கண்களின் அருவியை நிறுத்து

கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா - தோழா
கவலைக்குள் சாகாதேடா

விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா - தோழா
செவியோடு செந்தேனடா

உள்ளத்துச் சிறையின் உள்ளே
ஓயாமல் தள்ளப் பட்டே
சிறையையே தண்டிக்கின்ற
பொல்லாத கைதிகளடா - தோழா
பிணந்தின்னிக் கவலைகளடா

முடக்கங்கள் இந்தப் பக்கம்
பலகீனம் அந்தப் பக்கம்
மனத்தினுள் கிள்ளி வைக்கும்
கவலைகள் முள்ளாய் தைக்கும் - தோழா
முள்ளுக்குள் உயிரும் சிக்கும்

வாழ்வெனும் கடலில் நீந்தி
நம்பிக்கை வலைகள் வீசி
விழிகளை விரித்தே பாரு
குதூகல மீன்கள் நூறு - தோழா
கவலையோ விலகும் சேறு

மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் - தோழா
வெற்றி உன் காலடி முட்டும்

கைவிட்ட காதல்தனையும்
கஷ்டத்தில் காணாதொளியும்
கயவாளித் தோழர்களையும்
காலுக்கடி மிதித்துவிடடா - தோழா
கருத்தினில் ஒதுக்கிவிடடா

ஏமாறு தவறே இல்லை
ஏமாற்றம் குற்றம் இல்லை
ஏமாற்றம் முதல்முறையென்றால்
ஏமாறு தவறே இல்லை - தோழா
ஏமாற்றம் குற்றம் இல்லை

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் - தோழா
கவலைகள் தீயில் வேகும்

வாழ்க்கையில் விட்டுக்கொடு
விட்டுநீ கொடுக்கும் போது
விண்தொட்டு வளரும் இன்பம்
கொட்டியே கிடக்கும் எங்கும் - தோழா
எட்டியே நடக்கும் துன்பம்

பொருள் தேடி உலகம் ஏறு
பொன்னோடு பண்பும் சேரு
பொருள் கண்ட உன்னையாரும்
பணம் என்று மட்டும் பார்த்தால் - தோழா
பிணம் என்று மட்டும் பாரு

சப்தத்தின் சிரிப்பும் கானல்
மௌனத்தின் புன்னகை வரம்
ரசிக்கின்ற உன்னுளம் தென்றல்
பாராட்டும் ஒளிமுகம் விடியல் - தோழா
பாராட்டும் பண்பே வானம்

மாறாத மகத்துவம் என்று
மண்மீது மாற்றமே உண்டு
இருண்ட உன் இதயமே கேடு
சொர்க்கமும் பூட்டிய கூடு - தோழா
திறவுகோல் உனக்குள் தேடு

கைகளில் அள்ளியே நாளும்
கணக்கின்றி உரித்தென்ன லாபம்
கவலைகள் பெருகியே போகும்
வெங்காயம் வேறென்ன ஆகும் - தோழா
வீசிநீ எறிந்தாலே தீரும்

மோப்பநாய் போலவும் தேடி
ஆனந்தம் காணுவாய் கோடி
பதுங்கியப் பூனைபோல் தாவி
சுகங்களைக் கவ்வியே வாழி - தோழா
சந்தோசம் உனக்கான தோணி

கனவுகள் முயற்சியின் பொறுப்பு
கைகளில் நம்பிக்கை நெருப்பு
கண்களில் வெற்றியின் சிரிப்பு
கவலையின் வேர்களை அறுத்து - தோழா
கண்களின் அருவியை நிறுத்து

No comments: