையாய் எழுதுவேன்

தலாக் என்றால் ‘விடுவித்தல்’ என்பது பொருளாகும்.

தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம்.

மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.

ஒரு சந்தர்ப்பம் என்பது, சுமார் 4 மாத காலம்

குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும்.

ஆனால் இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது.

அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இரண்டுமுறை நான்கு நான்கு மாதங்கள் பிரிந்திருப்பதால் இருவரும் மனம் மாறி ஒன்று சேர்ந்துவிடலாம்.

பிரிந்திருக்கும் காலத்தில் இருவரையும் ஒன்று சேர்க்கும்பொருட்டு உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கலந்துரையாடுவார்கள் அறிவுரைகள் வழங்குவார்கள்.

இதை எல்லாம் கடந்து இருவரும் திருமண முறிவுக்கே தயாராகிவிட்டால், அது நடந்துவிட்டால், பிள்ளைகள் எல்லாம் கணவனின் பொறுப்புதானே தவிர மனைவியின் பொறுப்பில்லை.

அதோடு மகர் என்று கொடுக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அவளின் வாழ்வாதாரத்திற்காகக் கணவன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

பின் அந்தப் பெண் மூன்றாவது தலாக்கின் சுமார் 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் சொல்கிறது

இதில் பெண்ணுக்கு ஏதும் தீங்குள்ளதா? அல்லது ஆணுக்குத்தான் தீங்குள்ளதா?
பாரதிக்கெல்லாம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பேசியவர் முகம்மது நபி அவர்கள்

1. பெண் பிள்ளைகள் பிறந்த உடனேயே புதைத்தார்கள், தடுத்துச் சட்டமே இயற்றினார்

2. பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்று உலகில் முதன் முதலில் சொன்னார், சட்டமியற்றினார்

3. பெண்ணும் தனக்குப் பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யலாம் என்று அங்கீகாரம் அளித்தார்

4. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று சொன்னார்

5. வரதட்சணை கூடாது என்றும் அதற்குப் பதிலாக பெண்ணுக்கு ஆண் மகர் என்னும் காப்புத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்

6. பெண் கல்வியை வலியுறுத்தினார்

7. விவாகரத்திற்குப் பின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு கணவனுடையது என்று சொன்னார்

8. பெண்ணை திருமணம் செய்யாமல் சின்னவீடாய் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார்

9. பெண்கள்மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை வேறோடு அழிக்கும் கடுந்தண்டனைகளை வகுத்தார்

10. விதவைகள் மறுமணம் சொர்க்கம் செல்ல சிறந்தவழி என்று வலியுறுத்தினார். விதவைகளைத் தானே மறுமணம் செய்து காட்டியும் வழிநடத்தினார்


அன்புடன் புகாரி
///1. கடவுளுக்கு உருவங்கொடுப்பது ஒருவரின் உரிமை என்பதை மறுக்கிறீர்களா? ///
இல்லை
ஆனால் அறியாமை என்று கருதுகிறேன்
///2. கடவுளுக்கு உருவம் கொடுக்கவில்லை என்போம். கடவுள் உங்கள் முன்வந்தால் எப்படி கண்டுபிடிக்கமுடியும்?///
எப்போதும் முன்னால்தானே இருக்கிறார்?
பின்னாலும் இருக்கிறார்
உள்ளேயும் இருக்கிறார்
வெளியேயும் இருக்கிறார்
ஆடையிலா இருக்கிறது பெண்விடுதலை?

கோவணம் மட்டும் கட்டி
முப்பாட்டன்
வயல் உழுதான்

அட
நீ அப்படியா என்று
முப்பாட்டி
சேலையைக் கழற்றி
வீசிவிடவில்லை

திரைப்படங்களில்
ஆல்ப்ஸ் மலையில்
குளிர்ப் பனிப்பொழிவில்
ஆணும் பெண்ணும்
ஆடிப்பாடுகிறார்கள்

அவன்
கோட்டு சூட்டு ஜாக்கெட்டில்

அவளோ
ஜட்டி பாடி வெற்றுத் தொடையில்

இது
பெண்ணின்
ஆடைச் சுதந்திரமா
ஆணின்
ஆசைச் சுதந்திரமா

சுயசிந்தனைப் பெண்டிரே
பெண் விடுதலை என்ற பெயரில்
ஆண்களின்
வணிக வக்கிர வலைகளில்
நீங்களுமா





பெண்ணின் எதிரி

பெண்ணின்
விடுதலைக் கப்பல்
ஆண்களின்
நாகரிகக் கடலில்தான்
அமைதிப் பயணம்
செல்லவியலும்

நல்ல
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
ஆணினம்
வளர்ந்தால் மட்டுமே
அப் பொன்வானில்
பெண் பிறைநிலாக்கள்
அமுத ஒளிசிந்தி
அமர்க்களமாய் நீந்தும்

ஆண்களை
நாகரிகம் மிக்கவர்களாய்
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
மாற்றுவதற்கு
எந்த ஓர் ஆணாலும்
எத்தனைக்
குட்டிக்கரணம் போட்டாலும்
இயலாது

ஆனால்
அது பெண்களுக்கோ
வெண்டைக்காய்
நறுக்குவதைப்போல
எளிதானது

எங்ஙனமெனில்
பெண்தானே
அத்தனை ஆணுக்கும் தாய்

அவள்தானே
வளர்த்தெடுக்கிறாள்
ஆண்களை இப்படி

பெண்ணின்
சுதந்திரத்திற்கு
பெண்ணேதானே
எதிரியாகிறாள்
பேடிகளா, இது தமிழ்நாடடா!

பாபர் மஸ்ஜித்
என்று நினைத்துவிட்டார்கள்
பெரியார் சிலைகளை

பாபர் மஸ்ஜிதும்
அம்பேத்கர் சிலையும்
லெனின் சிலையும்
தமிழ்நாட்டில் இருந்திருந்தால்
தெரியும் சேதி

மாணிக்க மலரினைப் போலே
மேன்மையாய் கதீஜா பீவி
மெக்கா என்னும் புனித நாட்டில்
வாழ்ந்தவர் ராணி

ஹாத்தமுந் நபியை அழைத்து
வணிகத்தைப் பேசும் பொழுதில்
கண்டநேரம் கண்ணுக்குள்ளே
காதல் உதயம்
காதல் உதயம்

வணிகமும் வெற்றியானதும்
ரசூலுல்லாஹ் திரும்பி வந்ததும்
திருமணம் பேசத் துணிந்ததே
பூமகளின் நெஞ்சமே

மாணிக்க மலரினைப் போலே
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்கள் யார்? அவர்களுக்கு என்ன வேண்டும். அமெரிக்க ஏன் கிளர்ச்சிக்காரர்களை ஊக்குவிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு இதில் என்ன பங்கு
-நாஞ்சில் பீட்டர்

அந்த அரசியல்தான் உலக நாசத்துக்கே காரணம்

இன்று நேற்றா நடக்கிறது, அந்த உலக அரசியல் இயந்திரம் ஊர்ந்து செல்லும்போது அதனடியில் பல கோடி உயிர்கள் நசுங்கிச் சாகின்றன.

அவர்களுக்கு மதம் பொருட்டில்லை, ஆனால் மதத்தை வைத்து விளையாடுவார்கள்

அவர்களுக்கு இனம் பொருட்டில்லை ஆனால் இனத்தை வைத்து விளையாடுவார்கள்

அவர்களுக்குச் சாதி பொருட்டில்லை ஆனால் சாதியை வைத்து விளையாடுவார்கள்

பிறகு எதுதான் பொருட்டு?

யார் கொம்பன்?
யார் உலக போலீஸ்?
யார் வல்லரசு?

அது ஒன்றுதான் பொருட்டு!

அன்புடன் புகாரி